‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 7

பகுதி 3 : பிடியின் காலடிகள் – 1

அணியறையில் பீமனின் பெருந்தோள்களை கைகளால் நீவியபடி மிருஷை “அணிசெய்வது எதற்காக என்றார் தங்கள் தமையனார்” என்றார். பீமன் ”நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றான். “உடல் ஒரு செய்தி. அது ஐயத்திற்கிடமில்லாமல் நம் அகம் எண்ணுவதை சொல்வதற்கே அணிசெய்துகொள்கிறோம் என்றேன்“ என்றார் மிருஷை.

பீமன் மெல்ல நகைத்தபடி அசைந்து அமர்ந்து “அது நல்ல மறுமொழி. தேர்ந்த சொல்” என்றான். “உண்மையல்ல என்கிறீர்களா?” என்றபடி மிருஷை கைகாட்ட கலுஷை நறுவெந்நீர் நிறைந்த வெண்கலக் குடத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள். அதை அவன் மேல் மெல்ல ஊற்றினார். அவன் தோள்கள் வழியாக வழிந்த நீரை அள்ளி உடலெங்கும் பரப்பினார்.

”ஒரு தருணத்தில் எழுப்பப்படும் வினாவுக்கு அளிக்கப்படும் மறுமொழி பெரும்பாலும் அத்தருணத்தை மட்டுமே விளக்குகிறது” என்றான் பீமன். புன்னகைத்தபடி “ஏன்? அம்மறுமொழியில் என்ன பிழை?” என்றார் மிருஷை. “நாம் சொற்களுக்கு அப்பால் சிந்திப்பதில்லை சமையரே. சொல்லெடுக்கையிலேயே அச்சொல்லும் அதன்பொருளென அமைந்த சிந்தனையும் அங்கிருப்பதை உணர்கிறோம். உடலை அணிசெய்வதன் வழியாக நாம் உணர்த்தும் பொருளென்ன என்பதை எப்படி முழுமையாக அறியமுடியும்?” சிரித்தபடி “என் உடல் உங்கள் அணிகளுக்குப்பின் வெறும் சமையற்காரனாகத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றான்.

மிருஷை சிரித்துவிட்டு பின்னர் “ஆம், அது உண்மை. நாம் பொதுப்பொருளையே அளிக்கிறோம். அது அளிக்கும் தனிப்பொருள் நம்மிடமில்லை” என்றார். “அணிசெய்துகொண்டிருக்கிறோம் என்ற தன்னுணர்வும் நம்மை பார்ப்பவர்களுக்கு நாம் அணிசெய்துகொண்டிருக்கிறோம் என்ற அறிதலும் அன்றி வேறேதும் இதிலில்லை” என்றான் பீமன்.

மிருஷை “உங்களிடம் பேசினால் நான் என் கலையையே மறந்துவிடவேண்டியிருக்கும்” என்றார். “எந்தக்கலையும் அதை ஆற்றுபவர் ஒருபோதும் எண்ணாத எதையோ நிகழ்த்துகிறது சமையரே. இல்லையேல் அக்கலை முன்னரே அழிந்திருக்கும்” என்றான் பீமன். அவன் உடலின் மயிரற்ற தசைப்பாளங்கள் ஈரத்தால் பளபளத்தன. அவர் அதை தன் கைகளால் மெல்ல அடித்தார்.

பெரிய மரவுரிப்பட்டையால் அவன் உடலின் ஈரத்தை துடைத்து எடுத்தார் மிருஷை. “எனது இக்கைகளால் தொட்டவற்றிலேயே பெரிய உடல் இதுவே” என்றார். “நீங்கள் என் பெரியதந்தையாரை ஒருமுறை அணிசெய்யவேண்டும்” என்று பீமன் நகைத்தான். “அணிசெய்துகொள்வதில் பேரார்வம் கொண்டவர். ஏனென்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவரால் பார்க்கமுடியாது.” மிருஷை துடைப்பதை நிறுத்திவிட்டு உரக்க நகைக்கத் தொடங்கினார். அவரது மாணவிகளும் சேர்ந்து நகைத்தனர்.

”பேருடல் கொண்டவர்கள் என்றும் என் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்” என்று சொன்னபடி மிருஷை அவன் உடலை துடைத்தார். கலுஷை அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு நகங்களை வெட்டத் தொடங்கினாள். காருஷை அவன் கால்நகங்களை வெட்டினாள். ”ஏனென்றால் அவர்களின் காமத்தை என்னால் அறியமுடிந்ததே இல்லை” என்றார் மிருஷை.

