‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 6 ]

சேவகன் தலைவணங்கி கதவைத்திறந்ததும் அரண்மனை மந்திரசாலைக்குள் சகுனி நுழைந்தபோது சுபலர் பீடத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருப்பதையும் எதிரே அசலன் மோவாயை கையில் தாங்கி அமர்ந்திருப்பதையும் கண்டான். சுகதர் நின்றபடி சுவடிகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தார். சுபலர் அலையும் விழிகளுடன் கால்களை மாற்றி மாற்றி அமைப்பதைக் கண்டதுமே அவர் எதிலும் கருத்தூன்றாமல் இருக்கிறார் என்பதை சகுனி புரிந்துகொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் சுகதர் தலைவணங்கினார். அசலன் “நீ இன்று வேட்டைக்குச் சென்றிருக்கக்கூடாது” என்று கடுமையாகத் தொடங்கினான்.

சகுனி ஒன்றும் சொல்லாமல் பீடத்தில் அமர்ந்தான். “என்ன இருந்தாலும் அவர் அஸ்தினபுரியின் பிதாமகர். நினைத்திருந்தால் இந்த பாரதவர்ஷத்தையே வெற்றிகொள்ளக்கூடிய மாவீரர். அவரை உதாசீனம் செய்து நீ சென்றாய். நல்லவேளையாக சுஜலனால் உன்னை கண்டுபிடிக்கமுடிந்தது.” சகுனி அதைக் கேட்டதாகவே காட்டவில்லை. “அவரது தூது மறுக்கப்பட்டதை அவரிடம் நேரடியாக நீ சொல்லியிருக்கக் கூடாது என்று சுகதர் சொல்கிறார். அரசமுறைப்படி நாம் அமைச்சர் வழியாக அவரது அமைச்சரிடம் அதைத் தெரிவித்திருக்கவேண்டும்” என்று அசலன் மீண்டும் சொன்னான்.

சுகதர் அவர் உள்ளே நுழையவேண்டிய தருணம் அது என்று புரிந்துகொண்டார். “இளவரசே, தூது மறுக்கப்படுதல் என்பது சற்று சங்கடமான நிலை. அதை நேரடியாக உருவாக்கினால் அத்தருணத்தில் சொல்லப்படும் சிலசொற்கள் உடனடியாக எதிர்வினைகளைக் கொண்டுவரலாம். உணர்ச்சிமிக்க சொற்பரிமாற்றம் நிகழலாம்” என்றார். “பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.”

“ஆம்” என்றார் சுபலர். “என் ஆசிரியர் என்னிடம் சொன்ன முதல்சொல்லே அதுதான். நாக்கை அடக்காத அரசன் நாடாளமாட்டான் என்றார் அவர்” என்றார். சுகதர் “ஆன்மா குடியிருக்கும் வீட்டின் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை என்று நாக்கை சுக்ர ஸ்மிருதி வகுக்கிறது. நாக்கு நம் நலன்களைப் பேணத்தெரியாத பேதை.” சுபலர் ஏப்பம் விட்டபடி “உண்மை” என்றார். சுகதர் “ஆகவேதான் எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும் உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்கவேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.”

“ஏன் ஓலைகள் வழியாக தெரிவிக்கக்கூடாதா?” என்றான் அசலன். “இல்லை இளவரசே, ஓலை எத்தனை மிதமாக எழுதப்பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதனாலேயே ஓர் உறுதியைக் கொண்டிருக்கிறது. அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது. வாசிப்பவரின் மனமே அந்தச் சொற்களுக்கு பொருள் அளிக்கிறது, எழுதுபவரின் மனம் அல்ல. மிகமென்மையான ஒரு சொற்றொடரை ஒருவர் வன்குரலில் வாசித்துக்காட்டி அறைகூவலாக ஒலிக்கச்செய்ய முடியும்” சுகதர் சொன்னார். “ஆகவே அமைச்சுமுறை அறிந்த அமைச்சனோ தூதனோ செல்வதே முறை. கேட்பவரின் முகத்தையும் சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியைச் சொல்லவேண்டும். கேட்பவர் உருவாக்கும் எதிர்வினைகளுக்கேற்ப தணிந்தும் நயந்தும் தேவையென்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்யவேண்டும். அதன்பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்துவதற்காக அவர் அரச ஓலையை அளிக்கலாம்.”

