‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 2

திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே வந்து நின்ற துரியோதனன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு திரும்பினான். “உண்டாட்டுக்குச் செல்லவேண்டியதுதான் இளையவனே” என்றான். துச்சாதனன் பெருமூச்சு விட்டான். துரியோதனன் “மீண்டும் மீண்டும் நம்மை உலையில் தூக்கிப்போடுகிறார் தந்தை… ஆனால் அதுவே அவர் நமக்களிக்கும் செல்வம் என்றால் அதையே கொள்வோம். இப்பிறவியில் நாம் ஈட்டியது அதுவென்றே ஆகட்டும்” என்றான்.

அகத்தின் விரைவு கால்களில் வெளிப்பட அவன் நடந்தபோது துச்சாதனன் தலைகுனிந்தபடி பின்னால் சென்றான். தனக்குள் என “இன்று உண்டாட்டில் பட்டத்து இளவரசனுக்குரிய பீடத்தில் அவன் இருப்பான்” என்றான் துரியோதனன். “கோழை. தம்பியர் மேல் அமர்ந்திருக்கும் வீணன்.” இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து தலையை ஆட்டி “இளையவனே, அவன் முன் பணிந்து நின்ற அக்கணத்துக்காக வாழ்நாளின் இறுதிக்கணம்வரை நான் என்னை மன்னிக்கமாட்டேன்” என்றான். பின்பு நின்று “தந்தையின் ஆணையில் இருந்து தப்ப ஒரு வழி உள்ளது. நான் உயிர்விடவேண்டும்… இந்த வாளை என் கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளவேண்டும்.”

தலையை பட் பட் என்று அடித்து “ஆனால் அது வீரனுக்குரிய முடிவல்ல. அகம்நிறைந்து கொற்றவைக்கு முன்பாக நவகண்டம் செய்யலாம். போரில் முன்னின்று சங்கறுத்து களப்பலியாகலாம். இது வெறும் தற்கொலை” என்றான். திரும்பி சிவந்த விழிகளால் நோக்கி “அந்த உடைவாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சு என்றால் செய்வாயா?” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன் திகைத்து பின்னகர்ந்தபடி. “செய்” என்றான் துரியோதனன். “ஆணை” என்று துச்சாதனன் தன் வாளை உருவினான். அவ்வொலி இடைநாழியில் ஒரு பறவையின் குரலென ஒலித்தது.

துச்சாதனன் வாளைத் தூக்கிய கணம் “வேண்டாம்” என்று துரியோதனன் சொன்னான். “இறப்புக்குப் பின்னரும் இதே அமைதியின்மையை முடிவிலி வரை நான் அடைந்தாகவேண்டும்…” துச்சாதனன் உடைவாளை மீண்டும் உறையில் போட்டான். பின்னர் திரும்பி திருதராஷ்டரரின் அறை நோக்கி சென்றான். திகைத்துத் திரும்பி “இளையவனே” என்று துரியோதனன் அழைக்க துச்சாதனன் “என் பிழையை பொறுத்தருளுங்கள் மூத்தவரே. தங்களைக் கடந்து இதை நான் செய்தாகவேண்டும்” என்றபின் விப்ரரைக் கடந்து ஓசையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

திருதராஷ்டிரரின் ஆடைகளை சரிசெய்துகொண்டிருந்த சேவகன் அந்த ஒலியைக் கேட்டு திகைத்து திரும்பி நோக்கினான். “தந்தையே” என்று உரத்த குரலில் துச்சாதனன் கூவினான். “இதன்பொருட்டு நீங்கள் என்னை தீச்சொல்லிட்டு நரகத்துக்கு அனுப்புவதென்றாலும் சரி, உங்கள் கைகளால் என்னை அடித்துக்கொல்வதாக இருப்பினும் சரி, எனக்கு அவை வீடுபேறுக்கு நிகர். நான் சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும்.” திருதராஷ்டிரர் முகத்தை கோணலாக்கிய புன்னகையுடன் “உனக்கு நா முளைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

கதவைத்திறந்து உள்ளே வந்த துரியோதனன் பதைப்புடன் “இளையவனே” என்று கைநீட்டி அழைக்க “மூத்தவரே, என்னை அடக்காதீர்கள். என் நாவை நீங்கள் அடக்கினால் இங்கேயே உயிர்துறப்பேன். ஆணை” என்றான் துச்சாதனன். துரியோதனன் நீட்டிய கையை தாழ்த்தி தவிப்புடன் பின்னகர்ந்து சுவரோரமாக சென்றான். கதவைத்திறந்து வெளியே செல்ல அவன் விரும்பினான். ஆனால் அதைச்செய்ய அவனால் முடியவில்லை.

