‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9

நூல் இரண்டு : கானல்வெள்ளி

[ 5 ]

அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான்.

“அரசே, தங்கள் உடல்நலம் பற்றி…” என விதுரன் தொடங்கியதும் “நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்” என்றான் திருதராஷ்டிரன்.

“இல்லை அரசே… நான்” என விதுரன் மீண்டும் தொடங்க திருதராஷ்டிரன் கையைத்தூக்கி “சற்று தாமதமாகுமென்றாலும் என்னாலும் உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் விதுரா. நான் நேற்று என் அன்னை சொன்னபோது நம்பவில்லை. ஆனால் இன்றுபகல் முழுக்க சிந்தனைசெய்தபோது மெதுவாக என் மனம் திறந்தது. சூதனை அழைத்து பீஷ்மபிதாமகரின் பழைய போர்களைப் பற்றிக் கேட்டேன். அவர் பால்ஹிகரிடம் போரிட்டிருக்கிறார். பலாஹாஸ்வரிடம்கூட போரிட்டிருக்கிறார். வலிமை இருந்தாலும் எந்தப் போர்ப்பயிற்சியும் இல்லாத என்னை அவரால் எளிதில் வெல்லமுடியும் என்று உனக்குத் தெரியாமலிருக்காது.”

“ஆம் தெரியும்” என்று விதுரன் சொன்னான். “ஆனால் இந்தப்போரை நான் வேறு ஒரு திட்டத்துடன்தான் அணுகினேன்” என்றான். “அரசே, பீஷ்ம பிதாமகர் சென்ற பதினெட்டு வருடங்களாக இந்நகரில் இல்லை. அவரை இன்றுள்ள தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள். அவருக்கு இந்நகர் மீதுள்ள உரிமை என்ன என்று எவருக்கும் தெரியாது. இன்றுகூட அவருக்கென ஒரு கொடி இல்லை. கங்கர்களின் மீன்கொடியே அவருக்கும் இருக்கிறது. அஸ்தினபுரியுடன் அவருக்கு இன்று எந்த உறவும் இல்லை.”

“ஆம்” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, இன்று உங்களுக்கு முடிசூட்டி ஆதரிக்கவேண்டியவர் அவர். அவர் சொன்னால் இந்நகரம் அதை ஏற்கவேண்டும். இதற்குள் அவர் உங்களைப் போரில் வென்ற கதை அஸ்தினபுரியில் பாடப்பட்டிருக்கும். உங்களைப்போரில் வென்றவர் விவாதசந்திரத்தின் விதிப்படி இந்நகரின் அரசனேயாவார். இம்மணிமுடியை எவருக்கு அளிக்கவும் அவர் உரிமை பெற்றவர்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையசைத்தான்.

“அவரோ நாடாளமாட்டேன் என சூளுரைத்தவர். ஆகவே அவர் அளிப்பதே அரசாட்சி. இனி அவரை நாம் நம் பக்கம் இழுத்தாலே போதும். பாண்டுவோ பிறரோ எந்த நெறிநூலையும் இனி உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்ட முடியாது. பீஷ்மர் உங்களுக்கு அரசை அளிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் பீஷ்மரிடம் போர் புரிந்தாகவேண்டும். அதுதான் நூல்நெறி” விதுரன் தொடர்ந்தான்.

“ஆனால் அவர் பாண்டுவுக்கு அரசை அளித்தால் நான் என்ன செய்யமுடியும்?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் “அவர் மூத்தவர் நீங்களிருக்க ஒருபோதும் இளையவருக்கு அரசளிக்கமாட்டார். அவர் இந்நாட்டின் பிதாமகர். அவருக்கு அந்த இடம் அவர் இக்குலநெறிகளை மீறமாட்டார் என்பதனால்தான் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.

