‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 6

அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன.

அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “மைந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி ஏறி வந்தது. காலையில் அவன் உடலில் இருந்து எழுந்த அனலால் அவளே விலகிப்படுத்துக்கொண்டாள். விடிந்தபின் அவனைச் சூழ்ந்த குலத்தவர் அவன் அவ்வனலில் இருந்து மீளமாட்டான் என்றனர். வெளியே வீசிக்கொண்டிருந்த கடுங்குளிர் காற்றில் அவனைக் கொண்டுசென்று போடும்படி சொன்னார்கள். முதியவள் “இல்லை, அவன் சாகப்போவதில்லை. அவன் வழியாக மூதாதையரின் சொற்கள் சென்றுகொண்டிருக்கின்றன” என்றாள்.

ஏழுநாட்கள் கடும் வெம்மையுடன் அவன் நினைவழிந்து கிடந்தான். முதியவள் கனிச்சாறை முயலின் குருதியுடன் கலந்து அவனுக்கு இலைக்குவையால் ஊட்டிக்கொண்டிருந்தாள். அவன் உதடுகள் கருகின. கண்ணிமைகள் கருகின. விரல்கள் வளைந்து ஒன்றன் மேல் ஒன்று ஏறிக்கொண்டன. வாய் முற்றிலும் உலர்ந்தது. நெஞ்சில் மூச்சசைவால் மட்டுமே அவன் உயிருடன் இருந்தான். ஏழுநாட்களாகியும் அவன் இறக்காதது கண்டு அவன் குடி வியந்தது. “அவனை காட்டின் குருதிப்பேய்களில் ஒன்று ஆட்கொண்டிருக்கிறது. அவன் உடலில் ஓடும் அனலை அது குடிக்கிறது” என்றனர் முதியவர்.

எட்டாவது நாள் அவன் கண்விழித்தான். மெல்லிய குரலில் “நீர்” என்றான். வறண்ட உதடுகளை அஞ்சிய நாகம் போல நாக்கு வந்து வருடிச்சென்றது. முதியவள் அவள் பிடித்துவந்திருந்த முயலைக்கொன்று அதன் குருதியின் சில துளிகளை அவனுக்கு ஊட்டினாள். அவன் நா அதை நக்கி உண்டது. செவ்விழிகளைத் திறந்து “இன்னும்” என்றான். அவள் மேலும் குருதியை அவனுக்கு அளித்தாள். அவன் எழுந்து அமர்ந்து “விடாய்… விடாய் தீரவில்லை” என்றான். அவள் அந்த முயலை அவனிடம் கொடுத்தாள். அவன் அதன் குருதிக்குழாயை தன் வாயில் வைத்து முற்றிலும் உறிஞ்சிக்குடித்தான்.

மூன்றுநாட்களில் அவன் பன்னிரண்டு முயல்களை உண்டான். எழுந்து அமர்ந்த நான்காம் நாள் அவள் கண்ணிவைத்து பிடித்துக் கொண்டு வந்த மானின் குருதியை முற்றிலுமாக உண்டான். நலம் பெற்று எழுந்தபின் அக்குடியே அஞ்சும் பெரும்பசி கொண்டவனானான். அவனே காட்டுக்குள் சென்று தினமும் ஒரு மானை உண்டான். வீங்கிப்பெருப்பதுபோல சில மாதங்களிலேயே இரண்டு மடங்கு பெரிதானான். அவன் கைகளும் கால்களும் திரண்டன. தோள்கள் வீங்கிப்பருத்தன. குரல் முழக்கம் கொண்டது. நாளொன்றுக்கு இரண்டு மான்களை முழுமையாக உண்ணத் தொடங்கினான்.

அவனில் மண்மறைந்த மூதாதையர் வந்து குடியேறியிருப்பதாக முதியவள் சொன்னாள். நூற்றாண்டுகளாக அவர்களுக்கு முறையான படையல்கள் செய்யப்படவில்லை. அவர்களின் பெரும்பசி அவனில் குடிகொண்டிருக்கிறது. அவன் உணவைத்தவிர எதையும் எண்ணாதவனாக இருந்தான். விடியலில் காட்டில் நுழைந்து காட்டெருதைத் துரத்தி கற்களால் அடித்துக்கொன்று உரித்து சுட்டு பகல் முழுக்க உண்டு வெள்ளெலும்பாக ஆக்கி மீண்டான். இரவில் படுத்து சற்றே துயில்கையிலேயே மீண்டும் பசிகொண்டு கல்லாலான கதாயுதத்துடன் காட்டுக்குள் நுழைந்தான்.

முதியவள் இறக்கும்போது அவனுக்கு பதினாறு வயது. அவன் ஊஷரர் குலத்தின் தலைவனாக ஆகியிருந்தான். அக்குடியில் அத்தனைபேரும் அவனால் குனிந்து நோக்கப்படுபவர்களாக இருந்தனர். மெலிந்து உயிர்விட்டுக்கொண்டிருந்த முதியவள் அவன் கைகளைப்பற்றி “இலங்கையை நீ மீட்கவேண்டும் மைந்தா” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது அங்கிருந்த பிறருக்குப் புரியவில்லை. அவள் அந்த மோதிரத்தை அவனுக்கு அளித்தாள். அது அவன் விரலுக்குப் பொருத்தமானதாக இருந்தது. அவன் கையைப்பற்றியபடி அவள் உயிர்விட்டாள்.