துச்சாதனன் மூச்சிரைக்க உடைந்த குரலில் “தந்தையே” என்றான். மீண்டும் கையை ஆட்டி “தந்தையே” என்று சொல்லி பாம்பு போல சீறினான். திருதராஷ்டிரர் தலையைத் தூக்கி செவியை அவனை நோக்கித் திருப்பி “சொல்… உன் தமையனுக்காக பேசவந்தாயா?” என்றார். “ஆம், அவருக்காகத்தான். இப்பிறவியில் எனக்காக எதையும் எவரிடமும் கோரப்போவதில்லை. தெய்வங்களிடம் கூட” என்றான் துச்சாதனன். அவன் தேடித்தவித்த சொற்கள் தமையனைப்பற்றி பேசியதும் நாவில் எழத்தொடங்கின. “எனக்கு தந்தையும் தாயும் அவர்தான். வேறெவரும் எனக்கு பொருட்டல்ல…”

“சொல்” என்றபடி திருதராஷ்டிரர் சாய்ந்துகொண்டு சேவகனிடம் வெளியே செல்ல கைகாட்டினார். அவன் தலைவணங்கி உள்ளறைக்குள் சென்றான். “என்னிடம் நிறைய சொற்கள் இல்லை தந்தையே. நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். என் தமையனுக்கு நாடு வேண்டும். இனி அவர் எவரது குடியாகவும் வாழ்வதை என்னால் காணமுடியாது. நிலமற்றவராக, வெறும் அரண்மனைமிருகமாக அவர் வாழ்வதைக் கண்டு நாங்கள் பொறுத்திருக்கப்போவதில்லை” என்றான். திருதராஷ்டிரர் “நீ என் ஆணையை மீறுகிறாயா?” என்றார். “ஆம் மீறுகிறேன். அதன்பொருட்டு எதையும் ஏற்க சித்தமாக உள்ளேன்” என்றான் துச்சாதனன்.

திருதராஷ்டிரர் முகத்தில் தவிப்புடன் திரும்பி துரியோதனன் நின்றிருந்த திசையை நோக்கி காதைத் திருப்பினார். “துரியா, இவன் குரல் உன்னுடையதா?” என்றார். “தந்தையே அது என் அகத்தின் குரல். அதை மறுக்க என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “என் துயரத்திற்கு அடிப்படை என்ன என்று நான் நன்கறிவேன் தந்தையே. பிறந்தநாள்முதல் நான் அரசனென வளர்க்கப்பட்டவன். ஆணையிட்டே வாழ்ந்தவன். எனக்குமேல் நான் தங்களைத்தவிர எவரையும் ஏற்கமுடியாது. என் ஆணைகள் ஏற்கப்படாத இடத்தில் நான் வாழமுடியாது.”

“ஆனால் இது பாண்டுவின் நாடு. பாண்டவர்களுக்குரியது” என்றார் திருதராஷ்டிரர். “இத்தனைநாளாக நான் அவர்களை கூர்ந்து நோக்கி வருகிறேன். தருமனைப்பற்றி இங்குள்ள அத்தனைகுடிகளும் மனநிறைவை மட்டுமே கொண்டுள்ளனர். இந்நாட்டை ஆள அவனைப்போன்று தகுதிகொண்டவர் இல்லை. நீயும் பீமனும் அர்ஜுனனும் கர்ணனும் அவன் அரியணைக்கு இருபக்கமும் நின்றீர்கள் என்றால் அஸ்தினபுரி மீண்டும் பாரதவர்ஷத்தை ஆளும். பிரதீபர் ஆண்ட அந்த பொற்காலம் மீண்டு வரும்.”

திருதராஷ்டிரர் கைகளை விரித்து முகம் மலர்ந்து “நாளும் அதைப்பற்றித்தான் நான் கனவுகாண்கிறேன். எங்கள் பிழையல்ல, என்றாலும் நானும் என் இளவலும் எங்கள் தந்தையும் எல்லாம் இப்படிப்பிறந்தது வழியாக எங்கள் முன்னோருக்கு பழி சேர்த்துவிட்டோம். அப்பழியைக் களைந்தால் விண்ணுலகு செல்கையில் என்னை நோக்கி புன்னகையுடன் வரும் என் மூதாதை பிரதீபரிடம் நான் சொல்லமுடியும், என் கடனை முடித்துவிட்டேன் என்று. இன்று நான் விழைவது அதை மட்டுமே.”

உரத்த குரலில் துரியோதனன் இடைமறித்தான். “அது நிகழப்போவதில்லை தந்தையே. அது முதியவயதின் வீண் கனவு மட்டுமே… அவனை என்னால் அரசன் என ஏற்கமுடியாது. அவன் முன் என்னால் பணிய முடியாது.” பெருவலி கொண்டவன் போல அவன் பல்லைக் கடித்தான். “ஒருமுறை பணிந்தேன். என் குருநாதருக்கு நானளித்த சொல்லுக்காக. அந்த அவமதிப்பை இக்கணம்கூட என்னால் கடக்க முடியவில்லை. இனி என் வாழ்நாள் முழுக்க அணையாத நெருப்பாக அது என்னுடன் இருக்கும்… இல்லை தந்தையே, அக்கனவை விடுங்கள். அவன் என் அரசன் அல்ல.”

