‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42

பகுதி எட்டு : பால்வழி

[ 4 ]

அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான். அப்பால் பீஷ்ம பிதாமகர் படுத்திருந்த புலித்தோல் மஞ்சம் அங்கே ஒரு மனிதர் படுத்திருந்த சுவடே இல்லாமல் தென்பட்டது. பீஷ்மர் இரவில் மல்லாந்து கற்சிலைபோல அசைவில்லாது துயில்பவர் என்பதை விதுரன் அறிந்திருந்தான். ஆயினும் அவனுக்கு அந்த மஞ்சம் வியப்பை அளித்தது

விதுரன் எழுந்து வெளியே பார்த்தான். வெளியே படகின் அமரமுனை அருகே யமுனையை நோக்கியபடி வெண்ணிழல் போல பீஷ்மர் நின்றிருந்தார். விதுரன் வெளிவந்ததும் அவனுக்காகவே காத்து நிற்பதுபோல நின்றிருந்த ருத்ரனை அறைவாயிலில் கண்டான். ருத்ரன் தணிந்த குரலில் “இளவரசருக்கு உடல்நிலை குன்றியுள்ளது” என்றான். விதுரன் அசையாத இமைகளுடன் பார்த்தான். “உடல்வெம்மை ஏறியிருக்கிறது. தசைகளின் அதிர்வும் கூடியிருக்கிறாது” என்றான் ருத்ரன்.

விதுரன் “சுயநினைவு உள்ளதா?” என்றான். “இல்லை” என்றான் ருத்ரன். “என்ன நடந்தது?” என்று விதுரன் கேட்டான். “நேற்றிரவு குளிர்காற்றில் கங்கையைப் பார்த்தபடி நெடுநேரம் நின்றிருக்கிறார். இரவில் அவர் உடல் நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறது. பின்னர் மயங்கி விழுந்திருக்கிறார். பாடிக்கொண்டிருந்த சூதர்கள் அவரை தூக்கியபோது அவரே எழுந்து உள்ளே வந்து படுத்திருக்கிறார்.”

விதுரன் “நீ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்றான். ருத்ரன் பேசாமல் நின்றான். “துயில்வதல்ல உன் பணி” என்றபின் விதுரன் திரும்பி நடந்தான். படகின் இரண்டாவது அறையின் வாயில் சற்று மூடியிருந்தது. உள்ளே சாளரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருள் நிறைந்திருக்க வெளியே படகின் கூடத்தில் எரிந்த நெய்விளக்கின் ஒளிக்கீற்று கதவின் இடைவெளி வழியாக உள்ளே விழுந்திருந்தது. மஞ்சத்தில் பாண்டு மரவுரிப் போர்வையால் உடலை மூடிப் படுத்திருப்பதைக் கண்டு விதுரன் கதவை நன்றாகத் திறந்து உள்ளே ஒளி பரவச் செய்தபின் படுக்கையை நெருங்கினான்.

பாண்டுவின் உடலின் வெம்மை ஆடைகளிலும் படிந்திருந்தது. காற்றில் அதிரும் பாய்கயிறு போல அவன் முழங்கைகள் விதிர்த்துக் கொண்டிருந்தன. விதுரன் அவன் கைகளைப் பற்றி தன் கைக்குள் வைத்து அழுத்திக்கொண்டான். அவன் கைக்குள் பாண்டுவின் குளிர்ந்த மெல்லிய கரங்கள் துடித்தன. சில கணங்களில் பாண்டுவின் இதயத்தை தன் கைகளில் உணர முடியும் என்று விதுரனுக்குத் தோன்றியது.

விதுரன் எழப்போகும்போது பாண்டு மெல்லிய குரலில் “தம்பி” என்றான். விதுரன் “சொல்லுங்கள் அண்ணா” என்றான். “நான் நேற்று என் அன்னையை பார்த்தேன்” என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்வதை புரிந்து கொள்ளாதவனாக மிகப் பொதுவான ஓர் ஒலியை பதிலுக்கு அளித்தான். “என் அன்னையை” என்றான் பாண்டு. “காசி நாட்டு இளவரசி அம்பாலிகை…. அஸ்தினபுரத்தின் அரசி…”

அவன் திணறும் ஒலி கேட்டு விதுரன் அவன் கைகளை மீண்டும் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான். கைகள் அடிபட்டுத் துடிக்கும் நாகம்போல அதிர்ந்தன. “வேண்டாம் அண்ணா. நீங்கள் துயிலுங்கள்” என்றான் விதுரன். “நில்… போகாதே” என்று பாண்டு அவனை பற்றிக்கொண்டான். “என்ன வியப்பு! இல்லை எவ்வளவு மூடத்தனம்!. அவள் என் அருகிலேயே இதுவரை இருந்திருக்கிறாள்… நான் அவள் உள்ளும் புறமும் நன்கறிந்திருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு மடமை!”

