‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 2 ]

அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன.

பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமைச்சர்களான பலபத்ரரும் தீர்க்கவியோமரும் லிகிதரும் வந்தனர். அவர்களுக்கு நடுவே திருதராஷ்டிரனின் பொன்முகடுள்ள வெண்குடைரதம் வந்தது. அவற்றைச்சூழ்ந்து இருநூறு குதிரைவீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் வந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பால் அடியமைக்கப்பட்ட தோல்காலணிகளும் மெல்லிய பருத்தி ஆடைகளும் அணிந்திருந்தனர். பாலையை அறிந்த வேடர்கள் எழுவரும் சூதர்கள் எழுவரும் முன்னால் சென்ற குதிரைகளில் கொடிகளுடன் அவர்களை வழிநடத்திச்சென்றனர்.

மாத்ரநாட்டுக்கும் கூர்ஜரத்துக்கும் சிபிநாட்டுக்கும் தூதனுப்பி அவர்களின் நாடுகள் வழியாகச் செல்ல அனுமதிபெற்று சிந்துவின் ஏழு இளையநதிகளையும் கடந்து அவர்கள் காந்தாரத்தை அடைய இரண்டு மாதமாகியது. பெண்கள் இருந்தமையால் அவர்கள் காலையிலும் மாலையிலும் மட்டும் பயணம்செய்தனர். மதியமும் இரவும் சோலைகளிலும் குகைகளிலும் சூதர்களின் பாடல்களைக் கேட்டபடி ஓய்வெடுத்தனர்.

அதற்குள் முறைப்படி பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் காந்தாரியை திருதராஷ்டிரன் மணம்கொள்ளப்போகும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் அனுப்பிய மணவாழ்த்துத் தூதுக்கள் அஸ்தினபுரியை வந்தடைந்துகொண்டிருந்தன. கங்கைக்கரை ஷத்ரியர்களான அங்கனும் வங்கனும் சௌபனும் காசியில் பீமதேவனின் அரண்மனையில் மகதமன்னன் விருஹத்ரதன் தலைமையில் கூடி ஆலோசனை செய்த தகவல் சத்யவதியை ஒற்றர்கள் வழியாக வந்தடைந்தது.

விதுரன் திருதராஷ்டிரனின் ரதத்தில்தான் பெரும்பாலும் பயணம் செய்தான். தேர்த்தட்டில் அமராது நின்றுகொண்டே வந்த திருதராஷ்டிரன் நிலையழிந்து திரும்பித்திரும்பி செவிகூர்ந்து உதடுகளை மென்று கொண்டிருந்தான். பெரிய கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு தோள்களை இறுக்கி நெகிழ்த்தான். எடைமிகுந்த அவன் உடல் ரதம் அசைந்தபோது ரதத்தூணில் முட்டியது. ஒருகையால் தூணைப்பிடித்தபடி மோவாயை தூக்கி, உதடுகளை இறுக்கினான். அவன் விழிக்குழிகள் அதிர்ந்து துள்ளிக்கொண்டே இருந்தன.

அரண்மனை விட்டு கிளம்பியதுமே அவன் படகில் ஏற்றப்பட்ட யானைபோல மாறிவிட்டதை விதுரன் கவனித்திருந்தான். திருதராஷ்டிரனின் உலகம் ஒலிகளால் ஆனது. நெடுநாள் உளம்கூர்ந்தும் உய்த்தும் ஒவ்வொரு நுண்ஒலியையும் அவன் பொருள்கொண்டு நெஞ்சில் அடுக்கி ஓர் உலகைச் சமைத்திருந்தான். அஸ்தினபுரியைக் கடந்ததும் அவனறியா நிலத்தின் பொருள்சூடா ஒலிகள் அவனை சித்தமழியச்செய்துவிட்டன என்று தோன்றியது. அவன் சருமம் முரசின் தோல்போல அதிர்ந்துகொண்டிருந்தது. சருமத்தாலேயே கேட்பவன் போல சிறிய ஒலிக்கெல்லாம் அதிர்ந்தான். ஒவ்வொரு ஒலியையும் ’விதுரா மூடா, அது என்ன? என்ன அது?’ என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் காந்தாரத்தின் பெரும்பாலைக்குள் நுழைந்ததும் அந்தப்பெருநிலம் முழுக்க நிறைந்துகிடந்த அமைதி அவன் உடலிலும் வந்து படிவதாகத் தோன்றியது. இருகைகளையும் மார்பின்மேல் கட்டியபடி ரதத்தட்டில் நின்று செவிகளாலேயே அவ்விரிவை அறிந்துகொண்டிருந்தான். காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை. அவனும் அதில் முழுமையாக தன்னை இழந்திருந்தான்.

