‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32

பகுதி ஆறு : தீச்சாரல்
[ 6 ]

மஞ்சத்தறையின் வாயிலை மிகமெல்லத்திறந்து நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். அம்பிகை அசைவில்லாமல் அங்கேயே கிடந்தாள். துயில் ஒலி இல்லை என்பதை அம்பாலிகை கவனித்தாள்.

அம்பாலிகை கதவை மெல்ல அசைத்தபோது அம்பிகையின் கண்ணிமைகள் அதிர்ந்தன. மெல்லத்திரும்பி “நீயா?” என்றாள். “உள்ளே வரலாமா அக்கா?” என்றாள் அம்பாலிகை. “வா” என்றாள் அம்பிகை. அம்பாலிகை ஓடிச்சென்று அம்பிகையின் மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்துகொண்டாள். நெல்மணி பொறுக்கும் சிறுகுருவி போல அவளிடம் ஒரு பதற்றம் இருந்தது.

அம்பிகை “என்னடி?” என்றாள். “அக்கா, நீ நேற்று அந்த தாலத்தில் எதைக் கண்டாய்?” என்றாள் அம்பாலிகை. “என் முகத்தை” என்றாள் அம்பிகை. அம்பாலிகை படபடப்புடன் “இல்லை, உன் முகம் விலகியபோது?” என்றாள்.

அம்பாலிகையின் சிறிய வட்டமுகத்தை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை புன்னகையுடன் அவள் கைகளைப்பிடித்து “அதில் கண்டவை எல்லாமே என் முகம்தானடி. அதை நான் இன்றுதான் உணர்ந்தேன்” என்றாள். “அப்படியா? நான் கண்டவை வேறு” என்றாள் அம்பாலிகை. “நீ கண்டவையும் உன் முகங்கள்தான்” என்றாள் அம்பிகை.

அம்பாலிகை சிலகணங்கள் தன்னுள் எண்ணிக்கொண்டு இருந்த பின்பு முழங்காலைக் கட்டிக்கொண்டு “எனக்கு ஏதும் புரியவில்லை அக்கா. குழப்பமாக இருக்கிறது. சியாமை இன்று மாலை நான் அரசரின் மஞ்சத்துக்குச் செல்லவேண்டும் என்றாள். அங்கே மஞ்சத்தில் அரசர் நான் அந்தத் தாலத்தில் கண்ட கோலத்தில் நேரில் வந்து என்னுடன் இருப்பார் என்றும் சொன்னாள்.”

அம்பிகை புன்னகை புரிந்தாள். “நான் போவதா வேண்டாமா அக்கா?” என்றாள் அம்பாலிகை. “ஏன்?” என்றாள் அம்பிகை. “எனக்கு பயமாக இருக்கிறது.” அம்பிகை சிரித்தபடி “பயமா, உனக்கா? பொய் சொல்லாதே” என்றாள். “எனக்கு வேறெதையும் பயமில்லை” என்றபோது அம்பாலிகையின் முகம் சிவந்தது. அம்பிகையின் அருகே படுத்து மெத்தையில் முகம் புதைத்தாள்.

“என்ன பயம்? சொல்லடி” என அம்பிகை கேட்டாள். “ஒன்றுமில்லை” என்று அவள் முகம் நீக்காமல் தலையசைத்தாள். “சொல்லடி” என்றாள் அம்பிகை. அம்பாலிகை எழுந்து அம்பிகையின் காதுக்குள் “குழந்தை பிறக்கும் என்றார்களே” என்றாள். “ஆம்.” அம்பாலிகை மீண்டும் காதுக்குள் “என் வயிறு பெரிதாக ஆகுமல்லவா?” என்றாள். “ஆம், குழந்தை வளரும் அல்லவா?” அம்பாலிகை எழுந்து தலையை அசைத்து “அதுதான் அக்கா எனக்கு பயம்” என்றாள்.

