‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10

பகுதி மூன்று : எரியிதழ்

[1]

காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள்.

சூதர்கள் பாடினர். மண்ணுலகை ஆளும் அரசநாகமாகிய தட்சனின் கதை கேளுங்கள். பதினாறாயிரத்து எட்டு இமயமலை முடிகளையும் சுற்றிவளைத்துத் தழுவியபடி துயிலும் கரிய பேருருவம் கொண்டவன். அணையாத இச்சை என இமையாத கண்கள் கொண்டவன். மூன்று காலம்போலவே மும்மடிப்புடன் முடிவிலாதொழுகும் உடல் கொண்டவன். கணங்களைப்போல நிலையில்லாமல் அசையும் நுனிவாலைக் கொண்டவன். ஊழித்தீயென எரிந்தசையும் செந்நாக்குகளைக் கொண்டவன். பூமியெனும் தீபம் அணையாது காக்க விரிந்த கைக்குவிதல்போன்று எழுந்த படம் கொண்டவன். ஏழுலகங்களையும் எரித்தழித்தபின் தன்னையும் அழித்துக்கொள்ளும் கடும் விஷம் வாழும் வெண்பற்கள் கொண்டவன். எங்கும் உறைபவன். அனைத்தையும் இயக்குபவன். என்றுமழியாதவன். அவன் வாழ்க!

THATCHAN_02 B
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]

தட்சனின் அரசு இமயமுடிகளுக்கு உச்சியில் நாகங்கள் மட்டுமே பறந்துசெல்லக்கூடிய உயரத்தில் அமைந்திருந்தது. அங்கே தன் மனைவி பிரசூதியுடனும் தன் இனத்தைச்சேர்ந்த பன்னிரண்டாயிரம் கரிய நாகங்களுடனும் பன்னிரண்டாயிரம் பொன்னிற நாகங்களுடனும் அவன் வாழ்ந்துவந்தான். பொன்னிற உடல்கொண்ட பிரசூதியை தழுவியபடி கைலாயமலைச்சாரலில் வாழ்ந்த தட்சன் அவளுடைய அழகிய ஆயிரம் பாவனைகளைக் கண்டு பெருங்காதல் கொண்டவனானான்.

அவளுடைய ஒவ்வொரு புதியபாவமும் அவன் பார்வையின் வழியாக அவளுக்குள் நுழைந்து ஒரு மகளாக அவன் மடியில் தவழ்ந்தன.அவளுடைய கவனமும், அவசரமும், துயரமும், கற்பனையும், வளமும், ஊக்கமும், மங்கலமும், அறிவும், நாணமும், வடிவமும், அமைதியும், அருளும், மண்புகழும், விண்புகழும், பரவசமும், நினைவும், பிரியமும், பொறுமையும், ஆற்றலும், நிறைவும், தாய்மையும், பசியும், சுவையும் இருபத்துமூன்று பெண்களாயின. சிரத்தா, த்ருதி, துஷ்டி, மேதா, புஷ்டி, கிரியா, லட்சுமி, புத்தி, லஜ்ஜா, வபுஸ், சாந்தி, ஸித்தி, கீர்த்தி, கியாதி, ஸம்பூதி, ஸ்மிருதி, பிரீதி, க்ஷமா, ஊர்ஜை, அனசூயை, சந்ததி, ஸ்வாஹா, ஸ்வாதா என்னும் அம்மகள்கள் அவன் இல்லமெங்கும் ஆடிகளாகி பிரசூதியை நிரப்பினர்.

கடைசியாக உதயத்தின் முதல் பொற்கதிரில் பிரசூதியின் பேரழகைக் கண்டு மனம் கனிந்து ‘தோழி’ என அவளை உணர்ந்து அளித்த முத்தம் ஸதி என்னும் அழகிய பெண்மகவாகியது. இருபத்துநான்கு மகள்களிருந்தும் அவளையே தாட்சாயணி என்று அவன் அழைத்தான். பிரசூதியின் பேரழகுக்கணம் ஒன்று முளைத்து உருவாகி வந்தவள் அவள் என அவன் நினைத்தான். பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான். அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். தட்சனோ ஆயிரம் தலைகளில் ஈராயிரம் கண்கள் கொண்டவன்.