திருதராஷ்டிரன் ஐயத்துடன் தலையை அசைத்து “என்னால் இதையெல்லாம் புரிந்துகொள்ளமுடியவில்லை. இவற்றையெல்லாம் கேட்கையில் என் தலை பாறைபோல கனக்கிறது” என்றான். “நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை அரசே. நான் உங்களுக்காகப் பேசுகிறேன்” என்றான் விதுரன். “பீஷ்மபிதாமகரின் ஆசியுடன் தாங்கள் அரியணை ஏறவேண்டும். காந்தார இளவரசியையும் அடையவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன்.”

திருதராஷ்டிரன் தலையை அசைத்தான். “விதுரா உண்மையில் என் நெஞ்சிலிருந்து பிற அனைத்தும் விலகிவிட்டன. பிதாமகர் என்னைத் தூக்கி அறைந்த அதிர்ச்சி மட்டும்தான் என் உடலிலும் நெஞ்சிலும் உள்ளது. அப்படியென்றால் என் உடலின் ஆற்றலுக்கெல்லாம் என்ன பொருள்? எல்லாம் ஒரு தோற்றம்தானா? என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா? என் உடலில் ஒரு குழந்தை அடித்தாலே உடைந்துவிடும் நரம்புமையங்கள் உள்ளன என்றால் நான் வளர்த்து வைத்துள்ள இந்த மாமிசமெல்லாம் எதற்காக?”

தலையைச் சரித்து ஆட்டிக்கொண்டே பேசிய திருதராஷ்டிரன் திடீரென வெறி எழுந்து பேரொலியுடன் தன் மார்பை அறைந்தான். விதுரன் திடுக்கிட்டு பின்னகர்ந்தான். திருதராஷ்டிரன் தன் கைகளால் தன் மார்பையும் தலையையும் மாறி மாறி அறைந்துகொள்ளத் தொடங்கினான். சிறுவனாக இருந்த காலம் முதலே அது அவன் வழக்கம். தன் உடலை தானே தொட்டுக்கொள்வதும் அறைந்துகொள்வதும். வருடத்தொடங்கினாலும் அறையத்தொடங்கினாலும் அவனே நிறுத்திக்கொண்டால்தான். தன்னத்தானே தொடுவதன் மூலம் தானிருப்பதை அவன் உணர்வதாகத் தோன்றும்.

எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் அந்தக்காட்சி விதுரனை தொடைநடுங்கச் செய்தது. தன் கரிய பெருங்கைகளால் தன்னையே வெடிப்பொலியுடன் அறைந்து கொண்டிருக்கும் பேருருவத்தைப் பார்த்தபடி அவன் பின்னடைந்து சுவரில் ஒட்டி நின்றான்.

களைப்புடன் திருதராஷ்டிரன் தலையை முன்னால் சரித்து இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான். அவனிடம் தன்னிரக்கம் ஊறி கணம் கணமாகப் பெருகியது. “நான் சாகவிரும்புகிறேன் விதுரா… நான் இன்றுவரை உயிர்வாழ்ந்தமைக்குக் காரணம் ஒன்றுதான், என் வலிமைமீதான நம்பிக்கை. நான் உண்பதைக் கண்டு அத்தனைபேரும் திகைக்கிறீர்கள் என்று எனக்குத்தெரியும். என் தோள்களையும் கைகளையும் கண்டு என்னருகே வரவே அஞ்சுகிறீர்கள் என்றும் அறிவேன். அந்தத் தன்னுணர்ச்சிதான் நான். இப்பிறவியில் நான் வேறொன்றும் அல்ல. என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் ஒரு பேராற்றல் என்றுதான் எண்ணிக்கொள்வேன். அந்த ஆற்றல் ஒரு மாயை என்றால் நான் வெறும் மாமிச மலைதானே? உணவை மலமாக ஆக்குவது மட்டும்தானே இந்த உடலின் வேலை? நான் சாகவிரும்புகிறேன்.”