பீமன் கலுஷையின் விழிகளை ஒருகணம் நோக்கினான். எந்தப்பெண் விழிகளிலும் இல்லாத கூர்மையுடன் அவை அவனை நோக்கி தாழ்ந்தன. “பிறர் காமத்தை அறியமுடியுமா மானுடரால்?” என்றான் பீமன். “உடற்காமம் எந்த அளவுக்கு மாற்றமற்றதோ வெளிப்படையானதோ அந்த அளவுக்கு உளக்காமம் தனித்தது, ஆழ்ந்தது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” மிருஷை கையை அசைத்து “அறியமுடியாத ஏதும் இவ்வுலகில் இல்லை” என்றார்.

அவன் கைகளை தூக்கச் செய்து அடிக்கையை துடைத்தபடி ”உங்கள் பேருடலை எப்படி உணர்கிறீர்கள் இளவரசே?” என்றார் மிருஷை. “ஓடிவிளையாட நிறைய இடமிருக்கும் அரண்மனை இது” என்றான் பீமன். மிருஷை சிரித்து மெல்ல அவனை தன் கையால் அடித்து “விளையாடவேண்டாம்” என்றார். “உண்மை, என் உடல் எனக்கு பிடித்திருக்கிறது. நீரில் என்னை நோக்கும்போது நான் நிறைந்திருப்பதாக உணர்கிறேன். என் தசைகளைப்போல நான் விழைவதொன்றும் இல்லை” என்றான். பின்பு மேலும் சிரித்து “இளமையில் நான் ஒருவனல்ல பலர் என்று எண்ணிக்கொள்வேன். என் கைகளும் கால்களும் தோளும் மார்பும் அடங்கிய ஒரு திரள்தான் நான் என” என்றான்.

“உங்கள் கரங்கள் ஜயவிஜயர்கள் என்னும் இரு நாகங்கள் என சூதர்கள் பாடுகிறார்கள்” என்றார் மிருஷை. “இப்போது இக்கைகளை தொட்டுப்பார்க்கையில் எனக்கும் அதுவே உண்மையென்று தோன்றுகிறது. இவை மண்ணில் நிகழக்கூடியவை அல்ல. விண்ணிலிருந்து வந்தவை.” மிருஷையின் தலையைத் தொட்டு கூந்தலை வருடியபடி “என்னில் காமம் கொள்கிறீரா?” என்றான் பீமன். புன்னகையுடன் “இல்லை. அதனால்தான் கேட்டேன்” என்றார் மிருஷை.

அவன் மீது நறுமணத்தைலத்தை கைகளாலேயே பூசியபடி “என்னுள் வாழும் பெண் காமம் கொள்ளாத ஆணே இல்லை இளையவரே” என்றார் மிருஷை. “தங்கள் தமையனாரை அணிசெய்கையில் என் கூந்தலிழையை எடுத்து என் காதருகே செருகினார். அந்தச் செயலில் இருந்த அன்பை எண்ணி நான் அன்றிரவு அழுதேன். இளவரசே, அவர் சக்ரவர்த்தி. மண்ணிலுள்ள அத்தனை மானுடரின் துயரையும் ஏக்கத்தையும் ஒருவர் சொல்லாமலே அறியமுடியுமென்றால் இப்புவியை ஆள அவரன்றி தகுதிகொண்டவர் எவர்? என் உள்ளத்தில் எழுந்தது என்ன என்று உணர்ந்து அதை அவர் அளித்தார். அந்த ஒருகணத்தில் நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைந்தேன்.”

பீமன் அவர் விழிகளில் படர்ந்திருந்த மெல்லிய ஈரத்தை நோக்கியபின் கலுஷையை நோக்கினான். அவள் விழியும் கனிந்திருந்தது. “ஆம், அவர் அத்தகையவர். எளிய மானுடர் அவரைப்போன்ற ஒருவருக்காகவே எக்காலமும் எண்ணி எண்ணி ஏங்குகிறார்கள்.” மிருஷை “உங்களைப்பற்றி அறிந்திருந்தேன். மூன்றுநாட்களுக்குப்பின் இன்று உங்கள் முறை என்று சொன்னபோது என் கைகள் பதறிக்கொண்டிருந்தன. இங்கு வரும் பாதையை எண்ணியதுமே நான் நாணம் கொண்டேன். இவர்களிடம் நீங்களே செல்லுங்களடி என்னால் இயலாதென்று சொன்னேன். இவர்களும் அஞ்சி முடியாதென்றனர். ஆனால் வராமலிருக்கவும் எங்களால் முடியாதென்று அறிந்திருந்தோம்” என்றார்.

”இங்கு வந்து அணியறையில் உங்களுக்காக காத்திருக்கையில் நாங்கள் மூவரும் உருகிக்கொண்டிருந்தோம். ஒரு சொல் பேசமுடியவில்லை. யானை நடக்கும் ஒலியுடன் நீங்கள் உள்ளே வந்தீர்கள். ஆம், யானையின் ஒலிதான். காளையோ புரவியோ நடக்கும் ஒலி அல்ல. யானையைப்போல் அத்தனை மென்மையாக காலெடுத்துவைக்கும் உயிர் பிறிதில்லை. மண் அதை ஏந்திக்கொள்கிறது. நாம் அறிவது மண்ணின் நெஞ்சு விம்மும் மெல்லிய ஒலியைத்தான். அதைப்போல நம் செவிகள் தவறவிடாத ஒலியும் பிறிதில்லை. பெரிய கரங்களால் நீரைத் துழாவி வருவதுபோல எளிதாக மிதந்து வந்தீர்கள். இந்த வாயிலில் நின்றீர்கள்” என்றார் மிருஷை.

