‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70

பகுதி பத்து : மண்நகரம்

[ 4 ]

துரியோதனன் அவைக்களத்துக்கு கதையுடன் வந்தபோது துரோணர் சகுனியை களமிறங்கும்படி சொன்னார். புன்னகையுடன் வந்த சகுனி துரியோதனனுடன் அரைநாழிகைநேரம் தண்டுகோர்த்தான். அவன் கதை உடைந்து சிதறியபோது துரியோதனன் தன் கதையை அவன் தலையைத் தொடும்படி வைத்து எடுத்துக்கொண்டான். பின்னர் தம்பியர் துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன் ஆகிய நால்வரும் அவனை நான்கு திசைகளிலும் கதைகொண்டு தாக்கினர். அவன் அவர்கள் கதைகளை ஒரேசமயம் விண்ணில் தெறிக்கச்செய்தான். அதன்பின் விந்தன், அனுவிந்தன், சுபாகு, விகர்ணன், கலன், சத்வன், சித்ரன் ஆகிய எழுவரும் அவனை எதிர்கொண்டு அரைநாழிகைக்குள் தோற்று விலகினர். தலைதாழ்த்தி வணங்கி துரியோதனன் மீண்டான்.

துரோணர் மேடையில் எழுந்து நின்று தன் கைகளைத் தூக்கியதுமே அங்கிருந்த அனைவரும் என்ன நிகழவிருக்கிறதென்பதை உணர்ந்துகொண்டனர். அதைத்தான் அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர் என்பது அங்கே எழுந்த பேரொலியிலிருந்து தெரிந்தது. தருமனின் பதற்றத்தை அது உச்சம்நோக்கி கொண்டுசென்றது. பின்பு அறியாத ஒரு கணத்தில் மெல்லிய சரடு ஒன்று அறுபடுவதுபோல அந்தப் பதற்றம் முற்றாக விலக அவன் அகம் காற்றில் சுழன்றேறும் பட்டம்போல விடுதலை கொண்டது. அதை உணர்ந்ததும் அது ஏன் என்ற வியப்பும் அதன் காரணத்தை அறியவே முடியாதென்ற எண்ணமும் எழுந்தன.

துரோணர் மூன்று பக்கமும் கையைதூக்கிக்காட்டி, “அஸ்தினபுரியின் மாமன்னரையும் பிதாமகரையும் பணிகிறேன். பெருங்குடிகளை வணங்குகிறேன். இதோ என் முதல் மாணவன் அர்ஜுனன் அரங்கில் தோன்றவிருக்கிறான். இந்த பாரதவர்ஷம் இன்றுவரை கண்டிராத வில்லவன் அவன். இப்போது இப்புவியில் அவனுக்கு நிகராக எவருமில்லை. இனி எப்போதும் வில்லுக்கு விஜயன் என்று அவன் பெயரையே நம் தலைமுறைகள் சொல்லவிருக்கின்றன” என்றார். களம் வாழ்த்தொலிகளுடன் கொந்தளித்தது.

“இங்கே அவன் வில்தொழில் மேன்மைகளைக் காணுங்கள். இந்நாளுக்குப்பின் அவனுக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். ஆகவே அவன் தன் கொலைவில்லுடன் தேரேறி புகும் களங்களே இனி இருக்காது” என்றார். அதைக் கேட்டு திருதராஷ்டிரர் கைகளை விரித்து நகைத்தார். தருமன் தன் உள்ளம் துள்ளிக்கொண்டிருப்பதை அறிந்தான். அறியாமலேயே எழுந்து நின்று கைவீசி ஆடிவிடுவோம் என அஞ்சினான்.

குடுமியாகக் கட்டப்பட்ட கரிய தலைமயிரில் நீர்த்துளிகள் போலச் சுடரும் மணிச்சரங்கள் அசைய, கைகளில் பொற்கங்கணத்தின் பதிக்கப்பட்ட வைரங்கள் ஒளிவிட, தோலுறையிட்ட கரங்களைக் கூப்பியபடி, இளங்குதிரை என அர்ஜுனன் களம் நடுவே வந்தபோது எங்கும் வாழ்த்தொலிகளும் மகிழ்ச்சிக் குரல்களும் எழுந்தன. அவன் அரங்கபூசைக்கான மேடையில் ஏறி கொற்றவையையும் கிருபரையும் வணங்கினான். துரோணரை அவன் கால்தொட்டு வணங்கியபோது கூட்டத்தில் பலர் கண்ணீர் விட்டதை தருமன் கண்டான்.

சஞ்சயனின் வாய் அசைவதையும் திருதராஷ்டிரர் பரவசத்துடன் கைகளைத் தூக்கி தலையை அசைப்பதையும் கண்டபோதுதான் அக்காட்சியின் மகத்துவம் அவனுக்கே தெரிந்தது. பாரதவர்ஷத்தின் வரலாறு என்றென்றும் நினைத்திருக்கக்கூடிய தருணம். நிகழ்வை விட சொல் வல்லமை மிக்கதா என்ன? ஆம், நிகழ்வன வெறும் பருப்பொருளில் முடிந்துவிடுகின்றன. பொருளும் உணர்வும் சொல்லாலேயே ஏற்றப்படுகின்றன. சஞ்சயனின் சொற்களைக் கேட்க வேண்டுமென தருமனின் உள்ளம் விழைந்தது.

அர்ஜுனன் துரோணரிடமிருந்து வில்லையும் அம்பறாத்தூணியையும் வாங்கிக்கொண்டு படியிறங்கி அரங்கு நடுவே நின்று நிலம் தொட்டுத் தொழுது மெதுவாகச் சுழன்று, எதிர்பாராத நொடியில் விட்ட அம்பு சீறி மேலெழுந்து, செஞ்சுடராக தீப்பற்றி எரிந்தபடி பாய்ந்து போய் வானில் பெரிய ஒலியுடன் வெடித்து அதிலிருந்து நட்சத்திரங்கள் போல சுடர்கள் தெறித்தன. கூட்டம் ஆரவாரமிட்டது. எரிந்தபடியே கீழே வந்த அந்த அம்பின் எச்சத்தை அடுத்த அம்பு சென்று தொட்டு அணைத்து நீர்த்துளிகளாகத் தெறித்தது. கூட்டத்திலிருந்து ஆர்ப்பரிப்பு எழுந்தது.