அவனுடைய சதைக்கண்கள் தத்தளித்து உருண்டன. அவற்றிலிருந்து சேற்றுக்குழியில் நீர் ஊறி வடிவதுபோல கண்ணீர் வடிந்தது. “என்னைக் கொன்றுவிடச் சொல்… ஒரு ஏவலனைக்கொண்டு என் கழுத்தை வெட்டச்சொல். நான் வாழவிரும்பவில்லை. புழுவாக நெளிந்துகொண்டு இங்கே இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் பிதாமகர் கொல்லாமல் விட்டார்? கொன்றிருந்தால் நான் அந்தக் களத்திலேயே இறந்திருப்பேன். என்னுடையவை என நான் கொண்டிருந்த அனைத்து அகங்காரத்தையும் இழந்து இப்படி தூக்கி வீசப்பட்ட அழுகிய பொருள்போல கிடக்கமாட்டேன்… இல்லை கண்ணில்லை என்பதனால் கொல்லவும் தகுதியற்ற இழிபிறவி என என்னை நினைத்தாரா?”

மீண்டும் வெறிகொண்டு தன் இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அறைந்து கொண்டு பற்களைக் கடித்தான் திருதராஷ்டிரன். யானை தேங்காய் ஓட்டை மெல்வது போன்ற அந்த மெல்லிய ஒலி விதுரனை கூசச்செய்தது. “ஆனால் நான் சாவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. துவந்தயுத்தமே தேவையில்லை. மீண்டும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் செல்கிறேன். அவரைக் கொல்லமுயல்கிறேன். அவர் என்னைக் கொல்வார். அது அவருக்கும் பாவமல்ல. எனக்கும் எளிய சாவு… விதுரா, நான் விரும்புவது எல்லாம் ஆயுதத்தால் வரும் ஒரு சாவை மட்டும்தான். குருடனாக நோயில் சாகாமல் நான் களத்தில் சாகவேண்டும்…”

“அரசே, இந்தச் சிந்தனைகள் உகந்தவை அல்ல” என்றான் விதுரன். “உகந்ததோ இழிந்ததோ நானறியேன். இச்சிந்தனையைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை இப்போது. இரவும் பகலும் இதையே கற்பனைசெய்கிறேன். என் வாழ்க்கை இழிந்தது என்றாகிவிட்டது. என் சாவு வீரனுக்குரியதாக இருந்தால் போதும்.” அவன் இரு கைகளையும் விரித்து ‘ஆ’ என அடிபட்ட மிருகம்போல வீரிட்டான்.

அவனுடைய கரிய உடலில் இருந்து புற்றிலிருந்து ராஜநாகங்கள் எழுவதுபோல கைகால்கள் நெளிந்தன. தலையைச் சுழற்றியபடி தசைக்கூட்டங்கள் அதிர அவன் ஓலமிட்டான். விதுரன் திகைப்புடன் பார்த்துநின்றான். பார்வையின்மை மட்டும்தானா அந்த மூர்க்கத்தைக் கிளப்புகிறது? அப்படியென்றால் மனிதனை மனிதக்கட்டுக்குள் வைத்திருப்பவை விழிகள்தானா?

அம்பிகை உள்ளே வந்து “என்ன ஆயிற்று? கூச்சலிடுகிறான் என்று விப்ரன் சொன்னானே” என்றாள். திருதராஷ்டிரன் எதிர்பாராத கடும் சினத்துடன் அவளை நோக்கித் திரும்பி “வெளியே போ பேயே… நீதான் என் வாழ்க்கையை அழித்தாய். உன்னுடைய இருட்டையெல்லாம் என் மேல் ஏற்றிவைத்தாய்” என்று கூச்சலிட்டான். “நான் உன்னுள் தேங்கிய இருட்டு. உன்னுடைய தமோகுணமெல்லாம் என் உடம்பாகியது… உன் ஆசைகளையும் பொறாமைகளையும் காழ்ப்புகளையும் என்மேல் சுமத்திவிட்டாய். போ வெளியே போ! உன் குரல் கேட்டால் உன்னை அப்படியே நெரித்துக்கொன்றுவிடுவேன்.”