அன்றே அவன் கிளம்பி காடுகள் வழியாகச் சென்று மதுவனத்தை அடைந்தான். அங்கே புல்வெளி நடுவே பலராமரின் கதாயுதப் பயிற்சிசாலை இருந்தது. விடியற்காலையில் அவர் நீராடுவதற்காக யமுனையை அடைந்தபோது அவர் முன் அவன் இரு கைகளையும் விரித்தபடி வந்து நின்றான். அவரை விட அரைப்பங்கு உயரமானவனாகவும் கரிய உடலின்மேல் சடைவிழுதுகள் தொங்கிய பெரிய தலை கொண்டவனாகவும் இருந்த அவனைக்கண்டு பலராமரின் மாணவர்கள் தங்கள் படைக்கலங்களை எடுத்தனர். அவர் அவர்களைத் தடுத்து “யார் நீ?” என்றார்.

“கதைப்போர் கற்றுக்கொள்ள வந்தேன் குருநாதரே” என்றான் பகன். “நான் காடாளும் அரக்கர்களுக்கு கற்றுத்தருவதில்லை” என்று பலராமர் சொன்னார். பகன் தன் மோதிரத்தை எடுத்துக்காட்டி “நான் இலங்கையை ஆண்ட ராவணனின் கொடிவழி வந்தவன்” என்றான். அதை வாங்கி நோக்கிய பலராமர் திகைத்தார். பகன் “நான் உங்கள் மாணவனாக ஆவேன். அல்லது யமுனையில் விழுந்து இறப்பேன். பிறிதொன்றை பேசவேண்டாம்” என்றான். அவனை கைநீட்டித் தடுத்த பலராமர் “சிவனருள் கொண்ட குலம் நீ. மறுக்க நான் தகுதியற்றவன்” என்றார்.

அவன் வந்து அவர் கால்களைப் பணிந்தான். “ஒருபோதும் எளிய மாந்தரை கொல்ல மாட்டேன் என்று எனக்கு வாக்களிப்பாய் என்றால் என் கலையை உனக்களிப்பேன்” என்றார். மண் தொட்டு வாக்களித்து அவரிடம் மாணவனாக ஆனான் பகன். “பேருருக் கொண்டவனாக இருக்கிறாய். அது உன் ஆற்றல். ஆனால் எக்கலையிலும் எது ஆற்றலோ அதுவே எல்லையுமாகும். உன் பேருருவே நீ காணமுடியாதவற்றை உருவாக்கும். நீ செய்யமுடியாதவற்றை சமைக்கும். அவற்றை அறியமுடியாத ஆணவத்தையும் உனக்களிக்கும்” என்றார் பலராமர்.

எட்டாண்டுகள் பலராமரிடம் தங்கி கல்விகற்றான் பகன். இரும்புக் கதையை சுழற்றியடித்து பேராலமரத்தை வேருடன் ஒடித்திடும் வல்லமைகொண்டவன் ஆனான். கல்விமுதிர்ந்து குருநாதரிடம் வாழ்த்துபெற்றான். “அறமும் வழுவும் இருக்கும் வரை, மானுடம் குலங்களென சிதறிக்கிடக்கும் வரை போரின்றி உலகமையாது. ஆனால் படைக்கலம் கொண்டு போருக்கெழுபவனே போரில் கொல்லப்படவேண்டும். உழுதுண்டு வாழ்பவனும் கன்று மேய்ப்பவனும் வணிகனும் நூல்கற்றோனும் சூதனும் வைதிகனும் கொல்லப்படலாகாது. அந்நெறிக்கு நீ கட்டுப்பட்டவன் என்பதை நான் உனக்களிக்கும் இந்த இலச்சினை மோதிரம் உனக்கு அறிவுறுத்தட்டும். அவ்வண்ணமே ஆகுக!” என்றார் பலராமர். அவர் கால்களைத் தொழுது அவன் கிளம்பினான்.

நாடுகள் தோறும் நடந்து தன் குடிகளைத்தேடி காளகூட மலைக்காடு நோக்கி மீண்டு வந்தான். அவன் விட்டுச் சென்றபோதிருந்த காடு முழுமையாகவே அழிக்கப்பட்டிருந்தது. அங்கே பன்னிரு சிற்றூர்களும் சந்தையும் துறைமுகமும் அமைந்திருந்தன. அங்கே அவனைக்கண்ட மக்கள் அஞ்சி ஓடினர். வீரர்கள் ஏற்றிய வில்லுடன் புரவிகளில் வந்து அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் கையில் இருந்த பலராமரின் மோதிரமே அவனைக் காத்தது. அவன் ஊரைவிட்டு விலகி மலையேறிச்சென்றான். மரங்கள் முளைக்காத உச்சிக்காட்டில் பாறைக்குகைகளுக்குள் சிதறிப்பரந்திருந்த தன் குடிகளைக் கண்டடைந்தான். அவனைக் கண்டதும் அவர்கள் கதறியழுதபடி ஓடிவந்து காலில் விழுந்தனர். குழந்தைகள் அவன் கைகளைப்பற்றி கண்ணீர்விட்டன.

