கூந்தப்பனை

வணக்கம்

கூந்தல்பனை பற்றிய நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. வாய்ப்பிருந்தால் பின்வரும் இரண்டு இடுகைகளையும் படித்துவிட்டு, மேற்கொண்டு தகவல்கள் அளித்து உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடமும் எனக்குக் கேட்கத்தோன்றவில்லை

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_29.html.

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

நன்றி.

ச.முத்துவேல்
மதுரை

 

அன்புள்ள முத்துவேல்,

கூந்தப்பனை என்றால் ‘கூந்தல்’பனைதான். கூந்தல் போல ஓலைகளும் பூக்களும் பரந்து நிற்கும் பனை அது. பிற பெயர்கள் தாலிப்பனை, குடைப்பனை, விசிறிப்பனை. ஆங்கிலத்தில் Corypha umbraculifera என்பார்கள். இணையத்தில் சென்றால் எல்லா தகவல்களையும் பார்க்கலாம். குமரிமாவட்டத்தில் இதன் நான்கு வகைகள் உள்ளன. சில வகை இரண்டாளுயரத்தைத் தாண்டாது. சில உயரமாக வளரும். சில பனைகள் பல தலைகளுடன் காணப்படும். சில மிகத்தாழ்வாக படர்ந்தும் கிடக்கும்.

 

File:Talipot, Corypha umbraculifera, palmier géant.JPG

 

இந்த பனையின் பெயர்களில் இதன் உபயோகம் உள்ளது. தாலம் என்றாலே பனை என்றுதான் பொருள். தாலம் என்றால் இலை என்பது சரியான சொற்பொருள். இலையில் இருந்து உண்ணும் தட்டுக்கு தாலம் என்று பெயர் வந்தது. [ தாலப்பொலி: ஒருகடிதம் ]

பழங்காலத்தில் கணவனின் குலச்சின்னங்களை மந்திரங்களுடன் சிறிய ஓலைத்துணுக்கில் எழுதி சுருட்டி மஞ்சள் தடவி மஞ்சள்நூலில் கோர்த்து பெண் கழுத்தில் கட்டுவார்கள். அதுவே தாலி.

அக்காலத்தில் தாலி என்றால் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஐம்படைத்தாலி போன்ற ஆணுக்குரிய தாலிகளும் இருந்தன. இவ்வழக்கம் குமரிமாவட்டத்தில் சமீப காலம்வரை இருந்தது.

அவ்வாறு கட்டுவதற்கான பனையோலையை பொதுவாக கூந்தல்பனையில் இருந்தே எடுப்பார்கள். இந்த ஓலை மிக மென்மையானது, தாள் அளவுக்கே மெல்லியது. சிறிதாக செறிவாகச் சுருட்ட முடியும். அதனால்தான் அதன் பெயர் தாலிப்பனை.

குமரிமாவட்டத்தில் எண்பதுகள் வரைக்கூட தலைக்குடை அல்லது ஓலைக்குடை புழக்கத்தில் இருந்தது. குடைபோலக் கவிழ்ந்த வட்டமான பரப்புக்குக் கீழே ஒரு தொப்பிபோல் இருக்கும். தலையில் தொப்பிபோல வைத்துக்கொள்ளலாம். தொப்பிக்குடை என்றும் சொல்வார்கள். இந்தக்குடையை சாதாரண பனையோலையால் செய்வதில்லை. கூந்தப்பனை ஓலையால் செய்வார்கள்.

காரணம் பனையோலை போல் அல்லாமல் கூந்தப்பனை ஓலை பெரிய சிறகு போல இருக்கும். அத்துடன் கெட்டியான தாள் அளவு தடிமனுடன் மிக எடையில்லாமல் இருக்கும். ஆகவே அந்த பனையை குடைப்பனை என்று சொல்கிறார்கள் கேரளத்தில் குடைப்பனை மிக அதிகம். அதன் ஆங்கிலப்பெயர் அங்கிருந்து வந்ததாக இருக்கலாம்.