சகுனி அசைந்து அமர்ந்து சால்வையை எடுத்து மடிமீது போட்டுக்கொண்டான். பின்பு “பீஷ்மர் எதையும் நேரடியாகச் சொல்வதை விரும்புபவர் என்று தோன்றியதே” என்றான். “ஆம், அதை நான் முதல்நாளிலேயே கணித்தேன் இளவரசே. அவருக்கு சொல்தெரிதலே தேவையில்லை. அனைத்துச் சொற்களும் அவருடைய நெஞ்சிலிருந்து நேரடியாகவே வருகின்றன. ஆனால் அதற்குக் காரணம் அவர் உள்ளும் புறமும் ஒன்றேயானவர் என்பதுதான். நாம் அப்படி அல்ல” என்றார் சுகதர். “நாம் நம் அச்சங்களையும் ஐயங்களையும் மறைத்துக்கொண்டுதான் பேசுகிறோம். நாம் சொல்எண்ணாமல் பேசுவது பிழை.”

சுபலர் உரக்கச் சிரித்து “அப்படியா சொல்கிறீர் அமைச்சரே? இவன் தன்னுள்ளே கொண்டிருந்த அச்சமும் ஐயமும் என்ன, சொல்லுங்கள்” என்றார். சுகதர் “இளவரசே, தாங்கள் பீஷ்மரை அஞ்சுகிறீர்கள்” என்றார். “அதுதான் முதன்மையான காரணம்.” அசலன் “ஆகா” என்றபடி தொடையைத் தட்டினான். சகுனி “சொல்லும்” என்றான். “தாங்கள் தங்களுக்கு நிகரான அரசியல்சூழ்ச்சியாளரை இதுவரை கண்டடையாதவர். அந்த தன்னம்பிக்கை கொண்டவர். தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் பொருள் இல்லாமலாக்கும் ஒருவரைக் கண்டதும் நிலைகுலைந்துவிட்டீர்கள். அவரது சொல்லில் இருந்து விழியிழந்த அரசன், முதியதளபதி என்னும் இரு சொல்லாட்சிகளை தொட்டு எடுத்தீர்கள். உடனே அவர் சொல்லாத ஒன்றையும் தொட்டீர்கள். உங்களைவெல்லும் அரசியல்சூழ்ச்சியாளர் அவர். ஆகவேதான் பின்னடைந்தீர்கள்.”

“அப்படியென்றால் நான் என் தமக்கையைப்பற்றிச் சொன்னது பொய் என்கிறீரா?” என்றான் சகுனி. “இல்லை இளவரசே. ஒரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரேயொரு காரணம்தான் இருந்தாகவேண்டுமென்பதுண்டா என்ன? இளவரசி காந்தாரிக்கு இம்மணத்தில் உவப்பில்லை என நீங்கள் உணர்ந்தீர்கள். உங்களால் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால் அதற்கு முன்னரே உங்கள் அகம் நிலையழிந்து ஆயிரம் விரல்களால் தேடத்தொடங்கியிருந்தது. அப்படி ஒரு தேடல் இருந்தமையால்தான் காந்தாரிக்கு மணத்தில் உவப்பில்லை என்பதை உடனே நுண்ணிதாக உணர்ந்துகொண்டீர்கள். மணமறுப்பையும் அறிவித்தீர்கள்.”

சுபலர் உரக்கச்சிரித்து “ஆகா…” என்றபின் சுவரோரமாக நின்ற சேவகனைநோக்கி கைகாட்டினார். சேவகன் அசையவும் சகுனி தேவையில்லை என்று அவனுக்கு சைகை காட்டிவிட்டு “சுகதரே, நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்” என்றான். “நான் நேற்றுமுதல் நிலைகொள்ளாமல் இருந்துகொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இதுவே. என் முடிவு உறுதியானது. ஆனால் அது சரியானது என்று முழுமையாகத் தோன்றவுமில்லை” என்றான்.

“தாங்கள் அப்படி நேரடியாக பீஷ்மரிடம் சொன்னபோது அவர் சொல்மீறுவார், அவரது அகம் நிலையழியும் என அகத்தே எதிர்பார்த்தீர்கள். அது நிகழவில்லை. பீஷ்மரின் முகத்தில் எந்த உணர்ச்சிமாறுபாட்டையும் தாங்கள் காணவில்லை. ஆகவேதான் உடனடியாக தலைவணங்கி அங்கிருந்து விலகிச்சென்றீர்கள். அதை எண்ணியே இரவெல்லாம் துயிலற்றிருந்தீர்கள். வேட்டைக்குச் சென்றதும் அதனாலேயே, பீஷ்மரைத் தவிர்ப்பதற்காக அல்ல” என்றார் சுகதர். “தாங்கள் சுஜலனிடம் என்ன வினவினீர்கள் என்று கேட்டறிந்தேன். பீஷ்மர் எந்த மனவேறுபாடுமின்றி அரசுக்கு படைசூழ்தலில் ஆலோசனை வழங்கினார் என்றும் இளையவரை மாணவராக ஏற்று மந்திரச்சரங்கள் சிலவற்றை சொல்லிக்கொடுத்தார் என்றும் கேள்விப்பட்டதும் திரும்பிவிட்டீர்கள்.”

