‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 5 ]

இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடும் தடத்தில் மூன்று வேடர்கிராமங்கள் இருந்தன. மலைக்குமேல் சரத்வானின் தவக்குடில் இருப்பதை அங்கே கேட்டறிந்துகொண்டு அருவியை ஒட்டியிருந்த வழுக்கும் பாறையடுக்குகளில் வேர்செலுத்தி எழுந்திருந்த மரங்களில் தொற்றி அவன் மேலேறிச் சென்றான்.

இலைகள் சொட்டி அசைந்துகொண்டிருந்த சோலைக்குள் ஈச்சையோலைகளாலும் அரக்கும் மண்ணும் குழைத்துப் பூசப்பட்ட மரப்பட்டைகளாலும் கட்டப்பட்டிருந்த பன்னிரு குடில்களாலான சரத்வானின் தவச்சாலைக்குச் சுற்றும் அசோகமரங்களை நெருக்கமாக நட்டு அவற்றை மூங்கிலால் இணைத்து வேலியிட்டிருந்தனர். அவன் மூங்கில்தண்டு தடுத்திருந்த வாயில் முன் வந்து நின்றபோது காவல் மாடத்தில் நீர்வழியும் கூரைக்கு கீழே இருந்த மாணவன் அவனை ஒரு மலைவேடனென்றே எண்ணினான். தொடுத்த அம்புடன் வந்து “யார்? என்ன வேண்டும்? ஆயுதங்களை கீழே போட்டு விட்டு நில்” என்றான்.

தோளில் புரண்ட குழலில் இருந்தும் ஒடுங்கிய முகத்தில் தேன்கூடு போல தொங்கிய சிறியதாடியில் இருந்தும் அடர்ந்த புருவங்களில் இருந்தும் நீர்த்துளிகள் சொட்ட சேறுபடிந்த மரவுரி ஆடையுடன் நின்றிருந்த துரோணன் “என்னிடம் படைக்கலமேதும் இல்லை. பரத்வாஜமுனிவரின் மைந்தனும் அக்னிவேசரின் மாணவனுமான என் பெயர் துரோணன். வில்வித்தை பயின்ற அந்தணன் நான். தனுர்வேத ஞானியான சரத்வானைப் பார்ப்பதற்காக வந்தேன்” என்றான். மாணவன் சிலகணங்கள் தயங்கிவிட்டு “சற்றுப் பொறுங்கள் உத்தமரே” என்றபின் மழைக்குள் இறங்கி ஓடினான்.

சற்றுநேரத்தில் பனையோலையாலான குடைமறையை தலையில் போட்டபடி உயரமற்ற வெண்ணிறமான இளைஞன் உடலைக்குறுக்கியபடி வாயிலுக்கு வந்தான். “உத்தமரே, சரத்வானின் மைந்தனாகிய என்பெயர் கிருபன். தாங்கள் பரத்வாஜரின் மைந்தர் என்று அறிந்தேன். அதை உறுதிசெய்யும் முத்திரை ஏதும் உள்ளதா?” என்று கேட்டான். “ஆம்” என்று சொன்ன துரோணன் தன் இடைக்கச்சையில் இருந்த தர்ப்பையின் தாள் ஒன்றை அரைக்கணத்தில் உருவி வீசி அங்கே பறந்துகொண்டிருந்த சிறு வண்டு ஒன்றை வீழ்த்தினான்.

கிருபன் அந்த தர்ப்பைத்தாளைநோக்கிவிட்டு துரோணனை நோக்கி “வருக துரோணரே” என்று தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச்சென்றான். மழைத்தாரைகள் வழிந்துகொண்டிருந்த குடில்முற்றம் வழியாக நடக்கும்போது கிருபன் “அக்னிவேசரின் குருகுலத்தைப்பற்றிய செய்திகளை சூதர் சொல்வழியாக அறிந்திருக்கிறேன். தங்களைப்பற்றி கேட்டதில்லை” என்றான். துரோணன் அதற்கு பதில் சொல்லாமல் தன் குழல்களை கைகளால் அடித்து விசிறி நீர்த்துளிகளை தெறித்தான்.

“விருந்தினருக்கான குடில் இது. நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறலாம். உங்களுக்கு புதிய மரவுரியாடை கொண்டுவரும்படி சொல்கிறேன். நீராடியபின் உணவு அருந்தலாம்” என்றான் கிருபன். “நான் பிராமணரல்லாத பிறர் சமைத்த உணவை உண்பதில்லை” என்று துரோணன் சொன்னான். “அவ்வண்ணமே ஆகுக!” என்று புன்னகைசெய்த கிருபன் தலைவணங்கி விடைபெற்றான். நீராடி மாற்றாடை அணிந்து கொண்டிருக்கையில் இளம் மாணவன் ஒருவன் பெரிய மண்தாலத்தில் கிண்ணங்களில் சூடான இனிப்புக்கிழங்கு கூழும், தினையப்பங்களும், கீரைக்கூட்டும், சுக்கு போட்டு காய்ச்சப்பட்ட பாலும் கொண்டுவந்து வைத்தான்.