அவர்கள் மெலிந்து நோயுற்று புண்கள் அடர்ந்த உடலும் நாற்றமடிக்கும் கூந்தலுமாக புதைகுழிகளில் இருந்து பாதிமட்கிய பிணங்கள் எழுந்துவந்தது போலிருந்தனர். அவர்கள் வாழ்ந்த குகைகள் கூட்டம்கூட்டமாக பிணங்களை அள்ளிப்போட்ட புதைகுழிகளாகவே தோன்றின. அவர்கள் வாழ்ந்த மலையுச்சியில் விலங்குகளேதும் இருக்கவில்லை. காய்கனிகளை அளிக்கும் மரங்களும் இருக்கவில்லை. மலைச்சுனைகளில் ஊறும் நீரை உண்டு மலைப்புதர்களின் விறகுகளை எரித்து குகைகளுக்குள் அவர்கள் வாழ்ந்தனர். நாணல்களைப் பின்னி உருவாக்கிய வலைகொண்டு பிடித்த சிறிய பூச்சிகளையும் வண்டுகளையுமே உணவாகக் கொண்டனர்.

கீழிருந்த காளகூடக்காடு முழுமையாகவே உத்தரபாஞ்சால நாட்டுக்குரியதாக ஆகியிருந்தது. அங்கே வேட்டையாடவும் மலைப்பொருள் சேர்க்கவும் கன்றுமேய்க்கவும் சத்ராவதியின் ஷத்ரியர்களுக்கு வரிகொடுத்து உரிமைப் பட்டயம் பெற்ற மக்கள் வந்து குடியேறியிருந்தனர். குதிரைகளும், யானைகளும், நெடுந்தூரம் பறக்கும் வேல்களும் நினைத்த இடத்தை தீமூட்டும் அரக்குபதித்த எரியம்புகளும் அவர்களிடமிருந்தன. காட்டின் எல்லைகள் முழுக்க உயர்ந்த மரங்களில் காவல்மாடங்களைக் கட்டி இரவும் பகலும் அவர்கள் கண்காணித்தனர்.

பகன் தன் மக்களைத் திரட்டி காளகூடத்தின் காட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். நூற்றெட்டு முறை அக்கிராமங்களை அவன் தாக்கினான். அவர்கள் படைக்கலப் பயிற்சியற்றவர்களாகவும் பசியால் மெலிந்தவர்களாகவும் இருந்தனர். பசியின் வெறியே அவனுடன் அவர்களை செல்லவைத்தது. தன் வல்லமை வாய்ந்த கதாயுதத்துடன் பகன் காவல்மாடங்களை உடைத்தான். கிராமங்களுக்குள் புகுந்து தீயிட்டான். ஆயர்களையும் வேளிர்களையும் அடித்துத் துரத்தி அவர்களின் களஞ்சியங்களை கொள்ளையிட்டு மலைமேல் கொண்டு சென்றான்.

மலையுச்சியில் கற்களை அடுக்கி சிருங்கசிலை என்ற கோட்டையை அவன் கட்டினான். அதன்மேல் இரவும் பகலும் தன் குடிகளை காவல் நிறுத்தினான். ஓராண்டு வாழ்ந்தாலும் உண்டு தீராத அளவுக்கு ஊனையும் ஊன்நெய்யையும் தானியங்களையும் கொண்டுசென்று நிறைத்தான். அவன் குடிகள் உண்டு உடல்தேறினர். போரிட்டு கை தேறினர். மலையிடிந்து பாறைக்கூட்டம் இறங்குவதுபோல பகன் தன் படைகளுடன் வரும் ஒலி கேட்டு காளகூடத்தின் கிராமங்கள் அலறி விழித்துக்கொண்டன.

பகன் பிரமாணகோடியிலும் வாரணவதத்திலும் அமைந்த துறைமுகங்களைத் தாக்கி கலங்களை தீயிட்டான். சந்தைகளில் புகுந்து களஞ்சியங்களை கொள்ளையடித்து அவர்களின் கழுதைகளிலேயே ஏற்றி மலைமேல் கொண்டுசென்றான். மலைமேல் சிருங்கசிலையில் நூறு கல்வீடுகள் எழுந்தன. அவற்றில் இலங்கையை ஆண்ட அரக்கர்கோன் ராவணனின் வீணைச்சின்னம் வரையப்பட்ட கொடிகள் பறந்தன. வலுமிக்க குதிரைகளை கொள்ளையடித்துச்சென்று அவற்றை மலைச்சரிவில் இறங்குவதற்குப் பழக்கி அவன் உருவாக்கிய படை பறக்கும்புரவிகள் என்று ஊராரால் அழைக்கப்பட்டது. ஆயர்குடிகளும் வேளார் கிராமங்களும் அவனுக்கு திறையளித்தன. சந்தையும் துறைமுகமும் அவன் ஆணையின் கீழ் வந்தன.