விதுரன் “ஆம்” என்றான். “நாம் பெண்களைப் பார்ப்பதேயில்லை தம்பி. அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம். அவர்களின் அழகைப்பற்றிய காவியங்களால் மூடி வைத்திருக்கின்றோம்.” பாண்டுவின் குரலும் அக்குரலைச் சுமந்து வந்த மூச்சும் அதிர்ந்தன.

விதுரன் பாண்டுவின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயன்றான். அன்னையிடமிருந்து பிரிந்து அவ்வளவு தொலைவுக்கு பாண்டு பயணம் செய்ததே இல்லை. அதுதான் அந்த அகக்கொந்தளிப்பிற்கான காரணம் என்று அவனுக்குத் தோன்றியது. “நாம் இங்கே இரண்டு நாட்கள் மட்டும்தான் தங்கவிருக்கிறோம் அண்ணா… உடனே அஸ்தினபுரத்திற்குத் திரும்பவிருக்கிறோம்” என்றான்.

பாண்டு அச்சொற்களைப் புரிந்து கொள்ளாமல் “சீதையை ஆதிகவி ராமாயணத்தால் மூடி வைத்துவிட்டார். பட்டாலும் நகையாலும் மூடிவைப்பது போல” என்றான். “ஆம்” என்றான் விதுரன். மெல்ல பாண்டுவின் கைகளை படுக்கையில் வைத்தபடி “நீங்கள் இன்னும் சற்று நேரம் துயிலலாம். அடுத்த படகில் உங்கள் வைத்தியர் இருக்கிறார். அவரிடம் நஸ்யம் வாங்கித் தருகிறேன்…” என்றான்.

“எனக்கு ஒன்றுமில்லை… இரு” என்று பாண்டு மீண்டும் அவன் கையைப் பிடித்துக் கொண்டான். ‘ஆனாலும் பெண்கள் ஏன் நகைகளையும் காவியங்களையும் விரும்புகிறார்கள்? அவர்களும் இந்தத் திரைகளையும் மறைகளையும் விரும்புகிறார்களா என்ன? பாவம். மண்ணுள்ளிப் பாம்புகள் போல மறைவிடத்திலிருந்து மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். அவர்களை நாம் பார்ப்பது அப்படி ஓடி ஒளியும் பதற்றங்களின் வழியாகத்தான். நான் நேற்று எதைப் பார்த்தேன் தெரியுமா?”

பாண்டு கண்களைத் திறந்து மூச்சிரைக்க விதுரனைப் பார்த்தான். “பாதாள கங்கையை! மாபெரும் பளிங்குவெளி போல அது ஓடியது…. பாதாள கங்கையை ஆண்கள் பார்க்கக்கூடாது தம்பி. அது ஆண்மகனை கோழையாக்கிவிடும். மொத்த ஆண்குலத்துக்காகவும் அவன் வெட்கிச் சுருங்கி விடுவான். அவன் பேடியாகிவிடுவான். அவனுடைய லிங்கம் சுருங்கி உள்ளே சென்றுவிடும். அவனுக்கு முலை முளைக்கும். அவன் தனக்காகவும் தன் மூதாதையருக்காகவும் வெட்குவான். தன் நகரத்துக்காகவும் அதன் கோட்டைகளுக்காகவும் அதன் அரண்மனைகளுக்காகவும் கூசுவான். தன் அறநூல்களையும் தன் தெய்வங்களையும் அருவருப்பான்.”