உணவுக்குப்பின் அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கையில் கிருபன் வந்தான். “வணங்குகிறேன் உத்தமரே. தங்களை இன்று மாலை எரிகடன் முடிந்தபின் ஸ்வாத்யாயத்தின்போது சந்திப்பதாக எந்தை சொல்லியிருக்கிறார்” என்றான். துரோணன் தலையசைத்தான். கிருபன் அமர்ந்துகொண்டு “தங்களைப்பற்றி விசாரித்தார். தாங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று சொன்னேன்” என்றான். துரோணன் நிமிர்ந்து அவனை நோக்கி உதடுகளை மெல்ல அசைத்து ஏதோ சொல்லப்போனபின் தலைகுனிந்தான்.

“எந்தை சரத்வான் கௌதமகுலத்தில் சத்யதிருதி என்னும் வைதிக முனிவருக்கு மைந்தனாகப் பிறந்தார். அவர் பிறந்தபோது அவருடன் குருதிவடிவமான ஒரு அம்பும் வெளிவந்தது என்கிறார்கள். வைதிகராக இருந்தாலும் எழுந்தமர்ந்தபோதே எந்தை தவழ்ந்துசென்று வில்லைத்தான் கையில் எடுத்தார். நான்குவேதங்களும் அவரது நாவில் நிகழவில்லை. கைவிரல்களோ அம்புகளைத் தொட்டதுமே அறிந்துகொண்டன. அவரது தந்தை அவருக்கு உபவீதமிட்டு காயத்ரியை அளிக்கவில்லை. கௌதமகுலம் அவரை வெளியேற்றியது” என்றான் கிருபன்.

“தன் ஏழுவயதில் எந்தை தன்னந்தனியராக தன் தந்தையின் இல்லத்தையும் குலத்தையும் ஊரையும் உதறிவிட்டுக் கிளம்பினார். மூன்று வருடம் தேடிப்பயணம்செய்து விஸ்வாமித்ர குருகுலத்தைக் கண்டடைந்தார். பதினேழாவது விஸ்வாமித்திரரிடமிருந்து தனுர்வேதத்தை முழுமையாகக் கற்றபின் தவளகிரி அருகே கின்னர நாட்டில் கிருபவனம் என்னுமிடத்தில் தவக்குடில் அமைத்து தங்கியிருந்தார். அங்கே அவர் ஜானபதி என்னும் கின்னர குலத்துப்பெண்ணைக் கண்டு அவளை மணந்தார். ஜானபதியில் நானும் என் தங்கை கிருபியும் பிறந்தோம்” கிருபன் சொன்னான்.

“ஒருவயதுவரை நாங்கள் தந்தையின் குருகுலத்திலேயே வளர்ந்தோம். எந்தையிடம் விற்தொழில் கற்கவந்த அஸ்தினபுரியின் சந்தனு மன்னர் எங்களை எடுத்துச்சென்று அரண்மனையிலேயே வளர்த்தார். எங்களுக்கு ஏழுவயதிருக்கையில் எந்தை தேடிவந்து எங்களை அழைத்துக்கொண்டு இங்கே வந்தார். நான் எந்தையிடம் வில்வேதம் கற்று இங்கே இருக்கிறேன். என் தங்கை கிருபி தந்தைக்கு பணிவிடை செய்கிறாள்” என்றான் கிருபன். “தங்களைப்பற்றி சொல்லுங்கள் துரோணரே. தாங்கள் பரத்வாஜரின் குலமா? அப்படியென்றால் ரிக்வேதத்தின் தைத்ரிய மரபைச்சேர்ந்தவர் அல்லவா?” என்றான்.

துரோணன் சற்றுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்துவிட்டு “நீங்கள் கௌதமகுலத்தவரா?” என்றான். கிருபன் “இல்லை துரோணரே. என் தந்தை முறைப்படி மந்திரோபதேசம் பெற்று மறுபிறப்பெடுத்து கௌதமகுலத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர் விஸ்வாமித்திர குருமரபை மட்டும் சேர்ந்தவர்” என்றான். துரோணன் அவனை நோக்காமல் “நான் அக்னிவேச குருமரபைச் சேர்ந்தவன்” என்றான். கிருபன் புரிந்துகொண்டு சற்றுநேரம் பேசாமலிருந்தபின் எழுந்து “மாலை ஸ்வாத்யாயத்துக்கு வருக” என்று சொல்லிவிட்டு இலைகள் சொட்டிக்கொண்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்து சென்றான்.

மாலை குருகுலத்தின் நடுவே இருந்த வேள்விச்சாலையில் முதியவைதிகர் வேள்விக்குளத்தில் எரியெழுப்பி அவியிட்டு அதர்வ வேதத்தை ஓதினார். சரத்வானின் மாணவர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அவியூட்டல் முடிந்து வைதிகர் வேள்விமீதத்தைப் பகிர்ந்து அனைவருக்கும் அளித்ததும் வித்யாசாலைக்குள் செங்கனல் சுடர்ந்த கணப்பைச் சுற்றி அவர்கள் அமர்ந்துகொண்டனர். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருந்தார். கருமணிப்பயிறு போல ஒளிவிடும் கரிய உடலும் வைரங்களென சுடர்ந்த விழிகளும் தோளில் சரிந்த கரிய சுரிகுழலும் சுருண்ட கரிய தாடியும் கொண்ட சரத்வான் கிருபனுக்கு தமையனைப்போலத் தோன்றினார்.

