‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 3 ]

யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.

மந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.

வசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.

அவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.

பசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.

மாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.

இரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.

விடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மாவும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.

பட்டிக்கு வந்த அன்றே வசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.

அவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.

அன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊரில் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.

வசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.

VENMURASU_EPI_78
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.

அவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். “நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது” என்று வசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் “தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்?” என்றாள். “நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்னால் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்” என்றான் வசுதேவன்.

பிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று “அவனிடம் கிளம்பச்சொல்” என்று மனைவியிடம் ஆணையிட்டார். வசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது “நான் போகமாட்டேன்” என்றான். “முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி…” என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.

சற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் “நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்” என்றார். “நான் வரப்போவதில்லை…” என்றான் வசுதேவன். “ஏன்?” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன்? அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது” என்றார் சூரசேனர்.

“நான் அதைச் செய்யவிரும்பவில்லை” என்றான் வசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் “அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்?” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து?” என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்?” என்றார். “மதுராவில்” என்று வசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.

பின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. “இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்” என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி “நான் இடையனாக மாட்டேன்… என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்” என்றான்.

தலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று “அண்ணா இறங்கி வா” என்று அழைத்தாள்.

அவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். “நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்” என்றான் வசுதேவன். “மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்.” பிருதை “நான் எங்கே செல்வது?” என்றாள். வசுதேவன் சற்று சிந்தித்தபின் “நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்” என்றான்.

ஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.

சூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் “சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா? இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்” என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் “இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார். குந்திபோஜன் “விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது” என பதில் சொன்னான்.

அன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து “போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்” என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் “இது ஆணை அல்லவா?” என்றான். “ஆணை ஆணை ஆணை” என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.

ஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந்தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.

குந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.

அதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.

சூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.

யமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வாக்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். “அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்” என்றனர் மூத்தோர்.

பிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் “அன்னையே, இந்த மன்றுக்கு வருக” என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.

மலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் “அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்” என்றார்.

பிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி “குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்” என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து “மகளே பிருதை!” என்றார்.

முதியவர் “அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்… தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்” என்றார். “ஆம் தெரியும்” என்று பிருதை தலையசைத்தாள். “நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்” என்று மீண்டும் சொன்னாள்.

குந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி “என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்” என்றான். “அன்னையே, என் குலத்துக்கு வருக….உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக” என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.

அங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.

மேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் “என்ன செய்துவிட்டாய்! எதை இழந்துவிட்டாய்! அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்” என்றார். “அவள் இறந்திருந்தால்?” என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். “அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்… ஆம் அவள் இறந்துவிட்டாள்.”

மன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் “இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்” என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக!’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.

அங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்திகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.

மன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.

தன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் “நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை” என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.

திடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி “மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்” என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி “ஆணை அன்னையே” என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.

தன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் “விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து “நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்” என நற்சொல்லிட்டார்.

அந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். “என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்” என்றார்.

பிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் “நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”

சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் “கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.

முந்தைய கட்டுரைகலைச்சொற்கள் ஒரு வினா
அடுத்த கட்டுரைடி.ஆர்.நாகராஜ்