ஏழாம் உலகம்- கடிதம்

Ezham-Ulagam-Wrapper---final

அன்புள்ள ஜெயமோகன்,

மீள வழியில்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட மனிதர்களின் அவலம் – முதுகு தண்டு சில்லிட்டு போனது. ஒரு நடுக்கத்துடனேயே படித்து முடித்தேன். இதோ நானும் இருக்கிறேன் என்ற விமர்சனம் இல்லை. குறையுடலிகளின் அவலத்தால் அலைகழிப்பட்ட ஒரு வாசக கடிதம்.

கதையில் குறிபிடப்படும் சம்பவங்கள் நினைவுக்கு வரும் போது எதன் மீதாவது நம்பிக்கை வருமா என்று தெரியவில்லை. திருவந்திரம் கோயிலின் கருவறை எச்சிலும், பழனி படிகளில் சிதறி கிடக்கும் உருப்படிகளும், எதையும் நம்பவோ புரிந்து கொள்ளவோ விடபோவதில்லை. உருப்படிகள் உழலும் மலமும், வியர்வையும், வீச்சமும் இன்னும் சுற்றி வருகிறது. நாமாக ஒரு மிஸ்டிகல் அனுபவத்தை கற்பனை செய்து கொண்டு, இந்த இடம் புனிதம், அந்த கோவிலில் அதிர்வு அதிகம் என்று சொல்லிக்கொண்டு திரிவதை தவிர வேறேதாவது சாத்தியமா? ஏதோ சிலராவது நியாய அநியாயம் பார்த்து வாழ்வதற்கு இப்படிப்பட்ட வாழ்வின் சாத்திய கூறு பற்றிய அச்சம்தான் காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது. இரந்து வாழ்பவர்களை மட்டுமல்ல, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் நிறைய பேர் இப்படிதானே choice ஏ இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆனால் ஒன்று. Old man and the sea Santiago கிழவனுக்கு அப்புறம் இப்படியொரு நிலையிலும் வாழ்வின் சில தருணங்களையாவது கொண்டாட்டத்துடன் கடப்பவர்கள் குய்யனும், ராமப்பனும், எருக்கும், மற்றவர்களும் தான். பணம் பண்ணும் பண்டாரம் எப்போதும் ஒரு அச்சத்துடன் நிலையழிந்து கொண்டே இருக்கிறார். வடிவம்மை வீட்டை விட்டு ஓடி, nemesis has caught up with him என்று நினைக்க வைக்கிறாள். ஆனால் அது பண்டாரத்துக்கு உறைப்பதாக தெரியவில்லை. முத்தம்மையை பார்க்க விரும்பும் போத்தி கருவறையில் இருப்பதாக நாம் நம்பும் கடவுளிடம் இருந்து வெகு தொலைவில்.

சாவுகள் கேட்க வேண்டாம் – ஏதோ ஒரு இசத்தின் பேரில் எதையும் விற்கலாம், வாங்கலாம் ‘ஒருத்தன் அடிதொண்டயில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னு ஜனம் நினைக்கும்’. Baying for blood என்பதன் மூர்க்கம் கன்னியாஸ்த்ரிகளாக, மருத்துவர்களாக, காவலர்களாக கண் முன்னே.

இனி இழக்க ஒன்றும் இல்லாததால் கொஞ்சமாவது மகிழ்ச்சியாக இருப்பது உருப்படிகள் தான். அவர்களின் கேலியும் கிண்டலுமான மொழி – அஹமதுகுட்டி law and procedure ருக்கு இடையில் உள்ள வேறுபாடு சொல்லும்போதும், தொடாமல் பீ மலரும் என்று குய்யன் எச பாட்டு பாடும்போதும், குருவியின் குரலில் பேசும் சிம்ம குரலோனும் – வெடித்து சிரித்து விட்டேன். இதை விட தீர்க்கமாக, நாகரிகமானவர்கள் என்று சொல்லிகொள்ளும் நம் முகத்தில் காறி உமிழ முடியுமா என்று தெரியவில்லை.

கண்களை மூடி கொண்டு நாம் செய்யும் அறம் பிறழ்ந்த சமரசங்களின் போது எந்த நட்சத்திரம் நமக்கு அசௌகர்யமும் உறுத்தலும் தரப்போகிறது?

அன்புடன்

மங்கை

ஜெயமோகன் நூல்கள் வாங்க

ஏழாம் உலகம் அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
அடுத்த கட்டுரைஒப்பீட்டு இலக்கியம்