“அக்னிவேசரை நான் இருபதாண்டுகளுக்கு முன்பு தண்டகாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன்” என்றார் சரத்வான். “அவரும் நானும் மூன்றுமுறை வில்லேந்தி போட்டியிட்டோம். பரசுராமருக்கும் விஸ்வாமித்திரருக்கும் நிகரானவர்.” அதற்குப்பதிலாக முகமன் ஏதும் சொல்லாமல் துரோணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “சொல்க மைந்தா, என்னைத்தேடிவந்த காரணம் என்ன? என்னிடமிருந்து தனுர்வித்தை ஏதும் கற்கும் நிலையில் நீ இல்லை என நானறிவேன். அக்னிவேசர் அறியாத எதையும் நானுமறியமாட்டேன்” என்றார் சரத்வான். துரோணன் தலைநிமிரவில்லை. அவன் உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன. ஒரு சொல் துளித்து அங்கேயே உலர்ந்து மறைவதுபோல.

சரத்வான் தன் மாணவர்களை நோக்கி தலையசைக்க அவர்கள் அவரை வணங்கி அகன்றனர். வித்யாசாலைக்குள் கிருபனும் சரத்வானும் அவனும் மட்டும் எஞ்சினர். “நீ விரும்புவதென்ன?” என்று சரத்வான் மீண்டும் கேட்டார். இருமுறை பெருமூச்சுவிட்டபின் துரோணன் தலைதூக்கி “உங்களிடம் குலத்தை இரந்து பெறுவதற்காக வந்தேன் உத்தமரே” என்றான். அச்சொற்களைச் சொன்னதுமே அவன் நெஞ்சு விம்மி குரல் அடைத்தது. “என்னை உங்கள் மைந்தனாக ஏற்றுக்கொள்ளமுடியுமா என்று கேட்பதற்காக வந்தேன். நான் விழைவது தந்தையால் அளிக்கப்படும் ஓர் உபவீதத்தையும் குலப்பெயரையும் மட்டுமே.”

சரத்வான் தாடியை வருடியபடி “கிருபன் என்னைப்பற்றி சொல்லியிருப்பான்” என்றார். ஆம் என்று துரோணன் தலையசைத்தான். “உன்னை பிராமணனாக ஏற்றுக்கொள்ளும் உரிமைகொண்டவர் பரசுராமர் மட்டுமே. தண்டகாரண்யத்தில் அவரது குருகுலம் இருக்கிறது. அங்கே செல்” என்று சரத்வான் சொன்னதும் துயருடன் தலையை அசைத்த துரோணன் “நான் அங்கிருந்துதான் வருகிறேன் உத்தமரே” என்றான். சரத்வான் வியப்புடன் “மறுத்துவிட்டாரா?” என்றார். “இல்லை. என் விதி என்னை சிலகணங்கள் பிந்தச்செய்துவிட்டது. நான் செல்லும்போது அவர் பூதானமும் குலதானமும் முடிந்து விரல்களை குறுக்காகவைத்து நமோவாகம் சொல்லி எழுந்துவிட்டார்” என்றான் துரோணன்.

சற்று நேரம் மூவரும் ஒரே மௌனத்தின் மூன்றுமுனைகளில் திகைத்து நின்றிருந்தார்கள். கண்ணீருடன் எழுந்த துரோணன் “பரசுராமர் கருணைகொண்ட கண்களுடன் இனிய குரலில் இனி இத்தலைமுறையில் குலதானம் நிகழமுடியாது என்று சொன்னார் உத்தமரே. அங்கேயே அக்கணமே அவரது காலடியில் என் கழுத்தை தர்ப்பையால் கிழித்துக்கொண்டு நான் இறந்து விழுந்திருக்கவேண்டும். அவர் சொன்ன அடுத்த சொல்தான் என்னை உயிர்தரிக்கச்செய்தது. கௌதம குலத்தவரான உங்களை நாடிவரச்சொன்னார். நீங்கள் என்னை கௌதமபிராமணனாக ஆக்கமுடியும் என்றார்.”

“ஏன் நீ பிராமணனாக வேண்டுமென விரும்புகிறாய்? வில்வித்தையின் உச்சங்களை உன்னால் தொடமுடியுமல்லவா?” என்றார் சரத்வான். நெஞ்சில் கையை வைத்து துரோணன் சொன்னான் “ஏனென்றால் நான் பிராமணன். என் ஆன்மா அன்னையை குழந்தை நாடுவதுபோல வேதங்களை நோக்கித் தாவுகிறது. ஷத்ரியனாக என்னால் வாழமுடியாது உத்தமரே. அது பறவையை இருகால்களில் வாழச்சொல்வது போன்றது.” சரத்வான் புன்னகையுடன் “ஆனால் இருகால்களில் வாழும் பறவைகள் பல உண்டு. நானும் அவர்களில் ஒருவனே” என்றார்.