பாண்டுவின் உடல் அதிர்ந்து எழுந்தது. ஹக் ஹக் ஹக் என்ற ஒலி அவன் தொண்டையிலிருந்து வந்தது. குடத்தில் நீர் நிறைவதுபோல ஒலித்து பிறகு துளையிலிருந்து காற்றுக்குமிழிகள் வெடிப்பது போல மாறியது. விதுரன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். ருத்ரன் மருத்துவர் கூர்மருடன் நின்று கொண்டிருந்தான். “துயில வைத்துவிடுங்கள்” என்று விதுரன் மெல்லச் சொன்னான். “அவர் உள்ளம் கொந்தளித்திருக்கிறது.”

கூர்மர் உள்ளே செல்ல ருத்ரன் விளக்கை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றான். வெளியே நின்றபடி விளக்கொளியில் பாண்டுவின் உடலைப் பார்த்த விதுரன் சற்று பின்னடைந்தான். பசும் நரம்புகளால் வரிந்து கட்டப்பட்ட வெண் தசைகளால் ஆன சிறிய உடல் வளைந்து முறுகி நின்றிருக்க கைகால்கள் நான்கு பக்கமும் கோணலாகி விரிந்து இழுத்து இழுத்து அசைந்து கொண்டிருந்தன. சிவந்த உதடுகளைக் கடித்த மஞ்சள் நிறமான பற்கள் தெரிந்தன. வாயின் இருபக்கமும் எச்சில் நுரைத்து வழிந்தது.

கூர்மர் தன் பெட்டியை தரையில் வைத்து விரைந்து திறந்து அதிலிருந்து கடற்பஞ்சை எடுத்தார். அதில் சிறிய வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த வெண்ணிற மாவுப் பொடியைப் பரப்பி கசக்கி பாண்டுவின் நாசியில் வைத்தார். அவன் மூச்சை ஓங்கி ஓங்கி இழுத்துக் கொண்டிருந்தான். குரல்வளை புடைத்த கழுத்தில் வடங்கள் போல நரம்புகள் பிணைந்து அசைந்தன. செருகியிருந்த விழிகள் அதிர்ந்து அதிர்ந்து மெதுவாக அசைவிழந்தன. இருபக்கமும் இறுக்கமாக விரிந்திருந்த கைகளின் விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன.

அவன் இடக்கையை எடுத்து நாடி பார்த்த கூர்மர் “அகக்கொந்தளிப்புதான். நரம்புகளில் கரும்புரவிகளின் குளம்படிச்சத்தம்” என்றார். “வெப்பு இருக்கிறதல்லவா?” “ஆம்.. ஆனால் அதனால் மூச்சிலும் இதயத்திலும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார் கூர்மர். “துயில் அவரை அமைதிப்படுத்தும் என்று நினைக்கிறேன்.” விதுரன் ஒன்றும் கூறாமல் பாண்டுவையே பார்த்துக் கொண்டிருந்தான். மூச்சு சீரடைந்திருந்தது. இறுகி நின்ற நீல நரம்புகள் ஒவ்வொன்றாக கட்டுவிட்டு நெகிழத் தொடங்கியிருந்தன.

வெளியே வரும்போது அவன் பாண்டு சொன்ன சொற்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அந்த உதிரிவரிகளை இணைக்கும் அனுபவம் எதுவாக இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். ஒரே நீரில் வாழும் மீன்களைப் போல அனைத்து மானுடரும் ஒரே பொருள்வெளியில் வாழ்கிறார்கள். ஆகவேதான் ஒருவர் சொல்வது இன்னொருவருக்குப் புரிகிறது. எவரோ சிலர் நீர் வெளி விட்டு துள்ளி காற்றில் எம்பிவிடுகிறார்கள். மூச்சு கிடைக்காமல் தத்தளிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள்தான் எதையாவது புதியதாக பார்க்க முடிகிறது. அவர்களில் ஆயிரம் பல்லாயிரம் பேரில் ஒருவரே அவற்றை திரும்பி பிறர் மொழியில் கூற முடிகிறது.

92
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பீஷ்மர் நின்றிருப்பதை விதுரன் பின்னாலிருந்து பார்த்தான். அசையாமல் நிற்பதைத்தான் அவர் தன்னுடைய கங்கர் குல மூதாதையரிடமிருந்து அஸ்தினபுரிக்குக் கொண்டு வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டான். அதன்வழியாக அவர் தொன்மையான மரங்களை நினைவில் எழுப்புகிறார். அவரை அனைவருமே பிதாமகர் என்பது அதனால்தான். அவரிடம் சென்று பாண்டுவின் உடல்நிலை பற்றிச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். உடனே அவருக்கு அது தெரியும் என்று உணர்ந்தான். அவரது அசைவின்மையே அதனால்தான்.

