ஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்

திண்ணையிலே சூரயா என்பவர் எழுதிய கடிதமே இக்கடிதமெழுத தூண்டுதல். திண்ணையிலே வந்துள்ள சில கடிதங்களும் காரணம்.
பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள் கவனித்திருக்கும் விசயம்தான் இது. சமீபகாலமாக அதாவது இரண்டு வருடங்களாக ஜெயமோகன் மீது வந்துகொண்டிருக்கும் தனிநபர்த்தாக்குதல்கள். இப்போது இவை மிக அத்துமீறிச்சென்றுவிட்டன என்பதைக் காணலாம். கிட்டத்தட்ட எல்லாச் சிற்றிதழ் எழுத்தாளர்களும் தங்கள் வேற்றுமைகளை விட்டுவிட்டு ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்டமுடிவை எடுத்து இதைச் செய்வதுபோல எனக்குத் தோன்றுகிறது.
காலச்சுவடு இதழ் இதிலே முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. கடந்த பல வருடங்களாக அதிலே ஜெயமோகனைத் தனிப்படத் தாக்கி எழுதிய கட்டுரைகளும் குறிப்புகளும் வராத இதழே இல்லை . ஒரு ‘அப்செஷன் ‘ மாதிரி அவர்களுக்கு. அவர் மனநோயாளி என்று செய்திபோடுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்வதாக எழுதுகிறார்கள். அவரே அவரைப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதுவதாகச் செய்தி போடுகிறார்கள். சமீபமாக அவர் மலையாளத்தைத் தூக்கி தமிழிலே பேசுவதாகச் செய்திபோடுகிறார்கள். இலக்கியம் வாசிப்பவர்களுக்குத் தெரியும் இதெல்லாம். தமிழிலே சுந்தர ராமசாமிதான் பலவருடங்களாக மலையாளத்தை மிகவும் தூக்கி பேசியும் எழுதியும் வருகிறவர் என்பது.

ஜெயமோகன் தான் அந்த ‘மித் ‘ஐ உடைத்தவர். மலையாளத்தில் தமிழைவிட பரவலான ஒரு அறிவுச்சூழல் இருக்கிறது என்று அவர் சொல்லுகிறார். ஆனால் சிறுகதை கவிதை ஆகியவற்றிலே மலையாளப் படைப்புகள் தமிழளவுக்கு முன்னேறவில்லை என்பதை தன் நூல்களிலும் கட்டுரைகளிலும் பத்துப் பதினைந்து வருடங்களாக அவர் மீண்டும் மீண்டும் எழுதி வைத்திருக்கிறார். அதைத்தான் மலையாளத்திலும் சொல்கிறார். அவரை மலையாளத்திற்கும் தமிழுக்கும் சண்டைமூட்டுபவர் என்று ஒருவர் எழுதுகிறார் காலச்சுவடிலே. அதெல்லாம் காலச்சுவடுக்கு பொருட்டே இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இப்போது படிக்கவரும் இளைஞர்கள் அதையெல்லாம் எங்கே தெரிந்துகொள்ளப் போகிறார்கள்  நாம் எழுதுவதை நம்பவும் கொஞ்சம்பேர் இருப்பார்கள் என்றுதான்.