சூதர் அவனைத் தேடி குன்றேறிச் சென்றனர். ஈசலும் மலையரிசியும் ஊன்கொழுப்பும் கலந்து சமைத்த நல்லுணவை அவன் அள்ளி அள்ளி வைக்க உண்டு நெய்வழிந்த கையை யாழிலேயே துடைத்தனர். அவன் ஊற்றிய மலைத்தேன் கலந்த நறுங்கள்ளை குடித்து அவன் குடியை வாழ்த்திப்பாடினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் அவன் புகழ்பரவியது. அவன் தோள்வல்லமையை இளைஞர் ஏத்தினர். அவன் கொடைவண்மையை எளியோர் வாழ்த்தினர். அவன் வரிகொள்ளும் நாடு பகநாடு என்றழைக்கப்பட்டது.

அப்போது சத்ராவதி அஸ்வத்தாமனின் ஆட்சியின் கீழே வந்தது. தனக்குரிய காளகூடக் காடு பகனின் ஆட்சிக்குச் சென்றுவிட்டிருப்பதை உணர்ந்த அஸ்வத்தாமனின் பெரும்படை சத்ராவதியில் இருந்து காளகூடத்திற்குள் நுழைந்தது. கங்கைவழியாக படகில் வந்த பெரும்படை ஒன்று பிரமாணகோடியை அடைந்தது. இருபக்கத்திலிருந்தும் படைகள் எழுந்து காளகூடத்தை முழுமையாகவே சுற்றிக்கொண்டன. பகனைக் கொன்றபின்னரே நாடுமீள்வதென்று அஸ்வத்தாமன் வஞ்சினம் சொல்லியிருப்பதாக பகன் அறிந்தான்.

சத்ராவதியின் பெரும்படையை நேரில் எதிர்கொள்ளும் ஆற்றல் பகனின் படைகளுக்கிருக்கவில்லை. அரக்கர்கள் தங்கள் படைகளுடன் சிருங்கசிலையிலேயே இருந்தனர். இரவின் இருள்மறைவில் அம்புக்கூட்டம் போல மலையிலிருந்து இறங்கி சத்ராவதியின் படைகளைத் தாக்கி முடிந்தவரை கொன்றுகுவித்துவிட்டு மலையேறிச்சென்று பாறைக்கோட்டைக்குள் மறைந்துகொண்டனர். மலையேறிச்சென்ற சத்ராவதியின் படைகள் மீது மலைவிளிம்பு முழுக்க வைக்கப்பட்டிருந்த பெரும்பாறைகளை உருட்டி விட்டனர் அரக்கர்கள். கொலையானைகளைப்போல உறுமியபடி இறங்கிவந்த பாறைகள் சத்ராவதியின் வீரர்களைக் கொன்று குருதியில் குளித்தபடி அடிவாரத்தை அடைந்தன.

எட்டுமுறை முயன்றபின் சத்ராவதியின் படை மலையேறும் திட்டத்தை கைவிட்டது. மலையைச்சுற்றி தன் படைகளை நிறுத்திவிட்டு பாஞ்சாலத்தவர் காத்திருந்தனர். “அவர்களை ஒருபோதும் வெல்லமுடியாது அரசே. அவர்களின் தலைவன் வெல்லமுடியாத பேருருவம் கொண்டவன்” என்றான் முதன்மைத்தளபதியாகிய திரிகரன். அஸ்வத்தாமன் புன்னகைத்தபடி “காலந்தோறும் மக்கள் சமவெளிகளிலேயே வாழ்ந்துள்ளனர். உச்சிமலைகளில் அல்ல. அது எதனாலோ அந்த அடிப்படை இன்றும் அவ்வண்ணமே இருக்கும். அவர்கள் மலைமேல் வாழமுடியாது. நாம் காத்திருப்போம்” என்றான்.

வருடம் முழுக்க சத்ராவதியின் படைகள் அங்கேயே காத்திருந்தன. பனிபெய்யத் தொடங்கியபோது தோல்களால் கூடாரமடித்து அனலெழுப்பி அங்கிருந்தனர். குளிர்காலம் முழுக்க மலைமேலேயே பகனின் படைகள் இருந்தன. குளிர் முடிந்து கோடை தொடங்கியபோது சிருங்கசிலையில் உணவு குறையத் தொடங்கியது. குதிரைகளுக்கு புல் அளிக்கமுடியாமலானபோது அவற்றை அவர்கள் கொன்று உண்டனர். தானியக்குவைகள் ஒழிந்தன. ஊன்விலங்குகள் அழிந்தன. மழைக்காலம் வந்தபோது அவர்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். மழைமுடிந்தபோது அவர்களிடம் உணவே எஞ்சியிருக்கவில்லை.