விதுரன் உள்ளிருந்து வெளியே வந்த வைத்தியர் கூர்மரிடம், “நீங்கள் இளவரசரின் அருகிலிருந்து விலக வேண்டாம் கூர்மரே… இளவரசர் இன்று மாலை எப்படியாவது எழுந்தமர வேண்டும். அவர் அவைக்கு வரும்போது தானாகவே நடந்து வர வேண்டும். அதை நீங்கள் பொறுப்பேற்றுச் செய்யுங்கள்” என்றான். “அவரால் வரமுடியும். அவர் உள்ளம் அதற்கு ஒப்பினால் போதும்” என்றார் கூர்மர். “அவர் விழிக்கட்டும் நான் வந்து அவரிடம் பேசுகிறேன்” என்று விதுரன் சொன்னான்.

மார்த்திகாவதி தொலைவில் தெரியத் தொடங்கியது. யமுனையின் கருநீல நீரலைக்கு அப்பால் கரையோரமாக கால்களை ஊன்றி நீர் அருந்தும் கரியநிறமான மிருகம் போல அது தோன்றியது. அதன் கால்கள் நீருக்குள் இறங்கி நின்றிருந்தன. அருகே இருந்த காவல் கோபுரத்தில் மார்த்திகாவதியின் சிம்மக்கொடி பறந்தது. சுங்கமாளிகை முன்பு நின்றிருந்த ரதங்களில் கொடிகள் யமுனையிலிருந்து ஏறிச்சென்ற காற்றில் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு தேரின் பித்தளைக்கூரை வளைவு ஒளியில் பொன்னிற மின்னலாக ஒளிவிட்டு அணைந்தது.

வானம் அதன் உள்வெளிச்சத்தாலேயே நன்றாகத் துலங்கியது. கருமேகங்கள் தென்திசையை மூடியிருந்த போதிலும் வடகிழக்கு வெளுத்துத் திறந்து மென்ஒளியைப் பொழிந்தது. படகு நகரை நெருங்க நெருங்க வானும் நதிநீரும் வெளுத்தபடியே வந்தன. நீர்ப்பரப்பு முழுக்க வெண்பறவைகள் தங்கள் பிம்பங்களுடன் சேர்ந்து சிறகடித்துச் சுழன்றன. கரையில் தெரிந்த மரக்கூட்டங்களில் இலைத்தழைப்புகள் காற்றில் எழுந்தாடுவதும் பறவைகள் சிறகடித்தெழுந்து சுற்றிப் பறந்து அமைவதும் வண்ணமும் வடிவமும் கொண்டு வந்தன.

மார்த்திகாவதியின் படித்துறையில் ஐம்பது பெரிய அரசபடகுகள் நின்றிருந்தன. அவற்றில் பெரியது ஏர் முத்திரை கொண்ட கொடி பறந்த மாத்ரபுரியின் படகு என்பதை விதுரன் கவனித்தான். பலபத்ரர் வந்து அவனருகே நின்றார். விதுரன் திரும்பி அவரைப் பார்த்ததும் அவன் எண்ணங்களை அறிந்தவர்போல “மாத்ர நாட்டில் இருந்து சல்லியர் வந்திருக்கிறார்…” என்றார். “ஆம்” என்றான் விதுரன்.

“அவர் வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வந்தது வியப்புறச் செய்யவும் இல்லை” என்று பலபத்ரர் சொன்னார். “ஷத்ரியர்களுக்கு யாதவர்களை அரசர்களாக ஏற்றுக் கொள்ள தயக்கம் இருக்கிறது. ஆனால் யாதவர்களின் படைபலமும் பொருள்பலமும் அனைவருக்கும் தேவையாகவும் உள்ளது” என்றார். விதுரன் “அஸ்தினபுரியின் இளவரசர் சுயம்வரத்துக்கு வந்ததைப்பற்றி பிறரும் இதையே சொல்வார்கள் பலபத்ரரே” என்றான். “ஆம். அதுவும் உண்மையல்லவா?” என்றார் பலபத்ரர். “நாம் இங்கே மணம் கொள்ள வந்ததே இவர்களின் குலங்கள் நமக்குத் தேவை என்பதற்காகத்தானே?”