அம்பிகை குரோதம் கொண்ட முகத்துடன் முன்னால் வந்தாள். “கொல்… கொல்பார்க்கலாம். உன் கையால் நான் சாவேன் என்றால் அதுதான் என் முக்தி… மூடா, உன் மூர்க்கத்தனத்துக்கு எல்லை வகுக்கத்தான் தெய்வங்கள் உனக்கு கண்ணைக் கொடுக்கவில்லை. நீ என்னை வெறுப்பதைவிட நான் உன்னை வெறுக்கிறேன். கோட்டைக்கோபுரம் போல வளர்ந்தும் கிழவரிடம்போய் அடிவாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்… வெட்கமில்லாத பிறவி… மிருகம்” என்றாள்.

வெறியுடன் எழுந்த திருதராஷ்டிரன் தன் இருகைகளையும் படீரென்று அறைந்துகொண்டான். தள்ளாடி முன்னகர்ந்து குறுக்கே வந்த தூணில் முட்டி அதை ஓங்கி அறைந்தான். அது கட்டிடத்துடன் சேர்ந்து அதிர்ந்து சுண்ணம் உதிர்ந்தது. ‘ஆஆஆஆ’ என தாக்கவரும் யானை போல ஓசையிட்டு தலையை ஆட்டினான். விதுரன் நடுநடுங்கி மிகவும் பின்னால் நகர்ந்துவிட்டான். ஆனால் அம்பிகை அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். “இதோ இங்கே நிற்கிறேன்… வா! வந்து அறைந்து என்னைக் கொல்… ராட்சதனைப் பெற்ற பாதாளப்பிறவி நான். எனக்குரிய சாவுதான் அது” என்று கழுத்துத் தசைகள் அதிர தலையைச் சற்று முன்னால் நீட்டியபடி சொன்னாள்.

VENMURASU_EPI_59__
ஒவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

மேலும் இரண்டு காலடி எடுத்துவைத்தபின் திருதராஷ்டிரன் நின்று தன் தலையை இருகைகளாலும் ஓங்கி அறைந்தான். திரும்பி கீழே கிடந்த மரத்தாலான கனத்த பீடத்தைத் தூக்கி தன்னை அறைந்துகொள்ளப்போனான். விதுரன் அலறினான். அம்பிகை விதுரனை திகைக்கவைத்த அஞ்சாமையுடன் முன்னால் சென்று திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டாள். “தார்த்தா, வேண்டாம். வேண்டாம் மகனே” என்றாள். “வேண்டாம் நில்” என்றாள்.

திருதராஷ்டிரன் கனத்த பீடத்தை தரை உடையும்படி வீசிவிட்டு பின்னால் நகர்ந்து அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான். அவள் அவனருகே விழுந்து அவன் முழங்கால்களைப் பற்றிக்கொண்டு “வேண்டாம் மகனே. எல்லாம் நான் செய்த பிழை. எனக்குள் என்ன இருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. நான் தேடுவதென்ன, எது கிடைத்தால் என் அகம் நிறையும், எதுவுமே தெரியவில்லை. இருபதாண்டுகாலமாக உள்ளூர எரிந்துகொண்டிருக்கிறேன். அந்தத் தீதான் உன் கண்களைக் கருக்கிவிட்டது” என்று அழுதாள்.

அவன் தலையை கைகளால் அணைத்து அவன் தோள்களில் முகம் சாய்த்து அவள் அழுதாள். “உன்னை அரசனாக்க வேண்டுமென்று நான் விரும்புவது அதற்காகத்தான். உன்னை அனாதையாக இன்னொருவர் தயவுக்கு விட்டுவிட்டு நான் இறந்தேன் என்றால் சொர்க்கத்திலும் எனக்கு அமைதி இருக்காது. உன்னை இந்நாட்டுக்கு அரசனாக ஆக்குவதுதான் நான் உனக்குச் செய்யும் பிழையீடு.”