அ.மார்க்ஸ் இ பொ.வேல்சாமி ஆகியோர் அடுத்தபடியாக இப்படி தொடர்ச்சியாகத் தாக்கி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். பொ வேல்சாமி ஜெயமோகன் எழுதுவதெல்லாம் காப்பி என்று எழுதுகிறார். இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் காப்பி என்று அவர் எழுதினால் இன்னொருவர் அதிலே உள்ள எல்லாமே தப்பு என்று எழுதுகிறார். தப்பாக எழுதியது யார் அந்தமூலநூலாசிரியரா காப்பி அடித்தவரா என்று கேட்டால் தப்பு மட்டும் இவரே சொந்தமாக எழுதினது என்கிறார்கள். ஜெயமோகனின் நூல்வெளியீட்டுக் கூட்டத்திலே கலந்துகொண்ட கந்தர்வனிடம் இம்மாதிரி விஷயங்களை நீங்கள் செய்யலாமா என்று மனம்வருந்திக் கேட்டதாக அ மார்க்ஸ் புதிய காற்று என்ற இதழிலே அவரே எழுதினார் . இப்போது கந்தர்வனை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து விலக்கியிருப்பதாக சோதிப்பிரகாசம் எழுதியதை வாசித்தேன்.
திண்ணை இதழிலே ரவி சீனிவாஸ் என்பவர் ஜெயமோகன் ஒன்றுமே தெரியாதவர் அயோக்கியர் என்றெல்லாம் எழுதுகிறார். ஒரு சின்ன விஷயம் கிடைக்கும்போது இவர்கள் கொள்ளக்கூடிய ஆனந்தம்இ பரவசம் எல்லாம் ஆச்சரியம் தரக்கூடிய விஷயங்கள். அப்படியே ஆட்டம் போடுகிறார்கள். ஒன்று சேர்ந்து கொண்டாடுகிறார்கள். திண்ணை இதழிலே பித்தன் என்று ஒருவர் ஜெயமோகனை எல்லாரும் திட்டுவது பற்றி மிக சந்தோஷமாக எழுதுகிறார். அவர் யார் ? கிருஷ்ணா என்று ஒருவர் ஜெயமோகன் எழுதியது அசட்டுத்தனம் என்றும் தன் தகுதியினால் அதற்கு பதில் சொல்லவில்லை என்றும் எழுதினார். சரி  அப்படி அவர் என்னத்தான் எழுதினார் என்று பார்த்தால் எனக்கு அதிர்ச்சி. எட்டாம் கிளாஸ் நான் டிடெய்ல் பாடம் மாதிரி சில கதைகள் கட்டுரைகள் நாவல்! தேவையா இதெல்லாம் ?
சென்றமாதம் சென்னையிலே ஜெயமோகன் வெளியீட்டுவிழாவுக்கு நானும் போனேன். அப்போது அங்கேபேசிக் கொண்டிருந்தார்கள்.வழக்கமாகச் சென்னையிலே இலக்கியக் கூட்டத்துக்கு வரக்கூடியவர்கள் எவருமே இந்தக் கூடத்துக்கு வரவில்லையாம் . அவர்கள் போன் செய்து போகக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்களாம். முந்திய கூட்டத்திற்கு நல்ல கூட்டம் திரண்டு ஒரு செய்தியாக ஆகிவிட்டது  அப்படி நிகழகூடாதாம்.ஆகவே யாரும் வரக்கூடாதாம்.ஆனாலும் ரொம்ப நல்ல கூட்டம் வந்தது. புதியவாசகர்கள் எல்லாரும்.