விதுரன் “பிதாமகர் செய்வதெல்லாமே ஒருபெரும் போருக்கான அணிதிரட்டல். ஆனால் போரைத் தவிர்ப்பது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அமைச்சரே, போரைத் தவிர்க்கும் வழி என்பது வலிமையுடன் இருப்பதே என்று அரசுநூல்கள் வகுக்கின்றன.” என்றார் பலபத்ரர். விதுரன் சிரித்தபடி “ஆம். ஆனால் இன்றுவரை ஒருங்கிணைக்கப்பட்ட படை வல்லமை போருக்கு வழிவகுக்காமல் இருந்ததே இல்லை. படைக்கலம் என்று ஒன்று உலையில் வார்க்கப்பட்டால் அது என்றோ எவரையோ கொன்றே தீரும்” என்றான். பலபத்ரர் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவர் பீஷ்மருக்கு அப்பால் சிந்திக்கமுடியாதவர் என விதுரன் எண்ணிக்கொண்டான்.

மார்த்திகாவதியின் காவல்மாடத்தில் பெருமுரசம் முழங்கியது. கொம்பொலிகள் சேர்ந்து பிளிறின. படித்துறையெங்கும் அமர்ந்திருந்த வெண்புறாக்களும் நீர் நாரைகளும் காகங்களும் அவ்வொலியில் எழுந்து காற்றில் சிறகடித்தன. படித்துறையில் நின்ற இருபடகுகளுக்கு நடுவே அஸ்தினபுரியின் படகு நிற்பதற்காக இடத்தைக் காட்டியபடி மார்த்திகாவதியின் வீரர்கள் கொடிகளை ஆட்டினர். அஸ்தினபுரியின் படகை எதிர்கொள்ள துறைக்காவலனே துறைமுனைக்கு வந்து ஆணைகளைக் கூவினான்.

அஸ்தினபுரியின் முதல் படகு சென்று நின்றதும் மார்த்திகாவதியின் காவல் மாடம் மீது அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி ஏறியது. அரசபடகு கரையடைந்ததும் அருகிலிருந்த சுங்கமாளிகையின் முற்றத்தில் நின்றிருந்த மார்த்திகாவதியின் அமைச்சர் ரிஷபரும் சிற்றமைச்சர்களும் மார்த்திகாவதியின் சிம்மக்கொடியுடன் அவர்களை நோக்கி வந்தனர். அவர்களுடன் மங்கலத்தாலங்கள் ஏந்திய தாசிகளும் மங்கல இசையை எழுப்பியபடி வந்தனர்.

பீஷ்மர் முதலில் இறங்கியதும் ரிஷபர் “மார்த்திகாவதி பீஷ்ம பிதாமகரின் வருகையால் புனிதமடைந்தது” என்று வாழ்த்து கூறி தலைவணங்கினார். அவரது இருபக்கமும் நின்ற சிற்றமைச்சர்களும் தளகர்த்தர்களும் வணங்கினர். தாசிகள் மங்கலத்தாலங்களை பீஷ்மர்முன் நீட்ட அவர் அவற்றைத் தொட்டு அவ்வரவேற்பை ஏற்றபிறகு, “சுயம்வரத்துக்கு வந்திருக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் சற்று ஓய்வெடுக்கிறார். அவர் இளைப்பாற மாளிகை ஒருக்கமாக உள்ளதல்லவா?” என்றார்.

ரிஷபரின் கண்கள் தன்னை வந்து தொட்டு திகைத்து மீள்வதைக் கண்டதுமே விதுரன் அனைத்தையும் புரிந்து கொண்டான். அவன் நெஞ்சு படபடத்தது. அதை வெல்ல தலையை நிமிர்த்தி ரிஷபரின் விழிகளை நேருக்குநேர் சந்தித்து “அஸ்தினபுரியின் இரண்டாவது இளவரசர் பாண்டு இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகையளித்துள்ளார். பயணத்தில் சற்று களைத்திருக்கிறார்” என்றான்.