“நான் என்ன சொன்னாலும் நீ போகத்தான் போகிறாய்” என்றாள் அம்பிகை. “ஏனென்றால் தன்னிடமிருந்து எவருக்கும் விடுதலை இல்லை.” அம்பாலிகை குழப்பத்துடன் “என்ன சொல்கிறாய்?” என்றாள். “உனக்குப் புரியாது” என்றாள் அம்பிகை. சிணுங்கியபடி அம்பிகையின் கைகளைப்பிடித்துக்கொண்டு “எல்லாம் புரியும் சொல்” என்றாள் அம்பாலிகை.

அம்பிகை வெளிறிய உதடுகளால் புன்னகைபுரிந்து “நீ தாலத்தில் எதைக் கண்டாய்?” என்றாள். “அரசர் என்னுடன் விளையாட வந்தார். நாணலால் வில்செய்து தர்ப்பைகளைக் கொண்டு நாங்கள் ஆற்றில்மிதந்த இலைகளை எய்து மூழ்கடித்தோம்… அதன்பின் குதிரையில் ஏறி ஆற்றைக் கடந்து சென்றோம். மறுபக்கம் முழுக்க தாழைப்புதர்கள். அங்கே ஒரு யானை…”

அம்பிகை புன்னகைசெய்து “அதைத்தான் நீ காணமுடியும்… அதையே காண்பாய்” என்றாள். அம்பாலிகை உதடுகளைச் சுழித்து தலையைச் சரித்து சிந்தனைசெய்தபின் “அக்கா உண்மையிலேயே வருவது அரசரா?” என்றாள்.

“உண்மையிலேயே ஓர் ஆணை எந்தப்பெண் அடையமுடியும் அம்பாலிகை? அவனை அவள் உண்மையிலேயே காணத்தொடங்கும்போது வயதாகிவிட்டிருக்குமே?” “ஏன்?” என்றாள் அம்பாலிகை தலைசரித்து. “வேடிக்கையாகச் சொன்னேன்… அம்பாலிகை, யாராக இருந்தாலும் நாம் நம்முடைய பிரியங்களைத்தான் பார்க்கிறோம். எல்லா உறவுகளும் மாயத்தோற்றங்கள்தான்… பிறகென்ன?”

“இது மாயத்தோற்றமா அக்கா?” “நீ அரசரை பார்த்திருக்கிறாயல்லவா?” என்று அம்பிகை கேட்டாள். “ஆமாம்” என்றாள் அம்பாலிகை சிரித்தபடி. “நான் மூன்றுமுறை அவரைப்பார்த்தேன். முதலில் பிடிக்கவில்லை. மூன்றாம்முறை கொஞ்சம் பிடித்திருந்தது.” அம்பிகை “அது எவ்வளவு உண்மையோ அந்த அளவுக்கு இதுவும் உண்மை” என்றாள்.

“அப்படியென்றால் சரி” என்று அம்பாலிகை பெருமூச்சுவிட்டாள். “நான் மிகவும் அஞ்சிக்கொண்டிருந்தேன் அக்கா. ஏதேனும் மாயமிருக்குமோ என்று நினைத்திருந்தேன். உன்னிடம் அவர் எப்படி இருந்தார்?”

அம்பிகை புன்னகைசெய்து “அதைச் சொன்னால் நீ பயப்படுவாய்” என்றாள். “இல்லை பயப்படமாட்டேன்…” என்று அவள் தோளைப்பிடித்து அம்பாலிகை உலுக்கினாள். “சரி, சொல்கிறேன்… யானைபோல.”

அம்பாலிகை பயந்து எழுந்து “என்ன அக்கா சொல்கிறாய்?” என்றாள். “நானும் யானையாகத்தான் இருந்தேன் அம்பாலிகை.” “நீயா?” என்றாள் அம்பாலிகை பயத்துடன்.