திருதராஷ்டிரனின் கனத்த கரம் மலைப்பாம்பு போல நீண்டு வந்து அவள் தலையை வளைத்தது. அவள் கன்னங்களையும் தோள்களையும் கழுத்தையும் கைகளையும் அவன் கைகள் மெதுவாக வருடின. குயவனின் கைகள் களிமண்ணை அறிவதுபோல அவளை அறிந்தான். அவனுடைய வருடல்களை இருபதாண்டுகளாக நன்கறிந்திருந்த அவள் தன் உடலை அவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். அவன் கைகள் அவளை பதற்றத்துடன் தீராத தவிப்புடன் தடவிச்சென்றன. அவள் அவன் தோளில் முகம் வைத்து கண்களை மூடிக்கொண்டாள். கண்ணுடன் அவன் உலகுக்குள் புகமுடியாதென்பதுபோல. அவர்கள் விதுரன் இருப்பதை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தனர்.

விதுரன் அந்தக்காட்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். தன் அன்னையை அதைப்போல தான் தொட்டு எவ்வளவு நாளாகிறது என்று எண்ணிக்கொண்டான். அம்பிகை அடையும் இந்தப்பேரின்பத்தை முலையூட்டும் நாட்களில் மட்டுமே பிற அன்னையர் அறிந்திருப்பார்கள். தீராத கைக்குழந்தையாக அவனை மடியிலிட்டு வளர்க்க அவளுடைய அகம் ஏங்கியிருக்கும். அந்த ஏக்கமே அவனை விழியிழந்தவனாக ஆக்கி அவளுக்குப் பரிசளித்திருக்கும். உறவுகளை உருவாக்கித்தந்து மனிதர்களுடன் விளையாடும் பிரஜாபதி யார்?

அம்பிகை கண்விழித்து விதுரன் நிற்பதைப்பார்த்து வெட்கி புன்னகை செய்தாள். எழுந்துகொண்டு திருதராஷ்டிரனிடம் “எழுந்திரு… அரசர்கள் தரையில் அமரக்கூடாது” என்றாள். திருதராஷ்டிரன் ஒரு கையை தரையில் ஊன்றி எழுந்தான். அம்பிகை விதுரனிடம் “இவன் புஜங்களைப்பிடிக்கையில் எனக்கு அச்சமாக இருக்கிறது. என் இரு கைகளைக் கொண்டும்கூட பிடிக்க முடியவில்லை” என்றாள். அவள் பேச்சு வழியாக சற்று முன் சென்ற உன்னதத்தை தனக்குள் மறைத்துக்கொள்ள விழைகிறாள் என்று விதுரன் நினைத்துக்கொண்டான்.

“நான் உங்கள்மேல் சினம்கொண்டிருக்கக் கூடாது அன்னையே” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் நான் எவரிடம் சினம் கொள்வதென்றும் தெரியவில்லை… என் உடலும் நீங்களும் மட்டுமே இருக்கிறீர்கள் எனக்கு” என்றான். தலையை ஆட்டியபடி “என் உடல் கோட்டை போலிருக்கிறது. இதற்குள் நான் சிறையுண்டிருக்கிறேன்… நினைவறிந்த நாள்முதல் இதன் மூடிய சுவர்களை அறைந்துகொண்டிருக்கிறேன்…”

“ஹஸ்தி ஆண்ட இந்நகரம் இருக்கிறது உனக்கு… நீ அதன் மன்னன்” என்றாள் அம்பிகை. “ஆம், அன்னையே. எனக்காக அல்ல. உங்களுக்காக. உங்களை பேரரசி ஆக்குவதற்காக நான் இந்நகரை கைப்பற்றுவேன். அதற்காக பிதாமகனையோ மூதன்னையையோ எவரைக்கொல்லவும் அஞ்சமாட்டேன்” என்றான் திருதராஷ்டிரன். அவள் கைகளைப்பிடித்து ஆட்டியபடி “உங்களுக்காக இந்த உலகை அழிப்பேன்… உலகையே அழிப்பேன்” என்றான்.

விதுரன் “அரசி, நான் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. பீஷ்ம பிதாமகரை காணவேண்டும். தங்கள் விருப்பத்தையும் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்” என்றான். அம்பிகை திருதராஷ்டிரனிடம் “ஓய்வெடு தார்த்தா. உன் உடல் களைத்திருக்கிறது” என்று சொல்லி அவனை மஞ்சம் நோக்கி இட்டுச்சென்றாள். அவள் விடை தராததனால் விதுரன் வெளியே சென்று காத்திருந்தான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்தாள். விப்ரன் யாழேந்திய இரு சூதர்களுடன் உள்ளே சென்றான்.

