குடி,சினிமா,கேரளம்

அன்புள்ள ஜெயமோகன்,
மலையாளப்படங்கள் குறித்து உங்களுடைய பதிவுகளை படித்தேன். நீங்கள் வரிசைப்படுத்திய படங்களில் சிலவற்றை பார்த்து ரசித்து பரவசப்பட்டதுண்டு. இப்போ அண்ணன் தம்பி வரிசையில்தான்  போட்டிக்கு மாறி மாறி நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் ‘கத பறயும்போல்’ குறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழில் வந்த கிரீடம், குசேலன் இன்னும்  பல, நல்ல மலையாள படங்களை சிதைத்து குதறி படையல் பண்ணி வெளியிடப்பட்டவை.. பணம் படுத்தும் பாடுதான் எல்லாம்.

நேற்று ‘ரித்து’ என்ற மலையாள படம் பார்த்தேன். இது ஒரு ஷ்யாம் பிரசாத் தயாரிப்பு. ஒரு அழகிய நட்பு சிதைந்து போன கதை. எழுத துடிக்கும் ஒரு இளம்  படைப்பாளியின் கதை.  இன்றைய இளைஞர்களின் உணர்வுகளும் ஆசைகளும் அதை அடைகின்றபொழுது அவர்களின் இழப்புகளுமாக கதை சொல்லப்பட்டிருகின்றது. சரத் வர்மா என்ற இளைஞனின் கண்களூடாக காட்சிகள் விரிகின்றன. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

என்றாலும் ஒரு நெருடல்; படித்த நன்றாக சம்பாதிக்கின்ற இள மங்கையரும் ஆண்களும் மாலைப்பொழுதுகளில் குடியும் கும்மாளமுமாக வலம் வரும் காட்சி மிகைப்படுத்தப்படுவதாக நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் எப்படி?
ரித்து  பார்த்துவிட்டீர்களா?  மோட்சம் என்ற படம் கூட நன்றாக இருந்தது. டொராண்டோவில் மலையாள சினிமா திரையரங்குகளில் பார்க்கவே முடியாது, ஆன்லைன்தான். உங்கள் அங்காடித்தெருவுக்கு போக காத்திருக்கிறேன்.
தமயந்தி

ரிது

அன்புள்ள, தமயந்தி,

நான் சமீப காலமாக மலையாள சினிமா குறைவாகவே பார்க்கிறேன். காரணம் இங்கே முன்பு போல மலையாள சினிமா வருவதில்லை. ஓடுவதில்லை என்று சொன்னார்கள். நான் திருட்டு டிவிடி பார்ப்பதில்லை.

மேலும் அண்ணன் தம்பி ரகமான படங்கள்தான் அதிகம் வெளிவந்து அவையே நன்றாக ஓடுவதாகச் சொல்கிறார்கள். அவ்வப்போது நல்ல படங்கள் வந்தாலும் அவற்றால் பொருளியல்வெற்றி அடைய முடிவதில்லை. அந்த அளவில் மலையாள சினிமாவிந் நிலைமை கவலைக்கிடம் என்பதே பேச்சு.

ரிது [பருவம்] நல்ல படம் என்றார்கள். நல்லபடங்கள் பல உள்ளன. வெறுதே ஒரு பார்ய, சூபி பறஞ்ஞ கத, பாலேரி மாணிக்கம் போன்றவை சமீபத்தில் வந்தன. நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

குடி பற்றி. கேரளத்தின் சாயங்காலங்களை அது அழித்துவிட்டது. மொத்தகேரளமுமே சாயங்காலங்களில் குடிக்க  அமர்ந்துவிடுகிறது. இளைஞர்களின் உலகமே பார்தான். மதுக்கடைகளில் பெரும் கியூ வரிசைகள். ‘வைகுந்நேரம் எந்தா பரிபாடி?’ இதுவே கேரளத்தின் தாரக மந்திரம். சாயங்காலம் ஏழுமணிக்கெல்லாம் கேரளம் கடைகளைப் பூட்டி அடங்கிவிடுவதும் இதனாலேயே

எண்பதுகளில் இந்த பண்பாடு அறிவுஜீவிகளால் ஊக்குவிக்கப்பட்டது. குடி ஒரு கொண்டாட்டமாக,நாகரீகமாக,மீறலாக பார்க்கபப்ட்டது. கலைஞர்கள் எழுத்தாளர்கள் குடித்துவிட்டு குடியைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள். மெல்லமெல்ல ஒரு தலைமுறையே அப்படி உருவாகி வந்தது. குடியைப்பற்றிய மனத்தடைகள் மறைந்தன. குடியை எதிர்மறையாகப் பார்ப்பவர்கள் பத்தாம்பசலிகள் என அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டார்கள்.

இன்று இலக்கிய வாசிப்பு, மாற்று அரசியல் அனைத்திலுமே மாபெரும் பின்னடைவை உருவாக்கியிருப்பது குடியே. காரணம் சாயங்காலங்களே கிடையாது. இன்று அறிவுஜீவிகள் அதைப்பற்றி கவலைப்படுகிறார்கள். பேசுகிறார்கள்.

ஆகவேதான் நான் தமிழகத்தில் தொண்ணூறுகளில் குடியை சிலாகிக்கும் அறிவுஜீவிகளை கண்டு எரிச்சல் உற்றேன். கடுமையாக அவர்களுக்கு எதிர்வினையாற்று பழமைவாதி என்ற பெயரையும் பெற்றேன்.

நம்மைப்போல குடிப்பது எந்த நாட்டுக்கும் பொருளியல் பண்பாட்டு இழப்பேயாகும். 

ஜெ

முந்தைய கட்டுரைஅங்காடி தெரு,கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (1 – 7)