“பறக்காதது பறவை அல்ல. காற்றில் எழ உதவாதது சிறகே அல்ல. தன் மூதாதையர் பறந்தார்கள் என்பதற்கான சான்றாக சிறகைக்கொண்டிருக்கும் பறவையைப்போல அளியது எது? அது தன் சிறகை அடித்து எம்பி எம்பி குதிப்பதைப்போல அருவருப்பான வேறேது உள்ளது?” என்று கைகளை வீசி துரோணன் கூவினான். “நான் பிராமணன். நினைப்பாலும் செயலாலும் தவத்தாலும் நான் பிராமணன். காயத்ரி வாழும் நாவுடன் நான் ஷத்ரியனாக வாழமுடியாது உத்தமரே.”

“ஆனால் வேறுவழியில்லை. நீ அவ்வண்ணமே வாழ்ந்தாகவேண்டும். உனக்கு இயற்கை வகுத்த பாதை அது. உன் தந்தை உனக்கிட்ட ஆணை” என்றார் சரத்வான். தளர்ந்து நிலத்தில் மீண்டும் அமர்ந்த துரோணன் தலைகுனிந்தபோது கண்ணீர்த் துளிகள் மண்ணில் உதிர்ந்தன. “ஒரு தர்ப்பையின் நுனியால் என் நாவை நான் அரிந்து வீச முடியும். ஆனால் என்னுள் வாழும் காயத்ரியை என்ன செய்வேன்? என் விரல்கணுக்களில் துடிக்கும் அந்த பதினொரு சொற்களை எப்படி அழிப்பேன்? உத்தமரே, நான் எங்கு சென்று இச்சுமையை இறக்கி வைக்கமுடியும்? எந்த தீர்த்தத்தில் இதை கழுவிக்களையமுடியும்? எனக்கு ஒரு வழிசொல்லுங்கள்.”

“பரசுராமர் எனக்கு பாரதவர்ஷத்தை வென்ற அவரது வாளிகளின் மந்திரங்களை அளித்தார். ஆயிரம் வருடம் தவம்செய்து அடையவேண்டிய பிரம்மாஸ்திரத்தையும் கொடுத்தார். ஷத்ரியனாக வாழமுடியாத எனக்கு அவையெல்லாம் எதற்கு என்று கேட்டேன். தானும் பிராமணனாகப் பிறந்து ஷத்ரியனாக வாழ்ந்தவன் அல்லவா என்று அவர் சொன்னார். அவரால் எப்படி காயத்ரியை உதற முடிந்தது என்று கேட்டேன். பிராமணனை ஷத்ரியனாக ஆக்குவது அவனுள் வாழும் பெருங்குரோதமே என்று அவர் சொன்னார். ஒருகணமும் அணையாத பெருஞ்சினம் உள்ளில் குடியேறும்போது நெருப்பெழுந்த காட்டின் பறவைகள் என வேதங்கள் விலகிச்செல்கின்றன என்றார்” துரோணன் சொன்னான்.

‘உத்தமரே, நான் அஞ்சுவது அதையே. ஷத்ரியகுலத்தின்மேல் பெருஞ்சினம் கொண்டெழுந்த பரசுராமர் இருபத்தொருமுறை பாரதவர்ஷத்தை சுற்றிவந்து அரசகுலங்களை அழித்தார். நகரங்களை சுட்டெரித்தார். கருவில் வாழ்ந்த குழந்தைகளையும் சிதைத்தார். அவரது ஆன்மாவில் நிறைந்த குருதி தேங்கிய அந்த ஐந்து பெருங்குளங்களை குருஷேத்ரத்தில் கண்டேன். அவற்றை தன் கண்ணீரால் நிரப்பி அவர் மீண்டும் பிராமணரானார்.” கண்ணீர் வழியும் முகத்தைத் தூக்கி துரோணன் கேட்டான் “என்னுள்ளும் அத்தகைய வஞ்சம் குடியேறுமா என்ன? அனலை கருக்கொண்ட கந்தகமலையாக நானும் ஆவேனா? என் காயத்ரி எனக்குள்ளேயே கருகிப்போவதுதான் அதைவெல்லும் ஒரே வழியா?”

சரத்வான் அவன் முகத்தின் மெல்லிய தாடியில் படர்ந்திருந்த கண்ணீரை நோக்கிக்கொண்டிருந்தார். “சொல்லுங்கள் உத்தமரே, அப்படியென்றால் என் வாழ்வுக்கு என்னபொருள்? நான் கற்ற தனுர்வேதம் அந்த வஞ்சத்துக்குத்தான் கருவியாகுமென்றால் இக்கணமே வில்பயின்ற என் தோள்களை அரிந்து வீழ்த்துவதல்லவா நான் செய்யவேண்டியது?” தலையை அசைத்தபடி “இல்லை, நான் ஷத்ரியனாக வாழப்போவதில்லை. வைதிகனாக வாழமுடியவில்லை என்றால் மலையேறிச்செல்கிறேன். கைலாயம் சென்று அங்கே பனியடுக்குகளில் உறைந்து மாய்கிறேன். என்னுள் எரியும் அழலை ஆதிசிவன் சூடிய பனிமலைகளாவது குளிர்விக்குமா என்று பார்க்கிறேன்.”