“சுகதரே நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியானதே” என்றான் சகுனி. “ஆனால் நான் உய்த்தறிந்த ஒன்றை நீங்கள் தொடவில்லை. பீஷ்மர் அரசியல்சூழ்மதியாளர் அல்ல. அவரை அனுப்பிய மாபெரும் அரசியல்சூழ்மதி ஒன்று அஸ்தினபுரியில் இருக்கிறது. பீஷ்மர் இங்கே சொன்னவை அவர் உள்ளத்தில் இருந்து எழுந்த சொற்கள்தான். ஆனால் இந்தச் சூழ்மதியை அவருள் விதைத்தவர்கள் அங்கே இருக்கிறார்கள்.”

அசலன் “நீ அவர்களை அஞ்சுகிறாயா?” என்றான். “அஞ்சவில்லை. ஆழம்தெரியவில்லையே என எண்ணினேன்” என்றான் சகுனி. சுகதர் “ஆம், சத்யவதியைப்பற்றி நான் அறிந்திருக்கிறேன்” என்றார்.

மந்தணஅவைச் சேவகன் வந்து வணங்கி விருஷகன் வந்திருப்பதைச் சொன்னான். சுகதர் “இளவரசர் பீஷ்மரின் மாணவராகவே ஆகிவிட்டார். பாரதவர்ஷம் முழுக்க அத்தனை நாடுகளிலும் பீஷ்மருக்கு உளம்சேர் மைந்தர்கள் உள்ளனர் என்று சூதர்கள் சொல்வார்கள். இங்கும் ஒருவர் அமைந்துவிட்டார்” என்றார். விருஷகன் உள்ளே வந்து தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். சுபலர் “பீஷ்மர் எப்போது கிளம்புகிறார்?” என்றார். “இன்னும் இருநாழிகையில். தாங்களும் தமையனாரும் அரசகோலத்தில் கோட்டைவரை வந்து வழியனுப்பவேண்டும். பட்டத்துயானையும் அரசபரியும் அமைச்சும் அங்கே செல்லவேண்டுமென அமைத்திருக்கிறேன். வைதிகரும், சூதரும் வருவார்கள்.”

“இன்றுவரை நாம் எவருக்கும் இத்தகைய வழியனுப்புதலை அளித்ததில்லை” என்றான் அசலன். “இதற்குமுன் நம் அரசுக்கு சக்ரவர்த்திகள் வந்ததுமில்லை” என்று விருஷகன் உரத்த குரலில் பதில் சொன்னான். சகுனி “பிதாமகர் உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான். “எதைப்பற்றி?” சகுனி மிகக் கவனமாக “காந்தாரத்தின் வரவேற்புபற்றி?” என்றான். விருஷகன் “மூத்தவரே நீங்கள் உங்கள் செய்கைகளால் அவர் வருந்துகிறாரா என்று கேட்கிறீர்கள் அல்லவா?” என்று நேரடியாகக் கேட்டான். சகுனி புன்னகைசெய்து “நீயும் உன் குருநாதரின் பேச்சுமுறைகளைக் கற்றுக்கொள்கிறாயா?” என்றான்.

“மூத்தவரே, பிதாமகர் தூது நிறைவேறாமை குறித்து மனம் வருந்துவதாகச் சொன்னார். உண்மையில் அவர் வருந்துவதை நானும் உணர்ந்தேன். அவர் வருந்துவது அரசுக்காக அல்ல, தன் மைந்தன் திருதராஷ்டிரனுக்காக என்று அறிந்தபோது விழியிழந்த அந்த இளவரசன்மேல் எனக்குள் பொறாமையே எழுந்தது” என்றான் விருஷகன்.