அர்ஜுனனின் அம்புகள் வானில் பறவைகள் போல முட்டி மோதியும் இணைந்தும் பிரிந்தும் விளையாடின. முதல் அம்பை வானிலேயே அடுத்த அம்பால் அடித்து அதை மீண்டுமொரு அம்பால் அடித்து அம்புகளால் விண்ணில் ஒரு மாலை கோர்த்துக் காட்டினான். சுவர்மீது எய்யப்பட்ட அம்பு திரும்பி தெறித்தபோது மறு அம்பு அதன் கூர்முனையில் தன் கூர்முனை தைத்து அதை வீழ்த்தியது. மண்ணில் பாய்ந்து இறங்கிச்சென்ற கனத்த இரும்பு அம்பின் பின்பகுதியின் துளைவழியாக மண்ணின் ஊற்று பீரிட்டது. தொலைவில் வாய் திறந்து மூடிக்கொண்டிருந்த இயந்திரப்பன்றியின் வாய்க்குள் தேனீக்கூட்டம் போல நூற்றுக்கணக்கான அம்புகள் சென்று நிறைந்தன.

பெண்கள் மண்டபத்தில் இரு கன்னங்களிலும் கைவைத்து கண்ணீர் வழிய குந்தி அர்ஜுனனைப் பார்த்திருப்பதை தருமன் கண்டான். ஒரு கணம் அவன் நெஞ்சில் நெய்யில் அனல் என பொறாமை எழுந்து அமைந்தது. அவள் அகத்தைத் தொட்ட ஒரே ஆண் அர்ஜுனன் மட்டுமே என தருமன் என்றும் அறிந்திருந்தான். பீமனே அவளுக்கு அனைத்துக்கும் உதவியான மைந்தன். தருமனை அவள் தன் வழிகாட்டியாக வைத்திருந்தாள். நகுலசகாதேவர்கள் அவளுக்கு வளரவே வளராத குழந்தைகள். அவளுக்குள் இருந்த பெண் தேடிக்கொண்டிருந்த ஆண் அர்ஜுனன்தான். தன் அகம் நிறைக்கும் காதலனை மகளிர் மைந்தனில் மட்டுமே கண்டுகொள்ள முடியும். அது அவன்!

அவள் ஒருபோதும் அவனை அணுகவிட்டதில்லை. அவள் உடலை அர்ஜுனன் தொடுவதை தருமன் கண்டதே இல்லை. அவன் விழிகளை நோக்கி பேச அவளால் முடிந்ததில்லை. மிகமிக ஆழத்தில் உள்ள ஒன்றை அவள் அவனிடமிருந்து ஒவ்வொரு கணமும் மறைத்துக்கொண்டிருந்தாள். அதற்கெனவே தன்னை விலக்கிக்கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அனைத்து போதங்களும் நழுவ குந்தி பேதைபோல கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள். அதை காந்தாரத்து அரசியர் முதலில் ஓரக்கண்ணால் நோக்கினர். அவள் அவர்களை பொருட்படுத்தவே இல்லை என்று உணர்ந்தபின் ஏளனம் நிறைந்த முகத்துடன் நோக்கினர். மாலினி அதைக்கண்டு பலமுறை மெல்ல குந்தியைத் தொட்டாள். ஆனால் அவள் அதையும் அறியவில்லை.

பயிற்சியாளர்களுக்கான பந்தலின் நடுவே துரியோதனன் யானை போல தோள்களை அசைத்தபடி, மூடியைத் தள்ளும் நீராவி நிறைந்த கலம் போல கனன்று நின்றான். அவனருகே நின்ற துச்சாதனனின் விழிகள் வந்து தருமனை தொட்டுச்சென்றன. தருமன் முதல்முறையாக அவன் விழிகளை நேருக்குநேர் சந்தித்தான். துச்சாதனன் பார்வையை விலக்கிக்கொண்டான். அவன் தன் பார்வையால் நிலைகுலைந்துவிட்டதை அறிந்த தருமன் களத்தை நோக்கி புன்னகை புரிந்தான்.

அர்ஜுனனின் சரங்கள் பறவைமாலை போல விண்ணில் பறந்து தரையில் விழும்போது ஒன்றன் மீது ஒன்றாகத் தைத்து ஒரு கம்பமாக மாறி நின்றாடின. அடுத்த அம்பு எழுந்து பறந்து காற்றிலாடி நின்ற ஒரு நெற்றை உடைத்தபின் சுழன்று அவனிடமே வந்தது. அதை அவன் மீண்டும் தொடுத்தான். விரைவாக அவன் அந்த அம்பை மீளமீள அனுப்ப அவனுக்கும் அப்பாலிருந்த இலக்குகளுக்கும் நடுவே ஒரு நீள்வட்ட வெள்ளிவட்டக்கோடு போல அந்த அம்பு தெரிந்தது. ஏவப்பட்ட தெய்வம் போல அது அர்ஜுனனுக்கு பணிவிடை செய்தது. அவன் வில்லைத் தாழ்த்தியபோது அவனுடைய இலக்குகளாக இருந்த நெற்றுகள் அனைத்தும் அவன் காலடியில் குவிந்துகிடந்தன.