அங்கே ஒருவர் சொன்னார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு பிறகு ஜெயமோகன் எழுதிய எந்த நூலுக்கும் மதிப்புரையே வரவில்லை .கன்னியாகுமாரி நாவலுக்கு ஒரு கருத்துகூட வரவில்லை. இப்போது பரபரப்பாக பேசப்படும் காடு ஏழாம் உலகம் நாவல்களுக்கும் கட்டுரைநூல்களுக்கும் எல்லாம் எங்கேயுமே மதிப்புரைகள் வரவில்லை. மதிப்புரைகள் போடக்கூடாது என்று சிலர் கூடி முடிவு எடுத்திருக்கிறார்கள். சங்கசித்திரங்கள் போன்ற நூல்களெல்லாம் வந்த விஷயமே தெரியவில்லை.
இப்படி நடப்பதெல்லாம் ஒரு சதி போல உள்ளது. எவருக்குமே அவரது எழுத்துக்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எழுத்தாளர் என்ன செய்கிறார் என்பதா முக்கியம் ?எப்படி எழுதுகிறார் என்பதுதானே ? அதைப்பற்றி எங்குமே பேச்சு இல்லை. இத்தனை விஷயங்களை திட்டமிட்டுசெய்தபோதிலும் அவரது எழுத்துக்களை வாசகர்கள் விரும்பிப் படிப்பதை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவைதான் அதிகமாக விற்கின்றன. அந்தக் கூட்டத்திலே மேடையில் நாஞ்சில்நாடன் உண்மையான கோபத்துடனும் வேதனையுடனும் இதைத்தான் கேட்டார். ‘ ஜெயமோகன் அவர்மீது பலர்கூடி சொல்லும் அவதூறுக்கும் தாக்குதலுக்கும் அவரது நாவல்கள் மூலமாகத்தான் திட்டவட்டமான பதிலை சொல்லிவருகிறார். இதுதான் நல்ல எழுத்தாளன் சொல்லக் கூடிய பதில். இந்த அளவுக்கு தீவிரமாகவும் அதிகமாகவும் நுட்பமாகவும் எவருமே தமிழில் செயல்பட்டதில்லை. ஆனாலும் கூடிச்சேர்ந்து தாக்குகிறார்கள். அவர் அப்படி என்னய்யா கொலையா செய்துவிட்டார் ? ‘ என்று அவர் கேட்டார்.அது எனைப்போன்ற வாசகர்கள் பலருடைய மனதிலே உள்ள கேள்வி.
ஜெயமோகனை இதெல்லாம் பாதிக்காமல் இருக்கலாம். இத்தனை கட்டுரைகள் தாக்கி எழுதப்பட்ட நேரத்தில்தான் அவர் காடு, ஏழாம் உலகம் எல்லாமே எழுதியிருக்கிறார். ஆனால் என்னைப்போன்ற வாசகர்களை இது கண்டிப்பாக புண்படுத்துகிறது. நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு எழுத்தை எழுதியவரை அசடு அயோக்கியன் மனநோயாளி என்றெல்லாம் சிலர் எழுதினால் நம்மையே எழுதியதுபோல இருக்கிறது. ஏழாம் உலகம் இப்போதுதான் படித்தேன். எப்படிப்பட்ட நாவல் அது . நம் வாழ்க்கையின் கடைசி மிச்சம் என்ன என்று கேட்கவைத்துவிட்டது. ஒருவாரம் தூக்கமே இல்லாமல் செய்துவிட்டது . என்ன ஒரு யூனிட்டியும் பெர்பெக்ஷனும் . ஒரு சொல் எடுக்க முடியாது. நுட்பமான நகைச்சுவை. மனிதவாழ்க்கையைப்பற்றிய அப்செர்வேஷன்கள் கவிதை .இத்தனை தரமாக எழுதும் ஒருவர் மீது ஏன் இத்தனை வெறுப்பும் காழ்ப்பும் நம்மில் சிலருக்கு வருகின்றன ? அப்படி வெறுப்பைக் கொட்டுபவர்களில் எவருமே சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே எழுதியதாகவும் தெரியவில்லை. அவர்களுடைய கட்டுரைகளில் வெறும் தகவல்களும், அரசியல் சண்டைகளும் மட்டும்தான் உள்ளன. அதேசமயம் பெரிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன் நாஞ்சில்நாடன் முதல் சு வேணுகோபால் வரை எல்லாருமே ஜெயமோகனின் எழுத்துசக்தியை ஒருமனதாக அங்கீகாரம்செய்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது. வாசகர்கள் முக்கிய எழுத்தாளர்கள் ஆகியோரால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை இலக்கியத்துடன் உறவேயில்லாத சிலர் ஏன் ஒழித்துக்கட்டிவிட முயல்கிறார்கள் ?
யார் எப்படி முயற்சி செய்தாலும் நல்ல எழுத்து வாசகர்களால் வாசிக்கப்படும். அதைப்பற்றிய பேச்சும் பரவலாக இருக்கும். அதை எழுதியவர் மதிக்கவும்படுவார். நாம் நம்முடைய சின்னத்தனங்களை அவரைப்பற்றிக் காட்டிக் கொண்டால் அதுவும் சேர்ந்து சரித்திரத்திலே இருந்துகொண்டிருக்கும் அவ்வளவுதான். அப்படி அல்லாமல் இலக்கியவாசனையே இல்லாத காலச்சுவடு கண்ணனோ  மார்க்ஸோ ரவி சீனிவாசோ சேர்ந்து ஜெயமோகன் போன்ற ஒரு பெரிய எழுத்தாளரை ஒழித்துக் கட்டிவிட முடியுமா என்ன ?அப்படி அவர்கள் நினைக்கவும் முயற்சி செய்யவும் இங்கே முடிகிறது என்பதே கஷ்டமான விஷயம். நம் இலக்கியக் கலாச்சாரம் அழிகிறது என்றுதான் அர்த்தம். இலக்கிய வாசகர்கள் இதைப்பற்றித்தான் கவலைப்படவேண்டும்.
 [email protected]

நன்றி

www.thinnai.com

முந்தைய கட்டுரைகனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
அடுத்த கட்டுரைகடிதம் – ரெ.கார்த்திகேசுவிற்கு