“சற்றுமுன் காந்தாரியைக் கண்டு ஆசியளித்துவிட்டு அவர் ரதமேறியபோது நானும் சென்றேன். என்னிடம் இளவரசி பேரழகி என்றார். அவளுடைய நீலக்கண்களும் தூயவெண்ணிறமும் பாரதவர்ஷத்தின் தெற்கிலும் கிழக்கிலும் அரியவை என்றார். அப்படிப்பட்ட அழகியை விழியிழந்தவனுக்கு மணம்செய்து வைப்பது பிழையென உணர்வதாக அவர் சொல்லப்போகிறார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் நெடுமூச்சு விட்டு, அவளை என் குலம் இழப்பதை எண்ணும்போது துயரமே எழுகிறது என்றார்” விருஷகன் சொன்னான்.

VENMURASU_EPI_66
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“என் மைந்தன் கையிலிருந்து விலையில்லா மணி ஒன்று தவறிச்செல்கிறது என்று அவர் சொன்னபோது என் மனம் மலர்ந்தது. ஆம், மூத்தவரே அவருள் இருந்து ஓர் அரசியலறிஞனோ விவேகியோ ஞானியோ வெளிப்படுவதைவிட கனிந்த முதுதந்தை ஒருவர் வெளிப்படும் தருணங்களையே நான் விரும்புகிறேன்” விருஷகனின் மலர்வை சுபலர் புன்னகையுடன் கவனித்து சுகதரை நோக்கி விழியசைத்தார்.

சகுனி பேச்சை மாற்ற விரும்பினான். “சுகதரே வேறு என்னென்ன ஓலைகள் வந்துள்ளன?” என்றான். சுகதர் பேசுவதற்குள் “நாம் சற்று மதுவருந்தி உணவுண்டபின் ஓலைகளை கேட்கலாமென நினைக்கிறேன்… பூசனையில் அவ்வளவுநேரம் நின்றது களைப்பை அளிக்கிறது” என்றார் சுபலர். சகுனி “முதன்மையான ஓலைகளை முடித்துவிடுவோம்” என்றதும் சுபலர் “ஆம் அதைத்தான் நானும் சொல்லவந்தேன்” என்றார். அசலன் தந்தையை நோக்கி புன்னகை புரிந்தான்.

“இளவரசே, நம்முடன் மணஉறவை விழையும் எட்டு மன்னர்களின் ஓலைகள் வந்துள்ளன” என்று சுகதர் ஓலைகளை எடுத்தார். விருஷகன் “மகதன் மணம் மறுத்த செய்தியை அதற்குள் ஒற்றர்கள் வழி அறிந்துவிட்டார்கள்” என்றான். “அது இயல்புதானே?” என்றான் அசலன். “லோமசன், கேகயன், சகலன் மூவரும்தான் சற்றேனும் மரபுள்ள மன்னர்கள். பிறர் சென்ற நூறாண்டுகளில் உருவாகிவந்த சிறு மன்னர் குலங்கள்” என்றார் சுகதர்.

சுபலர் “லோமசனுக்கும் கேகயனுக்கும் வயதாகிவிட்டதே…” என்றார். “லோமசனுடன் நானே இணைந்து சுயம்வரமொன்றுக்குச் சென்றிருக்கிறேன்.” அசலன் “ஆம், ஆனால் இளவரசர்களாக இருப்பவர்கள் வெறும் வேடர்களும் படகோட்டிகளும். ஆயிரம் படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டால் தங்களை அரசர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்…” என்றான். “ரோருகனையும் பாடலனையும் அரசர்களாக எப்படி எண்ணமுடியும்? நம் மூதாதை காலத்தில் அவர்கள் நம்மிடம் படகோட்டிகளாக இருந்தார்கள்.”

சுகதர் “அரசே, நம் முன் உள்ளவை இரண்டு வழிகள். நம்மிடம் உறவை நாடும் ஏதேனும் ஒரு சிறிய ஷத்ரிய அரசுக்கு மகற்கொடை நிகழ்த்துதல். அந்நாடு இங்கே சிந்துவின் கரையில் இருக்குமென்றால் நம்மை ஆதரிக்கும் ஒரு ஷத்ரியகுலத்தின் பின்புலம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அவ்வுறவில் எப்போதும் ஒரு சிறு முரண்பாடு இருந்துகொண்டிருக்கும். அவர்கள் நம்முடைய செல்வத்தைக் கண்டு நம்மை நாடிவருகிறார்கள். சொல்லப்போனால் தங்கள் குலத்தைப்பற்றிய பெருமிதத்தை நமக்கு விலைக்கு விற்கிறார்கள் அவர்கள். அந்த இழிவுணர்ச்சி அவர்களை எப்போதும் அமைதியிழக்கச் செய்யும். ஆகவே நம்மை சிறுமைப்படுத்த முயல்வார்கள்.”