“துயில்கிறான்” என்று அம்பிகை சொன்னாள். “நான் மிகவும் அஞ்சிவிட்டேன்” என்றான் விதுரன். “நீயும் அவனும் பதினெட்டு வருடங்களாக சேர்ந்திருக்கிறீர்கள். அவன் இதுவரை ஒருமுறையேனும் உன்மீது சினம் கொண்டிருக்கிறானா?” என்றாள் அம்பிகை. விதுரன் சிந்தித்ததுமே வியந்து “இல்லை அரசி” என்றான்.

“எனக்கு நிகராக உன்மீதும் அவன் பேரன்பு கொண்டிருக்கிறான். நான் நேற்று உன்னைப்பற்றி சினத்துடன் பேசியபோது தரையை ஓங்கி அறைந்தான். பேசாதே, என் தம்பி நான் சாகவேண்டுமென விரும்பினால் நான் சாவையே தேர்ந்தெடுப்பேன் என்று கூவினான்” என்றாள் அம்பிகை.

விதுரன் வேறு திசையை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான். “என் மைந்தனின் மனம் கடல்போன்றது. அவனிடம் சிறுமை வாழாது. அதை நான் நன்றாக அறிவேன்” என்றாள் அம்பிகை. அவள் குரல் சற்று இறங்கியது. “என்னுடைய தீயூழ் அவனுக்கு அன்னையானேன். என்னுடைய அனைத்து சிறுமைகளையும் பதினெட்டாண்டுகளாக அவன் தாங்கி வருகிறான்.” அவளால் பேசமுடியவில்லை.

விதுரன் “சற்றுமுன் நீங்களிருவரும் இருந்த நிலையைக் கண்டேன் அன்னையே. கன்றை நக்கும் பசுபோல அரசர் உங்களை அறிந்துகொண்டிருந்தார். நீங்கள் ஏழுபிறவியின் நல்லூழை அடைந்தவர் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். அன்னையே நீங்கள் இழந்தவை அனைத்தும் அவர் வடிவில் வரவில்லையா? பத்து ஆண்மகன்களின் ஆற்றல். நூறு ஆண்மகன்களின் அன்பு… விழியிழந்தவரின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன?” என்றான்.

அம்பிகை உதடுகளை கடித்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “நீ பீஷ்மரிடம் சென்று என்ன சொல்லப்போகிறாய்?” என்றாள். விதுரன் பேசாமல் நின்றான். “அவரிடம் பேசிப்பார். அவர் ஒப்புக்கொண்டாரென்றால் அனைவருக்கும் நல்லது. இல்லையேல் நான் என் வழியில் செல்வேன்” என்றாள். ஆசியளித்துவிட்டு அம்பிகை திரும்பி நடக்க விதுரன் அவளை சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான்.

விதுரன் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். களஞ்சியத்தில் பணிகள் மிகுந்திருப்பதை எண்ணிக்கொண்டான். அத்தனை பணிகள் இல்லாமல் அவனால் நிறைவாக இருக்க முடிவதில்லை. ஆனால் பணிகளை அவன் விரும்பவுமில்லை. ஊற்றில் தேங்கும் நீரை அள்ளி இறைப்பதுபோலத்தான். பணிகள் வழியாக எஞ்சிய ஆற்றலை இறைத்து முடிக்கவில்லை என்றால் மறுநாள் காலை உடலும் உள்ளமும் சுமையாகிவிடுகின்றன. குதிரைகள் அதற்காகத்தான் ஓடுகின்றன. பீஷ்மர் அதற்காகத்தான் ஆயுதங்களைப் பயில்கிறார்.