“உங்கள் உடலைப் பார்க்க அஞ்சி கால்களை நோக்கினேன். அத்தனை பேருருவத்தை ஏந்திய கால்கள் சிறியவையாக கழுகின் இரு உகிர்கள் போல மண்ணை அள்ளியிருந்தன. அதன் பின் விழிவிரித்து உங்கள் உடலை நோக்கினேன். ஒருகணம்கூட உங்கள் மேல் காமம் எழவில்லை என்று கண்டேன்” மிருஷை சொன்னார். பீமன் புன்னகை செய்தான்.

“ஏனென்றால் உங்கள் உடல் முழுமையுடன் இருந்தது. ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு நரம்பும் தெய்வங்கள் எண்ணிய வகையிலேயே அமைந்திருந்தன. இளவரசே, ஆணுடலில் பெண் பார்ப்பது ஓர் முழுமையின்மையை. தன் உடலால் அவனுடலில் படர்ந்து அவள் அவ்விடைவெளியை நிறைக்க முயல்கிறாள். பெண்ணுடலில் ஆண் பார்ப்பதும் அதே குறையைத்தான். தன் உடலால் அவன் அதை முழுமைசெய்ய முயல்கிறான். ஒரு பெண் எதையும் உங்களுக்கு அளித்துவிடமுடியாது” மிருஷை தொடர்ந்தார்.

கலுஷை எடுத்துத்தந்த நறுஞ்சுண்ணத்தை அவன் உடலில் பூசியபடி “சொல்லுங்களடி” என்றார் மிருஷை. “ஆம், இளவரசே. நீர்க்கரை மரம்போலவோ மலையுச்சி பாறைபோலவோ தன்னந்தனி முழுமையுடன் இருக்கிறது உங்கள் உடல்” என்றாள் கலுஷை. மிருஷை சிரித்து அவள் தோளை செல்லமாக அடித்து “அரிய உவமை… இளவரசே, இவள் காவியமும் படிப்பவள்” என்றார்.

பீமன் நகைத்து “அப்படியென்றால் இன்றிரவு என்ன நிகழப்போகிறது?” என்றான். சிரித்தபடி “இளவரசி எங்கோ உங்கள் முழுமையை கலைக்கப்போகிறார்கள். உங்களை இன்னொன்றாக ஆக்கப்போகிறார்கள்” என்றார் மிருஷை. காருஷை “அஞ்சவேண்டாம்… அதுவும் இன்பமே” என்றாள். கலுஷை “இன்பமாவது எல்லாம் சிறிய இறப்புகளே” என்றாள்.

பீமனின் தாடி முகவாயில் மட்டும் கரிப்புகை போல் சுருண்டிருந்தது. மீசை இரு உதடோரங்களில் மட்டும் தோன்றி கீழிறங்கியது. ஆனால் அவன் குழல் சற்றும் சுருளின்றி பளபளக்கும் காக்கைச்சிறகுகளாக நீண்டு தோளில் விழுந்திருந்தது. “உங்கள் குழல் அழகானது இளவரசே. பீதர்களில் சிலருக்கே இத்தகைய அழகிய நேர்குழல் அமைகிறது” என்றார் மிருஷை அதை ஒரு தந்தச்சீப்பால் சீவி அமைத்தபடி. “தங்கள் தமையனாருக்கு குழலைச் சீவி சுருளாக்கினோம். இக்குழலை சுருளாக்க எவராலும் முடியாது.”

அவர் பின்னால் நடந்து கைநீட்ட கலுஷை ஆடியை நீட்டினாள். பீமன் அதை தவிர்த்தான். “பார்க்க விழையவில்லையா?” என்றாள் காருஷை. “இல்லை, நான் நீரில் என் உடலை மட்டுமே பார்ப்பேன். முகத்தை பார்ப்பதில்லை” என்றான் பீமன் எழுந்தபடி. கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தபோது அவன் உடலுக்குள் சுள்ளிகள் முறிவதுபோல எலும்புகள் நிலைமீளும் ஒலி கேட்டது. “அணிகொள்ளுதல் இத்தனை கடினமானது என்று நான் அறியவில்லை. மீண்டும் பசிக்கிறது” என்றான். மிருஷை “நீங்கள் மீண்டும் உண்ணலாம். இப்போது உங்கள் மேல் ஏறியிருக்கும் கந்தர்வர் அதை விரும்புவார்” என்றார்.