பெருமூச்சுடன் சரத்வான் சொன்னார் “நான் உன்னிடம் சொல்வதற்கேதுமில்லை மைந்தா. நான் வேதமோ வேதாந்தமோ நெறிநூல்களோ கற்றவனல்ல. உவகையிலும் துயரத்திலும் வில்லை நாணேற்றி அம்புகளுடன் காட்டுக்குள் செல்வதே நானறிந்தது. மேலும் மேலும் நுண்ணிய இலக்குகளை வெல்வது வழியாக கடந்துசெல்லும் படிகளாகவே இதுநாள் வரை வாழ்க்கையை அறிந்திருக்கிறேன். நானறிந்த தனுர்ஞானத்தை என் மைந்தனுக்கும் அளித்தேன்.” எழுந்து புலித்தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு “உன் கண்ணீரை அகத்தில் தேக்கிக்கொள். அகத்துக்குள் நுழையும் கண்ணீரே ஒளிகொண்டு ஞானமாகிறது என்பார்கள்” என்றார்.

துரோணன் எழுந்து “வணங்குகிறேன் உத்தமரே. தங்கள் சொற்களின் கருணையை என்றும் எண்ணிக்கொள்வேன்” என்றபடி கிளம்பினான். சரத்வான் சிலகணங்கள் அசையாமல் நின்றபின் “துரோணா நில்” என்றார். “உன் கையிலிருக்கும் அந்த தர்ப்பைத்தாளை எனக்குக் கொடு” என வலக்கையை நீட்டினார். புரியாமல் கிருபனை நோக்கியபின் துரோணன் முன்னால் வந்து தர்ப்பைத்தாளை சரத்வானின் வலக்கையில் வைத்தான். அதைப் பெற்றுக்கொண்டு அவர் “இந்த தர்ப்பையை கன்யாசுல்கமாகப் பெற்றுக்கொண்டு என் மகள் கிருபியை உன் அறத்துணைவியாக அளிக்கிறேன்” என்றார்.

துரோணன் திகைத்து “உத்தமரே” என ஏதோ சொல்ல வாயெடுக்க சரத்வான் “என் மகளுடன் நீ மலையிறங்கிச் செல். அங்கே உனக்கான குருகுலம் ஒன்றைக் கண்டுகொள். இல்லறத்தில் அமைந்து நல்ல மைந்தனைப் பெற்றுக்கொள். இனிய குடும்பம் உன் அனலை அவிக்கும். உன் இகவாழ்க்கையை இனியதாக்கும்” என்றார். துரோணன் தலைவணங்கி “தங்கள் ஆணை உத்தமரே” என்றான்.

“இளையவனே, காட்டிலுள்ள மரங்களைப்பார். அவற்றின் கிளைகளின் திசையும் வேர்களின் ஆழமும் அவை முளைக்கநேர்ந்த இடத்துக்கு ஏற்ப உருவெடுத்து வருபவை. எனவே ஒவ்வொரு மரமும் ஒரு நடனநிலையில் உள்ளது. அந்த வேர்களால் உறிஞ்சி கிளைகளில் நிறையும் பூக்களும் கனிகளும் விதைகளும் அவற்றின் ஆன்மாவிலிருந்து பிறப்பவை. உயிர்களுக்கு இயற்கை வகுத்தளிக்கும் நெறி அது. உன்னைச்சூழ்ந்துள்ளவை அனைத்தும் ஊழே என்றுணர்க. அவற்றுடன் உன் ஆன்மா ஆடும் இணைநடனமே உன் வாழ்க்கை. பூத்துக் காய்த்துக்கனிதல் என்பது ஒருவன் தன் மூதாதையருக்குச் செய்யும் கடனாகும்” என்றார் சரத்வான்.

மறுநாள் அதிகாலை உதயத்தின் முதல்கதிர் எழும்வேளையில் திருஷ்டாவதியின் கரையில் பூத்த கடம்பமரமொன்றின் அடியில் எரிகுளம் அமைத்து, தென்னெருப்பை எழுப்பி, சமித்தும் நெய்யும் அன்னமும் அவியிட்டு, வேதம் ஓதி, முதுமறையவர் வழிகாட்ட சரத்வான் கிருபியின் கரங்களை துரோணனின் கரங்களுக்கு அளித்து மணவினையை நிகழ்த்தினார். மண்ணிலெரிந்த நெருப்பையும் விண்ணிலெழுந்த மூதாதையரையும் சான்றாக்கி துரோணன் தர்ப்பையாலான மங்கலநாணை கிருபியின் கழுத்தில் கட்டினான். சூழ்ந்திருந்த மாணவர்கள் வாழ்த்தொலி எழுப்ப கிருபியின் கைகளைப்பற்றியபடி ஏழு அடி எடுத்துவைத்து வானை நோக்கி வணங்கி சரத்வானின் பாதம்பணிந்து வாழ்த்து பெற்றான். அப்போது மாணவர்கள் இருவர் மரக்கிளைகளை உலுக்கி அவர்கள் மேல் மலர்பொழியச்செய்தனர்.