அஸ்தினபுரியின் மணமங்கலக்குழு முந்தையநாள் நள்ளிரவில் தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததுமே அவர்களின் வருகையை அறிவிக்கும் கொடி காந்தாரநகரியின் கோட்டை முகப்பில் ஏறியது. பெருமுரசம் அவர்களை வரவேற்கும் முகமாக மும்முறை முழங்கியது. நகரமெங்கும் ஒருமாதகாலமாக மெல்லமெல்லத் திரண்டு வந்துகொண்டிருந்த மணநாள் கொண்டாட்டத்துக்கான விழைவு உச்சம் அடைந்தது. அனைத்து தெருக்களிலும் களிகொண்ட மக்கள் திரண்டனர். இல்லமுகப்புகளெல்லாம் தோரணங்களாலும் கொடிகளாலும் வண்ணக்கோலங்களாலும் அணிகொண்டன.

அவர்கள் தாரநாகத்தின் கிழக்குக் கரையில் இருந்த பவித்ரம் என்னும் சோலையில் வந்து சேர்ந்தனர். அந்தச் சோலை அரச விருந்தினர்களுக்காகவே பேணப்பட்டது. அங்கே அவர்களை எதிர்கொள்ள சத்யவிரதர் தலைமையில் காந்தாரத்தின் அமைச்சும் ஏவலரும் காத்திருந்தனர். பாலைவனப்பாதையில் மங்கலஅணி வருவதை தூதர் வந்து சொன்னதும் சத்யவிரதர் முன்னால் சென்று அதை எதிர்கொண்டார். முகமனும் வாழ்த்தும் சொல்லி அழைத்துச்சென்றார்.

வண்டிகள் அங்கே நுகம்தாழ்த்தின. ரதங்கள் கொடியிறக்கின. ஸாமியும் பிலுவும் செறிந்த பவித்ரத்துக்குள் மூன்று ஊற்றுமுகங்களில் ஒன்றில் மிருகங்களும் இன்னொன்றில் அரசகுலமும் இன்னொன்றில் பிறரும் நீர் அருந்தினர். காந்தார வீரர்கள் சமைத்த ஊனுணவை உண்டு மரங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த ஈச்சைப்பந்தல்களில் அரசகுலத்தவர் தங்கினர். வீரர்கள் மரங்களுக்குக் கீழே கோரைப்புல் பாய்களை விரித்துப் படுத்துக்கொண்டனர்.

பவித்ரத்தில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரன் அமைதியற்றவனாக “இது எந்த இடம்? காந்தாரநகரியா? ஏன் ஓசைகளே இல்லை?” என்று கேட்டான். “விதுரா, மூடா, எங்கே போனாய்?” என்று கூச்சலிட்டான். விதுரன் அவன் அருகே வந்து “அரசே, நாம் காந்தாரநகரிக்குள் நுழையவில்லை. இது நகருக்கு வெளியே உள்ள பாலைப்பொழில். இங்கே இரவுதங்கிவிட்டு நாளைக்காலையில்தான் நகர்நுழைகிறோம்” என்றான்.

திருதராஷ்டிரன் “இங்கே யார் இருக்கிறார்கள்? யாருடைய குரல்கள் அவை?” என்றான். “அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே” என்றான் விதுரன். “ஏன் இத்தனை சத்தம்?” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா?” என்றான்.

திருதராஷ்டிரன் “ஆம்…ஆம்” என்றான். “நான் அணியலங்காரங்கள் செய்யவேண்டுமே? என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே?” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா?” என்றான். விதுரன் “அரசே, இது நள்ளிரவு. தாங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நாளை முழுக்க தங்களுக்கு இளைப்பாற நேரமிருக்காது” என்றான்.

திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “நான் இன்றிரவு துயிலமுடியுமெனத் தோன்றவில்லை விதுரா…” என்றான். “என் வாழ்க்கையில் இதுபோல ஒருநாள் வந்ததில்லை. இனி ஒன்றை நான் அறியவும் மாட்டேன் என்று நினைக்கிறேன்.” இருகைகளையும் தொழுவதுபோல மார்பில்  அழுத்தி தலையை கோணலாக ஆட்டியபடி அவன் சொன்னான் “என் வாழ்க்கை முழுவதும் நான் மகிழ்வுடன் எதையும் எதிர்பார்த்ததில்லை விதுரா. மிக இளம்வயதுகூட எனக்கு நினைவிருக்கிறது. என் வாயருகே வரும் உணவுதான் நான் அறிந்த வெளியுலகம். அது விலகிச்சென்றுவிடும் என்ற அச்சம்தான் என் இளமையை ஆட்டிவைத்த ஒரே உணர்ச்சி. ஆகவே உணவு என்னருகே வந்ததுமே நான் இரு கைகளாலும் அதை அள்ளிப்பற்றிக்கொள்வேன்.”

விதுரன் “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்… ஆனால் என் அகம் கலைந்துவிட்டது. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆம், உணவு கிடைக்காமலாகிவிடும் என்னும் பேரச்சம். விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்.

“அதில் வியப்புற ஏதுமில்லை அரசே” என்றான் விதுரன். “அனைத்து மனிதர்களுக்குள்ளும் அவர்களின் இளமையில் வந்துசேரும் சில அச்சங்களும் ஐயங்களும் இறுதிவரை தொடர்கின்றன.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “ஆம்… நான் பெருநில மன்னன். தொல்குடி ஷத்ரியன். பேரறிஞனான தம்பியைக் கொண்டவன். ஆனாலும் நான் விழியிழந்தவன். என் உணவை நானே தேடிக்கொள்ளமுடியாது. இந்த உலகம் எனக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டால் நான் ஓரிருநாளில் இறப்பேன். தனியாக இருக்கையில் எண்ணிக்கொள்வேன், இந்த உலகில் இதுவரை எத்தனை கோடி விழியிழந்தவர்கள் உலகத்தால் கைவிடப்பட்டு பசித்து இறந்திருப்பார்கள் என்று…” என்றான்.

தன் நெகிழ்வை விலக்கும்பொருட்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “தத்துவமாகச் சொல்லப்போனால் உனக்கெல்லாம் பிரம்மம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த உலகம். எங்கும் சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ ஒலிகளாக உணரவும் முடிகிறது. ஆனால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி நானறிந்ததெல்லாமே நானே கற்பனை செய்துகொண்டது மட்டும்தான்.” மேலும் உரக்கச் சிரித்தபடி “உயர்ந்த சிந்தனை, இல்லையா?” என்றான்.

விதுரன் “நீங்களும் சிந்திக்கமுடியும் அரசே” என்றான். “ஆனால் அதன்பின் இசைகேட்க பொறுமையற்றவராக ஆகிவிடுவீர்கள்” என்று சிரித்தான். திருதராஷ்டிரனும் சிரித்து தன் தொடையில் அடித்து “ஆம், உண்மை. நீ இசைகேட்பதை நான் கேட்டிருக்கிறேன். உன் உடல் பீடத்தில் அசைந்துகொண்டே இருக்கும்.” விதுரன் சிரித்தபடி “அதை உணர்ந்துதான் நீங்கள் என்னை நெடுநேரம் இசை முன் அமரச்செய்கிறீர்கள் என்றும் நானறிவேன்” என்றான். திருதராஷ்டிரன் வெடித்துச்சிரித்து தலையாட்டினான்.

“படுத்துக்கொள்ளுங்கள்” என்றான் விதுரன். “துயில் வராமலிருக்காது. வரவில்லை என்றாலும் உடல் ஓய்வுகொள்ளுமல்லவா?” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன?” என்றான். தலையை கைகளால் தட்டியபின் “ஆம்… விதுரா, இதோ இன்றுதான் நான் மகிழ்வுடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அச்சமும் ஐயமும் பதற்றமும் கொண்ட எதிர்பார்ப்புகளையே அறிந்திருக்கிறேன். இது இனிய அனுபவமாக இருக்கிறது. நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது” என்றான்.

“ஆம், இனிய உணர்வுதான்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “நீ அதை அறியவே போவதில்லை மூடா. நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும். இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்” என்றான். விதுரன் சிரித்து “என்னை தங்களைவிட சிறப்பாக எவர் அறியமுடியும்?” என்றான். “ஆம் அரசே, உண்மைதான். மானுட உணர்வுகள் எதையும் என்னால் நேரடியாக சுவைக்கவே முடியவில்லை. அவையெல்லாம் எனக்குள் அறிவாக உருமாறியே வந்து சேர்கின்றன. அறிதலின் இன்பமாக மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கிறேன்.”

“ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”

“அது எப்படி?” என்று கேட்ட திருதராஷ்டிரன் உடனே புரிந்துகொண்டு “இசையில் நிகழ்வதுபோலவா?” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும்? உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் புன்னகைசெய்து “அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்” என்றான்.

மறுநாள் அதிகாலை முதல்சாமத்தின் முதல்நாழிகை சிறந்த நேரம் என்று கணிகன் சொன்னான். மணக்குழு இரண்டாம்சாமத்தின் முதல் நாழிகையில் நகர்நுழையலாம் என்று காந்தாரநகரியில் இருந்து அமைச்சர் செய்தி அனுப்பியிருந்தார். அதிகாலையில் அவர்கள் அச்சோலையிலிருந்து கிளம்பினார்கள். இரவிலேயே ரதங்களும் வண்டிகளும் தூய்மைசெய்யப்பட்டு கொடிகளாலும் திரைச்சீலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்டிகளின் வளைவுக்கூரைகளில் புதுவண்ணம் பூசப்பட்டிருந்தது. பெண்கள் இருளிலேயே நீராடி புத்தாடைகளும் நகைகளும் மங்கலச்சின்னங்களும் அணிந்திருந்தனர். தீட்டிக் கூர் ஒளிரச்செய்த ஆயுதங்களும் தூய உடைகளும் அணிந்த வீரர்கள் இலைகளால் நன்றாகத் துடைத்து உருவிவிடப்பட்டு பளபளத்த சருமம் கொண்ட குதிரைகள் மேல் அமர்ந்துகொண்டனர்.

பீஷ்மரும் அமைச்சர்களும் ஆடையணிகளுடன் ரதங்களுக்குச் சென்றனர். திருதராஷ்டிரன் இரவில் துயிலாமல் படுக்கையில் புரண்டபடியே இருந்தான். பின் முன்விடியலில் எழுந்து அமர்ந்துகொண்டு பெருமூச்சுகள் விட்டான். சேவகனை அழைத்து விதுரனை எழுப்பும்படி ஆணையிட்டான். விதுரன் குளித்து ஆடைமாற்றி வரும்போது திருதராஷ்டிரனை சேவகர்கள் நறுமணநீரில் குளிக்கவைத்து மஞ்சள்பட்டாடை அணிவித்து நகைகளைப் பூட்டிக்கொண்டிருந்தனர்.

சிரமணி முதல் நகவளை வரை நூற்றெட்டு வகை பொன்மணிகள் பூண்டு இறையேறிய விழாவேழம் போலத் தெரிந்த திருதராஷ்டிரனை விதுரன் சற்றுத்தள்ளி நின்று பார்த்தான். தோள்வளைகள், கங்கணங்கள், கழுத்து மணியாரங்கள், முத்தாரங்கள், செவிசுடரும் வைரக்குண்டலங்கள், இடைவளைத்த பொற்கச்சையும் இடையாரம் தொடையாரம் கழலணியும் கறங்கணியும்… மனித உடலை அவை என்ன செய்கின்றன? பாறையை பூமரமாக்குகின்றன. தசையுடலை ஒளியுடலாக்குகின்றன. மானுடனை தேவனாக்குகின்றன. யானைமருப்பின் மலர்வரியை, மயில்தோகையின் நீர்விழிகளை, புலித்தோலின் தழல்நெளிவை மானுடனுக்கு அளிக்க மறுத்த பிரம்மனை நோக்கி அவன் சொல்லும் விடைபோலும் அவ்வணிகள்.

விதுரன் சேவகனை அழைத்து கண்ணேறுபடாமலிருப்பதற்காகக் கட்டும் கழுதைவால் முடியால் ஆன காப்பு ஒன்றை கொண்டுவரச்சொல்லி அவனே திருதராஷ்டிரனின் கைகளில் கட்டி விட்டான். அவனுடைய கல்லெழுந்த தோள்களை தன் மென்விரல்களால் தொட்டபோது எப்போதும்போல அவன் இருமுறை அழுத்தினான். இந்த விழியிழந்த மனிதனின் கைகளைத் தொடும்போது நானறியும் துணையை, என் அகமறியும் தந்தையை நானன்றி அவனும் அறியமாட்டான். என் அகமும் புறமும் செறிந்து என்னை ஆயிரம் திசைகள்நோக்கி அலைக்கழிக்கும் பல்லாயிரம் விழிகளெல்லாம் இவனுக்கென்றே எழுந்தன என்று இன்று அறிகிறேன்….