“மைந்தர்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கனவைவிட எது தந்தையிடம் இருக்கமுடியும்? என்னால் அக்கனவை விடமுடியாது. அது இருக்கும்வரைதான் எனக்கு வாழ்க்கைமேல் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும்” என்றார் திருதராஷ்டிரர். “என் இளையோனுக்கு நான் அளித்த நாடு இது. அவன் மைந்தர்களுக்குரியது. அதில் மாற்றமேதும் இல்லை. நீங்கள் செல்லலாம்” என்றபின் எழுந்தார்.

துச்சாதனன் கைகூப்பி முன்னகர்ந்து “தந்தையே, தங்கள் சொல் அப்படியே இருக்கட்டும். தருமன் அஸ்தினபுரியை ஆளட்டும். இங்கே கங்கைக்கரையில் இந்த நாடு பொலிவுறட்டும். பாதிநாட்டை என் தமையனுக்களியுங்கள். அங்கே அவர் முடிசூடி அரியணை அமரட்டும்” என்றான். “இல்லையேல் தமையன் இறந்துவிடுவார். அவர் உயிர் வதைபடுவதை காண்கிறேன். என் கண்ணெதிரே அவர் உருகி உருகி அழிவதை காண்கிறேன். உங்கள் மைந்தர்களுக்காக இதைச்செய்யுங்கள்.”

“இல்லை, நான் வாழும்காலத்தில் அஸ்தினபுரி பிளவுபடப்போவதில்லை” என்றார் திருதராஷ்டிரர். இறங்கிய குரலில் “தந்தையே, பிளவுபடுவதல்ல அது. பிரிந்து வளர்வது. இங்கே தமையன் ஒவ்வொரு கணமும் உணர்வது அவமதிப்பை. அவரால் இங்கிருக்க முடியாது” என்றான் துச்சாதனன். “ஏதோ ஓர் இடத்தில் அது நேரடி மோதலாக ஆகலாம். தங்கள் கண்முன் தங்கள் மைந்தர்கள் போர்புரிவதைக் காணும் நிலை தங்களுக்கு வரலாம். அதைத் தவிர்க்க வேறு வழியே இல்லை. பாதிநாடு இல்லை என்றால் துணைநிலங்களில் ஒருபகுதியைக்கொடுங்கள்… அங்கே ஓர் சிற்றரசை நாங்கள் அமைக்கிறோம்.”

“இல்லை, அதுவும் என் இளையோனுக்கு அளித்த வாக்கை மீறுவதே. நான் பாண்டுவுக்கு அளித்தது விசித்திரவீரியர் எனக்களித்த முழு நாட்டை. குறைபட்ட நிலத்தை அல்ல. கொடுத்ததில் இருந்து சிறிதளவை பிடுங்கிக்கொள்ளும் கீழ்மையை நான் செய்யமுடியாது.” பெருமூச்சுடன் திருதராஷ்டிரர் எழுந்தார். “ஆனால் நீங்கள் கோருவதென்ன என்று தெளிவாகத் தெரியவந்ததில் மகிழ்கிறேன்…”

கைகூப்பி கண்ணீருடன் “தந்தையே, அப்பால் யமுனையின் கரையில் கிடக்கும் வெற்றுப்புல்வெளிப்பகுதிகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் நூற்றுவரும் அங்கே சென்றுவிடுகிறோம். அங்கே ஒரு சிற்றூரை அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “இல்லை. ஓர் அரசு அமைவதே அஸ்தினபுரியின் எதிரிகளுக்கு உதவியானது. அங்கே காந்தாரத்தின் செல்வமும் வருமென்றால் உங்கள் அரசு வலுப்பெறும். அது தருமனுக்கு எதிரானதாகவே என்றுமிருக்கும்…. நான் அதை ஒப்பமாட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாம் இதைப்பற்றி இனிமேல் பேசவேண்டியதில்லை என நினைக்கிறேன்.”

“தந்தையே, அவ்வாறென்றால் எங்களை இங்கிருந்து செல்ல விடுங்கள். யயாதியிடமிருந்து துர்வசுவும் யதுவும் கிளம்பிச்சென்றது போல செல்கிறோம். தெற்கே அரசற்ற விரிநிலங்கள் உள்ளன. பயிலாத மக்களும் உள்ளனர். நாங்கள் எங்கள் அரசை அங்கே அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “அதையும் நான் ஒப்பமுடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் அஸ்தினபுரியின் இளவரசர்களே. நீங்கள் இந்நாட்டுக்கு வெளியே உருவாக்கும் ஒவ்வொரு நிலமும் அஸ்தினபுரிக்கு உரியவையே” என்றார் திருதராஷ்டிரர்.

