இரண்டு அறிவியல் செய்திகள்.

அறிவியல் 1

தினமணி நாகர்கோயில் பதிப்பு, ஜூன் 9 திங்கள்கிழமை, மூன்றாம்பக்கத்தில் வந்த மூன்றுகட்டச் செய்தி .”புராணங்கள் குறிப்பிடும் பாதாள லோகம் மெக்ஸிகோ!!” .செய்தி இவ்வாறு. ‘நமது புராணங்கள் குறிப்பிடும் பாதாளலோகம் மெக்ஸிகோதான் என்று அங்கு 2 வாரம் கள ஆய்வுசெய்து திரும்பிய கன்யாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலாளர் எஸ்.பத்மநாபன் தெரிவித்தார்.

கள ஆய்வு மேற்கொண்டு திரும்பிய அவருக்கு நாகர்கோயில் யார்ன் சிட்டி ரோடரி சங்கம் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிஅக்ழ்ச்சியில் பங்கேற்று பத்மநாபன் மேலும் பேசியதாவது:

கேரளத்தில் கொண்டாடப்படும் திருவோணத்தின் கதாநயகன் மகாபலி. மெக்ஸிகோ நாட்டிலும் மகாபலி உள்ளது.இந்தக்கதை அங்கே ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. மிகவும் தூரமான நாட்டில் இருந்து வந்த மன்னன் ஒருவன் அங்கே பனாமா கடற்கரையில் இறங்கினான் என்று அங்கே கதை ஒன்று வழக்கில் உள்ளது. அவன்தான் மகாபலி. அவனைத் தொடர்ந்து அங்கே சென்ற மயன் தனது கைவண்னத்தை காட்டியதன் பயனாகவே மெக்சிகோவில் கோயில்களும் பிரமிடுகளும் உருவாயின என்பது கள ஆய்வில் தெரியவந்தது. அதுதான் இன்றும் மயன் [மாயன்] நாகரீகமாக அங்கே பறைசாற்றி நிற்கிறது. மெக்ஸிகோநாடு ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்துக்கு வந்தபிறகு மயன் உருவாக்கிய கலைச்செல்வங்கள் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மெக்ஸிகோநாட்டில் உள்ள மலைகளும் பள்ளத்தாக்குகளும் செடிகொடிகளும் மிருகங்களும் பறவைகளும் மக்களின் உடல் அமைப்புகளும் பயன்படுத்தும் பொருட்களும் எல்லாம் தற்போதைய கேரளநாட்டையே நினைவுறுத்துகின்றன. இதன் மூலம் மகாபலி மற்றும் மயன் ஆகியோர் முன்பு வாழ்ந்த நாடு கேரளம் என்றும் அங்கிருந்து அவர்கள் மெக்ஸிகோ சென்றதனால்தான் இருநாடுகளுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது என்றும் அறியமுடிகிறது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள நான்கு பக்கமும் படிகள் கொண்ட பிரமிடுகள் சூரியனுக்காக எழுப்ப பட்டவை. இந்தப்பிரமிடுகள் பற்றிய இலக்கணம் மயன் எழுதிய பன்னிருசாரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த பிரமிடுகள் கேரள மாநிலத்தில் கண்ணனூர் கோழிக்கோடு மாவட்டங்களிலும் தமிழ்நாட்டில் கன்யாகுமரி  தூத்துக்குடி மாவட்டங்களிலும் காணப்படுகின்ரன. இவற்றை காலசுவாமி என்று வணங்குகிறார்கள்.

மேலும் மெக்சிகோ நாட்டில் தமிழர்கள் பயன்படுத்தும் அம்மி -குழவியை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மண்பாண்டங்களையும் பயன்படுத்துவது கள ஆய்வில் தெரியவந்தது.அங்குள்ளவர்கள் நாகத்தை தெய்வமாக வழிபட்டதை அருங்காட்சியகத்தில் நடத்திய கள ஆய்வுகள் தெளிவுபடுத்தின. ஆகவே மெக்ஸிகன் நாட்டு மாயன் நாகரீகம் தமிழ்நாட்டு மயன் நாகரீகமே என்று கள ஆய்வில் நிரூபணமாகியுள்ளது என்றார் டாக்டர் பத்மநாபன்.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சி.எஸ்.மணி தலைமை வகித்தார். டாக்டர் மனகாவலபெருமாள் டாக்டருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.பேராசிரியர் டாக்டர் சுகுமார் நன்றி உரை நிகழ்த்தினார்.