பசியில் வெறிகொண்ட பகனின் படைகள் மலையிறங்கி வந்து ஓநாய்கள் ஆட்டுமந்தையை என சத்ராவதியின் படைகளைத் தாக்கின. ஆனால் அஸ்வத்தாமன் அதற்குள் மிகச்சிறந்த தொடர்புமுறையை அமைத்திருந்தான். அவர்கள் இறங்கும்போதே மோப்பநாய்கள் குரைக்கத் தொடங்கின. முரசொலி மூலமும் எரியம்பு மூலமும் செய்தியறிந்த படைகள் இரு திசைகளின் படைநிலைகளில் இருந்தும் கிளம்பி அங்கே வந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. அவர்கள் எரியம்புகளையே பெரிதும் கையாண்டனர். அஸ்வத்தாமன் எரியை ஆள்வதில் பெரும்திறல் கொண்டிருந்தான்.

“கொல்லவேண்டாம். முடிந்தவரை புண்படுத்தி அனுப்புங்கள். அங்கே மலைமேல் அவர்களுக்கு மருத்துவர்கள் இல்லை” என்று அஸ்வத்தாமன் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தான். அம்புமுனைகளில் நவச்சாரமும் கந்தகமும் கலந்து எரித்து அவர்களைத் தாக்கினர் சத்ராவதியினர். அனல் பட்ட உடலுடன் மலைமேல் மீண்ட அரக்கர்கள் புண் அழுகி காய்ச்சல் கண்டு இறந்தனர்.

நாள் செல்லச்செல்ல அரக்கர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக சத்ராவதியின் படைகள் மேலேறி தளம் அமைத்தன. பெரும்பாறைகளின் அடியில் குழிதோண்டி கற்களை அடுக்கி அறைகளை அதற்குள் கட்டிக்கொண்டனர். மேலிருந்து உருண்டு வரும் பாறைகள் அவர்களை தாக்கமுடியவில்லை. மேலும் மேலும் அணுகி குழிதோண்டி அறையமைத்தனர். மேலிருந்து அவர்களை காணமுடியும் அண்மை வரை அவர்கள் வந்தனர். சிருங்கசிலையை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பகன் உணர்ந்தான். தேர்ந்த இருபது அரக்கர்குலத்து வீரர்களுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்தான்.

“நாங்கள் உங்களை இங்கே விட்டுச்செல்கிறோம். சத்ராவதியின் படைவீரர்கள் உங்களை பிடிக்க வரும்போது கைகளைக் கூப்பிக்கொண்டு அவர்கள் முன் பணியுங்கள். அடிமைப்பட்டவர்களைக் கொல்வதை அவர்களது நெறிநூல்கள் ஒப்புவதில்லை” என்று பகன் தன் குடிப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொன்னான். பெருமழை பெய்து வானும் மண்ணும் நீரால் மறைக்கப்பட்டிருந்த இரவில் அவர்களிடம் விடைபெற்று தன் வீரர்களுடன் குன்றிறங்கிய நீரோடை வழியாக ஓசையின்றி தவழ்ந்து கீழே வந்தான்.

மழையில் அவர்கள் வரும் ஒலியை சத்ராவதியினர் அறியவில்லை. அவர்களின் காவல்நாய்களுக்கும் மோப்பம் கிடைக்கவில்லை. அவற்றைப் பற்றி நெரித்துக் கொன்றுவிட்டு முதல் படைத்தளத்தை அவன் தாக்கியபோதே அவர்கள் அதை அறிந்தனர். முழவுகளின் ஓசை எழவில்லை. எரியம்புகள் ஒளிரவில்லை. படைநிலைக்குள் மழைக்குளிருக்கு ஒடுங்கித் துயின்ற வீரர்களைத் தாக்கியது பகனின் படை. அவர்கள் விழித்தெழுவதற்குள்ளேயே மண்டையோடுகள் உடைந்து மூளை சிதறித் தெறித்தது. அலறல்கூட எழாமல் அனைவரும் உடைந்து சிதறினர். ஏழு படைநிலைகளில் எவரையும் மிச்சம் வைக்காமல் கொன்றுவிட்டு மறுபக்கம் காட்டுக்குள் சென்றனர் பகனும் வீரர்களும்.

மறுநாள் மழை விட்டபின் தேடிவந்த ஒற்றை நாய் சொன்ன செய்தியை வைத்தே நிகழ்ந்ததை அறிந்தான் அஸ்வத்தாமன். அவன் குதிரையில் வந்திறங்கி படைநிலைக்குள் நுழைந்தபோது மூளைக்கோழையில் கால்வழுக்கி சுவரைப்பற்றிக்கொண்டான். நசுக்கப்பட்ட வீரர்கள் குருதியும் நிணமும் சிதற செத்துக் குவிந்திருந்தனர். ஏதோ ஒரு கணத்தில் அஸ்வத்தாமனின் அகத்தில் ஒரு நரம்பு முறிந்தது. “கொல்லுங்கள் அரக்கர்களை” என அவன் ஆணையிட்டான். “இனி பொறுத்தால் நாம் ஆண்மக்களல்ல!”