அரண்மனைக்கோட்டை முகப்பை அடைந்தபோதுதான் விதுரன் எங்கும் ஒரு பரபரப்பை உணர்ந்தான். உற்சாகமான குரல்களுடன் வீரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வண்டிகளில் விதவிதமான ஆயுதங்களும் பொருட்களும் முன்னும்பின்னும் சென்றன. எதிர்ப்பட்ட அனைத்து வீரர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியும் வேகமும் தெரிந்தன. ரதத்தை மெல்ல ஓட்டச்சொல்லிவிட்டு பார்த்தபடியே சென்றான். உருக்கி ஊற்றப்பட்ட உலோகம்போல வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அதில் நிழல்கள் துரத்திவர மக்கள் விரைந்துகொண்டிருந்தனர்.

நாற்சந்தியில் சூதப்பாடகன் பாடிக்கொண்டிருந்தான் “வருகிறது பெரும்போர்! பாரதத்தை வெல்ல அஸ்தினபுரி என்னும் புலி குகைவிட்டெழுகிறது. வில்நாண்கள் இறுகட்டும். இறுகட்டும் உள்ளங்கள். அம்புநுனிகள் மின்னட்டும். மின்னட்டும் விழிமுனைகள்!” சிலகணங்கள் திகைத்தபின் விதுரன் அனைத்தையும் புரிந்துகொண்டான். அங்கே சூதனைச் சூழ்ந்திருந்த குடிமக்களின் பற்களும் கண்களும் ஒளியுடன் தெரிந்தன.

“இது கோடை. எரிகிறது நிலம். பதறிப்பதுங்குகின்றன பறவைகள். அனல் பொழிந்து திசைகளை மூடுகிறது. ஆனால் தெற்குவானில் மின்னல்கள் எழுகின்றன. துயிலெழப்போகும் சிம்மம் போல வானம் மெல்ல முழங்குகிறது” சூதன் குரல் எழுந்தது. “வரப்போகிறது மழை! விண்ணின் கங்கைகள் மண்ணிறங்கப் போகின்றன. பெருவெள்ளம் கோடிசர்ப்பங்களாக படமெடுத்து தெருக்களை நிறைக்கும். கோட்டைக்கதவுகளை உடைக்கும். அரண்மனை முகடுகளை மூழ்கடிக்கும். அரியணைகளைத் தூக்கி வீசும்!”

“மாகதன் அஞ்சி வாயிலை மூடுகின்றான். பாஞ்சாலன் அறைக்குள் பதுங்கிக்கொண்டான். மாளவன் கப்பத்தை இப்போதே எடுத்துவைத்துவிட்டான். அங்கன் தன் மகளை அலங்கரிக்கிறான். வங்கன் பயந்து ஓடிவிட்டான்.” கூச்சல்கள், சிரிப்புகள். நாணயங்களை அள்ளி சூதனின் பெட்டியில் போட்டு குதூகலித்தனர். “பார்தவர்ஷம் அஞ்சிய குழந்தை அன்னையை காத்திருப்பது போல அமர்ந்திருக்கிறது இதோ!”

விதுரன் ரதத்தை ஓட்டினான். புழுதி பறந்த தெருக்களில் வெயில்காய்ந்த சுவர்ப்பரப்புகளிலிருந்து அனல் வந்து நிறைந்திருந்தது. குதிரைகளில் வந்த நான்கு படைவீரர்கள் சந்தையை ஒட்டி நின்றுகொண்டிருந்த குடிகாரர்களிடம் “கிளம்புங்கள்… நாற்சந்திகளில் கூடி நிற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்… ரதங்களுக்கு வழிவிடுங்கள்” என்று கூவினார்கள். எவரையும் தீண்டாமல் சாட்டையைச் சுழற்றியபடி குதூகலித்துச் சிரித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றனர்.

மனித ஆயுதங்கள். அவற்றுக்குப் பொருள்வருவதே போரில் மட்டும்தான். போரில் இறப்பதே அவற்றுக்கான முழுமை. விதுரன் சிரித்தபடியே நகரினூடாக கருவூலம் நோக்கிச் சென்றான்.

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் வினாக்கள்
அடுத்த கட்டுரைகருத்துக்களும் தகவல்களும்