அன்று காலையிலேயே கிருபியுடன் துரோணன் கங்கைத்தடம் நோக்கிக் கிளம்பினான். தந்தையையும் முதுமறையவர்களையும் தமையனையும் பிற மூத்த மாணவர்களையும் வணங்கிய கிருபி கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலைகுனிந்து தவச்சாலையை விட்டு வலக்காலெடுத்து வைத்து பாதையை அடைந்தாள். அவளிடம் ஏழு மான்தோலாடைகளும் ஐந்து நறுமணப்பொருட்களும் அடங்கிய மூட்டையை அளித்த கிருபன் “தங்கையே, தந்தை உனக்களித்துள்ள இந்தப் பெண்செல்வத்தை கொள்க. இவை உன் கைகளில் பெருகி வளரட்டும். தந்தை உனக்களித்த சொற்களே மெய்யான செல்வம். அவை உன் தலைமுறைகள்தோறும் வளர்ந்துசெல்லட்டும்” என்று வாழ்த்தினான்.

மலைப்பாதையில் இறங்கும்போது துரோணன் ஒருமுறைகூட கிருபியை திரும்பிப்பார்க்கவில்லை. கைத்தலம் பற்றும்போது அவள் கைகளை பார்த்திருந்தான். மங்கலநாண் அணிவிக்கையில் நெற்றிவகிடையும் கண்டிருந்தான். அதன்பின் அவளைநோக்கி அவன் திரும்பவில்லை. உருளைக்கற்கள் புரண்டுகிடந்த மலைப்பாதையில் ஒருபக்கம் பாறைக்கூட்டங்கள் ஒன்றின்மேல் ஒன்று ஏறிய யானைகள் போல எழுந்து மேகங்களை நோக்கிச் சென்றன. மறுபக்கம் உருண்டு சென்ற பெரும்பாறைகள் தங்கி நின்ற மண்சரிவு நெடுந்தொலைவில் நத்தை சென்ற கோடு போல மின்னிச்சென்ற ஆற்றை அடைந்தது.

அவர்களின் கால்கள் பட்ட கற்கள் பன்றிக்கூட்டங்கள் என ஓசையுடன் உருண்டு சென்று ஆழத்தில் மறைந்துகொண்டிருந்தன. ஒருமுறை பெரிய மலைப்பாறை ஒன்று அவர்கள் காலடிபட்டு உயிர்கொண்டு எழுந்து ஆழத்தை நோக்கிப் பாய்ந்து எம்பி விழுந்த ஓசைகேட்டும்கூட அவன் திரும்பி அவளைப்பார்க்கவில்லை. அவள் வெண்மை கலந்த ஈரமண்ணில் பதிந்து சென்ற அவனுடைய பாதத்தடங்களை மட்டுமே நோக்கி நடந்துகொண்டிருந்தாள். ஆஷாடம் இமயமலைமேல் மேகங்கள் குடைவிரிக்கும் பருவம். பின்காலை ஒளியில் அவற்றின் கிழக்குமுகம் ஒளிவிட மேற்குமுகம் பறக்கும் கோட்டைகள் போலத் தெரிந்தது.

மதியம் அவர்கள் ஒரு சிற்றோடையின் கரையை அடைந்தனர். அவள் அங்கே ஒரு பாறைமேல் அமர்ந்ததும் துரோணன் ஓடையின் இருகரைகளையும் நோக்கியபடி பாசிபடிந்த பாறைகள் மேல் மெல்லிய கால்களை தூக்கி வைத்து வெட்டுக்கிளிபோல தாவிச்சென்றான். உயர்ந்து நின்றிருந்த அத்திமரமொன்றைக் கண்டதும் அவன் குனிந்து கீழே அடர்ந்திருந்த நாணல்களைப் பிடுங்கி மேல்நோக்கி வீசினான். பறக்கும் சர்ப்பக்குஞ்சுகள் போல பூக்குலை வாலுடன் எழுந்த நாணல்கள் அத்திக்குலைகளைத் தொட்டு உதிர்த்து தாங்களும் விழுந்தன.

கனிந்த பெரிய அத்திப்பழங்களை நாணலில் கோத்து எடுத்துக்கொண்டு அவளருகே வைத்துவிட்டு துரோணன் விலகி அமர்ந்து தன் கையிலிருந்த அத்திப்பழங்களை உண்ணத்தொடங்கினான். உண்டு முடித்து அவன் எழுவது வரை அவள் உண்ணாமல் காத்திருந்தாள். ஓடைநீரை அள்ளி அவன் குடித்து முடித்தபின்னரே உண்ணத்தொடங்கினாள். அவர்கள் கிளம்பும்போதே கூரைவேயப்படும் குடில்போல மேகக்கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒளியை மறைக்கத்தொடங்கின. கண்ணெதிரே பாதை இருட்டி வந்தது. நீரின் ஓசையும் காற்றோடும் இரைச்சலும் மேலும் வலுத்ததுபோலத் தோன்றியது.