பெருமிதப்புன்னகையுடன் துரோணர் எழுந்தார். ஆரவாரிக்கும் கூட்டத்தை நோக்கி கைகளை விரித்தபடி அவர் ஏதோ சொல்லவந்தபோது தெற்கு முனையில் மக்களால் ஆன வளையத்தை உடைத்தபடி வில்லுடன் உள்ளே வந்து நின்ற கர்ணனைக் கண்டு சொல்மறந்தார். கர்ணன் தோலுறைக்கரங்களும் நிறைந்த அம்புநாழியும் மார்புக்குக் குறுக்காக மான் தோல் உத்தரீயமும் இடுப்பில் பட்டுக்கச்சையும் அணிந்திருந்தான். விரிந்த தோளில் சரிந்த சுருள்குழலும் இளம் மீசையும் ஓங்கிய உடலுமாக வந்து களம் நடுவே நின்று நாணொலி எழுப்பினான். அவனை நோக்கி விரைந்த வீரர்கள் அவன் வில்லோசை கேட்டு தயங்கினர். அஸ்தினபுரியின் மக்கள் அனைவரும் அவனை அறிந்திருந்தனர். மெல்ல கூட்டமெங்கும் பரவிய அமைதியில் கர்ணனது கால்களின் இரும்புக்கழலின் மெல்லிய ஒலி கேட்டது.

கர்ணனை அர்ஜுனன் ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்புமாக பாயும் தருணத்தில் உறைந்தது போல பார்த்து நின்றான். துச்சாதனன் மெல்லிய குரலில் துரியோதனனிடம் பேசிக்கொண்டிருக்கும் ஒலி பட்டு கசங்குவதுபோலக் கேட்டது. அவனுக்கு நிகரான பேரழகனை அதுவரை பார்த்ததில்லை என்று தருமன் எண்ணிக்கொண்டான். முன்பு பார்த்த போதெல்லாம் அவனுள் ஏதோ ஒன்று எழுந்து விழிகளையும் சிந்தனையையும் அடைத்தது. கண்களை விலக்கி அக்கணமே அவனைப்பற்றிய எண்ணங்களையும் திருப்பிக்கொள்வான். உயரமின்மை போலவே உயரமும் அழகற்றது. ஒத்திசைவின்மையை உருவாக்குவது. வியக்கவைக்கும் உயரமிருந்தும் அளந்து செதுக்கியதுபோன்ற அங்கங்கள் கொண்டவர் என அவன் எண்ணியிருந்தது பிதாமகர் பீஷ்மரை மட்டுமே. ஆனால் நாகப்பழம்போல மின்னும் கன்னங்கரிய தோலும், இந்திரநீலம் சுடரும் விழிகளும் சினத்திலும் கருணை மாறா புன்னகையும் கொண்ட கர்ணன் மானுடன்தானா என்று வியக்கச்செய்யும் பேரழகு கொண்டிருந்தான். விழிகள் தோள்முதல் தோள்வரை மார்பு முதல் இடைவரை அலைந்துகொண்டே இருந்தன. அழகன் அழகன் அழகன் என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது.

கர்ணன் அரங்கு நடுவே நின்று உரத்த குரலில் “பார்த்தா கேள், நீயே உலகின் பெரும் வில்லாளி என்று உன் ஆசிரியர் சொன்னால் ஆகாது. அதை வித்தை சொல்லவேண்டும். அவைச்சான்றோர் ஒப்பவேண்டும். இதோ நீ செய்த அத்தனை வில்தொழில்களையும் உன்னைவிட சிறப்பாக நான் செய்யச் சித்தமாக இருக்கிறேன்…” என்றான். எவரும் பேசுவதற்கு முன்னரே வில் வளைத்து அம்புகளை ஏவத் தொடங்கினான். அம்பெடுக்கும் கையை காணக்கூட முடியாத விரைவை தருமன் அப்போதுதான் கண்டான். அம்புகள் எழுந்து ஒன்றை ஒன்று விண்ணிலேயே தொட்டுக்கொண்டு உடல் கோர்த்துச் சுழன்றன. அம்புகள் செல்லச்செல்ல அச்சுழற்சியின் விரைவு கூடியது. விண்ணில் அம்புகளினாலான ஒரு சுழி உருவாகியது. பெரிய சக்கரம்போல அது அங்கே நின்றது.

அர்ஜுனனின் தோள்கள் தொய்வடைவதையும் வில் அவனை அறியாமலேயே கீழிறங்குவதையும் தருமன் கண்டான். அதுவரை கர்ணனின் தோற்றமும் வித்தையும் அளித்த களிப்பில் பொங்கிக்கொண்டிருந்த அவன் அகம் அக்கணமே சுருங்கி அமைந்தது. உடனே இருண்டு கனக்கத்தொடங்கி சிலகணங்களில் அதன் எடை தாளாமல் அவன் மெல்ல பீடத்தில் அமர்ந்துவிட்டான்.

பின்வரிசையிலிருந்து ஏதோ இளைஞன் திடீரென வெறிபிடித்தவன் போல எழுந்து கர்ணனுக்கு வாழ்த்து கூறி கூவ, அந்தக்காட்சியில் மெய்மறந்திருந்த கூட்டம் அதைக்கேட்டு திகைத்தது. சிலகணங்களில் அரங்கு மொத்தமாக வாழ்த்துக்கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தது. பின்பு அதுவரை கேட்காத உக்கிரம் கொண்ட வாழ்த்தொலிகளால் கண்டாமணிக்குள் இருப்பது போல செவி ரீங்கரித்தது. தருமன் “இவன் எங்கே கற்றான்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ள அருகே இரு கைகளையும் கட்டி இறுகிய தாடையுடன் நின்றிருந்த பீமன் “அவனைப்போன்றவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை மூத்தவரே. தேவை என்றால் தெய்வங்கள் இறங்கி வரும்” என்றான்.

கர்ணன் புன்னகையுடன் கூட்டத்தை நோக்கி கையசைத்து அமைதியை உருவாக்கிவிட்டு தன் வில்லைத் தூக்கி உரக்க “பார்த்தா, இது என் அறைகூவல். நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா!” என்றான். அப்பால் கூட்டத்தில் ஒருவன் உரத்த குரலில் “ஆடிப்பாவைகளின் போர்! விதியே, தெய்வங்களே!” என்று கூவ மார்பில் கட்டப்பட்டிருந்த பீமனின் கைகள் தோல் உரசிக்கொள்ளும் ஒலியுடன் இருபக்கமும் விழுந்தன. சினத்துடன் அவன் கூவியவனை நோக்கித் திரும்பினான்.