“அப்படியென்றால் தமையன் இங்கே அவமதிப்புக்குள்ளாகி வாழவேண்டுமா? தாசிமைந்தர்களைப்போல ஒடுங்கி கைகட்டி அவன் முன் நிற்கவேண்டுமா?” என்று துச்சாதனன் உரத்து எழுந்த உடைந்த குரலில் கேட்டான். திருதராஷ்டிரர் திரும்பி துரியோதனனிடம் “மைந்தா, நான் உனக்கு நீ இன்றிருக்கும் தீரா நரகநெருப்பையே என் கொடையாக அளிக்கிறேன் என்றால் என்ன செய்வாய்?” என்றார். துரியோதனன் “தந்தையின் கொடை எதுவும் மூதாதையர் அருளேயாகும்” என்றான். “இங்கே ஒவ்வொரு நாளும் அவமதிப்புக்குள்ளாகவேண்டும் என்றும் அனைத்து தன்முனைப்பையும் இழந்து சிறுமைகொண்டு இவ்வாழ்நாளை முழுக்க கழிக்கவேண்டும் என்றும் நான் ஆணையிட்டால் என்னை நீ வெறுப்பாயா?” என்றார். “தந்தையே எந்நிலையிலும் உங்களை வெறுக்கமாட்டேன்” என தலை நிமிர்த்தி திடமான குரலில் துரியோதனன் சொன்னான்

“அவ்வாறென்றால் அதுவே என் கொடை” என்றார் திருதராஷ்டிரர். “இனி நாம் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை.” துச்சாதனன் உடைவாளை உருவியபடி முன்னால் வந்து கூவினான் “ஆனால் அதை நான் ஏற்கமாட்டேன். எனக்கு தந்தை என் தமையனே. அவருக்கு நரகத்தை விதித்துவிட்டு நீங்கள் நிறைவடையவேண்டியதில்லை. இதோ உங்கள் காலடியில் என் தலைவிழட்டும்” என்று வாளை உருவி கழுத்தை நோக்கி கொண்டு செல்லும் கணம் கதவு திறந்து விப்ரர் “அரசே” என்றார்.

துச்சாதனன் கை தயங்கிய அக்கணத்தில் துரியோதனன் அவன் தோளில் ஓங்கியறைந்தான். வாள் ஓசையுடன் மரத்தரையில் விழுந்தது. அதை துரியோதனன் தன் காலால் மிதித்துக்கொண்டான். விப்ரர் திகைத்து “அரசே, காந்தார இளவரசரும் கணிகரும் தங்களை காணவிழைகிறார்கள்” என்றார். அவர் கதவுக்கு அப்பால் நின்று கேட்டுக்கொண்டிருந்து சரியான தருணத்தில் உட்புகுந்திருக்கிறார் என்பதை துரியோதனன் அவர் கண்களில் கண்டான். துச்சாதனன் தலையை கையால் பற்றியபடி கேவல் ஒலியுடன் அப்படியே நிலத்தில் அமர்ந்துகொண்டான்.

திருதராஷ்டிரர் “வரச்சொல்… இது இங்கேயே பேசிமுடிக்கப்படட்டும்” என்றார். விப்ரர் வெளியேறினார். துரியோதனன் “இளையோனே… இனி இச்செயல் நிகழலாகாது. என் ஆணை இது” என்றான். திருதராஷ்டிரரின் தலை ஆடிக்கொண்டிருந்தது. துச்சாதனனை நோக்கி செவியைத் திருப்பி “மைந்தா, உன் ஒரு துளி குருதி என் முன் விழுமென்றால் அதன் பின் நான் என் வாழ்நாளெல்லாம் துயிலமாட்டேன். நான் அரசன் அல்ல. தந்தை. வெறும் தந்தை. மைந்தர்களின் குருதியைக் காண்பதே தந்தையரின் நரகம். ஆனாலும் நீ சொன்னதை என்னால் ஏற்கமுடியாது…” என்றார். கன்னங்களில் வழிந்து தாடையில் சொட்டிய கண்ணீருடன் துச்சாதனன் ஏறிட்டு நோக்கி உதடுகளை இறுக்கிக் கொண்டான்.

சகுனி உள்ளே வந்து இயல்பாக அவர்களை நோக்கிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கினார். அவர்கள் இருவருக்கும் அங்கே நிகழ்ந்தவை தெரியும் என்பதை விழிகளே காட்டின. விப்ரர் ஒலிக்காக திறந்துவைத்திருந்த கதவின் இடைவெளிவழியாக அவர்கள் உரையாடலை கேட்டிருக்கக்கூடும். ஆனால் சகுனி புன்னகையுடன் அமர்ந்தபடி “உண்டாட்டுக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. இப்போதுதான் சௌவீர வெற்றிக்கான உண்டாட்டும் பெருங்கொடையும் முடிந்தது. மீண்டும் வெற்றி என்பது நகரை களிப்பிலாழ்த்தியிருக்கிறது” என்றார்.