“ஆமாம், நான் எப்படி யானையானேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் ஒரு நதிக்கரையில் மெல்ல இறங்கியபோது நதிக்கு மறுபக்கம் ஒரு மிகப்பெரிய மதயானை நிற்பதைக் கண்டேன். பிறைநிலவு ஆடியில் தெரிவதுபோல இரு தந்தங்கள்தான் முதலில் தெரிந்தன. இரவு மேலும் இருண்டு திரண்டு நடந்துவருவது போல அந்தயானை முன்னால் வந்து என்னைப்பார்த்து துதிக்கையைத் தூக்கி மாபெரும் சங்கொலி எழுப்பியது. பின்பு அந்த நதியில் இறங்கி அதில் பரவியிருந்த விண்மீன்களைக் கலக்கி அலையெழுப்பியபடி என்னை நோக்கி வந்தது. நான் முதலில் அஞ்சினேன் என்றாலும் அந்த அச்சமே என்னை முன்னால் கொண்டு சென்றது. நானும் நீரில் இறங்கி நின்று திரும்ப சங்கொலி எழுப்பினேன். அப்போதுதான் நானும் யானையாக இருப்பதைக் கண்டேன்.”

VENMURASU_EPI_32 _A
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“உண்மையாகவா அக்கா?” என்றாள் அம்பாலிகை. அவள் கைகள் நடுங்குவதைக் கண்டு அம்பிகை புன்னகைத்தபடி “இது வெறும் கதைதான் இளையவளே” என்றாள். “பிறகு என்ன ஆயிற்று அக்கா?” என்றாள் அம்பாலிகை. “யானைகள் என்ன செய்யும்? துதிக்கைகளைச் சுற்றிக்கொண்டு மத்தகங்களால் முட்டிக்கொண்டோம். தூண்கள் போன்ற கால்களால் காட்டை மிதித்து அழித்தோம். பெரிய மரங்களைப் பிடுங்கி அடித்துக்கொண்டோம். பாறைகளைத் தூக்கி வீசினோம். காடும் மலைகளும் எதிரொலிக்க ஒலியெழுப்பினோம். எந்தப் போரிலும் நான் அந்த யானையை வெல்ல முடியவில்லை. ஏனென்றால் அதற்குக் கண்கள் இல்லை.”

“அப்படியா அக்கா?” என்றாள் அம்பாலிகை. அவளுக்கு எதுவுமே புரியாமலாகிவிட்டது என அம்பிகை உணர்ந்தாள். “ஆமாம். யானைக்கு கண்கள் எதற்கு? மற்ற உயிர்கள் அதைப்பார்த்தால் போதாதா? வழிவிடவேண்டியவை அவைதானே? வலிமை என்றால் அதற்கு கண்கள் இருக்கலாகாது. இது அது என்று பார்க்கமுடிந்தால் வலிமை குறைய ஆரம்பிக்கும். மூர்க்கம் என்பதும் வலிமை என்பதும் ஒன்றின் இருபெயர்கள்தான்.”

“நான் எதைக்காண்பேன் அக்கா?” என்றாள் அம்பாலிகை. “தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக நினைத்துக்கொள். நீ முதன்முதலில் அரசரைப்பார்த்தபின் கண்களையே திறக்காதே…” என்றாள் அம்பிகை. “ஏன்?” என்றாள் அம்பாலிகை. “திறந்தால் எல்லாம் கனவு என்று தோன்றும்.”

“நீ திறந்தாயா அக்கா?” “ஆம் திறந்தேன்” என்றாள் அம்பிகை. “ஆனால் எனக்கு இன்னொரு பெரிய கனவு வந்தது. அந்தக்கனவில் இரு மதயானைகள் ஒரு பெரிய நாகத்தின் உடம்பில் இரு சிறு பூச்சிகள்போல மத்தகம் முட்டி விளையாடுவதைத்தான் கண்டேன்.”