பெண்கள் மண்டபத்தில் கலவர ஒலிகள் எழுந்ததைக் கண்டு தருமன் “என்ன? என்ன அங்கே?” என்றான். குந்தியைச்சூழ்ந்து சேடிகள் நின்று குனிந்து ஏதோ செய்தனர். சேவகன் ஓடிவந்து “அரசி வெயில் தாளாமல் சற்று தளர்ந்து விழுந்துவிட்டார்கள். ஒன்றுமில்லை. நீர் கொடுத்ததும் விழித்துக்கொண்டார்கள்” என்றான். “அவர்கள் அரண்மனைக்குச் செல்லட்டும்” என்றான் தருமன். “ஆணை” என்று சேவகன் ஓடிச்சென்றான். இன்னொருசேவகன் வந்து “அவர்கள் போக விரும்பவில்லை” என்றான். பீமன் “எப்படிப்போகமுடியும்?” என்றான். தருமன் “மந்தா, என்ன சொல்கிறாய்?” என்றான். பீமன் இல்லை என தலையாட்டினான்.

மேடையில் இருந்து இறங்கி இரு கரங்களையும் விரித்தபடி கிருபர் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே வந்து நின்றார். “இரட்டையர் போருக்கு மரபு சில நிபந்தனைகளை விதித்துள்ளது இளைஞனே. நிகரானவர்கள் மட்டுமே கைகோர்த்தும் படைக்கலம் கோர்த்தும் போர் புரிய முடியும். இவன் சந்திரகுலத்தவன். குருவம்சத்துப் பாண்டுவின் மைந்தன். யாதவ அரசி குந்தியின் மகன்….” என்றவர் கையை நீட்டி உரக்க “நீ யார்? உன் பெயர் என்ன? உன்குலம் என்ன? உன் ஆசிரியர் பெயர் என்ன?” என்றார்.

கர்ணன் உடல் வழியாகச்சென்ற துடிப்பை தொலைவிலிருந்தே தருமனால் காணமுடிந்தது. அவன் நிமிர்ந்த தோள்கள் தழைய வில் நிலம் நோக்கித் தாழ்ந்தது. தருமன் எழுந்து கைதூக்கி கிருபரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அவன் அருகே இருந்து துரியோதனன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி உரத்த குரலில் “நில்லுங்கள்!” என்று கூவினான். சினத்துடன் கைவிரித்துச் சிரித்துக்கொண்டு முன்னால் சென்று உரக்க “நல்ல மரபு குருநாதரே. போர்க்களத்தில் இலச்சினை மோதிரத்தைக் காட்டாத எவரிடமும் மோத ஷத்ரியன் மறுத்துவிடலாம்!” என்றான். கிருபர் திகைத்து “இளவரசே!” என்று ஏதோ சொல்ல முற்பட துரியோதனன் திரும்பி துரோணரை நோக்கினான்.

“குருநாதரே, உங்கள் சொற்களை திருத்திக் கொள்ளுங்கள். அர்ஜுனன் பாரதவர்ஷத்தின் வில்லாளியல்ல, இந்த அரண்மனையிலேயே பெரிய வில்லாளி, அவ்வளவுதான்” என்று அவன் சொன்னதைக்கேட்டு கூட்டத்தில் இருந்து சிதறிய சிரிப்பொலி எழுந்தது, “இது ரணகளமல்ல சுயோதனா. களத்தில் எவருக்கும் உரிய பாடத்தை கற்பிக்கும் தகுதி என் சீடனுக்கு உண்டு. இது அரங்கேற்றக் களம். அரச மரியாதை இல்லாத எவரும் இங்கு அரங்கேற முடியாது” என்றார் துரோணர் .

அர்ஜுனன் தன் வில்லைத்தூக்கி நாணை ஒலித்தபடி “அவன் எவராக இருப்பினும் நான் இதோ போருக்குச் சித்தமாகிறேன்…” என்று கூவி களம் நடுவே வந்தான். கர்ணனை நோக்கி “எடு உன் வில்லை!” என்றான். அக்கணம் பந்தலில் இருந்து தாவி களத்தில் குதித்த பீமன் அங்கே நின்றிருந்த ஒரு வீரனிடமிருந்து குதிரைச்சவுக்கை பிடுங்கியபடி கர்ணனை நோக்கிச்சென்று அதை அவன் முகத்தை நோக்கி வீசினான். கர்ணனின் உடல் அதிர்ந்து அவன் தோள்கள் ஒடுங்கின. மூச்சுத்திணறுபவன்போல அவன் வாய் திறந்தது. “சூதன்மகனே, போ! உன் இடம் குதிரைக்கொட்டில். உன் படைக்கலம் சவுக்கு. சென்று உன் பணியைச்செய். ஷத்ரியர்களிடம் போருக்கு வராதே இழிபிறவியே” என்று கூவினான்.

களத்தை நிறைத்திருந்த மொத்தமக்கள்திரளும் அவன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் கேட்டது. பல்லாயிரம் உடல்கள் அம்பு பாய்ந்த குதிரை போல திகைத்து நின்று சிலிர்த்தன. சிலகணங்களுக்குப்பின் பல்லாயிரம் பெருமூச்சுகள் ஒலித்தன. பல்லாயிரம் தோள்கள் தொய்ந்து கைகள் தளர்ந்தன. நீர் நிறைந்த விழிகளைத் தூக்கி துரோணரை நோக்கிய கர்ணன் உலர்ந்து ஒட்டிய உதடுகளை முழு ஆற்றலாலும் பிரித்து விலக்கி ஏதோ சொல்லப்போனான். அவன் தொண்டையில் சொல் குளிர்ந்து இறுகி கனத்து அசைவிழந்திருந்தது.