சுகதர் தொடர்ந்து சொன்னார் “அவர்களுக்குள் நம் நாட்டை வென்று உத்தரபதம் மீதான ஆதிக்கத்தை அடையவேண்டுமென்ற நோக்கம் இருக்குமென்றால் அது பெரிய மோதலாக மாறவும்கூடும்… பொதுவாக ஷத்ரியர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள். தங்களைவிடக் குறைந்தவர்களுடன் அவர்கள் மண உறவுகொள்வதே ஆதிக்கத்துக்காகத்தான். உத்தரபதம் என்னும் பொன்மழைமேகம் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களையும் கவர்கிறது.”

விருஷகன் “ஆனால் அவர்களில் எவரும் இங்கே ஆட்சிசெய்ய முடியாது. இந்தப் பாலைநிலம் நம்மால் மட்டுமே ஆளப்படக்கூடியது” என்றான். “ஆம், ஆனால் நம் அரசையே அவர்கள் கைப்பற்றிக்கொண்டால்? இளவரசியின் மைந்தனை இங்கே அரசனாக ஆக்கமுடிந்தால்?” என்றார் சுகதர். “ஷத்ரியர் அதையே திட்டமிடுவார்கள்.” சுபலர் “ஆம், நானும் அவர்களில் பலருடன் மது அருந்தியிருக்கிறேன். எப்போதும் அதிகாரம் பற்றியே பேச்சு. வேட்டைக்குச் செல்லும்போதுகூட ஒருவரை இன்னொருவர் வெல்வதையே பேசிக்கொண்டிருப்பார்கள்” என்றார்.

“நம் இரண்டாவது வாய்ப்பு சிறிய அரசர்கள். அவர்களிடம் குலம் இல்லை. ஆனால் அவர்களை குடித்தலைவர்கள் என்னும் நிலையில் இருந்து தனி அரசர்களாக ஆக்கிய அந்தக் காரணம் அவர்களுடன் இருக்கிறது. நதிப்பாதையோ மலைக்கணவாயோ சந்தைகளோ விளைநிலங்களோ ஏதோ ஒன்று. அது நம் கட்டுப்பாட்டுக்கு வரும். நாம் அளிக்கும் மகற்கொடையால் மகிழ்ந்து நம்மிடம் பணிந்து நன்றியுடன் இருப்பார்கள். இளவரசி விரும்பும் இளையவனை நாம் தெரிவு செய்யவும் முடியும்.”

“நாம் இதை ஏன் உடனே விவாதிக்கவேண்டும்? ஓலைகளைத் தொகுத்து ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து முடிவெடுப்போமே” என்றார் சுபலர். “இன்னும் ஒருநாழிகையில் பீஷ்மர் கிளம்புகிறார்.” அசலன் “ஆம், இது உடனடியாக முடிவுசெய்யப்படவேண்டியதல்ல” என்றான். சுகதர் “அரசே, இதை உடனே முடிவுசெய்ய வலுவான காரணம் ஒன்றுள்ளது. ஆகவேதான் ஓலைகளை உடனே கொண்டுவந்தேன்” என்றார். “இன்று மாலை உஷ்ணபதத்தில் இருந்து என் ஒற்றன் ஒரு செய்தியைக் கொண்டுவந்தான். மகதத்தில் இருந்து தூதர்கள் இருவர் நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் நாளை இங்கு வந்து சேரக்கூடும்.”

சகுனி “என்ன செய்தி?” என்றான். சுகதர் “மகத மன்னன் விருஹத்ரதர் தன் இளவரசர் பிருகத்ரதனுக்கு காசிமன்னர் பீமதேவர் வங்க மன்னன் மகளை மணந்து பெற்ற இரு மகள்களை மணம்புரிந்து வைக்க முடிவெடுத்திருக்கிறார். அணிகை, அன்னதை என்னும் அவ்விரு இளவரசிகளும் இரட்டையர். அஸ்தினபுரிக்கு பீஷ்மபிதாமகர் தூக்கி வந்த அவர்களின் தமக்கையரைவிட அழகில் சிறந்தவர்கள். காசிமன்னன் மணக்கொடைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறான். மகதமும் காசியும் வரும் ஆவணிமாதத்தில் மணமங்கலத்தை நிகழ்த்தவிருக்கின்றன” என்றார்.