ரிஷபரின் கண்களில் மீண்டும் ஒரு திகைப்பு வந்து சென்றது. உடனே அவர் தன்னை மீட்டுக்கொண்டு “அஸ்தினபுரியின் இளவரசரின் வருகையால் மார்த்திகாவதி பெருமையடைகிறது” என்றார். அச்சொற்களுக்கு அடியில் அவரது எண்ணங்கள் விரைந்தோடி அனைத்தையும் புரிந்துகொண்டன என்பது அவர் முகம் மலர்வதிலிருந்து தெரிந்தது. “அஸ்தினபுரியின் அமைச்சரை மார்த்திகாவதி வரவேற்கிறது” என்று அவர் தலைவணங்கினார். ஒருகணம் உலைவாய் போல தன்மேல் வெம்மை ஒன்று வீசி மறைவதை விதுரன் உணர்ந்தான். ஆனால் அவன் முகமும் விழிகளும் மலர்ந்திருந்தன.

படகில் இருந்து பொருட்கள் ஒவ்வொன்றாக இறக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருந்த பலபத்ரரிடம் விதுரன் “பலபத்ரரே, இளவரசர் மாளிகைக்கு ஒரு மூடிய பல்லக்கிலேயே செல்லட்டும். இங்குள்ள ஏவலர், காவலர் எவரும் அவரைப் பார்க்கலாகாது” என்றான். பலபத்ரர் “ஆம்” என்றார். “பல்லக்கை படகினுள் கொண்டு செல்லச் சொல்கிறேன்” என்று சொல்லி “இன்னும் அவர் நலம்பெறவில்லை…” என்றார். அப்போது மிகமுக்கியமான ஒன்றை விதுரனிடம் விவாதிக்கும் பாவனை அவரில் கூடியது. விதுரன் அதைக்கண்டு எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.

திரையிடப்பட்ட பல்லக்கு ஒன்று படகுக்குச் சென்றது. அதை பலபத்ரர் பலத்த கையசைவுகளுடனும் உரத்த குரலுடனும் வழிநடத்தி படகுக்குள் ஏற்றினார். மொத்த படித்துறையும் அதைக்கண்டு வியந்து விழிகளனைத்தும் அத்திசைநோக்கித் திரும்புவதை விதுரன் கவனித்தான். பிழை செய்துவிட்டேன் என்று ஒருகணம் எண்ணியதுமே அதை எப்படி கையாள்வது என்ற எண்ணமும் அவனுள் வந்தது. பலபத்ரர் வெளியே ஓடிவந்து ஒரு வீரனை அதட்டினார். திரும்ப உள்ளே ஓடிச்சென்றார். மீண்டும் வெளியே வந்தார்.

விதுரன் தனக்காகக் காத்திருந்த ரதத்தை நோக்கிச் சென்றான். பீஷ்மர் அங்கே அவனுக்காகக் காத்திருந்தார். அவரது விழிகளைக் கண்டதுமே அவன் அவர் கேட்கவிருப்பதை உய்த்துணர்ந்து “மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் வந்திருக்கிறார்” என்றான். பீஷ்மர் சிலகணங்கள் அவன் கண்களைப்பார்த்தபின் “ம்” என்றார். “செய்திகளை நான் மாலைக்குள் வந்து அறிவிக்கிறேன்” என்றான் விதுரன். பீஷ்மர் தன் ரதத்தில் ஏறிக்கொண்டார். அவர் அதுவரை இருந்த மனநிலையில் இல்லை என விதுரன் உணர்ந்தான். அவரது அகச்சமன் குலைந்துவிட்டிருந்தது.

விதுரன் ரதத்தில் ஏறிக்கொண்டான். அக்கணம் வரை அவனுள் இருந்து அவனை இயக்கிய ஒரு தேவன் விலகிச்செல்வதுபோல உணர்ந்தான். கைகால்கள் எடையேறியபடியே வந்தன. உடலை இரும்புக்கவசம் போல அறிந்தான். அத்தனை பெரிய ஏக்கத்தை ஏன் தன் அகம் அறிகிறதென அவனுக்குப்புரியவில்லை. ஆனால் அது பெருகிக்கொண்டே சென்றது.

முந்தைய கட்டுரைபேபி குட்டி
அடுத்த கட்டுரைமுதிர்மரத்தின் இன்கனி