தட்சனுடைய மகள்களை தர்மன், பிருகு, மரீசி, அங்கிரஸ், புலஸ்தியன், புலஹன், கிருது, அத்ரி, வசிஷ்டன், அக்னி என்னும் தேவர்களும் முனிவர்களும் கொண்டனர். தட்சபுரியின் இளவரசியான தாட்சாயணியை மட்டும் நிகரற்ற நாகம் ஒன்றுக்கு மணம்புரிந்துகொடுக்கவேண்டும் என விழைந்த தட்சன் பிரம்மனை வேள்விநெருப்பில் வரச்செய்து பதினான்குலகங்களையும் ஒருதுளியால் வெல்லும் விஷம் கொண்டவன் எவனோ அவனே தன் மகளை மணக்கவேண்டுமென வரம்கேட்டான். அவ்வாறே ஆகுக என்று அருள்செய்து பிரம்மன் மறைந்தான்.

மேகம் மண்ணிலிறங்கும் இரவொன்றில் தட்சலோகத்துக்கு வந்திறங்கிய நாரதர் தாட்சாயணியைத் தேடிவந்து ஆலகாலத்தை கழுத்திலணிந்த ஆதிசிவனே அந்தத் தகுதிகொண்டவன் என்று தெரிவித்தார். “தட்சவிஷத்துக்கு மேல் வல்லமை கொண்டது ஒன்றே. ஆலாலகண்டனின் உடல் விஷம். தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது என்றறிவாயாக” என்றார் நாரதர்.

கைலாயத்தின் அதிபனையே மணமகனாக அடையவேண்டுமென்று தாட்சாயணி தவமிருந்தாள். பட்டிலும், மலரிலும், இசையிலும், கவிதையிலும், நீரிலும், ஒளியிலும் இருந்த விருப்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அணைத்துக்கொண்டு நோன்புநோற்றாள். மண்ணின் நீர்ச்சுவையையும் தாயின் பால்சுவையையும் மறந்தாள். தன் சிரிப்பையும் கண்ணீரையும் துறந்தாள். இறுதியில் பொன்னுருகி வழிவதுபோன்ற தன்னழகையும் துறந்தாள். அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.

அவள் தவம் முதிர்ந்தபோது வெள்ளெருதுக்குமேல் பினாகமும் தமருகமும் மானும் மழுவுமாக சிவன் தோன்றி செந்நெருப்பு எழுந்த அங்கை நீட்டி அவள் கைப்பிடித்து காந்தருவமணம்கொண்டு கையாலயத்துக்கு அழைத்துச்சென்றான். நீலவிடம்கொண்ட அவன் கழுத்தழகில் அவள் காலங்கள் மறைந்து காதல்கொண்டாள்.

மண்ணுலகை எரிக்கும் தன் விஷம் விண்ணுலக விஷத்தில் தோற்றதை எண்ணி தட்சன் சினம் கொண்டு எரிந்தான். பாற்கடல் திரிந்ததுபோல அவனுடைய மாளாக்காதல் வெறுப்பாகியது. தன்னை உதறிச்சென்ற தாட்சாயணியை கொல்வதற்காக கைலாயமலைக்குச் சென்று அம்மலையை தன் உடலால் நெரித்தான். இறுக்கத்தில் உடல் நெரிந்து விஷம் கக்கியபின் அங்கேயே துவண்டுகிடந்த அவனை தம்பியரான கார்க்கோடகனும் காலகனும் தூக்கிவந்தனர். ஆயிரமாண்டுகாலம் தவம்செய்து தன் தோலை உரித்து அதன் அடியிலிருந்து புதிய தட்சனாக அவன் வெளிவந்தான்.