“என் மோதிரங்கள் எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன” என்று சேவகன் சொன்னான். “மூடா, என் கோமேதக மோதிரம் கலிங்கத்திலிருந்து வந்தது… அதைக்கொண்டு வா…” என்றான் திருதராஷ்டிரன். “விதுரா, மூடா, எங்கே போனாய்? இந்த மூடர்கள் என் மணிமாலைகளை கொண்டுவராமலேயே விட்டுவிட்டார்கள்…”

விதுரன் “அரசே, இப்போதே மணிமாலைகள் சற்று அதிகமாக தங்கள் கழுத்தில் கிடக்கின்றன” என்றான். திருதராஷ்டிரன் கைகளால் மணிமாலைகளைத் தொட்டு வருடி எண்ணத் தொடங்கினான். சேவகன் வந்து “அரசே, பிதாமகர் ரதத்தில் ஏறிவிட்டார்” என்றான். “என்னுடைய கங்கணங்களில் வைரம் இருக்கிறதா?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அனைத்தும் வைரக்கங்கணங்கள்தான்… கிளம்புங்கள்” என்றான். “விதுரா, நீ என்னுடைய ரதத்திலேயே ஏறிக்கொள்” என்றான் திருதராஷ்டிரன். “நகர் நுழைகையில் நீங்கள் மட்டுமே ரதத்தில் இருக்கவேண்டும் அரசே” என்றான் விதுரன். “அதுவரை நீ என்னுடன் இரு… நீ பார்த்தவற்றை எனக்குச் சொல்” என்றான் திருதராஷ்டிரன்.

இருள்விலகாத நேரத்தில் குளிரில் மயிர்சிலிர்த்த குதிரைகள் இளவெம்மையுடன் ஓடிக்கொண்டிருந்த தாரநாகத்தைக் கடந்து மறுபக்கம் ஏறின. ரதங்களும் வண்டிகளும் கூட நீரில் இறங்கி மணலில் சகடங்கள் கரகரவென ஒலியெழுப்ப ஆரங்கள் நீரை அளைய மறுபக்கம் சென்றன. “ஆழமற்ற ஆறு… மிகக்குறைவாகவே நீர் ஓடுகிறது. ஆகவே நீர் வெம்மையுடன் இருக்கிறது” என்றான் விதுரன். “விண்மீன்கள் தெரிகின்றனவா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆம் அரசே, நீரில் நிறைய விண்மீன்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனநதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று சொல்லி தலையை ஆட்டினான்.

VENMURASU_EPI_69
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

மணல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்றதுமே விதுரன் தொலைவில் தெரிந்த காந்தாரநகரியின் கோட்டையைப்பார்த்தான். காலையொளி செம்மைகொள்ளத்தொடங்கியிருந்தது. சோலையிலிருந்து பறவைகள் காந்தாரநகரி நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டதுபோல முதல்பார்வைக்குத் தோன்றியது. அப்பகுதியின் மணல்பாறைகளின் நிறம் அது என்று விதுரன் அறிந்திருந்தான். அவ்வளவு தொலைவிலேயே அந்தப்பாறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியவை என்பது தெரிந்தது. கோட்டைக்குச் செல்லும் பாதை கற்பாளங்கள் பதிக்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் ரதசக்கரங்கள் ஓசையிட்டு அதிர்ந்தபடி ஓடின.

கோட்டையின் வடக்கு எல்லையில் புழுதிக்குள் வினைவலர் வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. அங்கே கோட்டை இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும் விதுரன் புன்னகைசெய்தான். அங்கே யானைகளே இல்லை என்பதுதான் கோட்டைகட்டுவதை அவ்வளவு கடினமான பணியாக ஆக்குகிறது என்று தெரிந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்டால் அது எளிதில் அழியாது. கோட்டையை அழிக்கும் மழையும் மரங்களும் அங்கே இல்லை. கோட்டையை வெல்வதற்கு எதிரிகளும் இல்லைதான் என்று எண்ணி மீண்டும் புன்னகைசெய்துகொண்டான்.

“மிகப்பெரிய கோட்டையா?” என்றான் திருதராஷ்டிரன். “நம் கோட்டையைவிடப்பெரியதா?” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன?” என்றான். அந்த நகைச்சுவையை அவனே ரசித்து தலையாட்டி நகைத்தான். கோட்டை மெதுவாக விதுரன் பார்வை முன் வளர்ந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் காவல்மாடங்களில் பறந்த கொடிகளின் ஈச்ச இலை இலச்சினை தெரிந்தது.