”தங்கள் விரல்களுக்கு வணக்கம் சமையரே” என்றான் பீமன். “உடல் தொடாத ஒன்றை நான் உணர்வதில்லை. இத்தனைநேரம் உங்கள் மூவரின் விரல்கள் அளித்த முத்தங்களில் நீராடிக்கொண்டிருந்தேன்.” மிருஷை கண்கள் மலர்ந்து நகைத்து “நலமும் உவகையும் திகழ்க!” என்றார். வலக்கையால் அவர் தோளை அள்ளி நெஞ்சோடு சேர்த்து “உங்கள் அணிகளால் மங்கலம் நிறையட்டும்” என்று சொன்ன பீமன் இடக்கையால் கலுஷையையும் காருஷையையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

நெடுநேரம் அறைக்குள் இருந்து விட்டதாகவும், வெட்டவெளிக்கு செல்லவேண்டுமென்றும் தோன்றியது. மாளிகையின் படிகளில் இறங்கி அவன் வெளியே சென்று கங்கைக்கரையை அடைந்தபோது பாஞ்சாலத்தின் கொடிபறக்கும் சிறிய படகு கரைநோக்கி வருவதை கண்டான். அதைக் கண்டதுமே எவரென புரிந்துகொண்டான். படகு அணுகியபோது மறுபக்கம் மாலை ஒளியுடனிருந்த கங்கையின் நீரின் பகைப்புலத்தில் குந்தியின் தோற்றம் தெரிந்தது. அவனை அவள் கண்டுவிட்டாள் என உடலில் இருந்த இறுக்கம் காட்டியது.

படகு கரையணைந்ததும் பீமன் அருகே சென்று படித்துறையில் நின்றான். பலகைவழியாக இறங்கி வந்த குந்தி “இன்னமும் நேரமிருக்கிறது. ஆகவே உன்னிடம் விரைந்து உரையாடி முடித்துச் செல்லலாம் என்று வந்தேன்” என்றாள். பீமன் திடமான குரலில் “உரையாட வந்தது விதுரர் சொன்னதைப்பற்றி என்றால் இந்தப் படகிலேயே நீங்கள் திரும்பலாம். நான் என்றும் என் தமையனின் காலடியில் வாழ்பவன்” என்றான்.

குந்தி நிமிர்ந்து சினமெழுந்த விழிகளுடன் அவனை நோக்கினாள். ”ஆம் அன்னையே, தெய்வங்களும் என் அகப்படையலை மாற்றமுடியாது. பொறுத்தருள்க!” என்றபடி பீமன் அணுகினான். பின்பக்கம் அவள் வந்த படகு மெல்ல வந்து படித்துறையை முட்ட அவள் சற்று அதிர்ந்து திரும்பி நோக்கியபின் தலைத்திரையை சீர்செய்து “நான் அதைப்பற்றி பேசவரவில்லை. என்னிடம் விதுரர் சொன்னபோதே உன்னை முழுதுணர்ந்து விட்டேன்” என்றாள்.

பீமன் “அவ்வண்ணமென்றால் வருக!” என்று அவளை கைநீட்டி வரவேற்றான். அவன் அணிசெய்து கொண்டிருப்பதை அவள் ஓரக்கண்ணால் நோக்குவதை அவன் கண்டான். அந்த நோக்கு கூரிய வேல்முனை என தொட்டுச்சென்றது. அவன் சற்று பின்னடைந்தான். அவள் நின்று திரும்பி “இந்த இளவேனில் மாளிகை இத்தனை எழில்மிக்கதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றாள். “ஆம், அழகானது” என்று அவன் விழிகளை கொடுக்காமல் சொன்னான். பொருளற்ற சொற்கள் வழியாக அவர்கள் அந்தத் தருணத்தை கடந்தனர்.

அரண்மனையின் படிகளில் அவள் ஏறியபோதுதான் அவள் வந்த செய்தியறிந்து சிசிரன் பதறியபடி ஓடிவந்தான். வணங்கியபடி “இளவேனில் மாளிகைக்கு நல்வரவு அரசி” என்றான். அவள் அவனை கைதூக்கி வாழ்த்தியபின் சென்று அவைக்கூடத்தில் இருந்த பீடத்தில் அமர்ந்தாள். தலையிலிருந்து சரிந்த ஆடையை சீரமைத்துவிட்டு அவ்வறையை சுற்றி நோக்கினாள்.

பீமன் “இங்கு சொல்சிந்தா அமைப்பு உண்டு. சேவகர் விலகிவிடுவார்கள்” என்றான். அவள் தலையை அசைக்க சிசிரன் தலைவணங்கி “அரசிக்கு இன்னீர் ஏதும்?” என்றான். அவள் வேண்டாம் என்று கையசைக்க அவன் விலகிச்சென்றான். கதவுகள் மெல்ல மூடிக்கொண்டன. சாளரம் வழியாக வந்த கங்கைக்காற்றை பீமன் உணர்ந்தான்.