வெறிகொண்ட சத்ராவதியின் வீரர்கள் நாற்புறமும் சூழ்ந்து மலைமேல் ஏறிச்சென்றனர். பகன் சிருங்கசிலையில் இருப்பதாகவும் அரக்கர்களிடம் அவர்களை வெல்லும் ஏதோ சில மாயப்படைக்கலங்கள் எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் எண்ணினர். ஆகவே இடைவெளியில்லாமல் எரியம்புகளை சிருங்கசிலையை நோக்கி எய்தபடி மேலேறிச்சென்றனர். அணுகிச் சூழ்ந்தபின் எரியம்புகளின் புகையால் மூடியிருந்த கோட்டைக்குள் எட்டுநாழிகை நேரம் மேலும் அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தனர். நச்சுப் புகை கக்கும் ரசங்களை சிறுகுடுவைகளிலாக்கி அம்புகளின் முனைகளில் பொருத்தி ஏவும் முறையை அஸ்வத்தாமன் உருவாக்கியிருந்தான். அம்புகள் சென்று விழுந்த இடங்களில் இளநீலப் புகையுடன் தழல் எழுந்தது. சிருங்கசிலையில் இருந்து ஓர் எதிரம்புகூட திரும்பி வரவில்லை என்பதை அவர்கள் நெடுநேரம் கழித்தே உணர்ந்தனர்.

புகைக்குள் நுழைந்து அவர்கள் உள்ளே சென்றபோது அங்கே ஐநூறுக்கும்மேல் பெண்களும் குழந்தைகளும் செத்துப் பரவியிருப்பதைக் கண்டனர். அன்னையரை அணைத்த குழந்தைகள் ஒரே அம்பில் கோர்க்கப்பட்டிருந்தன. குழந்தைகள் கொதிக்கும் ரசம் விழுந்து வெந்து துடித்தன. உயிருடன் பற்றி எரிந்த அன்னையின் கையில் இருந்து கதறிக்கொண்டிருந்தது பாதி வெந்த கைக்குழந்தை. உருகும் பசுஞ்சதையின் நாற்றம் நிறைந்த மலைவீடுகளுக்குள் விஷரசத்தை முகர்ந்து மூச்சடைந்து நீலம்பாரித்த உடல் உதற செத்துக்கொண்டிருந்தனர். இறுதிமுனகல்கள் ஒலித்த இருள் விரைத்துச் சூழ்ந்திருந்தது.

நடுவே ஒருகணம் திகைத்து நின்ற அஸ்வத்தாமன் திரும்பி ஓடி தன் புரவிமேல் ஏறிக்கொண்டு “இந்த மலைக்குடியிருப்பை முழுமையாகவே கொளுத்தி அழியுங்கள். எந்தத் தடமும் எஞ்சவேண்டியதில்லை. நம் சிந்தையிலும்” என்றான். அவனது புரவி வால்சுழல மலைச்சரிவில் இறங்கிச்செல்ல உருளைச் சிறுபாறைகள் கூடவே பாய்ந்திறங்கின. நேராக கங்கைக்கரைக்குச் சென்ற அவன் நாற்பத்தொரு நாட்கள் அங்கே நோன்புணவு உண்டு பழிதீர் சடங்குகள் செய்தான்,

பகனும் அவன் வீரர்களும் காடுவழியாக எவருமறியாமல் பயணம் செய்து உசிநாரபூமியினூடாகச் சென்றனர். சிற்றூர்களை இரவில் கடந்தனர். ஒவ்வொரு இடத்திலும் சிருங்கசிலையில் என்ன நடந்தது என்று விசாரித்துக்கொண்டே சென்றனர். பகனின் உடல் பதறிக்கொண்டே இருந்தது. தன் பெரிய கைகளால் தலையை தடவிக்கொண்டும் நெஞ்சைப் பற்றிப் பிசைந்துகொண்டும் அவன் நடந்தான். கிரௌஞ்சபக்‌ஷம் என்ற சிற்றூரின் படித்துறையில் அமைந்த மதுக்கடையில் அமர்ந்திருந்த முதுபாணனிடமிருந்து சத்ராவதியின் படை சிருங்கசிலையில் இருந்த பாறைநகரை முழுமையாகவே எரித்து அழித்ததை அறிந்தனர். ஆடைகளில்லாமல் கைதூக்கி வெளியே வந்து சரண் அடைந்து கதறிய பெண்களையும் குழந்தைகளையும் அம்புகளால் துளைத்தும் எரிரசத்தால் கொளுத்தியும் அழித்தபின் அவர்களை குவித்துப்போட்டு தீமூட்டியது உத்தரபாஞ்சாலத்தின் பெரும்படை என்றான் சூதன்.

