பயணம்,குடி :கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்,

தங்களின் அக்காமலை:ஒருகடிதம் படித்தேன். அதில் தாங்கள் சில வரிகள் கூறியிருக்கிறீர்கள்… ‘இளைஞர்கள் சேர்ந்து பயணங்கள் செல்லும்போது ‘இளைஞர்களாக’ இருக்க முயல்கிறார்கள். கத்திக் கூச்சல்போடுவது, ஆர்பாட்டம்செய்வது, பிறரைக் கிண்டல்செய்வது போன்றவைதான் இளைஞர்களின் இயல்புகள் என்று சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை செயற்கையாகச் செய்கிறார்கள். இன்னொருதரப்பு பயணம் என்பதே குடிப்பதற்காகத்தான் என்று நினைப்பவர்களினால் ஆனது. கிளம்பியதுமே குடி. பின்னர் எங்கே சென்றோம் என்ன பார்த்தோம் என்று எதுவுமே தெரியாமல் குடி. வாந்தி. சலம்பல். சண்டை. இதற்குப் பெயர் ‘ஜாலியாக இருக்கிறது’ என்று.

இது முழுக்க முழுக்க உண்மை. பல வருடங்களுக்கு முன் நண்பர்களோடு ‘டாப் ஹில்ஸ்’ போன சம்பவம் நினைவுக்கு வருகிறது. காட்டின் நடுவில் இருந்த விருந்தினர் மாளிகையில் இரவு முழுக்க நண்பர்களின் குடி வெறி கூச்சல்..விலங்குகள் உலாவும் இடத்தில் பொறுப்பில்லாமல் ‘பிளாஸ்டிக்’ கவர்களை எறிந்தது..மிரளும் மான்களை விரட்டியது…. எல்லாம் வெட்கத்தோடு நினைவுக்கு வருகிறது.  அந்தப் பகுதியில் அபூர்வமாக வாழும் ‘ஹார்ன்பில்’ (hornbill) என்ற பறவையை ஆராய்ச்சி செய்யும் ஒரு வெள்ளைக்கார பெண்மணி எங்களை பார்த்து சொன்னது: ‘இது காடு.. விலங்குகளின் இடம்..இங்கு வந்து அவைகளை தொந்தரவு செய்கிறீர்கள்…நீங்கள் வசிக்கும் ஊருக்குள் வந்து மிருகங்கள் தொந்தரவு செய்தால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா?’..அவமானமாக உணர்கிறேன்.

ச.மனோகர்.


அன்புள்ள மனோகர்

அந்த வெள்ளைக்காரப்பெண்மணியின் அதே மனக்கொதிப்பு எனக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. நம்முடைய இயற்கைச் செல்வங்கள் சூறையாடப்படுவதைப்பற்றி இதழ்கள் மீண்டும் மீண்டும் எழுதுகின்றன. அவை எந்தவகையான மனமாற்றத்தையும் மக்களில் உருவாக்குவதில்லை. ஏனென்றால் நம்முடைய மக்களில் சாதாரணமாக அனைவருமே அந்த சூறையாடும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காட்டுக்குள்ளும் பொது இடங்களிலும் மிக கீழ்த்தரமாக நடந்துகொள்பவர்களாக நான் பார்த்தபலர் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமரிசகர்கள், புரட்சிச் சிந்தனையாளர்கள். இதை அவர்கள் கலகம் என்றும் கட்டுபாடில்லாமை என்றும் சொல்கிறார்கள். குடிக்காதவர்களின் மனக்குமுறல் பழைமைவாதமாக ஆகிவிடுகிறது அவர்களின் கண்களுக்கு….இந்த மனநிலையை சினிமா மட்டுமில்லாமல் இத்தகைய அறிவுஜீவிகளும் சேர்ந்துதான் உருவாக்கி வருகிறார்கள்.உண்மையில் இந்தியாவில் குடிகாரர்கள் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற குரல் எழுப்பும் நிலை உருவாகியிருக்கிறது

குடிப்பது என்பது ஒரு நோயாகவே நம் சமூகத்தில் ஆகிவிட்டிருக்கிறது. குடித்து நிலைதடுமாறி என்னவென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பதை இலக்கிய விவாதம் என்று எண்ணிக்கொள்ளும் கூத்துக்கு இப்போது மவுசு அதிகம். எந்த ஒன்றையும் குடியையும் சேர்த்துக் கொள்ளும்போதே இவர்களுக்கு நிறைவு வருகிறது. சமயங்களில் இவர்களுடன் வந்துவிடும்  மனைவியர் கொள்ளும் சிறுமையுணர்வைப் பார்க்கும்போதுதான் பரிதாபமாக இருக்கும்

ஜெயமோகன்

அன்புள்ள ஜெ,

காடுகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் குடிவகைகள் போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. உண்மையில் செக்போஸ்டுகளில் மிகக் கறாராகவே அவற்றை சோதனைசெய்து பிடிக்கிறார்கள். ஆனால் காடுகளுக்கு கொண்டாடுவதற்காகச் செல்லும் அதிகாரிகளும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களும் அரசியல்வாதிகளும் அவர்களின் பெயரைச் சொல்லி வருபவர்களும்தான் எல்லா விதிகளையும் மீறி காட்டையும் விலங்குகளின் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இன்றும்கூட நம் காடுகளில் ‘ உயர்குடிகள்’ வேட்டையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை கேட்க இங்கே எந்த அமைப்பும் இல்லை. ஊரையே அடித்து உண்ணும் கும்பல் காடுகளை மட்டும் விட்டுவிடுமா என்ன?

சிவபாலன் K
 அக்காமலையின் அட்டைகள்.

முந்தைய கட்டுரைஆத்திசூடி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீதை கடிதங்கள், விளக்கங்கள்