ஆஷாடத்தில் இமயமலைமுடிகள் இடியோசையால் உரையாடிக்கொள்ளும் என துரோணன் சூதர்கள் பாடிக்கேட்டிருந்தான். முதல் இடியோசை கிழக்கே எழுந்தபோது அவன் முன் எழுந்து நின்ற மலையும் அதைச்சூழ்ந்திருந்த காற்றுவெளியும் அதிர்வதுபோலத் தோன்றியது. அவ்வொலிக்கு நிரைநிரையாக பதிலிறுத்துக்கொண்டே சென்றன சிகரங்கள். அடுத்த இடியோசையில் ஒளியும் அதிர்ந்தது என எண்ணிக்கொண்டான். பனிச்சிகரங்களின் மாபெரும் உரையாடலுக்கு நடுவே யானைப்போர் நடுவே ஊரும் எறும்புகள் போல அவர்கள் சென்றனர்.

பாதையோரம்  குறிய கிளைகளை விரித்து நின்றிருந்த முதிய தேவதாரு மரத்தில் பெரிய குகை ஒன்றிருப்பதை துரோணன் கண்டான். அவளிடம் ஏதும் சொல்லாமல் அவன் அதை நோக்கிச்சென்று உள்ளே நோக்கினான். மேலே மரப்பட்டையில் ஒரு சிறிய துளை இருந்தது. அதன் வழியாக வந்த மெல்லிய ஒளியில் அந்தக்குகை இருவர் நன்றாக அமருமளவுக்கு இடம் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் தன்னருகே வந்து நின்றதை நோக்காமல் அவன் அங்கே வளர்ந்துகிடந்த தர்ப்பையையும் நாணலையும் பிடுங்கி அந்த குகையின் தரையில் நிரப்பி இருக்கை செய்தான். பின்பு அவளிடம் உள்ளே செல்லும்படி கைகாட்டினான்.

மெல்லிய நாணப்புன்னகையுடன் கிருபி உள்ளே சென்று தர்ப்பைமேல் கால் மடித்து அமர்ந்தாள். துரோணன் அண்ணாந்து இருண்டு செறிந்திருந்த வானை நோக்கி விட்டு தானும் உள்ளே வந்தான். அவள் உடலைத் தொடாமல் மறு எல்லையில் விலகி காலைக்குவித்து அமர்ந்துகொண்டான். மின்னல்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன. அப்பாலிறங்கிச்சென்ற மலையோடையின் கரைகளில் இருந்து தவளைகள் பெருங்குரல் எழுப்பின. மரக்கிளைகளில் பறவைகள் கூடணையும் பொருட்டு கூவிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று தெற்கின் ஆழத்திலிருந்து எழுந்து வந்து அனைத்து இலைகளையும் மேலே தூக்கியது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இருவரும் ஒரேசமயம் மேலே மரப்பட்டையின் பொருக்குகளில் வேர்போல ஒட்டியிருந்த நாகத்தைப் பார்த்தனர். அது செங்கதிர் நாக்கு படபடக்க விழித்த மணிக்கண்களுடன் தலையை மரப்பட்டைமேல் ஒட்டிவைத்து மெல்ல வாலை வளைத்துக்கொண்டிருந்தது. அதன் வால்நுனி தனி உயிர் என விரைத்து நெளிந்தாடியது. துரோணன் உடலை அசைக்காமல் கண்களை பாம்பின்மேல் வைத்தபடி கைநீட்டி ஒரு தர்ப்பைத்தாளை எடுத்தான். அக்கணம் விழியை முந்தி தலைதூக்கி எழுந்த நாகம் இருபக்கமும் முத்து அடுக்கியதுபோல படம் விரிந்தெழ அனலில் நீர்பட்டதுபோன்ற ஒலியுடன் சீறியது.

தர்ப்பையுடன் துரோணனின் தோள் எழுவதற்குள் கிருபி இரண்டு விரல்களில் எடுத்த சிறிய நாணல்துண்டை வளைந்த வெண்பல் தெரிய வாய்திறந்து கொத்தவந்த நாகத்தின் வாய்க்குள் இரு தாடைகளுக்கும் நடுவே நட்டுவிட்டாள். திகைத்து தலையை பின்னிழுத்த நாகம் வாயை மூடமுடியாமல் தலையை இருபக்கத்திலும் அறைந்துகொண்டது. கனத்த உடல் தர்ப்பைஅடுக்கை அறைய மரப்பொந்துக்குள் கீழே விழுந்து தலையைத் தூக்கியபடி வளைந்து வெளியே ஓடியது. அடிப்பக்க வெண்மை தெரிய உடலைச் சுழித்து, வால் விடைத்து துடிக்க, செதில்தோல் உரசி ஒலிக்க நெளிந்தது. தலையை இருபக்கமும் அறைந்தபடி ஓடி எதிரில் இருந்த மரத்தை அணுகி தலையை முட்டிக்கொண்டதும் நாணல் துண்டு உதிர்ந்தது.