அறிவியல் 2

இஸ்லாமிய அறிவியக்க இதழான சமரசம் மே 2008 இதழில் 33 ஆம் பக்கத்தில் A. சம்ஷாத் எழுதிய ‘அறிவியல் தேர்ச்சிகொள் ‘ என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ‘நாம் [இஸ்லாமியர்கள்] மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரித்து வைத்ததனால்தான், வழிகாட்டியாக இறக்கி வைத்த குர் ஆனை பொருளறியாமல் படித்துவிட்டு திருப்தி அடைந்ததனால்தான் வாழும்வழி தெரியாமல் போய்விட்டோம். எத்தனை பெரிய நஷ்டம் இது?’ என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.

‘அவனே  வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது. அதிலிருந்து [உங்கள் கால்நடைகளை]மேய்ப்பதற்கான மரங்கள் [மற்றும் புல்பூண்டுகளும் உருவாகி]அதில் இருக்கின்றன. அதனைக் கொண்டே [விவசாயப் ]பயிர்களையும் ஒலிவ மரத்தையும் பேரீத்த மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லாவகைக் கனி வர்க்கங்களையும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு [தக்க] அத்தாட்சி இருக்கிரது. இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்கள் [நலன்களுக்கு] வசபப்டுத்திக் கொடுத்துள்ளான். அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தபப்ட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு[தக்க] அத்தாட்சிகள் இருக்கின்றன… இன்னும் பூமியில் அவன் அப்டைத்திருப்பன பல விதமான நிறங்களை உடைய [செடிகொடிகள் பிராணிகள் பறவைகள் போன்ற]வையுமாகும். நிச்சயமாக இதில் [அல்லாஹ்வின் அருள்கொடைகளை] நினைவுகூரும் மக்களுக்கு தக்க அத்தாட்சி உள்ளது’ 

இந்த வசனங்களைப்போல எத்தனையோ நினைவூட்டும் வசனங்கள். அல்லாஹ் தான் அருளியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மகக்ளை சிந்திக்கவும் ஆய்ந்தறியவும் நினைவுகூரவும் தூண்டுகின்றான்.இதுவல்லவா உண்மையான கல்வி? — என்று கூறும் கட்டுரை ஆசிரியர் நவீன அறிவியல் வளர்வதற்கான வழியை விஞ்ஞானம் என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறார்.

‘எத்தனையோ சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குர் ஆனின் வசனங்களோடு ஒத்துப்போவதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன அருள் மிக்க குர் ஆனை கையில் வைத்திருப்பவர்கள் சிறு வயதில் இருந்தெ பிள்ளைகளுக்கு இறைவசனங்களின் பொருளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நூறில் பத்து பிள்ளைகளாவது விஞ்ஞானிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் வர வாய்ப்பு உள்ளது. எதையாவது கண்டுபிடித்துவிட்டு இது குர் ஆனிலும் உள்ளது என்று சொல்வதை விட குர் ஆன் வசனங்களை ஆராய்ந்து இதுவரை கண்டுபிடிக்காதவற்றைக் கண்டுபிடிக்கலாமே…” 

இந்தக் கடைசி வரியே கட்டுரையின் சாரமாக எடுத்து முதலிலும் கொடுக்கபப்ட்டுள்ளது. இக்கட்டுரை இவ்வாறு முடிகிறது ‘…இன்னும் மருத்துவம் வானவியல் இயற்பியல் கணிதம் இவற்றில் எல்லாம் குர் ஆனின் மூலம் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கலாம். நமக்கு முன் வாழ்ந்த முஸ்லீம்களில் விஞ்ஞானிகளும் கணித மேதைகளும் ஆராய்ச்சியாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் உலகம் இருட்டடிப்புசெய்துவிட்டது. அதன் பின்பு ஒரு நீண்ட இருண்ட காலம். ஆனால் இருள் எப்போதும் நிரந்தரமானதல்ல. இருளுக்குப்பின் விடியும் என்பதுதான் நியதி. இறையருளால் இனிவரும் தலைமுறைகள் எழுச்சி பெற்று தங்கள் கல்வியை குர் ஆனில் இருந்து தொடங்கட்டும்! மீண்டும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் மலரட்டும்! ‘

========================================================================      

முந்தைய கட்டுரைஓர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைதமிழினி ஒரு கடிதம்