ஒவ்வொருநாளும் சிவபூசை செய்துவந்த தட்சன் தன்னுடைய அனைத்து வேள்விகளிலும் சிவனுக்கு அவியளிக்காதவனானான். நீலகண்டனை விட மேலான விஷம் தனக்குவேண்டும், தன்குலத்தின் விஷம் ஓங்கி வளரவேண்டும் என்று எண்ணி நாகபிரஜாபதியான தட்சன் பிரகஸ்பதீ ஸவனம் என்னும் மாபெரும் பூதயாகத்தை நடத்தினான். தன் விஷத்தால் வேள்விநெருப்பெரித்து முளைத்தெழும் அனைத்தையும் அவிப்பொருளாக்கினான்.

பிரஜாபதிகளனைவரையும் மகிழ்விக்கும் அந்த யாகத்தில் மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் படைக்கப்பட்டன. அத்தனை உயிர்களின் முட்டைகளும் கருக்களும் அவியாக்கப்பட்டன. புடவியெனும் தாமரையில் முடிவில்லாமல் இதழ்விரிந்துகொண்டிருக்கும் அத்தனை உலகங்களிலும் உள்ள அனைத்து பிரம்மன்களுக்கும் அவியளிக்கப்பட்டது. அவ்வுலகங்களையெல்லாம் காக்கும் விஷ்ணுவுக்கும் அவியளிக்கப்பட்டது. தட்சனின் ஆணைப்படி சிவனுக்கு மட்டும் அவியளிக்கப்படவில்லை.

தன் கொழுநன் அவமதிக்கப்பட்டதை அறிந்து சினம்கொண்ட ஸதிதேவி கைலாயத்திலிருந்து மண்ணிலிறங்கி தட்சபுரிக்கு வந்தாள். பொன்னொளிர் நாகமாக ஆகி அங்கே நடந்துகொண்டிருந்த வேள்வியில் நுழைந்து கண்ணீருடன் தன்னையும் தன் கணவனையும் வேள்விக்கு அழைக்காதது ஏன் என்று கேட்டாள். “இந்தப்புவியை ஆளவும் அழிக்கவும் நாகங்களே போதுமானவை. இவ்வேள்வி முடியும்போது ருத்ரனின் கை நெருப்பைவிட எங்கள் விஷத்துக்கு வெப்பமிருக்கும்’ என்றான் தட்சன். ‘அழையாது என் வேள்விப்பந்தலுக்கு வந்த நீ இக்கணமே விலகிச்செல்லவில்லை என்றால் உன்னை என் ஏவல் நாகங்கள் இங்கிருந்து தூக்கி வீசுவார்கள்” என்றான்.

“நான் உங்கள் மகள், எனக்கு அழைப்பு தேவையில்லை” என்றாள் ஸதி. “எப்போது நீ அவனுடன் சென்றாயோ அப்போதே என் கைகளை நீரால் கழுவி உன்னை நான் உதறிவிட்டேன்” என்று தட்சன் பதிலுரைத்தான். “உன் நினைவிருந்த இடத்தையெல்லாம் விஷம் கொண்டு நிறைத்துவிட்டேன். களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்று தட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான்.

“நீயும் உன் குலமும் இதன் விளைவை அறிவீர்கள்” என்று சொல்லி ஸதிதேவி அழுத கண்களுடன் விண்ணேறி மேகங்களில் ஒளிவடிவாக நெளிந்து கைலாயத்துக்குச் சென்றாள். அங்கே கடும் சினம் எரிய நின்றிருந்த முக்கண்ணன் நாகவடிவமாக இருந்த அவளிடம் “விண்ணிலேறி என் மனைவியாக மாறிய நீ எப்படி மண்ணிலிழியலாம்? நாகவடிவம் கொண்ட நீ என் துணைவியாவது எப்படி?” என்றான்.

“நான் என் தந்தையிடம் நீதி கேட்கச்சென்றேன்” என்றாள் ஸதி. “ஆயிரம் வருடம் தவம் செய்து நீ விண்ணரசி வடிவெடுத்தாய். அரைக்கணத்தின் நெகிழ்வால் மீண்டும் நாகமானாய். விண்ணகத்தில் உனக்கு இனி இடமில்லை. உன் தந்தையிடமே திரும்பிச்செல்” என்றான் கைலாயநாதன்.