கணிகர் அமர்ந்தபடி “நகரெங்கும் பாண்டவர்களை பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். பிரதீபரின் மறுபிறப்பு என்கிறார்கள் பார்த்தனை. ஹஸ்தியே மீண்டுவந்ததுபோல என்று பீமனை புகழ்கிறார்கள். நகரில் இத்தனை நம்பிக்கையும் கொண்டாட்டமும் நிறைந்து நெடுநாட்களாகின்றன என்றனர் முதியோர்” என்றார். “வெற்றி நம்பிக்கையை அளிக்கிறது. நம்பிக்கை வெற்றியை அளிக்கிறது.”

“ஆம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். .துரியோதனன் “நாங்கள் கிளம்புகிறோம் தந்தையே” என்றான். “இரு தார்த்தராஷ்டிரா, உன்னுடன் அமர்ந்து பேசத்தானே வந்தோம்?” என்றார் சகுனி. துரியோதனன் அமர்ந்துகொண்டான். துச்சாதனன் சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு சாளரத்தருகே சென்று சாய்ந்து நின்றான். சகுனி அவனைப் பார்த்தபின்னர் “இன்றைய உண்டாட்டின்போது வெற்றிச்செய்தியை அரசியே அறிவிக்கப்போவதாக சொல்லப்படுகிறது” என்றார். “ஆம், அது அவர்களின் வெற்றி அல்லவா? அதுவல்லவா முறை” என்றார் கணிகர்.

திருதராஷ்டிரர் வெறுமனே உறுமினார். சகுனி “கொற்றவை ஆலயத்தின் முன் உண்டாட்டுக்கும் பலிநிறைவு பூசைக்குமான ஒருக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கௌரவர்கள் அங்கே சென்று ஆவன செய்யவேண்டும். தார்த்தராஷ்டிரனே, முதன்மையாக நீ அங்கே இருக்கவேண்டும். நீ விழாவுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. ஏனென்றால் என்னதான் இருந்தாலும் தருமன் பட்டத்து இளவரசன், குந்தி பேரரசி, நாமெல்லாம் குடிமக்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். அரசகுலத்தவரை அகநிறைவுசெய்யவேண்டியது என்றுமே குடிமக்களின் கடமை” என்றார்.

துரியோதனன் “ஆம் மாதுலரே, அதற்காகவே நான் கிளம்பிக்கொண்டிருந்தேன்” என்றான். சகுனி “நான் அரசரை வந்து பார்த்து முகமன் சொல்லிக்கொண்டு போகலாமென்றுதான் வந்தேன். மாலையில் பலிநிறைவுப்பூசைக்கான ஒருக்கங்களில் பாதியை நானே செய்யவேண்டியிருக்கிறது. நெடுங்காலமாயிற்று அஸ்தினபுரி போர்வெற்றி கொண்டாடி. அதிலும் சத்ருநிக்ரகசாந்தி பூசை என்றால் என்ன என்றே இங்கே எவருக்கும் தெரியவில்லை. இங்குள்ள வைதிகர்களில் அதர்வ வைதிகர் எவருமில்லை. கணிகர் மட்டுமே அதர்வம் கற்றிருக்கிறார். அவர்தான் நின்று செய்யவேண்டியிருக்கிறது. பேரரசியிடம் அறிவித்துவிட்டோம்” என்றார்.

“அது என்ன பூசை?” என்றார் திருதராஷ்டிரர். சகுனி “நினைத்தேன், தங்களுக்குத் தெரிந்திருக்காது என்று… இங்கே அது பலதலைமுறைகளாக நிகழ்வதில்லை. நாங்கள் காந்தாரத்தில் அவ்வப்போது சிறிய அளவில் செய்வதுண்டு” என்றபின் கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே” என்றார். கணிகர் “வேதம் முதிராத தொல்காலத்தில் இருந்த சடங்கு இது. வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. அதற்கும் முந்தைய தொல்பழங்குடிகளிடமிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஏனென்றால், இன்றும் பல பழங்குடிகள் இதை முறையாக செய்து வருகிறார்கள்” என்றார்.