“உன் தமையன் சொன்னதை அறிந்திருப்பாய்” என்றாள் குந்தி. “ஆம், நீ அவன் சொற்களை மீறமாட்டாய். ஆனால் நீ உகந்ததை அவனுக்காக செய்ய கடன்பட்டவன். அவன் அறமறிந்தவன். அரசு சூழ்தலும் கற்றவன். ஆனால் படைத்திறன் அற்றவன். அவனுடைய அத்தனை கணக்குகளும் பிழையாவது அவை படைக்கணக்குகளாக மாறும்போதுதான்.” பீமன் தலையசைத்தான்.

“பாஞ்சாலப்படை பெரியதுதான். ஆனால் அது இன்று திரௌபதிக்குரியது அல்ல. அது ஐங்குலப்படை. அக்குலத்தலைவர்களுக்குக் கட்டுப்பட்டது அது. அவர்களிடம் மொழிகொள்ளாமல் எந்த முடிவையும் எடுக்கமுடியாது” என்று குந்தி தொடர்ந்தாள். “அருகே சத்ராவதி உள்ளது. அஸ்வத்தாமன் ஆளும் அந்த மண் இந்த ஐங்குலத்திற்கும் உரியது. இவர்கள் ஆண்டது. அதை இழந்து இத்தனை ஆண்டுகளாகியும் அஸ்தினபுரிக்கு அஞ்சி அதை மீட்காமலிருக்கிறார்கள் என்றால் இவர்களின் உண்மையான படைவல்லமை என்ன?”

“உடனே ஒரு போரை நிகழ்த்த துருபத மன்னர் விழையாமலிருக்கலாம். அந்தப்போர் அஸ்தினபுரியுடனான போராக மாறினால் எளிதில் முடியாது” என்றான் பீமன். “ஆம், அதுவும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சத்ராவதியில் அஸ்வத்தாமன் இருக்கும்வரை பாஞ்சாலர்களை வல்லமைகொண்ட அரசு என்று எவரும் நம்பப்போவதில்லை. வல்லமையற்றவர்களுடன் எவரும் இணைந்து கொள்ளப் போவதுமில்லை” என்றாள் குந்தி.

“சொல்லப்போனால் நம் இளையோருக்கு ஷத்ரியர்களின் இளவரசியரை கேட்பதற்கே நான் தயங்குகிறேன். நம்மிடமிருப்பது என்ன? நிலமில்லை. வல்லமை கொண்ட அரச உறவுமில்லை என்னும்போது எப்படி நான் தூதனுப்ப முடியும்?” குந்தி கேட்டாள். “இன்று பாண்டவர்கள் பாஞ்சாலத்தின் ஷத்ரிய படைவீரர்கள் மட்டுமே. ஐந்து குலங்களிலும் நமக்கு இடமில்லை என்பதனால் என்றும் இம்மண்ணில் நாம் அயலவரே. எவரும் நீண்டநாள் விருந்தோம்பலை பெறமுடியாது.”

பீமன் அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தான். குந்தியின் குரல் இயல்பாக மாறியது. “சேதிநாட்டரசர் தமகோஷர் நோயுற்றிருக்கிறார். அவர் மைந்தர் சிசுபாலர் விரைவில் அரசுகொள்வார் என்கிறார்கள். சிசுபாலரின் தங்கை கரேணுமதி அழகி, நூல்கற்றவள். அவளை நகுலனுக்காக கேட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன்.”

பீமன் முகம் மலர்ந்து “ஆம், சேதிநாடு வல்லமை கொண்டது. அவ்விளவரசியைப்பற்றி சில சூதர்கள் பாடிக்கேட்டும் இருக்கிறேன்” என்றான். குந்தி “ஆனால் சிசுபாலன் இப்போது மகதத்தின் நட்புநாடாக இருக்கிறான். மகதத்தின் பன்னிரு களப்படைத்தலைவர்களில் அவனும் ஒருவன்” என்றாள். “நம்மிடம் மணவுறவு கொண்டால் அவன் மகதத்தை கைவிடவேண்டும். ஒருவகையில் அஸ்தினபுரியையும் கைவிடவேண்டும். எதன்பொருட்டு அவன் அதைச்செய்யத் துணிவான்?”

அவள் சொல்லவருவதென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் முகத்தை நோக்கியபடி அமைதியாக இருந்தான். “மத்ரநாட்டு சல்யரின் இளையோன் தியுதிமானின் மகள் விஜயைக்கு மணமகன் தேர்வதாக செய்தி வந்தது. அவளைத்தான் சகதேவனுக்காக எண்ணியிருந்தேன்” என்று குந்தி தொடர்ந்தாள். “அவள் அவனுடைய மாமன் மகள். முறைப்படி அவன் அவளை கொண்டாகவேண்டும்.”