கதவு அசைந்தது. வெளியே நின்ற சியாமை “மன்னிக்கவேண்டும். இளைய அரசியார் தன் அறைவிட்டு வெளியே செல்லக்கூடாதென்று பேரரசியாரின் ஆணை” என்றாள். “பேரரசி சொன்னால் நான் கேட்கவேண்டுமோ? என்னை மிரட்டினால் நானும் பெரிய அக்காபோல ரதத்தை எடுத்துக்கொண்டு காசிக்கே திரும்பி விடுவேன்” என்றாள் அம்பாலிகை.

சியாமை மென்மையாக “வாருங்கள் அரசி, இன்று மாலை தங்களுடைய மங்கலமஞ்சம் அல்லவா?” என்றாள். அம்பாலிகை அவளுடன் சென்றபடி “எனக்கு குழந்தைகள் பிறக்குமா?” என்றாள். “ஒருகுழந்தை உறுதியாகப்பிறக்கும்…” என்றாள் சியாமை. “அதை நானே வைத்துக்கொண்டு விளையாடலாமா? இல்லை சேடிகளிடம் கொடுத்துவிட வேண்டுமா?”  சியாமை சிரித்து “நீங்களே விளையாடலாம்” என்றாள்.

அம்பாலிகை படிகளில் மெல்லக்குதித்து அவளைத் தொடர்ந்தபடி “என்னிடம் ஒரு பளிங்குப்பாவை இருந்தது. என் கையளவுக்கே சிறியது. குழந்தை. நான் அதை வைத்து விளையாடுவேன். தொட்டிலில் போட்டு ஆட்டுவேன்” என்றாள். “அதை நான் காசியிலேயே விட்டுவந்துவிட்டேன்… அதைப்போன்ற ஒரு வெண்ணிறமான குழந்தை கிடைத்தால் நான் அதை கீழேயே விடமாட்டேன்.”

அவளை அவளுடைய அறைக்குள் கொண்டு சென்று அமரச்செய்தாள் சியாமை. அம்பாலிகை “இன்னும் எவ்வளவு நேரம் நான் இங்கே இருக்கவேண்டும்?” என்று சிணுங்கினாள். “அப்படியென்றால் சூதர்களை வரச்சொல்லி பாடச்சொல்.”

சியாமை அவள் முன் அமர்ந்து “சூதர்கள் ஆண்கள். அவர்களை நீங்கள் பார்க்கமுடியாது அரசி” என்றாள். “அப்படியென்றால் விறலியர் வரட்டும்.” சியாமை “விறலியரும் தங்களை பார்க்கக்கூடாது. அவர்கள் பாடல்கள் வழியாக தங்களை எங்காவது அழைத்துச் சென்றுவிடுவார்கள்.”

“நான் என்னதான் செய்வது?” என்றாள் அம்பாலிகை. “நான் சாளரம் வழியாக குதித்து தோட்டத்துக்குச் செல்வேன். உப்பரிகையிலிருந்து மரங்களில் ஏற எனக்குத் தெரியும்.” சியாமை சிரித்துக்கொண்டு, “சரி நான் கதை சொல்லவா?” என்றாள்.

அம்பாலிகை “இன்னும் மூன்று நாழிகை இருக்கிறது. மூன்று கதைகளைச் சொல்” என்றாள். சியாமை அமர்ந்துகொண்டு “இளவரசி நீங்கள் சந்திரனை விரும்புகிறீர்கள் அல்லவா?” அம்பாலிகை துள்ளி எழுந்து அவளருகே வந்து அமர்ந்து “ஆமாம், எனக்கு சந்திரன் மிகமிகப்பிடிக்கும். எப்படி அது உனக்குத்தெரியும்?” என்றாள். “தெரியும்…” என்றாள் சியாமை. “சந்திரனைப்பற்றிய கதையைச் சொல்லவா?”