கருமேகத்தில் ஊர்ந்திறங்கி மீண்டும் தந்தையின் வேள்விச்சாலைக்கு வந்தாள் ஸதி. “தந்தையே, நான் இங்கே உங்களிடம் இருந்து மீண்டும் தவமியற்றுகிறேன். என் தவவல்லமையால் வானமேறி என் கணவரை சென்றடைவேன். விண்ணில் எனக்கு இனி இடமில்லை. பிறந்த மண்ணில் எனக்கு இடம் கொடுங்கள்” என்று மன்றாடினாள்.

“விண்சென்று நீ உன் விஷமனைத்தையும் இழந்தாய்…இங்குள்ள எங்களில் நீ ஒருத்தி அல்ல. நாகபுரியில் உனக்கு இடமில்லை” என்றான் தட்சன். அவன் மூடியவாசலில் சுருண்டு கிடந்து ஆயிரம் வருடங்கள் காத்திருந்தாள் ஸதி தேவி. அங்கே வந்த நாரதமுனிவர் “பெண்ணே வேள்வியில் அவியாபவை அனைத்தும் அவனையே சென்று சேர்கின்றன என்று அறிக” என்றார். ஸதிதேவி தந்தையின் வேள்வித்தீயில் தன்னை சிவனுக்கு ஆகுதியாக்கினாள். அவளுடைய உடல் நெருப்பில் உருகி நின்றெரிந்து விபூதியாகியபோது அவள் ஆத்மா விண்சென்று கைலாயத்தை அடைந்தது.

சூதர்கள் பாடினர் “நெருப்பை வணங்குங்கள் கன்னியரே. நெருப்பில் உறைகின்றாள் இறைவனின் தோழியான ஸதி. தழலில் நின்றாடுகின்றாள். கைகளை வானுக்கு விரிக்கும் வேண்டுகோளே ஸதி. அனைத்தையும் விண்ணுக்கு அனுப்பும் ஒருமுகமே ஸதி. கொழுந்துவிட்டு வெறியாடும் உக்கிரமே ஸதி. சுவாலாரூபிணியானவளே, தாக்‌ஷாயணியே உன்னை வணங்குகிறோம். நீ எங்கள் குலத்துப்பெண்களுக்குள் எல்லாம் உறைவாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!”

தழலை வணங்கிவிட்டு அந்த தீபங்களைக் கையிலெடுத்த மூன்று இளவரசிகளும் வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர். மெல்லச்சுழன்று நகர்ந்து சென்ற தீபங்கள் நகர்ந்தோடும் நகரம் போல சென்றுகொண்டிருந்த கங்கையின் பல்லாயிரம் தீபச்சுடர்களுடன் ஒன்றாயின.

காசி அந்தியில் முழுமைகொள்ளும் நகரம். படிக்கட்டுகளிலெங்கும் கன்னியரும் அன்னையருமாக பெண்கள் நிறைந்திருந்தனர்.ஆயிரம் நீர்க்கரைத் தெய்வங்களின் சிற்றாலயங்கள் அடர்ந்த படித்துறைகளில் மணிகளும் மந்திரங்களும் ஒலித்தன. நூற்றெட்டு சைவர்களும் பதினெட்டு சாக்தர்களும் ஒன்பது வைணவர்களும் என தாந்திரீகர்கள் கண்சிவக்க உடல்நிமிர்த்தி காலடிகள் அதிர நடந்தனர். படிகளிலும் அப்பால் பின்னி விரிந்த தெருக்களிலும் நீர்க்கடன் செய்யவந்தவர்கள் வண்ணங்களாகவும் குரல்களாகவும் சுழித்தனர். அவர்களுக்குமேல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது விஸ்வநாதனின் பேராலய மணியோசை.