பீமன் தலையசைத்தான். குந்தியின் உள்ளம் சென்றுசேரப்போகும் இடம் அவனுக்கு புரியவில்லை. அதை உய்த்துணர முயல்வதை அவன் முழுமையாகக் கைவிட்டு வெறுமனே நோக்கத் தொடங்கினான். குந்தி “சேதிநாடு அங்கநாட்டுக்கு அண்மையில் உள்ளது. மத்ரநாடு காந்தாரத்தின் வணிகப்பாதைகளில் உள்ளது. நாம் வைக்கும் ஒவ்வொரு மணவுறவும் சதுரங்கத்தில் வைக்கப்படும் காய்கள். நாம் இவ்விருநாடுகளையும் தவறவிடவேகூடாது” என்றாள்.

“ஆம்” என்றபடி பீமன் தன் கால்களை விரித்து கைகளை நீட்டி பீடத்தின் மேல் வைத்துக்கொண்டான். “ஆனால் இன்று நாம் இவர்கள் எவரிடமும் மணம் கோரி செல்லமுடியாது. நாம் இன்று எந்த நாட்டுக்குரியவர் என்ற வினா எங்கும் எழும். பீமா, நிலமில்லாத ஷத்ரியன் வெறும் படைவீரன் மட்டுமே. அவனுக்கும் படைக்கலங்களுக்கும் வேறுபாடில்லை. அவை பிறர் கைக்கருவிகள்” என்றாள் குந்தி. அவள் குரல் தழைந்தது.

பீமன் சற்று சீற்றத்துடன் “நாம் பாஞ்சால இளவரசியை கொண்டிருக்கிறோம். இவ்வரசர்களுக்கு பாஞ்சாலத்தை விட பெருமையா என்ன?” என்றான். “அவர்களிடம் நாம் சென்று நின்று பெண் கேட்டு இரக்கவேண்டுமா என்ன? அவர்களின் இளவரசியர் பாஞ்சாலத்தின் பேரரசியின் இளையோராக அல்லவா வருகிறார்கள்?”

பல்லைக்கடித்தபடி குரலெழாமல் “மூடா!” என்றாள் குந்தி. “சிந்தித்துப்பார், துருபதனை நீங்கள் களத்தில் வென்று தேர்க்காலில் கட்டி அவமதித்தீர்கள். எளிய நிகழ்வல்ல அது. பாதிநாட்டை அவர் இழந்திருக்கிறார். அவர் அடைந்த பெருந்துயரை இங்கு வந்தபின்னரே முழுமையாக அறிந்தேன். உடல்நலம் குன்றி இறப்பின் கணம்வரை சென்றிருக்கிறார். பின்னர் உளநலம் குன்றியிருக்கிறார். கிழக்கே எங்கோ சென்று யாஜர் உபயாஜர் என்னும் இரு அதர்வ வைதிகர்களை அழைத்துவந்து சௌத்ராமணி வேள்வியைச் செய்து இவளை பெற்றிருக்கிறார். அது பழிவாங்குவதற்காக மைந்தரை பெறும்பொருட்டு செய்யப்படும் பூதயாகம்.”

முன்னரே கேட்டிருந்த செய்தியாக இருந்தாலும் பீமனின் உள்ளத்தில் மெல்லிய அசைவு ஒன்று நிகழ்ந்தது. “அவர் மகளைப்பெற்றது உங்களை வெல்ல, அடிமைப்படுத்த. வேறெதற்கு? அதைத்தான் துர்வாசர் என்னிடம் சொன்னார்” என்றாள் குந்தி. “துருபதனின் வஞ்சத்தை நான் எப்போதும் அஞ்சிக்கொண்டிருந்தேன். அதைக்குறித்த செய்திகளை ஒவ்வொரு நாளும் சேர்த்துக்கொண்டிருந்தேன். இங்கு மணம்கொள்ளவந்ததே அவ்வஞ்சத்தை உறவின்மூலம் கடக்கமுடியும் என்று நம்பித்தான். இத்தனை பெருந்துயர் என்று அறிந்திருந்தால் அவ்வெண்ணமே கொண்டிருக்கமாட்டேன்.”

பீமன் “அன்னையே, தங்களிடம் அன்றுமுதல் நான் கேட்க எண்ணியது இது. உண்மையில் துர்வாசர் தங்களிடம் என்ன சொன்னார்?” என்றான். குந்தி குரல் சற்று தணிய “அவர் சொன்னபடிதான் நான் நடந்துகொண்டேன்” என்றாள். “அவர் உங்களிடம் சொன்ன அனைத்தையும் அறிய விழைகிறேன் அன்னையே” என்றான் பீமன். அவள் விழிதூக்கி “உங்களை வில்குலைக்க அனுப்பவேண்டாம் என்று சொன்னார். பார்த்தன் வில்லெடுத்தால் திரௌபதியை வெல்வான். அது நமக்கு நல்லதல்ல என்றார். உடனே மைந்தரை அழைத்துக்கொண்டு காம்பில்யத்தைவிட்டு அகலும்படி ஆணையிட்டார்” என்றாள்.