அம்பாலிகை கேட்பதற்காக கால்களை மடித்து அமர்ந்து கைகளை சிறிய மோவாயில் ஊன்றிக்கொண்டாள். “அரசியே, பிரபஞ்சத்தை உருவாக்குவதற்காக பிரம்மா தோன்றினார். படைப்பைப்பற்றி அவர் அடைந்த ஒவ்வொரு எண்ணமும் ஒரு பிரஜாபதியாக பிறந்து பிரபஞ்ச விசைகளையும் பொருட்களையும் படைத்தன. அவர்களில் முதன்மையானவர் மகாபிரஜாபதியான அத்ரி” என சியாமை சொல்லத்தொடங்கினாள்.

நூறுநூறாயிரம் கோடி யோசனை நீளமுள்ள வெண்தாடியும் நூறாயிரம் கோடி யோசனை நீளமுள்ள வெண்கூந்தலும் கொண்டவர் அவர். அவரது சிவந்த பாதங்கள் மண்மீதும் வெண்ணிறமான சிரம் விண்ணிலும் விரிந்திருந்தது. நூறுநூறாயிரம் கோடி யுகங்கள் அவர் தனக்குள் ஆழ்ந்து பிரம்மத்தை எண்ணி தவம்செய்தார்.

அவருக்குள் பிரம்மம் ஒளிவிடத்தொடங்கியதும் அவருடைய உடலின் வெண்ணிற ஒளி மிகுந்தது. அவரது தாடி வெண்ணொளியாக மாறி மேலும் நூறுநூறாயிரம் மடங்கு நீண்டு வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து சென்ற ஒரு கட்டத்தில் முழுமைபெற்ற அவர் மலையை அள்ளிக்கொண்ட பனித்துளி போல பிரம்மத்தை தன் சிந்தையில் வாங்கிக்கொண்டார். அந்த ஆனந்தம் தாளாமல் அவரது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் குளிர்ந்த ஒளியுடன் உதிரத்தொடங்கின. கோடானுகோடித் துளிகள் அவ்வாறு உதிர்ந்து குளிரொளி பரப்பி வானில் அலைந்தன.

அவற்றைக் கண்ட நான்கு திசைகளும் நான்கு தேவியராக மாறி அவ்விழிநீர்த்துளிகளை கருவிலேற்றிக்கொண்டன. அவை பெற்ற நான்கு வெள்ளிக்குழந்தைகளை பிரம்மதேவர் ஒன்றாக்கினார். அக்குழந்தையை நெஞ்சோடணைத்த அத்ரி பிரகஸ்பதி தன் ஞானமே முதிர்ந்து வந்தவன் அவன் என உணர்ந்து முத்தமிட்டு கண்களில் ஒற்றி குதூகலித்தார். அவன் பெயர் சந்திரன்.

அவன் வளர்ந்து வெண்பளிங்கில் சூரியன் புகுந்ததுபோன்ற நிறம்கொண்ட இளைஞனாக ஆனான். அரசியே சந்திரனின் மகன் புதன். புதனின் மகன் புரூரவஸ். புரூரவஸின் மைந்தர்களே இக்குருகுலத்து மன்னர்கள். மண்ணுள்ளவரை அவர்கள் புகழ் வாழ்க!

“சந்திரனின் ஒளிவந்த கதை தெரியுமல்லவா?” என்றாள் சியாமை. கனவுநிறைந்த கண்களுடன் இருந்த அம்பாலிகை இல்லை என்று தலையசைத்தாள். “அரசியே, விண்ணில் மின்னும் விண்மீன்கள் ஒவ்வொன்றும் பேரரசர்களும் மாமுனிவர்களும் என்றறிவீர்களாக! வடமுனையில் என்றும் மாறாமலிருக்கும் விண்மீன் துருவன். அவன் ஒருகணமும் கண்ணிமைக்காமல் பூமாதேவியை காப்பவன்” என்றாள் சியாமை.