நாகம் அங்கேயே தலையைத் தாழ்த்தி தரையோடு ஒட்டவைத்துக்கொண்டு கனத்த உடலை அதைச்சுற்றி சுழற்றி இழுத்துக்கொண்டது. அதன் வால்நுனி சுருள்களின் அடியில் சிக்கிக்கொண்ட பாம்புக்குஞ்சு போல துடித்தது. துரோணன் தான் இருந்த மரத்தின் பட்டையை ஓங்கி அடித்தான். திடுக்கிட்டு தலையெழுப்பிய பாம்பு ஒலிவந்த திசையை நோக்கி நாக்குபறக்க அசையாமல் நின்றது. பின் சட்டென்று திரும்பி நாணல்கள் அசைந்து வழிவிட புதருக்குள் பாய்ந்துசென்றது. நாணல்களின் அசைவாக அது செல்லும் வழி தெரிந்தது.

துரோணன் சற்று நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் கண்களைத் தூக்காமலேயே “நீ வில்வித்தை பயின்றவளா?” என்றான். “இல்லை” என்று கிருபி சொன்னாள். “எந்தை மாணவர்களைப் பயிற்றுவிப்பதைக் கண்டிருக்கிறேன். கைக்கும் விழிக்குமான உறவைப்பற்றி அவர் சொன்னவை எனக்குப் பிடித்திருந்தன. அவற்றை நானும் செய்து பார்த்திருக்கிறேன்”. துரோணன் நிமிர்ந்து அவளை நோக்கி “நீ வில்லெடுப்பாயென்றால் நானோ உன் தந்தையோ பரசுராமரோ கூட உன் முன் நிற்க முடியாது” என்றான். அவள் புன்னகையுடன் “பெண்கள் வில்லேந்துவதற்கு மகிஷாசுரன் பிறந்துவிட்டிருக்கிறானா என்ன?” என்றாள்.

அவள் சொல்வது என்ன என்று அவனுக்கு முதலில் புரியவில்லை. “ஏன்?” என்று கேட்டதும்தான் அதை விளங்கிக்கொண்டான். உரக்கச்சிரித்தபடி “ஆம், நீங்கள் களமிறங்கும் அளவுக்கு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. மைந்தர்களே விளையாடிக்கொள்கிறோம்” என்றான். அவள் சிரித்தபோது மாதுளைமுத்துக்களின் நிறமுடைய ஈறுகள் தெரிவதன் அழகை அவன் அறிந்தான். அவள் கையை அவன் கை பற்றியதும் அவள் சிரிப்பை நிறுத்தி தலைகுனிந்தாள். அவளுடைய இமைகள் சரிந்து உதடுகள் ஒன்றன்மேல் ஒன்று அழுந்தின.

“நான் இமயமேறிச்செல்வதாகச் சொன்னது உண்மை என உன் தந்தை அறிந்துவிட்டார். ஆகவேதான் உன்னை எனக்கு அளித்தார்” என்றான். “என்னை அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் கீழ்மைமிக்க வாழ்வுக்கு அனுப்பவே உன்னை மணம்புரியவைத்தார் என்று எண்ணினேன். ஆகவேதான்…” என்றான். அவள் விழிதூக்கி “வேரும் விதையும் மண்ணில்தான் இருக்கும். அந்த வாழ்க்கையிலிருந்துதான் மாமனிதர்கள் எழுந்து இந்த மலைக்குமேல் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

துரோணன் தலையை அசைத்து “நீ சொல்தேர்ந்தவள் என்றும் உணர்கிறேன். உன் அனைத்து எண்ணங்களுக்கும் என்னை பாவையாக்க முடியும். உன்னை மறுக்கும் திறனுடையவனல்ல நான் என்று உணர்கிறேன்” என்றான். அவள் இருகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு நெகிழ்ந்த குரலில் “என்னை உன்னிடம் அளிக்கிறேன். என் மகிழ்வும் மாண்பும் இனி உன்னைச்சார்ந்தவை” என்றான். அவள் அக்கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டு “ஆம். உங்கள் மகிழ்வும் மாண்புமே என்னுடையவை” என்றாள்.

நாணல்கள் மேல் மழைத்துளிகள் விழத்தொடங்கியபோது துரோணன் திரும்பி நோக்கி “கற்களைப்போல விழுகின்றன” என்றான். “இங்கே மலைமேல் நீர்த்துளிகள் அப்படித்தான் இருக்கும்” என அவள் அவன் காதில் சொன்னாள். “நாம் கீழே ஏதேனும் ஒரு சிற்றூருக்குச் செல்வோம். தங்கள் கையில் வில்வித்தை உள்ளது. நமக்கு அன்னமும் கூரையுமாக அதுவே ஆகும்” என்றாள் கிருபி.

முந்தைய கட்டுரைஃபேஸ்புக் இரு லைக்குகள்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன்-ஒருகதை