துரோணர் கைகளை நீட்டி “சூதன் மகனே, உன் குருதிக்குலத்தை விடுவோம். உன் குருகுலம் என்ன? உன்னை மாணவனாக ஏற்றுக்கொண்ட ஆசிரியர் யார்? எவர் பெயரை சபையில் சொல்ல உனக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது?” என்றார். கர்ணன் தலை அவனை அறியாமல் இல்லை என ஆடியது. “சீ, நீசா! நாணமில்லையா உனக்கு? குலமும் கல்வியும் இல்லாத வீண்மகனாகிய நீ எந்தத் துணிவில் களம்புகுந்தாய்? எந்த நம்பிக்கையில் ஷத்ரியனை நோக்கி அறைகூவினாய்?” என்று அவர் கூவினார்.

பீமன் உரக்க நகைத்து “உன் மேல் குதிரை மலம் நாறுகிறது அற்பா. உன் அம்புகளும் குதிரைமலம் பட்டவை… சென்று நீராடி வா… இப்பிறவி முழுக்க மும்முறை நீராடு. அடுத்த பிறவியில் வில்லுடன் வா… போ!” என்றான். கர்ணன் திரும்பி பீஷ்மரை நோக்கியபோது வில் காலடியில் நழுவ அவனையறியாமலேயே அவனுடைய இரு கைகளும் மேலே எழுந்தன. ஒருகணம் அவன் விழிகள் பீஷ்மரின் விழிகளைச் சந்தித்தன. பீஷ்மர் எழுந்து உரக்க “என்ன நடக்கிறது இங்கே? அவைக்களத்தில் நாம் அறநூல்களை விவாதிக்கவிருக்கிறோமா என்ன?” என்றார். நீட்டப்பட்ட கர்ணனின் கைகள் சரிந்தன. அவன்தலை முதல்முறையாகக் குனிந்தது. இமைகள் இருமுறை அதிர விழிநீர்த்துளிகள் ஒளியுடன் சொட்டின. அவன் வெளியேறுவதற்காகத் திரும்பினான்.

“நில்!” என்று துரியோதனன் உரக்கக் கூவினான். இருகைகளையும் விரித்துக்கொண்டு “பிதாமகரே, குருநாதரே, இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்த சமர்களமும் இப்புவியில் இருக்க இயலாது” என்றான்.

பீஷ்மர் “சுயோதனா, ஷத்ரியன் போரில் எக்குலத்தையும் எதிர்கொள்ளலாம். ஆனால் அவைக்களத்தில் ஒருவனுடன் போர் புரிந்தாலே அவனை தனக்கு நிகராக ஏற்றவனாகிறான். இந்தச் சூதன் அர்ஜுனனிடம் போரிட்டால் அக்கணமே அவனும் அரசகுலத்தவனே. அதன் பின் அவன் ஒரு படைதிரட்ட முடியும். மண்ணை கைப்பற்ற போர் தொடுக்க முடியும். தன் நாட்டில் பிறிதொரு மண்ணுரிமையை ஒருபோதும் அரசன் உருவாக்கக் கூடாது. உருவாகிவந்தால் அக்கணமே அதை வேருடன் பிழுதெறியவேண்டும்” என்றார். சற்று தளர்ந்த குரலில் “எந்த அரசுரிமைப்போரும் எளிய மக்களை வீணாகக் கொன்று குவிப்பதாகவே முடியும். அஸ்தினபுரியில் அப்படி ஒரு போர் நிகழ நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார்.

துரியோதனன் “இவன் மண்ணுரிமை கேட்பான் என அஞ்சுகிறீர்கள் இல்லையா? இதோ இங்கேயே இவனுக்கு நான் மண்ணுரிமை அளிக்கிறேன்… அமைச்சரே” என்று திரும்பினான். விதுரர் எழுந்து அருகே வந்து “இளவரசே” என்றார். “இவனை இக்கணமே நான் மன்னன் ஆக்க விழைகிறேன்” என்றான் துரியோதனன். “அங்கநாட்டு அரசன் சத்யகர்மன் கப்பம் முடக்கினான் என அவனுக்கு ஓலை அனுப்பியிருக்கிறோம்…” என்றார் விதுரர். “ஆம், அப்படியென்றால் அங்கநாடு… தம்பி” என்றான் துரியோதனன். “மூத்தவரே” என்றான் துச்சாதனன். “மூவேதியரும் குலமூதாதையரும் கங்கை நீரும் அரிசியும் மலரும் இப்போதே இங்கு வரட்டும்” என்றான் துரியோதனன். துச்சாதனன் தலைவணங்கியபின் திரும்பி ஓடினான். துரியோதனன் உரத்த குரலில் தன் மார்பில் கையால் முட்டியபடி “இம்முடிவை எதிர்க்கும் எவர் இருந்தாலும் அது என் தந்தையாகவே இருப்பினும் இப்போதே என்னிடம் போருக்கு வரச் சித்தமாகட்டும்” என்று அறைகூவினான்.

“இளவரசே, என்ன செய்கிறீர்கள்” என்று கிருபர் கூவினார். “எது என் தெய்வங்களால் ஆணையிடப்படுகிறதோ அதை. குருநாதரே, நாளை நான் விண்ணகம் செல்வேன் என்றால் அது இச்செயலுக்காகவே” என்றான் துரியோதனன். துரோணர் “சுயோதனா, நீ ஷத்ரியன். உன்னிடமிருந்து பிராமணன் மட்டுமே கொடை பெறமுடியும். அவன் ஷத்ரியன் என்றால் நாட்டை வென்றடையவேண்டும்” என்றார். அக்கணமே ஒரு காலை மடித்து கர்ணன் முன் அமர்ந்த துரியோதனன் “இதோ, இந்த மாவீரன் முன் அஸ்தினபுரியின் இளவசரானாகிய நான் தோற்கிறேன். மாமன்னன் ஹஸ்தியின் குலம் இவன் முன் பணிகிறது. இனி என்றென்றும் நாங்கள் இவனிடம் தோற்றவர்களாகவே அறியப்படுவோம்” என்றான்.