“நீங்கள் அச்சொல்லை மீறினீர்கள்” என்றான் பீமன் சற்றே சினத்துடன். “அவர் உங்கள் ஆசிரியர் அல்லவா?” குந்தி சினத்துடன் “என் ஆசிரியர் இவரல்ல. நான் விளையாடி மகிழ்ந்த முதியவர் மண்மறைந்துவிட்டார்” என்றாள். பீமன் “ஆனால் ஆத்மபுடம் செய்து அவரது உள்ளத்தையும் அறிவையும் முற்றிலும் பெற்றுக்கொண்டவர் இவர். பெருங்குருநாதர்கள் அழிவதில்லை” என்றான். குந்தி இதழ்களைக் கோட்டி “ஆம், ஆனால் இவரை நான் அணுக்கமாக எண்ணவில்லை” என்றாள்.

“அவர் சொன்னவற்றை நீங்கள் எங்களிடம் சொல்லியிருக்கலாம்” என்றான் பீமன். “நீங்கள் அதற்குள் அரண்மனைக்கு சென்றுவிட்டீர்கள்” என்று அவள் கண்களில் சினம் மின்ன சொன்னாள். “அன்னையே, நான் எங்கிருப்பேன் என எப்போதும் உங்களுக்குத்தெரியும்…” என்றான் பீமன். உரத்தகுரலில் “நீ என்னை மன்றுநிறுத்த முயல்கிறாயா?” என்றாள் குந்தி. பீமன் பெருமூச்சுடன் கைகளை விரித்து “சரி, இல்லை” என்றான். மீண்டும் பெருமூச்சு விட்டு “துர்வாசரின் எச்சரிக்கையினால்தான் நீங்கள் இம்முடிவை எடுத்தீர்களா?” என்றான்.

“இல்லை. அதையும் அவரிடம் கலந்தே எடுத்தேன்” என்றாள் குந்தி. “பார்த்தன் அவையில் வென்றதும் அன்றே மீண்டும் அவரிடம் சென்றேன். துருபதனின் வஞ்சத்திற்கு நிகரானது பாஞ்சாலப் பெருங்குடியினரின் வஞ்சம் என்று அவர் சொன்னார். நீங்கள் ஐவரும் அவர் மகளை மணப்பீர்கள், அஸ்தினபுரி அவள் காலடியில் கிடக்கும் என்றால் துருபதனின் வஞ்சம் தணியுமா என்று நான் கேட்டேன். ஆம், அது ஒரு நல்ல எண்ணமே என்று அவர் சொன்னார்.”

பீமன் புன்னகை செய்தான். குந்தி “அம்முடிவு சிறந்தது என்றே உணர்கிறேன். உண்மையிலேயே அது துருபதனை மகிழச்செய்தது என்று கண்டேன். திரௌபதி அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடும்போது அவர் முழுநிறைவடைவார்” என்றாள். பீமன் “இந்தக் கணக்குகள் எனக்கு விளங்குவதில்லை அன்னையே. நான் என்ன செய்யவேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள்” என்றான்.

குந்தியின் விழிகள் மாறுபட்டன. “உன் தமையனிடம் இனி நான் ஏதும் பேசமுடியாது. அவன் அனுப்பிய சொற்களில் அனைத்தும் தெளிவாக இருந்தன” என்றாள். “இனி உன்னிடம் மட்டுமே பேசமுடியும்” என்றாள். அவள் உடலில் ஓர் அண்மை வெளிப்பட்டது. சற்று முன்னகர்ந்து மேலாடையை அள்ளி மடியில் குவித்தபடி “நீ மட்டுமே எனக்கு உதவமுடியும் மந்தா” என்றாள்.

பீமன் நகைத்து “நானா? அன்னையே, நான் எப்போது மூத்தவரிடம் பேசியிருக்கிறேன்? நான் அவருக்கும் வெறும் மந்தன் அல்லவா?” என்றான். “ஆம், நீ பேசமுடியாது. அவள் பேசமுடியும்” என்றாள் குந்தி. “இனி அவனிடம் அவள் மட்டுமே பேசமுடியும்.” பீமன் புன்னகை செய்தான். “நான் சொல்வனவற்றை அவளிடம் சொல்.” பீமன் கைகளை கோர்த்துக்கொண்டு முன்னால் குனிந்து “சொல்லுங்கள் அன்னையே” என்றான்.

குந்தி “நான் சொல்வதெல்லாம் அவள் நலனுக்காகவே” என்றாள். “பாரதவர்ஷத்தின் பேரரசியாக அவள் ஆவாள் என்கின்றனர் நிமித்திகர். அவள் தந்தையும் குலமும் அதையே எண்ணியிருக்கிறார்கள். இங்கே இந்த நகரின் புறமாளிகையில் அவள் வெறும் இளவரசியாக எத்தனைநாள் வாழ்வாள்? இன்று அவளிடமிருக்கும் பெரும் படைக்கலம் என்றால் அவளைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க நிமித்திகர் சொல்லி நிறுவியிருக்கும் அந்த நம்பிக்கை.”