காசிமன்னன் பீமதேவன் தன் மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் அறிவித்திருந்தார். முன்னதாகவே காசிநகரத்துக்கு பாரதவர்ஷமெங்குமிருந்து ஷத்ரிய மன்னர்கள் வரத்தொடங்கியிருந்தனர். அவர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்த கங்கைக்கரை சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குமேல் அவர்களின் இலச்சினைக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. சுயம்வரத்தைக் காணவந்த முனிவர்களும், காணிக்கை பெறவந்த வைதிகர்களும், வாத்தியங்களுடனும் விறலியருடனும் வந்த சூதர்களும் கங்கைக்கரை மணல் மேடுகளில் நிறைத்திருந்தனர்.

கங்கை அகன்றுவிரிந்து வேகம் குறைந்து பிறைவடிவில் வளைந்துசெல்லும் இடத்தில் அதன் இருகரைகளிலும் விரிந்திருந்த காசி தேசம் சிவனுக்குரியது. அதன் காவல்தேவனாக காலபைரவன் மண்டையோட்டுமாலையுடன் கோயில்கொண்டிருந்தான். காசிமன்னன் பீமதேவன் தன் பேரமைச்சர் ஃபால்குனருடன் சென்று காலபைரவமூர்த்திக்கு குருதிப்பலி கொடுத்து வணங்கி ரதமேறி நெரிந்த மக்கள் திரள் நடுவே தேங்கியும் ஒதுங்கியும் பயணம் செய்து அரண்மனைக்கு அருகே கட்டப்பட்டிருந்த சுயம்வரப்பந்தலுக்கு வந்தான். வெண்ணிற வானம் நெருங்கி வந்து விரிந்தது போல கட்டப்பட்டிருந்த மணப்பந்தலின் முகப்பில் அமைந்த ஏழடுக்கு மலர்க்கோபுரத்தை சிற்பிகள் அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

பந்தலுக்குள் நுழைந்து அதன் அமைப்புகளை இறுதியாக சரிபார்த்துக்கொண்டிருந்த பீமதேவன் நிலையற்றிருப்பதை ஃபால்குனர் கவனித்துக்கொண்டிருந்தார். சுயம்வரத்துக்கு வந்த மன்னர்கள் அமரும் இருக்கைவரிசை அரைச்சந்திர வட்டத்தில் இருக்க அதன் முன் வட்டவடிவமாக மணமேடை அமைந்திருந்தது. மறுபக்கம் நீண்ட நூறடுக்குவரிசைகளாக முனிவர்களும் வைதிகர்களும் சான்றோரும் அமரும் வண்ணப்பாய்கள் போடப்பட்டிருந்தன.நாளைப்புலரியில் விரியும்பொருட்டு மேலிருந்து மொட்டாலான மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

ஏதோ எண்ணிக்கொண்டு திரும்பிய பீமதேவன் “அஸ்தினபுரியிலிருந்து ஒற்றர்கள் ஏதேனும் செய்தியனுப்பினார்களா அமைச்சரே?” என்றார். ஃபால்குனர் “மூன்று செய்திகள் தொடர்ச்சியாக வந்தன அரசே. மூன்றுமே ஒரே செய்தியைத்தான் சொல்லின. அஸ்தினபுரியின் படைகள் ஒன்றுதிரளவில்லை. ஆறு எல்லைகளிலாக அவை இன்னும் சிதறித்தான் நின்றுகொண்டிருக்கின்றன. படைநகர்வுக்கான எந்த ஆணையும் அனுப்பப்படவில்லை” என்றார்.

பெருமூச்சுடன் அந்தரீயத்தை அள்ளி தோளில் சுற்றிக்கொண்டு நடந்த பீமதேவன் “இன்னும் எட்டு நாழிகைக்குள் புலர்ந்துவிடும். புலரியின் இரண்டாம் நாழிகையில் சுயம்வரத்துக்கான பெருமுரசு முழங்கும்….” என்றார்.