கர்ணன் உடல் சிலிர்த்து இரு கைகளையும் கூப்பி கண்களை மூடியபடி அசையாமல் நின்றான். அவனால் அங்கு நிகழ்வது எதையுமே அறியமுடியவில்லை என்று தோன்றியது. தருமன் தன் மார்பில் கண்ணீர் கொட்டுவதை, தானும் கைகளைக் கூப்பியிருப்பதை அறிந்தான். துச்சாதனன் திரும்ப ஓடிவந்தான். அவனுடன் மஞ்சளரிசியும் மலரும் நிரம்பிய தட்டுகளையும் அபிஷேக நீர்க்குடங்களையும் ஏந்திய வைதிகர்கள் வந்தனர். விதுரர் ஒன்பது பொற்குடங்களில் கங்கைநீருடன் வந்த சேவகர்களை களத்துக்குக் கொண்டுவந்தார். விகர்ணன் அவனே ஓர் அரியணையை தலைக்குமேல் தூக்கி வந்து களத்தில் போட்டான். வைதிகர்களில் மூவர் அங்கே ஒரு குழியைத் தோண்டி செங்கல் அடுக்கி எரிகுளம் அமைக்க இருவர் அரணிக்கட்டையைச் சுழற்றி நெருப்பை எழுப்பினர். வைதிகர் சூழ்ந்து அமர்ந்துகொண்டு வேதமோதத் தொடங்கினர். சூதர்கள் மங்கல வாத்தியங்களுடன் வந்தனர். அணிப்பரத்தையரும் சேடியரும் விரைந்து குழுமினர்.

துரியோதனன் இரு கரங்களையும் விரித்து சென்று கர்ணனின் தோள்களைப் பற்றித் தழுவிக் கொண்டான். “விண்ணவர் அறிக! மூதாதையர் அறிக! இந்தக் கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை“ என்றான். கர்ணன் பட்டு கிழிபடும் ஒலியுடன் விம்மியபடி, அன்னையை அடைக்கலம் புகும் குழந்தைபோல துரியோதனனை அள்ளி அணைத்துக்கொண்டு அவன் தோள்களில் முகம்புதைத்தான். தழுவல் தளர்ந்து அவன் மெல்ல சரியப்போக துரியோதனன் அவனைத் தூக்கி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான். தருமன் தன் எல்லைகள் அழிய கைகளில் முகம் சேர்த்து கண்ணீர்விட்டு அழுதான்.

வைதிகர் மூவர் கர்ணன் மேல் நீர் தெளித்து வாழ்த்தியபின் அரியணையையும் கங்கைநீரால் புனிதப்படுத்தி அவனை அதில் அமர வைத்தனர். கர்ணனின் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும் சிலைத்திருப்பதையும் அனைவரும் கண்டனர். அரண்மனைக் கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மணிமுடி ஒன்றை அமைச்சர் சௌனகர் தங்கத்தட்டில் கொண்டுவந்து நீட்ட அதை துரியோதனன் எடுத்து கர்ணனின் தலையில் வைத்தான். உரக்க “இவன் இன்றுமுதல் என் தமையன். என் தம்பியரனைவருக்கும் மூத்தோன். வசுஷேணனாகிய கர்ணன் இதோ மண்ணும் விண்ணும் சான்றுரைக்க அங்கநாட்டுக்கு அரசனாக மணிமுடிசூடுகிறான். தேவர்கள் அருள்க! குலதெய்வங்கள் அருள்க!” என்று கூவினான். சேடியர் குரவையிட சூதர்களின் மங்கல வாத்தியங்கள் ஒலித்தன. கூடிநின்றவர்கள் மஞ்சளரிசியும் மலரும் அள்ளி வீசி வாழ்த்தினர்.

நெடுநேரமாக அங்கே உள்ளமும் விழிகளும் மட்டுமாக இருந்த கூட்டம் உடலும் குரலும் பெற்று வாழ்த்தொலி எழுப்பியது. “அங்கநாட்டரசர் கர்ணதேவர் வாழ்க! அங்கநாட்டரசர் வசுஷேணர் நீணாள் வாழ்க!” வைதிகர் பொற்குடங்களில் ததும்பிய கங்கை நீரை கர்ணனின் தலைமேல் ஊற்றி அரசநீராட்டு செய்தனர். பின்னர் அங்கே எரிந்த ஆகவனீய நெருப்புக்கு அவனைக் காவலாக்கி ஏழுகணுக்கள் கொண்ட பொன்மூங்கிலை அவன் கையில் அளித்தனர். சிறிய செவ்விதழ்களை விரித்த மலர் போல தழைந்தாடிய ஆகவனீயாக்னியின் முன் கர்ணன் அமர்ந்துகொண்டான். வைதிகர் வேதம் ஓதி அளித்த ஏழுவகை அவிப்பொருட்களை நெருப்பிலிட்டு வேதமந்திரங்களைச் சொல்லி வணங்கினான். முதுவைதிகர் வேதமோதி வேள்விநெருப்பின் சாம்பலைத் தொட்டு அவன் நெற்றியில் மங்கலக் குறியணிவித்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

ஒளிவிடும் மணிமுடியுடன் அவன் எழுந்தபோது மேகவாயிலைத் திறந்து வந்த மாலைச்சூரியனின் பொன்னொளிக்கதிர் அவன் மேல் மட்டும் விழுந்தது. அவன் காதுகளில் இரு நீர்த்துளிகள் வைரக்குண்டலங்களாக ஒளிவிடுவதை, அவன் மார்பில் வழிந்த மஞ்சள்நீர் பொற்கவசம் என மின்னுவதை அங்கிருந்தோர் கண்டனர். வாழ்த்துரைக்கவும் மறந்து கூப்பியகரங்களுடன் அவர்கள் விழிமலைத்து நின்றனர்.