“எத்தனை தலைமுறைகள்! எத்தனை பேரரசுகள்! அன்றும் இன்றும் அவ்வண்ணமே கொன்று குவிக்கப்படுகிறார்கள். சேர்த்துக் கொளுத்தப்படுகிறார்கள். அள்ளிப் புதைக்கப்படுகிறார்கள். அக்கணமே மறக்கப்படுகிறார்கள். எளியமக்கள் அநீதியால் கொல்லப்படுவது மிகநன்று. அப்போதுதான் அவர்களுக்காக ஒரு துளி விழிநீராவது சிந்தப்படுகிறது. ஓரிரு சொற்களையாவது காவியங்கள் சொல்லிவைக்கின்றன. ஒருதலைமுறைக்காலமாவது அவர்களின் நினைவுகள் வாழ்கின்றன” என்றான் சூதன் கள்மயக்கில் உரக்க நகைத்துக்கொண்டு. அவனைச்சூழ்ந்திருந்தவர்கள் திகைத்து நோக்கியிருந்தனர்.

“அவர்களை புகழ்பெறச்செய்த அஸ்வத்தாமனை வாழ்த்துவோம். மானுடக்குப்பைகளை வீரசொர்க்கத்துக்கு அனுப்பிய உத்தரபாஞ்சாலத்தின் மாவீரர்களை வாழ்த்துவோம். அவர்களின் கையால் பரிசுபெற்று இங்கே மதுக்கடையில் மூக்குவழியாகவும் குடித்து மகிழும் என்னையும் வாழ்த்துவோம். ஓம் அவ்வாறே ஆகுக!” என்று அவன் தன் மூங்கில்கோப்பையால் தரையைத் தட்டி கூவினான். வாயில் மதுவின் கோழை வழிய “ஆம், அறம் வாழும் மண் இது. வென்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் வீழ்ந்தவர்களுக்கு வீரசொர்க்கத்தையும் அளிக்கும் பேரறத்தைச் சொல்லி இன்னொரு கோப்பை மதுவை அருந்துவோம்!”

தலையில் அறைந்தபடி கண்ணீர் விட்டு அழுத பகனை அங்கிருந்தோர் சூழ்ந்துகொண்டனர். “இதோ இந்த அரக்கனும் அழுகிறான். அறம் எத்தனை வல்லமைகொண்டது தோழரே. அது அரக்கர்களையே அழச்செய்கிறது. அறம் உயர்ந்த கரும்பின்சாற்றில் பிறக்கிறது. மண்ணில்புதைந்த பானைகளில் இனிய வாசத்துடன் நுரைக்கிறது. நமது நாசிகளை எரிக்கிறது. குடல்களை உலுக்குகிறது. நமதுசித்தங்களில் இனிய நினைவுகளாகப் பெருகி கண்ணீராக வெளிவருகிறது. அறம் வளரட்டும். அது நுரைத்துப் பெருகியெழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!” என்று சூதன் பாட அவனைச்சூழ்ந்திருந்தவர்கள் குவளைகளை நிலத்தில் அடித்து கண்ணீருடன் நகைத்தனர்.

நெஞ்சில் அறைந்து அழுதபடி வெளிவந்த பகன் ஆற்றங்கரைச் சதுப்பில் அமர்ந்து குமட்டி உமிழ்ந்தான். இரண்டுநாட்கள் உண்பதை எல்லாம் குமட்டிக்கொண்டிருந்தான். விழிநீர் வழிய விம்மியபடி நெஞ்சில் ஓங்கி அறைந்தும் நிலத்தை மிதித்தும் முனகினான். பற்களைக் கடித்து கைமுட்டிகளை இறுக்கி தலையை அசைத்து தனக்குள் பேசிக்கொண்டே இருந்தான். அவனை கள்மயக்கிலேயே அழைத்துச்சென்றனர் வீரர்கள். அருகே நின்றிருக்கும் மரத்தை கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். ஒருமுறை தன் நெஞ்சில் அதை அறையப்போக வீரர்கள் எழுவர் அவன் கைகளை பற்றிக்கொண்டனர்.

பின்னர் சரயுவின் சதுப்பில் விழுந்து பாதிபுதைந்தவன் போல ஓர் இரவும் இருபகல்களும் துயின்றான். எழுந்ததும் தன் கைவிரல்களில் இருந்து ராவணனின் மோதிரத்தையும் பலராமரின் மோதிரத்தையும் உருவி சரயுவின் நீரில் வீசினான். நேராகச் சென்று கரையொதுங்கி நின்றிருந்த வணிகப்படகு ஒன்றை ஒரே அடியில் சிம்புகளாக நொறுக்கி அதற்குள் இருந்த அத்தனை பேரையும் தலை உடைத்துக் கொன்றான். அதில் இருந்த உணவையும் பொன்னையும் எடுத்துக்கொண்டு நடந்தான்.