துருவனின் மைந்தன் சிஷ்டி. சிஷ்டியின் மைந்தன் ரிபு. ரிபுவின் வம்சத்தில் பிறந்த சாக்‌ஷுகனின் மைந்தன் மனு. மனுவின் மைந்தன் குரு, குரு அங்கனைப்பெற்றான். அங்கன் வேனனைப்பெற்றான். வேனனின் மைந்தன் பிருது என்றறியப்பட்டான். பிருதுவே பூமியை அரசனாக நின்று ஆண்டிருந்தான். அவனுடைய கண்களின் ஒளியில் பூமிதேவி வாழ்ந்திருந்தாள். பிருதுவின் மகளான அவளை தேவர்கள் பிருத்வி என்றழைத்தனர்.

ஒருமுறை பிருது வான்வெளியின் இருள்விரிவில் அலைந்து மீளும்போது பூமிதேவி தன் கட்டளையை மீறியிருப்பதைக் கண்டான். அவள் தன் மீது எழுந்த கடல்களையும் மலைகளையும் உள்ளே இழுத்துக்கொண்டாள். மனிதர்களையும் மிருகங்களையும் பறவைகளையும் பூச்சிபுழுக்களையும் கிருமிகளையும் தாவரங்களையும் விழுங்கிக்கொண்டாள். பிருது வந்து பார்த்தபோது வெறுமைகொண்டு விண்ணில் சுழன்ற பூமாதேவியையே கண்டான். சினம் கொண்டு தன் வில்லை எடுத்தான். கோடானுகோடி யோசனை நீளமுள்ள தன் வில்லைக்குலைத்து நாணேற்றியபடி பூமியை தண்டிக்க வந்தான்.

மண்மகள் அஞ்சி தப்பி ஓடினாள். இருள் மண்டிக்கிடந்த பிரபஞ்சவீதிகளில் அவள் ஓடி ஓடி ஒளிந்தபோதும் பிருது அவளை விடவில்லை. நூறுநூறாயிரம் கோடி வருடங்கள் பிருது அவளைத் துரத்தி முடிவிலாவெளியின் இருண்டமூலையில் பதுங்கியிருந்த அவளைப் பிடித்து இழுத்தான்.

வில்லெடுத்துக் குலைத்த பிருதுவைக் கண்டு அஞ்சிநடுங்கிய மண்மகள் “தேவா, நான் உங்கள் அடிமை…என்னை அழிக்கவேண்டாம். என்னிலுள்ள அனைத்தும் கூடவே அழியும்” என்றாள். “மண்மகள்கள் அனைவரும் என்னுடைய படைப்புகள் மட்டுமே. என் யோகவல்லமையால் நான் நூறு மண்மகள்களை பெற்றெடுப்பேன்” என்றான் பிருது. “என்னை அழிக்கவேண்டாம். நான் உண்டவற்றை எல்லாம் மீட்டுத்தருகிறேன்” என்றாள் மண்மகள்.

அதன் பின் அவள் ஓர் அழகிய சிவந்த பசுவானாள். அவள் உள்ளம் கனிவதற்காக பிருது சந்திரனை அழகிய வெண்ணிறக் கன்றாக்கினான். செம்பசு வெண்கன்றை மனம் கனிந்து நக்கியபோது அதிலிருந்து பால் வெள்ளம் சுரந்தது. அவை நதிகளாக ஓடின. அந்நதிகளின் வழியே அழிந்தவை அனைத்தும் மண்மீது மீண்டும் எழுந்து வந்தன. பிரம்மன் அப்பசுவின் அமுதைக் கறந்து விண்ணுலாவிகளுக்கு உணவாக்கினான். தட்சகன் விஷம் கறந்தெடுத்தான். யட்சர்கள் இசையைக் கறந்தெடுத்தனர். எஞ்சியபாலைக் குடித்த சந்திரன் அதை வெண்ணிற ஒளியாக தன்னுடலில் நிறைத்துக்கொண்டான்.