“பாரதவர்ஷம் காத்திருக்கிறது மந்தா. எச்சரிக்கையுடன் மட்டுமல்ல. இத்தகைய செய்திகளில் சற்று எதிர்நம்பிக்கைகளுடனும்தான். எங்கேனும் ஒரு கேலி முளைத்துவிட்டதென்றால் மிக விரைவில் அது பரவும். மக்களின் உள்ளங்களின் அடியாழத்தில் முன்னரே வாழும் கேலிதான் அது. ஏனென்றால் பேருருவம் கொண்ட எதுவும் வீழ்ச்சியடைந்து பார்க்க மக்கள் விழைகிறார்கள். அக்கேலி நெய்க்கடலின் எரி போல பரவும். பின் அதை எவரும் தடுக்க முடியாது. திரௌபதி என்னும் அச்சமூட்டும் ரகசியம் அத்துடன் அழியும்.”

“அது நிகழலாகாது என்பதற்காகவே வந்தேன்” என்றாள் குந்தி. “இன்று உங்களுக்குத்தேவை நிலம். அவளுக்குத்தேவை அவள் வஞ்சம் கொண்ட கொலைத்தெய்வம் என்ற உளச்சித்திரம். பாஞ்சாலத்திற்குத் தேவை வஞ்சம் நிறைவேறல். மூன்றுக்கும் ஒரே வழிதான். அவளிடம் சொல், அஸ்வத்தாமன் மீது படைகொண்டுசெல்ல. சத்ராவதியை வென்று அதில் அவள் முடிசூடட்டும். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் முதல் மணிமுடி அவ்வாறு அவளாலேயே வென்றெடுக்கப்படட்டும்.”

பீமன் ”அன்னையே அது துரோணருக்கு அர்ஜுனன் அளித்த கொடை” என்றான். “இல்லை, துரோணருக்கு அர்ஜுனன் அளித்த கொடை துருபதனை வென்று கொண்டு போட்டது மட்டுமே. சத்ராவதியை அவர் அவரிடமிருந்து பிடுங்கினார். அதற்கும் பார்த்தனுக்கும் தொடர்பில்லை. மந்தா, என்றிருந்தாலும் பார்த்தனுக்கு அஸ்வத்தாமன் பெரும் எதிரிகளில் ஒருவன், அதை மறக்கவேண்டாம். அவ்வெதிரியை ஏன் வளரவிடவேண்டும்?”

“ஆனால்” என பீமன் பேசத்தொடங்க “நான் வாதிடவிரும்பவில்லை. தன் நிலத்தை மீட்க பாஞ்சாலத்து இளவரசிக்கு முழு உரிமையும் உள்ளது. அதற்காக தன் கணவர்களை அவள் ஏவுவதும் இயல்பே. அதில் நெறிமீறல் இல்லை, முற்றிலும் உலகவழக்குதான்” என்றாள் குந்தி. பீமன் கைகளை விரித்தபின் எழுந்துகொண்டான். சாளரத்தை நோக்கியபடி “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான்.

“நீ அவளிடம் இதை சொல்” என்றாள் குந்தி. “ஆனால் சொல்லிக்கேட்பவள் அல்ல அவள். அதை வேறுவகையிலேயே செய்யவேண்டும். அவளை ஒரு வெறும்பெண் என நடத்து. அவள் அகம் புண்படட்டும். அவள் நிலமற்றவள், வெறும் இளவரசி மட்டுமே என அவள் உள்ளத்தில் தைக்கும்படி சொல். ஆணவம் கொண்ட பெண் அவள். ஆணவத்தைப்போல் எளிதில் புண்படுவது பிறிதில்லை. யானையை சினம்கொள்ளச் செய்வதே மிக எளிது என்று போர்க்கலையில் கற்றிருப்பாய்.”

பீமன் புன்னகையுடன் “நான் போருக்குச் செல்லவில்லை அன்னையே” என்றான். குந்தி “ஷத்ரியனுக்கு எச்செயலும் போரே” என்றாள். பீமன் “நான்…” என சொல்ல வாயெடுக்க அவள் கை நீட்டித் தடுத்து “இது என் ஆணை” என்றாள். பீமன் தலைவணங்கினான். “அவள் புண்பட்டிருக்கையில் சொல் அஸ்வத்தாமன் தலையில் முடி இருக்கும் வரை அவள் வெறும் அரண்மனைப்பெண் மட்டுமே என்று” என்றபடி குந்தி எழுந்துகொண்டாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஒளிவிடும் கோவை
அடுத்த கட்டுரைநவீன அடிமைமுறை-கடிதம்