“நம்மை அழைக்கிறானா?” என்றார் சுபலர். “அரசே, மணக்கொடை நிகழ்வதற்கு மூன்றுமாதம் முன்னரே மன்னர்களுக்கு அழைப்பனுப்புவது முறை. அதன்படி நமக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்” என்றார் சுகதர். சுபலர் சினத்தால் உரத்த குரலில் “நம்மை அவமதித்தபின்பு இப்படி ஓர் அழைப்பை அனுப்புவான் என எண்ணவே இல்லை” என்றார்.

அசலன் “காசியை ஏன் மகதன் தேர்ந்தெடுத்தான் அமைச்சரே?” என்றான். “கங்கைக்கரையின் முழுமையான ஆதிக்கத்தை மகதம் விரும்புகிறது. கங்கைக்கரைத் துறைகளைக் கொண்டிருக்கும் நகரத்தையே அவர்கள் விழைவார்கள்” என்று சுகதர் சொன்னார். “அத்துடன் அவர்கள் அஸ்தினபுரியை அஞ்சுவதும் தெரிகிறது. அஸ்தினபுரிமீது தீராப்பகை கொண்டுள்ள காசிநாட்டை மண உறவுக்குத் தெரிவுசெய்தது அதற்காகவே” என்றான் விருஷகன்.

சகுனி மெல்லிய குரலில் “நமக்குத் தூதாக வருபவர் யார்?” என்றான். சுகதர் “அதைத்தான் நான் சொல்லவந்தேன் அரசே. நம்மிடம் அனுப்பப்பட்டிருப்பவர் உக்ரர் என்னும் சூதர்” என்றார்.

மந்தணஅவை அமைதியாகியது. சுகதர் சகுனியைப் பார்த்தபடி பேசாமல் நின்றார். சிலகணங்களுக்குப்பின் சுபலர் தன் கனத்த உடலுடன் அசைந்தபோது பீடம் முனகியது. “சூதரா?” என்றார். அசலனை ஒருமுறை நோக்கிவிட்டு “அவர் ஒருவேளை அமைச்சராக இருக்கலாமோ?” என்றார். “இல்லை, அவர் ஒரு பாடகர் மட்டுமே” என்றார் சுகதர்.

அசலன் “ஷத்ரியர்களோ பிராமணர்களோதானே அனுப்பப்படவேண்டும்?” என்றான். விருஷகன் கடும் சினத்துடன் “தந்தையே இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? அந்தச் சவுக்கை அனுப்பியதற்கு நிகர்தான் இது. தேரோட்டும் சூதனை அனுப்பி நம்மை இழிவுபடுத்தியிருக்கிறான் மகதன். பந்தல் அமைக்கும் சிற்பியையும் சமையல் செய்யும் சூதனையும் அழைப்பதற்குத்தான் சூதர்கள் செல்வார்கள்.”

சகுனி “குடித்தலைவர்களை அழைக்கவும் சூதர்கள்தான் செல்வார்கள்” என்றான். அவன் எந்த உணர்ச்சியுடன் சொல்கிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. விருஷகன் “இதையும் நாம் விட்டுவிட்டால் இங்கே நாம் அரசுடன் இருப்பதற்கே பொருள் இல்லை” என்றான். “நாம் என்ன செய்யமுடியும் இளவரசே?” என்றார் சுகதர். “படைகொண்டுசெல்வோம்…” சுகதர் “அவ்வளவுதொலைவுக்கு நம்முடைய படைகள் செல்லமுடியாது. அந்த எல்லைவரை நமக்கு படைத்துணை அளிக்கும் நாடே இல்லை. பன்னிரண்டு நாடுகளை கடந்து நாம் செல்லவேண்டும்…” என்றார்.

“அப்படியென்றால் நாம் என்னதான் செய்வது? இந்த அவமதிப்பைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருந்தால் அச்செய்தியை அவன் எப்படியேனும் அந்த மணநிகழ்வில் அனைத்து ஷத்ரியர்களும் அறியும்படி செய்வான். சொல்லப்போனால் அனைவரும் இப்போது நம்முடைய எதிர்வினை என்ன என்று அறியவே காத்திருக்கிறார்கள்” என்றான் விருஷகன்.

“நாம் நம் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து ஓர் ஓலை அனுப்பினால் என்ன?” என்றான் அசலன். சுபலர் “ஆம், அதைச்செய்யலாம்” என்றபின் சகுனியைப் பார்த்தார். சகுனி பேசாமல் சரிந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு “அந்தக் கடிதத்தை நாம் ஒரு சூதரிடம் வேண்டுமென்றால் கொடுத்தனுப்பலாம்” என்றார். சகுனி அதற்கும் பேசாமலிருந்ததைக் கண்டு அவர் பிறரைப்பார்த்தார். பின்பு தன் கைகளை மார்பின் மேல் கட்டிக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.