மண்ணிலிருக்கும் உயிர்களுக்கெல்லாம் சந்திரனின் ஒளி அமுதாகும். சந்திர ஒளியில் மலர்கள் மலர்கின்றன. நாகங்கள் விரிகின்றன. மீன்கள் சிறகு முளைத்தெழுகின்றன. மண்ணிலுள்ள அத்தனை மூலிகைகளுக்குள்ளும் சந்திரனின் ஆற்றலே நிறைந்திருக்கிறது. துயரமுறும் அத்தனை மனங்களையும் குளிர்ந்த வெண்ணிற இறகுகளால் மெல்ல வருடி சந்திரன் ஆறுதல்சொல்கிறான். ஆகவேதான் சந்திரனை பெருங்கருணையே உருவானவன் என்று சொல்கின்றனர் ரிஷிகள்.

“மூன்றாவது கதை” என்றாள் அம்பாலிகை. “பெரும்புகழுடையவனும் அருளாளனுமாகிய சந்திரன் பெற்ற சாபத்தின் கதையைச் சொல்கிறேன்” என்றாள் சியாமை.

தட்ச பிரஜாபதியின் இருபத்தியேழு மகள்களை சந்திரன் மணந்துகொண்டான். அவர்களே சந்திரனின் இருபத்தியேழு நட்சத்திர நிலைகளானார்கள். அஸ்வதி, பரணி, கார்த்திகை என்று தொடங்கி ரேவதியில் முடியும் அந்நிலைகளில் எல்லாம் சந்திரன் சென்றிருந்து அருள் அளிக்கவேண்டும் என்று தட்சன் ஆணையிட்டான்.

அந்த இருபத்தியேழு மனைவியரில் ரோஹிணியிடம் மட்டும் சந்திரன் பெருங்காதல்கொண்டிருந்தான். ஏனென்றால் அவள் பசுக்களின் தேவதை. மண்மகளை பசுவாகக் கண்ட சந்திரன் அன்று உண்ட பாலின் சுவையை மறக்கவேயில்லை. ஆகவே செம்பசுவின் வடிவிலிருந்த ரோஹிணியிடமே அவன் எப்போதும் இருந்தான். மற்ற இருபத்தியாறு மனைவியரும் சென்று தட்சனிடம் முறையிட்டார்கள். தட்சபிரஜாபதி சந்திரனை கண்டித்து அறிவுறுத்தினார்.

பிரஜாபதிக்கு தான் கட்டுப்பட்டவன் என்று அறிந்தபோதிலும்கூட சந்திரனால் ரோஹிணியை விட்டு விலகமுடியவில்லை. அன்னையின் பாலை அதிகம் உண்கின்ற குழந்தைகள் வளர்வதேயில்லை இளவரசி. ரோஹிணியை சந்திரன் விலகாததை அறிந்த தட்ச பிரஜாபதி சினம் கொண்டு சந்திரனுக்கு அழிவுச்சொல் விடுத்தார். சந்திரன் தேய்வுநோய் கொண்டவனானான்.

மெல்லமெல்ல சந்திரன் தேய்ந்து மறைந்தபோது மண்ணிலுள்ள தாவரங்களெல்லாம் சோர்ந்தன. மூலிகைகள் மருந்திழந்தன. நாகங்கள் விஷமிழந்தன. அவை கூட்டமாக வானேறிச்சென்று தங்கள் குலமூதாதையான பெருநாகம் தட்ச பிரஜாபதியிடம் முறையிட்டன. சினம் குறைந்த தட்ச பிரஜாபதி சந்திரன் மாதத்தில் பதினைந்துநாள் தேய்வுநோயை அறிந்தால்போதும் என்று சொல்மீட்சி அளித்தார். எஞ்சிய பதினைந்து நாளும் சந்திரன் வளர்ந்து முழுமையடையலாமென்று சொன்னார்.