File:Flowering Talipot Palm 06.jpg

கூந்தப்பனையின் ஓலையை கேரளத்தில் எழுதுவதற்கும் பயன்படுத்துவதுண்டு. தாலியோலை கிரந்தம் என்று சொல்வார்கள்.  தாலியோலைச்சுவடிகள் பனையோலைகளைப் போல அல்லாமல் மிகவும் எடைக்குறைவாக இருக்கும். பெரிய நூல்களை தாலியோலைகளில் எழுதுவது வழக்கம். இப்போதும் அ.கா.பெருமாள் அவர்களிடம் நிறைய தாலியோலை சுவடிகள் உள்ளன. பேணினால் முந்நூறு வருடம்கூட அழியாமல் இருக்கும்.

இந்தப்பனையோலையால் விசிறிகள் செய்வார்கள். பழங்காலத்தில் பங்காக்கள் இதனால்தான் செய்யப்பட்டன. கதகளிக்கு கன்னத்தில் ஒட்டும் சுட்டி என்ற ஒப்பனையும் இதனால்தான் செய்யப்பட்டது. சீனாவில் இந்த மரத்தின் ஓலை தொப்பிகள்செய்ய பயன்படுகிறது.

மிக விசித்திரமான ஒரு மரம். மிகப்பெரிய பூவை பூக்கும்.  நெடுந்தூரம் அதன் மணம் தெரியும். தூரத்திலேயே பூவைப்பார்க்க முடியும். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்கும். அதற்கு முப்பது முதல் எழுபது வருடங்கள் ஆகும்போது பூத்து கனியாகும். அந்த விதை உதிர்ந்தபின் பிறகு எப்போதுமே பூக்காது. நெடுங்காலம் உயிர்வாழக்கூடிய மரம் இது.

ஆகவே கூந்தப்பனை மிகக்குறைவாகவே இனப்பெருக்கம் செய்கிறது.  அடர்காட்டில்கூட தனியாகவே காணப்படும்.  கூட்டம்கூட்டமாக பார்க்க முடியாது. இதனால் பொதுவாக தனித்த பனைகளில் காணக்கூடிய ஒரு பண்பு இதில் மேலோங்கியிருக்கும். அதாவது ஒரே பனையிலேயே ஆணும்பெண்ணும் இருக்கும். பெரும்பாலான கூந்தப்பனைகள் அர்த்தநாரீஸ்வரர்கள்தான்.

சு.வேணுகோபால் தன் கதையில் ஆண்மை இல்லாத ஒருவனின் அவலத்தைச் சித்தரிக்கிறார். அவன் தன் மனைவியை நண்பனுக்கே மணம் முடிக்கிறான். ஆனால் அந்த மனைவிமேல் பிரியம் கொண்டிருக்கிறான். அந்த மனைவி அவன் பிரியத்தை புரிந்துகொள்ளாமல் அவமதிக்கவே தற்கொலை எண்ணத்துடன் ஊரைவிட்டு கிளம்புகிறான். தன்னை பயனற்றவனாக பொருளற்றவனாக உணர்கிறான்.

அப்பயணத்தில் ஒரு தனித்த மணல்தேரிமீது அவன் ஒரு கூந்தப்பனையை காண்கிறான்.  அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்ததாக தோன்றுகிறது. அந்த மேட்டில் ஓர் ஊற்று சுரப்பதையும் காணநேர்கிறது. கதையின் உச்சம் அது.

எளிமையாகச் சொல்லப்போனால் அவன் தன் இல்லாத ஆண்மையை உணர்வதற்குப் பதில் இருக்கும் பெண்மையை, தாய்மையை உணர்கிறான். வாழ்நாளில் முதல்முறையாக, கடைசிமுறையாக, ஒரு மாபெரும் மலர் அவனில் மலர்கிறது. ஆகவேதான் கூந்தப்பனை என்று பெயரிட்டிருக்கிறார் வேணுகோபால்

மண்ணில் முளைத்தெழுந்த ஒரு கலைஞனை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு தகவல்கள் தேவைப்படுகின்றன இல்லையா? நாம் எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம்!

[கூந்தப்பனை, சு.வேணுகோபால் கதைகள். தமிழினி பதிப்பகம் ]

தாலப்பொலி: ஒருகடிதம்

சு.வேணுகோபாலின் மண்-1

சு.வேணுகோபாலின் மண் 2

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 டிசம்பர்

முந்தைய கட்டுரைஇரு புதிய வாசகர்கள்
அடுத்த கட்டுரைஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளை யானை விழா ஏற்புரை