சகுனி சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து இருந்தான். அங்கிருக்கும் அனைவரும் தன்னை கவனிப்பதை அவன் அறியவில்லை போலிருந்தது. பின்பு நிமிர்ந்து “சுகதரே நாம் பால்குடித்து விலகிய ஒரு குதிரைக்குட்டியை அனுப்புகிறோம்” என்றான். சுகதர் சிலகணங்கள் திகைத்தபின் முகம் மலர்ந்து “ஆம், அதுவே சிறந்த பதில்… மிகச்சிறந்த பதில்” என்றார். விருஷகன் “அதற்கு என்ன பொருள் அமைச்சரே?” என்றான்.

“இளவரசே, அவர்கள் நமக்கனுப்பிய குதிரைச்சவுக்கு இங்கே உள்ளது. நாம் குதிரைக்குட்டியை அனுப்பினால் அதன்பொருள் ஒன்றே. அக்குதிரை வளர்ந்து சேணம் மாட்டப்படுவதற்குள் நாம் அங்கே படையுடன் வருவோம் என்கிறோம். தைரியமிருந்தால் அக்குதிரைக்குட்டியை கொல்லாமல் கொட்டடியில் வைத்து வளர்த்துக்கொண்டு காத்திரு என்று அறைகூவுகிறோம். மணநிகழ்வில் வந்துசேரும் அக்குதிரைக்குட்டியை மகதன் மறைக்கமுடியாது. அறைகூவலை ஏற்றேயாகவேண்டும். அறைகூவல் அத்தனை வெளிப்படையாக இருக்கையில் மகதத்தின் எதிரிகள் பலர் நம்முடன் சேர வழியிருக்கிறது.”

“ஆனால் உடனடியாக ஒருபோர் தவிர்க்கப்படுகிறது” என்றார் சுபலர். “அது நல்லதுதான்….நாம் நம்மை மேலும் வலிமைப்படுத்திக்கொள்வோம்.” சுகதர் “நாம் நம் நிதிவல்லமையால் இங்கேயே பெரும்படையைத் திரட்டமுடியும். சோனகர்களின் படைகளைக்கூட திரட்டிக்கொள்ளமுடியும். அடுத்த நான்காண்டுகளுக்குள் நாம் சென்று அந்தக்குதிரையைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். அதை இங்கே கொண்டுவந்து ஒரு அஸ்வவேள்வியைச் செய்தோமென்றால் நம் குலத்தைப்பற்றி மகதன் எழுப்பிய வினாவுக்கும் பதில் அமைந்துவிடும்.”

“அந்தப் புரவியின் சேணத்தில் மகதனைக் கட்டி இழுத்துவருவோம்” என்றான் சகுனி. அப்போது மந்திரசாலையில் இருந்து அரண்மனைக்குள் செல்லும் அறையின் கதவு மெல்ல அசைந்தது. சகுனி “உள்ளே வருக இளவரசி” என்றான். சுகதர் “தாங்கள் அங்கே கேட்டுக்கொண்டிருப்பதை முன்னரே அறிவோம் இளவரசி. தங்கள் சொல் இங்கே வரவேற்கப்படுகிறது” என்றார். “நான் மந்திரசாலையில் வந்து பேச விழையவில்லை அமைச்சரே. அது அரசுரையாக ஆகிவிடும். நான் இங்கிருந்தே சொல்கிறேன்” என்று காந்தாரி மெல்லிய குரலில் சொன்னாள். சகுனி “அவ்வண்ணமே” என்றான்.

“தம்பி, நம்மை பாரதவர்ஷமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னாய். அந்த மேடையில் நாம் முன்வைக்கவேண்டியது நம்முடைய சினத்தைத்தானா?” என்றாள் காந்தாரி. “நம்மை பிறர் சினம் கொள்ளச்செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?”

சகுனி திகைத்தவன் போல உடலை முன்னகர்த்தி “ஆம் அக்கா. ஆனால்…” என்றான். “தம்பி, அந்த மேடையில் நம்முடைய நிமிர்வும் கனிவும் நட்பும் முன்வைக்கப்படட்டும். நம் அரண்மனையின் மிகச்சிறந்த சூதர்குழுவும் தாசியர்குழுவும் அவர்களுக்கு மணப்பரிசிலாக அனுப்பப்படட்டும். அவர்கள் ஒருபோதும் கண்டிராத காப்பிரிநாட்டு நவமணிகளும் யவனப்பொன்னும் பீதர்களின் பட்டும் அளிக்கப்படட்டும். பாரதவர்ஷமே அவற்றைக் கண்டு வியக்கவேண்டும்.”

