கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

அன்றாடம் எங்கெங்கோ இருப்பவற்றையெல்லாம் தேடித்தேடிப் படித்துக்கொண்டே இருந்துவிட்டு, அருகிலிருக்கும் அரிய படைப்பைப் பார்க்காமல் விட்டுவிடுவது என் வழக்கம்.

இப்படித்தான் உங்கள் தளத்தில் ஜூலை 27, 2006 அன்று பதிவான “இரு கலைஞர்கள்” – என்ற கதையை இன்றுவரை படிக்காமல் விட்டிருக்கிறேன். இந்த இரு கலைஞர்களும் என் வாழ்வில், உனர்வுகளில், சிந்தனைகளில், செயல்பாடுகளில் இரண்டரக்கலந்துவிட்டவர்கள். இக்கதைக்காக உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்.

இச்சம்பவம் நிஜமா புனைவா என்ற அசட்டுத்தனமான கேள்வியை நான் கேட்க வரவில்லை. இக்கதை என்னை இவர்கள் இருவரிடமும் மேலும் நெருக்கமாக்கியிருக்கிறது – என்பதை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது.  

மேலும், இக்கதை எனை எங்கெங்கோ இழுத்துச்செல்கிறது. குறிப்பாக, ஜெ.கெ-யின் ‘மன்றம்’ பற்றி எங்கு வாசிக்கும்போதும், ‘ஒருமுறையேனும் அந்த மனிதரை என்னால் சந்திக்கமுடியுமா?’ என ஏங்குவேன்.

இதேபோல நான் சந்திக்க ஏங்கிய மற்றொரு மனிதர் – சுஜாதா. பெயரை எழுதும்போதே புத்துயிர் பிறப்பது போல உணர்கிறேன். சுஜாதாவை என் முதன்மையான முன்மாதிரியாகவே எப்போதும் கருதுகிறேன். அவர் இறந்துவிட்ட குறுஞ்செய்தி அன்றிரவு பத்து மணிக்கு வந்தது. அச்செய்தியின் தாக்கத்திலிருந்து விடுபட சில நாட்களாயின. ஒருமுறை கூட சந்திக்காமல் விட்டுவிட்டோமே என்ற தவிப்பு இப்போதும் உள்ளது.

எப்படியும் ஜெயகாந்தனையும் நான் சந்திக்கப்போவதில்லை. எப்படியாவது உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் சந்தித்துவிடவேண்டும்.

எங்கெங்கோ எண்ணங்கள் அலைந்து செல்கின்றன. மனம் ஓரிடத்தில் நிற்க மறுக்கின்றது. மனசெங்கும் ‘ஜனனீ ஜனனீ’ என்ற ராஜாவின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

வார்த்தைகளைவச்சிருக்கிறவனாலஅப்டிசாதாரணமாஅழுதிரமுடியாதுஎன்ற ஜெ.கெ-யின் வார்த்தைகள் மூளைக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன.

இந்த வாழ்க்கையைப் பார்த்து நான் அவ்வளவு சீக்கிரம் அழுததில்லை – எவ்வளவு துன்பங்கள் நேரிட்ட போதும்கூட. ஆனால் ஒரு உருக்கமான படைப்பு எனைக் குமுறிக்குமுறி ஒரு குழந்தைபோல் அழவைத்துவிடுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கதையை எழுதிவிட்டு இப்போது தூங்கிக்கொண்டிருக்கும் நீங்கள் – இன்று இதனைப் படித்துவிட்டு, இப்போது ‘ஜனனீ ஜனனீ’ பாட்டைக் கேட்டுக்கேட்டு ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான் – என்பதைச் சற்றும் நினைத்திருக்கமாட்டீர்கள். ஒரு படைப்பு உண்டாக்கும் தாக்கம் என்பது – படைப்பாளி ஒருபோதும் கற்பனை செய்யமுடியாதது. இப்படைப்பின் தாக்கத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தவே இதனை எழுத முற்பட்டேன். ஆனால் புலம்பல் போல் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

நேசத்துடன்,
ஜதி

ஜெயமோகன் அவர்களுக்கு,

பெண்ணேஸ்வரன் குறித்த தங்களது பதிவைப் படித்தேன். இன்றும் பெண்ணேஸ்வரன் டெல்லிக்கு வரும் தமிழிலக்கியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்  தன்னால் இயன்ற உதவிகளை செய்பவராகவே இருக்கிறார். டெல்லி என்றாலே  பெண்ணேஸ்வரனின் முகமே நினைவுக்கு வருகிறது.  அவரது வடக்கு வாசல் இதழும் பெருத்த பொருளாதார நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையே தொடர்ந்து நடத்தும் அவரது பிடிவாதமும் பிரமிக்க வைக்கிறது.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்

முந்தைய கட்டுரைஇரு நிகழ்ச்சிகள்
அடுத்த கட்டுரைபடிப்பறைப் படங்கள்