“அரசே, இது எதிரிகள் மீது முழுமையான வெற்றியை குறிக்கப் பயன்படும் ஒரு சடங்கு. எதிரிகளை வென்றபின் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்து குலதெய்வத்திற்கு படைப்பார்கள். வேதம் தொடாத குலங்களில் இறந்தவர்களுக்குச் செய்யவேண்டிய அனைத்து கடன்களையும் செய்து புதைப்பார்கள். வேதத் தொடர்புள்ள குடிகளில் நெய்யெரி வளர்த்து ஆகுதி செய்வது வழக்கம்” என்றார். “மூக்கிழந்தவர்கள் அநாசர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அநாசர்கள் இறந்தவர்களுக்கு நிகரானவர்கள். மானுடர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அவர்கள் இழந்துவிடுகிறார்கள். அடிமைகளாகவே அவர்கள் வாழமுடியும். அவர்களின் தலைமுறைகளும் இறந்தவர்களின் மைந்தர்களே” என்று கணிகர் சொன்னார் “ஆனால் வழக்கமாக உயிருடன் உள்ள எதிரிகளின் மூக்குகளைத்தான் வெட்டுவது வழக்கம். பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவருகிறார்கள்.”

பற்களை இறுகக் கடித்து தசை இறுகி அசைந்த கைகளால் இருக்கையைப் பற்றியபடி “யாருடைய ஆணை இது?” என்றார் திருதராஷ்டிரர். “குந்திதேவியே ஆணையிட்டதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. “அவள் இதை எங்கே அறிந்தாள்? யாதவர்களிடம் இவ்வழக்கம் உண்டா?” என்றார் திருதராஷ்டிரர். “முற்காலத்தில் இருந்திருக்கிறது… நூல்களில் இருந்தோ குலக்கதைகளில் இருந்தோ கற்றிருக்கலாம்” என்றார் சகுனி. திருதராஷ்டிரர் தன் இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டார். பெரிய தோள்களில் தசைகள் போரிடும் மல்லர்கள் போல இறுகிப்பிணைந்து நெளிந்தன.

“காந்தாரரே, இவ்வழக்கம் அஸ்தினபுரியில் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். “மாமன்னர் யயாதியின் காலம் முதலே நாம் போரில் வென்றவர்களை நிகரானவர்களாகவே நடத்திவருகிறோம். அவர்களுக்கு பெண்கொடுத்து நம் குலத்துடன் இணைத்துக்கொள்கிறோம். அது யயாதியின் ராஜரத்ன மாலிகா சொல்லும் ஆணை.” திருதராஷ்டிரர் பற்களைக் கடிக்கும் ஒலியை கேட்க முடிந்தது. “அவ்வாறுதான் நம் குலம் பெருகியது. நம் கிராமங்கள் விரிவடைந்தன. நாம் மனிதர்களை இழிவு செய்ததில்லை. எந்தக் குல அடையாளமும் மூன்று தலைமுறைக்குள் மாற்றிக்கொள்ளத்தக்கதே என்றுதான் நாம் ஏற்றுக்கொண்ட யம ஸ்மிருதி சொல்கிறது…”

கணிகர் “ஆம் அரசே. ஆனால் இரக்கமற்ற போர்களின் வழியாக வெல்லமுடியாத நிலத்தையும் செல்வத்தையும் அடைந்த பின்னரே அஸ்தினபுரியின் மாமன்னர்களுக்கு அந்த ஞானம் பிறந்தது. கருணைகாட்டவும் பெருந்தன்மையாக இருக்கவும் அதிகாரமும் வெற்றியும் தேவையாகிறது” என்றார். “ஆனால் யாதவ அரசி இன்னும் உறுதியான நிலத்தை அடையாத குடியைச் சேர்ந்தவர். முற்றுரிமை கொண்ட செங்கோலும் முடியும் அவர்களின் குலங்கள் எதற்கும் இதுவரை அமையவில்லை” என்றார்.

திருதராஷ்டிரர் கைகளை ஓங்கி அறைந்துகொண்டு எழுந்தார். “ஆனால் அவள் இப்போது அஸ்தினபுரியின் அரசி. தேவயானியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள். யயாதியின் கொடிவழியில் மைந்தர்களைப் பெற்றவள்…” என்று கூவினார். “அதை நாம் சொல்லலாம், அவர்கள் உணரவேண்டுமல்லவா?” என்றார் சகுனி. “இது இத்தனை சினமடையக்கூடிய செய்தியா என்ன? அவர்கள் இப்போதுதான் மைந்தர்கள் வழியாக உண்மையான அதிகாரத்தை சுவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்முளைத்த இளங்குதிரை சற்று துள்ளும். திசை தோறும் ஓடும். களைத்தபின் அது தன் எல்லையை அடையும். பேரரசி இன்னும் சற்று அத்துமீறுவார்கள். ஆனால் அதிகாரம் தன் கையை விட்டு போகாதென்றும் அதை அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றும் உணரும்போது அவர்கள் அடங்குவார்கள், நாம் சற்று காத்திருக்கலாம்” என்றார் கணிகர்.