“ஆணை” என்றான் சகுனி. “தம்பி, அங்கிருக்கும் ஷத்ரியர் நாம் நட்பையே நாடுபவர்கள் என்று உணரட்டும். நாளை நாம் பாரதவர்ஷத்தை வெல்ல படைகொண்டுசென்றால் நம்முடன் வந்து சேர ஷத்ரியர்கள் அங்கே இருக்கவேண்டும். அவர்களில் எவர் நம்முடன் இணைவார்கள் என இன்று சொல்லமுடியாது.” காந்தாரி மெல்லிய திடமான குரலில் “ஒருவேளை நாளை நாம் அஸ்தினபுரியிடமே போர்புரிய நேரிடலாம். அப்போது மகதம் நம்முடன் சேரவும்கூடும்” என்றாள்.

“ஆம். உண்மை இளவரசி. இதைவிடச்சிறந்த அரசுரை இங்கே நிகழப்போவதில்லை” என்றார் சுகதர். “அமைச்சரே, அத்துடன் என்னை மணம்புரிய மறுத்தார் என்பதற்காக ஒருவர் மேல் நான் பகை கொள்வது என் பெண்மையை சிறுமைசெய்கிறது. அவர் நலம்பெற்று நன்மக்களுடன் நீடூழி வாழவேண்டுமென்று வாழ்த்தவே என் மனம் எழுகிறது” என்று காந்தாரி சொன்னாள். “அவ்வண்ணமே செய்வோம்” என்றார் சுபலர்.

சகுனி எழுந்து கதவை நோக்கி ஓரடி எடுத்து வைத்து “அக்கா, தங்களை நான் நினைவறிந்த நாள் முதலே அறிவேன். ஆனால் என் அன்பு தங்களை தமக்கையாக மட்டுமே காட்டிவிட்டது. நீங்கள் சக்கரவர்த்தினி. மாமன்னர்களின் மணிமுடிகள் வந்து வணங்கவேண்டிய பாதங்கள் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அனைத்து மக்களுக்கும் அமுதூட்டும் பாற்கடலை நெஞ்சிலேந்தியவர்… அப்பதவியைத் தவிர ஏதும் உங்களுக்கு இழிவே” என்றான்.

சகுனியின் குரலில் அந்த உணர்ச்சியை ஒருபோதும் அவர்கள் எவரும் கண்டிருக்கவில்லை. “சிறுமன்னன் ஒருவனுக்கு துணைவியாகி நீங்கள் செல்வதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை அக்கா. நீங்கள் அஸ்தினபுரியை ஆளவேண்டும். நான் வாளுடன் உங்கள் அருகே நிற்கிறேன். பாரதவர்ஷத்தை வென்று உங்கள் பாதங்களில் போடுகிறேன். அருள்புரியவேண்டும்” என்றான்.

“நான் உன் கனவுகளை எப்போதும் பகிர்ந்துவந்திருக்கிறேன் தம்பி” என்றாள் காந்தாரி. சகுனி கைகூப்பினான். விருஷகன் பரபரப்புடன் “அப்படியென்றால் நாம் பீஷ்மரிடம் தெரிவித்துவிடலாமல்லவா? அஸ்தினபுரியுடன் நாம் மண உறவு கொள்கிறோம் என்று அரசமுறையாக அறிவிக்கவேண்டுமல்லவா?” என்றான். “உன் விருப்பம் நிறைவேறுக தம்பி” என்றாள் காந்தாரி.

சுபலர் “மகளே, அஸ்தினபுரியின் இளவரசன் விழியிழந்தவன் என்பது…” என்று தொடங்கவும் காந்தாரி இடைமறித்து “அனைத்து ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான் தந்தையே” என்றாள். அசலன் “தம்பி, அறிவிப்பை வெளியிடலாமா? விருஷகனே நேரில் சென்று பீஷ்மரிடம் சொல்லட்டும். அறிவிப்புடன் சத்யவிரதரை தொடர்ந்து அனுப்புவோம்” என்றார். “ஆம்… அதுவே முறை” என்றான் சகுனி.

முந்தைய கட்டுரைஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் உரை கடிதங்கள்