“சந்திரன் தேயும் கதை இது, சந்திரன் வளரும் கதையும் இதுவே” என்றாள் சியாமை. கதைகேட்டு விழித்த கண்களுடன் தன்னையறியாமலே வாய்க்குள் சென்ற விரல்களுடன் தன் மடிமீது தலைவைத்துக்கிடந்த அம்பாலிகையை குனிந்து நோக்கி “இருபதாண்டுகளுக்கு முன் சந்திரவம்சத்தில் ஒரு இளஞ்சந்திரன் என் கைகளில் பிறந்தான் அரசி” என்றாள் சியாமை. “நான் அவனை கையில் எடுத்துப்பார்த்தேன். மூன்றாம்பிறைபோல வெளிறி மெலிந்தவன். வாழ்நாள் எல்லாம் தேய்வுநோய் கொண்டிருந்தான். ஆனால் வெளிறிக்குளிர்ந்து மறைந்தாலும் தண்ணொளியால் அனைவரையும் வாழ்த்திச்சென்றவன். அவன் கண்பட்ட இடங்களிலெல்லாம் இலைகள் மருந்தாயின. மனிதத் துயரங்கள் அனைத்தையும் அறிபவனாக இருந்தான். விசித்திரவீரிய மாமன்னன். அவனுடைய அரசி நீங்கள்” என்றாள்.

அம்பாலிகையின் கண்கள் ஈரமாயின. சியாமை அவள் மேல் குனிந்து “விண்ணேறும் கணம் வரை மனைவி தன் நெஞ்சில் கொண்டு செல்லும் தகுதிபடைத்த ஆண்கள் மிகச்சிலரே. விசித்திரவீரியனின் துணைவியாக நீங்கள் மேகவாசல் திறந்து உள்ளே செல்லும்போது உங்கள் குலத்தின் முதுபத்தினிகளெல்லாம் வந்து உங்களை வாழ்த்துவார்கள்” என்றாள்.

அம்பாலிகை “ஆம். நான் அவருடன் முடிவில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நான் செல்லாத தோட்டங்களுக்கெல்லாம் கூட்டிச்செல்லும் தோழராக இருக்கிறார்.”

“பலமற்றவனின் ஆன்மாவில் கொந்தளித்த திறனெல்லாம் உங்கள் தமக்கையிடம் வந்துவிட்டது தேவி. வாழ்நாளெல்லாம் அவன் கொஞ்சி விளையாடிய நோய் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவனைப்போலவே கைவிடப்பட்ட மெலிந்த வெண்ணிறக் குழந்தையாக. அதன் பெரிய கண்களை என்னால் பார்க்கமுடிகிறது” என்றாள்.

“எனக்கு அது போதும் சியாமை” என்றாள் அம்பாலிகை. தலைமயிர்கோதிய கை திடுக்கிட்டு நிற்க சியாமை “என்ன சொல்கிறீர்கள் இளவரசி?”என்றாள். “அதை நான் வைத்துக்கொள்கிறேன் சியாமை…” என்றாள் அம்பாலிகை. “பளிங்குப்பாவை போல என் நெஞ்சோடு அணைத்து வைத்துக்கொள்வேன். பாவம் அதுவும் எங்கே செல்லும்?” என்றாள்.

சியாமை அந்த கன்னங்குழிந்த முகத்தை, முதிராத பற்களை, சிறுபருக்கள் முளைத்தெழுந்த கன்னங்களை, மென்மயிர் பரவிய மேலுதடுக்குவிவை பார்த்தாள். கைகள் நடுங்க தனக்குள் என “குழந்தைக்குள் கன்னியும் கன்னிக்குள் அன்னையும் குடியேறும் கணம் எதுவென்று தேவர்களும் அறிவதில்லை தேவி” என்றாள்.

முந்தைய கட்டுரைகருவியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைஜனநாயகம் என்பது -கடிதங்கள்