சன்னதமெழுந்தவர் என உடல் துடிக்க முன்னால் வந்த முதுசூதர் ஒருவர் தன் கிணையை அகவிரைவெழுந்த விரல்களால் மீட்டி உரக்கப்பாடினார். “இதோ கைலாய முடிமேல் கதிரவன் எழுந்தான்! அரியணை அமர்ந்தான் கர்ணன்! கருணைகொண்டவனின் கருவூலத்தை நிறைக்கும் தெய்வங்களே இங்கு வருக! எளியவரின் கண்ணீரை அறிந்தவன் மேல் வெண்குடைவிரிக்கும் அறங்களே இங்கு வருக! கொடுப்பதை மட்டுமே அறிந்தவன் தான் பெற்றுக்கொண்ட ஒரே தருணத்துக்கு நீங்களே சான்றாகுக!” என்றார். கூட்டம் கைகளைத் தூக்கி ‘வாழ்க! வாழ்க!’ என்றது. பல்லாயிரம் விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டும் அதற்கிணையான ஒரு தருணம் அஸ்தினபுரியில் இனி நிகழாது என்று தருமன் எண்ணிக்கொண்டான்.

கர்ணன் அந்த பொன்மூங்கிலை ஏந்தி மீண்டும் அரியணையில் அமர்ந்தான். அர்ஜுனன் பந்தலுக்கு மீண்டு வந்து தருமனின் அருகே நின்றான். எதையும் பார்க்காமல் தலைகுனிந்து தன் காலடி மண்ணிலேயே விழிநாட்டியிருந்தான். தருமன் பொன்னுருகி வழிந்த அந்தி வெயிலில் கருவறையிலமர்ந்த சூரியதேவனைப் போல ஒளிவிட்டுக்கொண்டிருந்த கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். அழகன் அழகன் அழகன் என ஓடிக்கொண்டிருந்த சொற்சரடை மீண்டும் கேட்டான். அத்தனைக்கும் நடுவே அச்சொற்கள் தன்னுள் ஓடிக்கொண்டிருப்பதை அறிந்து திகைத்தான். பொற்சிம்மாசனத்தை அழகாக்கும் பேரழகு கொண்ட இன்னொரு மன்னன் இனி மண்ணில் பிறக்கப்போவதில்லை. தெய்வங்களே, எவருடன் சதுரங்கம் ஆடுகிறீர்கள் நீங்கள்? எளிய மானுடர்களிடமா? இல்லை இவை உங்கள் எல்லைகளை நீங்களே அறியும் தருணங்களா?

அரசமேடையில் இருந்து திருதராஷ்டிரரும் பீஷ்மரும் சகுனியும் இறங்கி அருகே வந்தனர். திருதராஷ்டிரரை கைபற்றி அழைத்துவந்த சஞ்சயன் “அரசே, இதோ அங்கநாட்டுக்கு விண்ணவர் தேர்ந்த அரசர் கர்ணதேவர்” என்றான். திருதராஷ்டிரர் தலையை ஆட்டி உரக்க நகைத்து “ இன்றுமுதல் அவன் என் முதல்மைந்தன். டேய், எழுந்து என் காலைப்பணி. என்றும் என் சொற்களுக்கு கடன்பட்டிரு” என்றார். கர்ணன் எழுந்து அவர் பாதங்களைப் பணிய அவர் அவனை தன் பெரிய கரங்களால் அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டு “அழியாப் புகழுடன் இரு! வீரனை வெல்ல விதியால் முடியாதென்று இவ்வுலகுக்குக் காட்டு! என்றார். அவன் தோள்களை கைகளால் ஓங்கி அறைந்து “வில் ஒரு பொய்யான படைக்கலம். நீ கதை பழகு. நாம் ஒருமுறையேனும் களம் நிற்கவேண்டும்” என்றார்.

மக்களின் வாழ்த்தொலிகளால் அந்திவெளிச்சம் பொற்பட்டுத்திரை போல அலையடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. பீஷ்மர் கர்ணனை அணுகியபோது அவன் திருதராஷ்டிரரின் பிடியில் இருந்து விலகி கைகூப்பி நின்றான். “அங்கநாட்டரசனாகிய ஷத்ரியனே, இன்று நீ பெற்றுள்ள நாடு உன் ஆன்மா தன் முழுமையைப் பெறுவதற்கான வழி என்று உணர்ந்துகொள். முனிவருக்கு தவச்சாலையும் வைதிகனுக்கு வேள்விச்சாலையும் போன்றது ஷத்ரியனுக்கு நாடு. இனி உன் நலன், உன் புகழ், உன் வெற்றி எதுவும் உனக்குப் பொருட்டாக இருக்கலாகாது. உன் குடிமக்களுக்கு நீ தந்தை. அவர்களைப் பேணுவதன்றி உனக்கு பிறிதொரு கடனும் இல்லை” என்றார். கர்ணன் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியபோது அவர் “வெற்றியும் நிறைவும் திகழ்க” என்று வாழ்த்தினார்.

கிருபரும் துரோணரும் வந்து கர்ணனை மலரும் அரிசியுமிட்டு வாழ்த்தினர். கிருபர் “வெற்றி நிறைக!” என்று வாழ்த்தி “அரசனும் அரசும் முறைமைகளால் மட்டும் ஆனவை. ஒருபோதும் முறைமைகளை மீறாமலிரு” என்றார். துரோணர் அவனை வாழ்த்தி “முள்மேலிருப்பவனே நல்ல மன்னன் என்கிறது பிரஹஸ்பதியின் நூல். அவ்வண்ணமே ஆகுக! அறம்பிழைக்காமலிரு!” என்றார். சகுனி கர்ணனை கைவிரித்து ஆரத்தழுவிக்கொண்டு “தலைமுறைகள்தோறும் அங்கநாடு அஸ்தினபுரி என்னும் ரதத்தின் சகடமாக அமையட்டும்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான்.