“நான் நேற்றிரவு நினைத்துக்கொண்டேன், நீ அனைத்து மனிதருக்கும் இளமைக்கால அச்சங்களும் ஐயங்களும் நீடிக்கும் என்றாய். உன் இளமைக்கால அச்சம் என்ன?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு? நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே?” என்றான்.

விதுரன் “தங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை அரசே” என்றான். “என் அச்சத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் வியாசரின் மைந்தன். நியோகமுறைப்படி மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது.”

“ஆம் அது உண்மை” என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. “உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது.” அவன் முகம் கவனம் கொள்வதுபோல மெல்லக் குனிந்தது. “நம் அரண்மனையில் எவரேனும் என்றேனும் உன்னை அவமதித்திருக்கிறார்களா?” விதுரன் திருதராஷ்டிரனின் கைகளைப்பற்றி “இல்லை அரசே. நீங்கள் கொள்ளும் சினத்துக்கு தேவையே இல்லை” என்றான்.  திருதராஷ்டிரன் தன் கைகளை ஒன்றோடொன்று ஓங்கி அறைந்துகொண்டு “எதுவும் என்னிடம் வந்துசேரும். சற்று தாமதமானாலும் வந்துசேரும்… நீ மறைக்கவேண்டியதில்லை” என்றான்.

காந்தாரநகரியின் கோட்டைமேல் பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடுத்துக்கொண்டு அவை இடியொலி போல நகரமெங்கும் ஒலித்தன. நூற்றுக்கணக்கான யானைகள் சேர்ந்து பிளிறியதுபோல கொம்புகள் எழுந்தன. “மிகப்பெரிய கோட்டைவாயில்” என்று விதுரன் தன்னையறியாமலேயே சொல்லிவிட்டான். திருதராஷ்டிரன் தலையசைத்தான். “நகரின் மாளிகைமுகடுகள் தெரிகின்றன” என்றான் விதுரன்.

“நீ என்ன நினைக்கிறாய்?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் அவன் கேட்பது புரியாமல் “எதைப்பற்றி?” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி?” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா?” விதுரன் “நான் என்ன சொல்வேன் என உங்களுக்குத்தெரியும் அரசே” என்றான்.

“ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது.”

திருதராஷ்டிரன் தன் தலையை இடக்கையால் வருடினான். “நான் மிருககுலத்தில் பிறந்திருந்தால் பிறந்த நாளிலேயே இறந்திருப்பேன். அரசனாகியபடியால் மட்டும்தான் உயிர் வாழ்கிறேன். விதுரா, இங்கே உணவை உருவாக்குபவனின் பார்வையில் நான் வாழ்வதே ஓர் அநீதிதான். இந்தப் பெரிய உடல் முற்றிலும் அநீதியால் உருவானதுதான். அதை உணர்ந்த கணம் மேலும் வெறியுடன் அள்ளி உண்ணத் தொடங்கினேன். அந்த நீதியுணர்வை என்னிடமிருந்து நானே விலக்கிக்கொள்ளும் காலம் வரைக்கும்தான் நான் உயிர்வாழமுடியும். ஆகவே உணவு வேண்டும் என்று கேட்டேன். உடைகள் நகைகள் வேண்டுமென்று கேட்டேன். அரசும் அதிகாரமும் தேவை என்று நினைக்கிறேன். மனைவிகள் குழந்தைகள் பேரக்குழந்தைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். செல்வம் போகம் புகழ் என எல்லா உலகின்பங்களும் எனக்குத்தேவை… ஆம் ஒன்றைக்கூட விடமாட்டேன். ஒன்றைக்கூட!”

அனைத்துப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு திருதராஷ்டிரன் சொன்னான் “எனக்கு இப்படி ஒரு பேரரசின் அரசிதான் தேவை. அவள் பாரதவர்ஷத்திலேயே பேரழகியாகத்தான் இருக்கவேண்டும். அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும். நான் முழுமையாக உயிர்வாழ்வது ஒன்றுதான் என்னை இப்படி உருவாக்கிய தெய்வங்களுக்கு நான் அளிக்கும் விடை.” திருதராஷ்டிரனின் முகத்தைப்பார்த்தபடி விதுரன் சொன்னான், “அரசே, ஷாத்ரம் என்னும் குணத்தின் மிகச்சரியான இலக்கணத்தையே நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் முற்றிலும் ஷத்ரியர்.”

முந்தைய கட்டுரைஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை
அடுத்த கட்டுரைஇலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்