செல்லும் வழியெங்கும் எதிர்ப்பட்ட அத்தனைபேரையும் கொன்றபடி சென்றான் பகன். கிராமங்களுக்குள் நுழைந்து கண் தொட்டு கை எட்டிய அனைவர் தலைகளையும் உடைத்து வீசினான். முதியவர் பெண்கள் குழந்தைகள் என எந்த வேறுபாட்டையும் அவன் சித்தம் அறியவில்லை. கொன்ற சடலங்களின் குருதியை அள்ளி தன் முகத்திலும் உடலிலும் பூசிக்கொண்டு வெறிச்சிரிப்புடன் நடனமிட்டான். ஒருவேளை உணவுக்காக, ஒரு குவளை மதுவுக்காக கொன்றான். எதிரே வந்தமைக்காக கொன்றான். எட்டிப்பார்த்தமைக்காக கொன்றான். ஊருணியில் ஒருவாய் நீர்குடிப்பதற்காக அங்கே நீரள்ளி நின்றிருந்த அத்தனை பெண்களையும் கொன்றான். அவர்களின் கைகளில் இருந்த குழந்தைகளைப் பிடுங்கி வானில் வீசி அவர்கள் கீழே இறங்கி வருகையில் கதையால் அடித்து சிதறச்செய்து நகைத்தான்.

கொல்லக்கொல்ல அவன் விழிகள் மாறிக்கொண்டே வருவதை வீரர் நோக்கினர். அவனை அறிந்த நாள்முதல் அவற்றில் அவர்கள் கண்ட பெருந்துயர் ஒன்று முழுமையாக அகன்றது. அங்கே எப்போதும் மின்னும் இளநகை குடியேறியது. கொல்வதற்காகவே அவன் ஊர்களுக்குள் புகுந்தான். ஒருவர் கூட எஞ்சாமல் கொன்றபின் குருதி சொட்டும் கதையுடன் கனத்த காலடிகளை தூக்கிவைத்து ஒளிரும் விழிகளும் ஏளனநகைப்புமாக நடனமிட்டபடி அவ்வூரை விட்டு நீங்கினான். அவனை அவன் வீரர்கள் அஞ்சினர். அவன் விழிகளை நோக்குகையில் அவர்களின் முதுகெலும்புகள் குளிர்ந்து அதிர்ந்தன. அவன் மிகத்தாழ்ந்த ஓசையில் சொல்லும் ஒற்றைச் சொல்லைக்கூட இடியோசையென அவர்கள் கேட்டனர். “அவன் விழிகள் தெய்வங்களுக்குரியவை. மானுடர்மேல் உருண்டு செல்லும் காலத்தின் சக்கரம் அவன்” என்றான் ஒரு அரக்கவீர்ன்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இருபத்தேழு நாட்கள் பயணம் செய்து உசிநாரபூமியைக் கடந்து சரயு நதியின் கரையில் அடர்காட்டின் நடுவே தன்னந்தனியாக இருந்த ஏகசக்ரபுரி என்ற சிறுநகரை அடைந்தனர். சரயுவில் மீன்பிடிக்கும் மச்சர்களும் காட்டுப்பொருட்களை சேர்த்து விற்கும் உசிநாரர்களும் வாழும் ஆயிரம் வீடுகள் கொண்ட அந்நகரின் கல்லடுக்கிக் கட்டப்பட்ட சிறுகோட்டையைக் கடந்து நகர்ப்புறத்து ஆயர்குடியில் குருதிவழியும் கதையுடன் அவன் நுழைந்தபோது அங்கிருந்த பெண்களும் முதியவரும் அஞ்சி ஓலமிட்டனர். செல்லும்வழியில் நின்ற எருமைகளையும் காளைகளையும் தலையுடைத்துக் கொன்றான். அவன் வேண்டுவதென்ன என்று கேட்க வந்த மூன்று முதியவர்களின் முதல்சொல் உதடுகளில் இருக்கவே தலைகளை உடைத்தான். ஊரெங்கும் ஓலமிட்டபடி ஓடி அங்கிருந்த உணவை முழுக்க அள்ளி உண்டபின் விலகிச்சென்றான்.

ஏகசக்ரபுரிக்கு அப்பால் இருந்த சிறிய மலையின் மேலே ஏறிச்சென்றனர் பகனும் அவன் வீரர்களும். அங்கே இருள் நிறைந்த பெரும் பிலம் ஒன்றிருந்தது. அதற்குள் ஒரு நீரோடை சென்றது. அங்கே அவர்கள் தங்கினர். கதாயுதத்தை அருகே வைத்துவிட்டு படுத்துத் துயின்ற பகன் அருகே அவன் வீரர்கள் சூழ்ந்து படுத்துக்கொண்டனர். அவர்களின் கனவுக்குள் கை கூப்பிக் கதறியபடி அவர்களின் பெண்களும் குழந்தைகளும் அரக்கும் ரசமும் பட்டு உயிருடன் எரிந்து உருகிவழிந்து கரியாகி விழுந்தனர். துயிலிலேயே அவர்கள் கண்ணீர் விட்டு விம்மியழுதனர். யானை பிளிறும் ஒலி கேட்டு திகைத்து எழுந்தவர்கள் துயிலில் நெஞ்சில் அறைந்து கதறியழும் பகனைக் கண்டனர். எழுந்து அவனைச் சூழ்ந்து அமர்ந்து அவர்களும் அழுதனர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகுழந்தையின் கண்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71