திருதராஷ்டிரர் தன் கைகளை விரித்து ஏதோ சொல்லப்போவதுபோல ததும்பியபின் அமர்ந்துகொண்டார். “கணிகரே, இதே அரியணையில் மச்சர்குலத்து சத்யவதி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பேரரசிக்குரிய பெருந்தன்மையை இழந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். “அவர்களுக்கு மாவீரர்களான மைந்தர்கள் இல்லை” என்றார் கணிகர். திருதராஷ்டிரர் “கணிகரே!” என உறும “அதுதானே உண்மை? பாரதவர்ஷத்தை சுருட்டிக்கொண்டுவந்து காலடியில் வைக்கும் மைந்தர்களைப் பெற்றிருந்தால் அவர்கள் அப்படி இருந்திருப்பார்களா என்ன?” என்று கணிகர் மீண்டும் சொன்னார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

திருதராஷ்டிரர் எழுந்து. தன் சால்வைக்காக கைநீட்டினார். சகுனி எடுத்து அவரிடம் அளிக்க அதை சுற்றிக்கொண்டு திரும்பி கனைத்தார். விப்ரர் வாசலைத் திறந்து வந்து “அரசே” என்றார். “என்னை இசைகேட்க கூட்டிக்கொண்டு செல். உடனே” என்றார் திருதராஷ்டிரர். “மைத்துனரே, நான் உண்டாட்டுக்கு வரப்போவதில்லை. அதை அரசியிடம் சொல்லிவிடுங்கள்” என்றபின் விப்ரரின் தோள்களைப் பிடித்தார்.

சகுனியும் கணிகரும் துரியோதனனும் எழுந்து நின்றனர். “அரசே அது மரபல்ல. அரசர் இல்லாமல் உண்டாட்டு என்றால் அதை நகர்மக்கள் பிழையாக புரிந்துகொள்வார்கள்” என்றார் சகுனி. “அரண்மனைப்பூசல்களை மக்கள் அறியலாகாது” என்றார் கணிகர். “ஆம், அது உண்மை. ஆனால் இன்னமும்கூட அஸ்தினபுரியில் யயாதியை அறிந்த மூத்தோர் இருக்கக் கூடும். அவர்கள் நான் வந்து அந்தக் கொடிய சடங்குக்கு அமர்ந்திருந்தால் அருவருப்பார்கள். நான் ஒருவனேனும் இச்சடங்கில் இல்லை என்று அவர்கள் அறியட்டும். யயாதியின் இறுதிக்குரலாக இது இருக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர். பெருமூச்சுடன் தோள்கள் தொய்ய “செல்வோம்” என்று விப்ரரிடம் சொன்னார்.

கணிகர் “அரசே, மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள். தாங்கள் வரவில்லை என்றால் அதை யாதவ அரசி கொண்டாடவே செய்வார்கள். முழு அரசதிகாரமும் அவர்களின் கைகளுக்குச் செல்வதற்கு நிகரானது அது. முதல் முறையாக ஓர் அரசச்சடங்கு அரசரில்லாமல் அரசியால் நடத்தப்படுகிறது. அது ஒரு முன்னுதாரணம். அதன்பின் எச்சடங்குக்கும் அதுவே வழியாகக் கொள்ளப்படும்” என்றார். “அதுவே நிகழட்டும். நான் இனி இந்தக் கீழ்மைநாடகங்களில் ஈடுபடப்போவதில்லை. இசையும் உடற்பயிற்சியும் போதும் எனக்கு. அதுவும் இங்கு அளிக்கப்படவில்லை என்றால் காடேகிறேன். அதுவும் அஸ்தினபுரியின் அரசர்களுக்கு ஆன்றோரால் சொல்லப்பட்ட கடன்தானே?”

திருதராஷ்டிரர் செல்வதை நோக்கியபடி சகுனியும் கணிகரும் நின்றனர். கதவு மூடப்பட்டதும் சகுனி புன்னகையுடன் திரும்ப அமர்ந்துகொண்டார். கணிகர் அருகே அமர்ந்து “முறைமையைச் சொல்லி அவரை விதுரர் அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்” என்றார். சகுனி “இல்லை, நான் அரசரை நன்கறிவேன். அவர் கொதித்துக் கொந்தளித்தால் எளிதில் சமன் செய்துவிடலாம். இறங்கிய குரலில் சொல்லிவிட்டாரென்றால் அவருக்குள் இருக்கும் கரும்பாறை அதைச் சொல்கிறது. அதை வெல்ல முடியாது” என்றார்.

“இன்று பூசைக்கு அரசர் செல்லக் கூடாது. அரசர் செல்லாததை காரணம் காட்டி காந்தார அரசி செல்லமாட்டார். அவர்கள் இல்லாததனால் கௌரவர்கள் எவரும் செல்லலாகாது. காந்தாரர்களும் கௌரவர்களின் குலமுறை உறவினரும் ஆதரவாளர்களும் செல்லலாகாது. அரண்மனைக்குள் ஒரு பெரிய குடிப்பிளவு இருப்பது இன்று அஸ்தினபுரியின் அத்தனை மக்களுக்கும் தெரிந்தாகவேண்டும்” என்றார் கணிகர். “அந்தப்பிளவு இன்னும் நிகழவில்லையே. நிகழ்ந்தபின் நகர்மக்களை அறிவிக்கலாம் அல்லவா?” என்று சகுனி கேட்டார். “நாம் அறிவித்தபின் பிளவு பொருந்திவிடும் என்றால் பெரும் பின்னடைவாக ஆகிவிடும் அது.”