அப்போது குதிரைக்கொட்டிலுக்குச் செல்லும் பாதை வழியாக குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையும் கையில் சவுக்குமாக அதிரதன் பதறியபடி ஓடி வந்து கைகளை விரித்து “கருணை காட்டுங்கள்! உடையோரே, அவனைக் கொன்றுவிடாதீர்கள்!” என்று கூவினார். அவரது கரிய மெலிந்த உடலையும் கண்ணீரையும் கண்ட துச்சாதனன் முன்னால் சென்று “யார் நீர்?” என்றான். அதிரதன் அவன் கால்களை நோக்கி கைகூப்பியபடி குனிந்து “என் மைந்தனை விட்டு விடுங்கள் உடையவர்களே… இளமைத்துடிப்பால் பிழையாக பேசிவிட்டான். அவனைக் கொன்றுவிடாதீர்கள்… என்னை சிறையிலடையுங்கள். என்னை சாட்டையாலடியுங்கள். எல்லாம் என் பிழை… அவனை விட்டுவிடுங்கள்” என்று உரத்த குரலில் கதறி கைகூப்பினார்.

“யார் அது?” என்று பீஷ்மர் கேட்டார். கர்ணன் “இவர் என் தந்தை. அங்கநாட்டு ரதமோட்டியான அதிரதர்” என்றான். “மைந்தா, இளைய கௌந்தேயருடன் நீ போர்புரியவிருப்பதாகச் சொன்னார்கள்… உன்னைக் கொன்றுவிடுவார்கள். வா, இப்போதே நாம் இங்கிருந்து சென்றுவிடுவோம்” என்று அதிரதன் கர்ணனின் கைகளைப்பற்றிக்கொண்டு அழுதார். “தந்தையே, இந்நாளில் உங்கள் மைந்தனை வாழ்த்துங்கள்” என்று கூறியபடி கர்ணன் நெற்றியும் மார்பும் தோள்களும் இடையும் காலும் என ஐந்து உறுப்புகளும் புழுதியில் பட அவர் முன் விழுந்து அவரது புழுதியும் சேறும் படிந்த முதிய கால்களை வணங்கினான். அவர் பதறி கைகளை நெஞ்சுடன் சேர்த்து நின்று நடுநடுங்கினார். அவரது பாதப்புழுதியை எடுத்து தன் நெற்றியில் அணிந்தபடி எழுந்த கர்ணன் “பிதாமகரே, என்றும் நான் இவரது மைந்தனாகவே அறியப்படுவேன். இவரது பாவபுண்ணியங்களுக்கே மரபுரிமை கொள்வேன்” என்றான்.

தன்னருகே நின்ற அர்ஜுனனின் மெல்லிய விம்மல் ஓசையை தருமன் கேட்டான். திரும்பி நோக்கியபோது அவன் விழிநீரையும் கண்டான். அதே கணம் திரும்பி அர்ஜுனனை நோக்கிய பீமன் இரு கரங்களையும் சேர்த்து அறைந்துகொண்டு உரக்க “பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகிவிடாது சுயோதனா” என்றான். கொம்புகுலைத்து எழும் மதகளிறு போல துரியோதனன் சினத்துடன் திரும்பி “இந்தச் சொற்களுக்கு நிகராக என்றோ ஒருநாள் நீயும் உன் உடன்பிறந்தாரும் களத்தில் குருதியை அளிப்பீர்கள். இது என் மூதாதையர் மேல் ஆணை!” என்றான். “ஆம், அவ்வாறெனில் களத்தில் காண்போம்” என்ற பீமன் திரும்பி “மூத்தவரே, கிளம்புங்கள்…” என்று தருமனின் கையைப்பற்றி எழுப்பினான். தருமன் ஏதோ சொல்ல வர “நாம் இனி இங்கிருக்கவேண்டியதில்லை… வாருங்கள். இளையவனே நீயும் வா” என்று அர்ஜுனனின் தோளையும் பற்றி இழுத்துக்கொண்டு சென்றான்.

தனக்குப்பின்பக்கம் கர்ணனுக்கு வாழ்த்துக்கூறி எழுந்த பேரொலியை தருமன் கேட்டான். அது அவனை அறைந்து வெளியே துரத்துவது போலக் கேட்டது. “நான் அவனை வாழ்த்தியிருக்க வேண்டும் மந்தா” என்றான் தருமன். “ஏன்? அவன் சூதமைந்தன். அர்ஜுனனுக்கு எதிராக ஒரு படைக்கலம் கிடைத்த களிப்பில் நாடகமாடுகிறான் சுயோதனன்…” என்றான் பீமன். அர்ஜுனன் “மூத்தவரே, அவனை நினைத்து கலங்காதீர்கள். அவன் அளிக்கும் தைரியத்தில் துரியோதனன் நம்மை எதிர்க்கலாம். ஆனால் என்றாவது அவனை நான் களத்தில் கொன்று வீழ்த்துவேன்” என்றான்.

தருமன் நின்று “ஆம் தம்பி, நாம் வெல்வோம்…” என்றான். “இன்று எனக்கு அது தெரிந்தது. சுயோதனன் கர்ணனை நம்பி அத்துமீறுவான். அறம் பிழைப்பான். அதன் விளைவாக நம்மிடம் தோற்பான். ஆனால்…” அர்ஜுனன் எதிர்பார்ப்புடன் நின்றான். “தன் அறத்தால் இச்சூதன்மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி” என்றான் தருமன். பார்வையை விலக்கி தலைகுனிந்து அவன் சொன்னான் “இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்தபோது அவன் இடத்தில் என்னை வைத்து நடித்துக்கொண்டிருந்த நான் ஆழத்தில் கூசிச்சுருங்கினேன். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. இந்தப் பேரவையில் அவன் பாததூளியை தலையிலணிய சற்றும் தயங்கவில்லை. அஸ்தினபுரியின் இளவரசனாக அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாக தன்னை முன்வைத்தான். அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 12
அடுத்த கட்டுரைவிலக்கப்பட்டவர்கள்