கணிகர் புன்னகைத்து “காந்தாரரே, மக்களின் உள்ளத்தை அறிந்தவனே அரசுசூழ்தலை உண்மையில் கற்றவன். பிளவே இல்லாதபோதுகூட அப்படி எண்ண ஒரு வாய்ப்பை அளித்தால் மக்கள் பேசிப்பேசி பிளவை உருவாக்கி விடுவார்கள். பேரார்வத்துடன் அதை விரிவாக்கம் செய்து பிறகெப்போதும் இணையாதபடி செய்துவிடுவார்கள். நாம் கொண்டிருக்கும் பிளவின் பின்னணியும் அதன் உணர்ச்சிநிலைகளும் மக்களால் இன்றுமுதல் வகைவகையாக கற்பனைசெய்யப்படும். தெருக்கள்தோறும் விவாதிக்கப்படும். நாளைமாலைக்குள் இந்நகரமே இரண்டாகப்பிரிந்துவிடும். அதன்பின் நாம் இணைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இணைவதற்கு எதிரான எல்லா தடைகளையும் அவர்களே உருவாக்குவார்கள்” என்றார்.

“நம் குலங்களன்றி நமக்கு எவர் ஆதரவளிக்கப்போகிறார்கள்” என்றான் துரியோதனன். “சுயோதனரே, அவ்வாறல்ல. நேற்றுவரை பாண்டவர்கள் அதிகாரமற்றவர்கள். ஆகவே அவர்களின் நலன்கள் பாராட்டப்பட்டன. இன்று அவர்கள் அதிகாரத்தை அடைந்துவிட்டனர். ஆகவே அவர்களுக்கு எதிரிகள் உருவாகியிருப்பார்கள். அதிகாரத்தை இழந்தவர்கள், இழக்கநேரிடுமோ என அஞ்சுபவர்கள், தங்கள் இயல்பாலேயே அதிகாரத்துக்கு எதிரான நிலையை மேற்கொள்பவர்கள், ஏதேனும் அமைதியின்மை உருவானால் நன்று என எண்ணுபவர்கள்… அப்படி ஏராளமானவர்கள் இருப்பார்கள்” என்றார் கணிகர்.

“அத்துடன் அவர்கள் யாதவர்கள். அவர்கள் அதிகாரம் அடைவதை விரும்பாத ஷத்ரியர்கள் பலர் இங்கு உண்டு” என்றார் சகுனி. “ஆனால் இந்நகரில் எளிய குடிகளே எண்ணிக்கையில் மிகை” என்றான் துரியோதனன். “அங்கும் நாம் மக்களை சரியாக கணிக்கவேண்டும் சுயோதனரே! யாதவர்களைவிட எளிய குடிகளும் நிகரான குடிகளும் அவர்களுக்கு எதிராகவே உளம் செல்வார்கள். தங்களை நூற்றாண்டுகளாக தங்களைவிட மேல்நிலையில் இருக்கும் ஷத்ரியர் ஆள்வதை அவர்கள் விரும்புவார்கள். தங்களில் இருந்து ஒருவர் எழுந்து வந்து ஆள்வதை விரும்ப மாட்டார்கள்” என்றார் கணிகர்.

“மக்கள் அழிவை விழைகிறார்கள்” என்றார் சகுனி நகைத்தபடி. “அல்ல. அவர்கள் விரும்புவது மாற்றத்தை. பிளவு என்பது என்ன? பிரிந்து பிரிந்து விரிவது அல்லவா? அத்தனை தொல்குலங்களும் பூசலிட்டுப்பிரிந்து புதிய நிலம் கண்டடைந்து விரிவடைந்திருக்கின்றன. அப்படித்தான் பாரதவர்ஷம் முழுக்க குலங்கள் பெருகின. நிலம் செழித்தது. அது மக்களுக்குள் தெய்வங்கள் வைத்திருக்கும் விசை. செடிகளை வளரச்செய்யும், மிருகங்களை புணரச்செய்யும் அதே விசை” என்றார் கணிகர். “சுயோதனரே, உங்கள் தம்பியரை வடக்குக் களத்துக்கு வரச்சொல்லுங்கள். நாம் இன்று சிலவற்றைப் பேசி முடிவெடுக்கவேண்டும்.”

வெண்முரசு விவாதங்கள்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபிரயாகை- ஒருமை
அடுத்த கட்டுரைசுருதை