என்ன சொல்வதென்று அறியாமல் ஃபால்குனர் “அனைத்தும் சிறப்புற நிகழும்….நாம் செய்யவேண்டியவை அனைத்தையும் செய்துவிட்டோம். நன்றே நிகழுமென நினைப்போம்” என்றார். “ஆம், அப்படித்தான் நிகழவேண்டும்” என்று சொன்ன பீமதேவன் மீண்டும் பெருமூச்சுவிட்டு “அமைச்சரே, பீஷ்மர் எங்கிருக்கிறார் என்று ஒற்றர்கள் சொன்னார்கள்?” என்றார்.

“மூன்று நாட்களுக்கு முன் அவர் அஸ்தினபுரியில் இருந்து தனியாகக் கிளம்பி வியாசரின் வேதவனத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து வனத்துக்குள் புகுந்து மறைந்தவரைப்பற்றி எந்தச்செய்தியும் இதுவரை இல்லை என்கிறார்கள். பீஷ்மர் அப்படி வனம்புகுவது எப்போதும் நிகழ்வதுதான். அஸ்தினபுரியிலேயே அவர் ஒருபோதும் அரண்மனையில் இருப்பதில்லை. புறங்காட்டில் தன் ஆயுதசாலையிலேயே எப்போதும் தங்கியிருப்பது வழக்கம்” என்றார். “என் உள்ளுணர்வுகள் பதற்றம் கொள்கின்றன அமைச்சரே” என்றார் பீமதேவன்.

மென்மணல் விரிக்கப்பட்ட பந்தல் முற்றத்துக்கு வந்து அங்கே காத்திருந்த முகபடாமணிந்த யானையை நெருங்கிய பீமதேவன் நின்று திரும்பி “இப்பந்தலை அமைத்த சிற்பி யார்?” என்றான். “இதற்கெனவே நாம் கலிங்க தேசத்திலிருந்து வரவழைத்த சிற்பி அவர், அவர் பெயர் வாமதேவர்” என்றார் ஃபால்குனர். “அமைச்சரே, வேள்விப்பந்தல் அமைக்கையில் அந்த வேள்விக்கு குறையேதும் நிகழுமோ என்று சிற்பியின் ஸ்தாபத்ய சாஸ்திரத்தைக்கொண்டு கணிக்கும் வழக்கம் உண்டல்லவா?” என்றார் பீமதேவன். அவர் சொல்லவருவதை ஊகித்து “ஆம்” என்றார் ஃபால்குனர்.

“இந்த சுயம்வரத்துக்கும் தடை ஏதும் நிகழுமா என்று நாம் ஏன் சிற்பியிடம் கேட்கக்கூடாது?” ஃபால்குனர் மௌனமாக நின்றார். “சொல்லுங்கள் அமைச்சரே” என்றார் பீமதேவன். “நாம் விதியை கணிக்காமலிருப்பதல்லவா நல்லது அரசே? வேள்விக்கு எனில் ஆதிதெய்விகம் ஆதிபௌதிகம் என இருவகைத் தடைகள் உள்ளன. ஆதிதெய்வீகத்தின் தடைகளை மட்டுமே நாம் வேள்வியில் கணிக்கிறோம். ஆதிபெளதிகத்தை கணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்றார் ஃபால்குனர்.

“என்னால் இனிமேலும் இந்த முள்மேல் தவத்தை நீட்டிக்க முடியாது…அழைத்துவாருங்கள் அவரை” என்றார் பீமதேவன். “அவர் இங்கேதான் இருக்கிறார் அரசே” என்ற ஃபால்குனர் அங்கே நின்றிருந்த இளம்சிற்பியை நோக்கி “உங்கள் ஆசிரியரை மாமன்னர் முன் கொண்டுவாருங்கள்” என்றார்.

சற்றுநேரத்தில் வாமதேவர் வந்தார். குறுகிய கரிய உடலும் நரைத்து தோளில் தொங்கிய கூந்தலும் நாரையிறகுபோன்ற தாடியும் சிறிய மணிக்கண்களும் கொண்ட அவர் ஒரு சிறுவனைப்போலிருந்தார் “காசிமன்னனை வணங்குகிறேன்” என சுருக்கமாக முகமன் சொல்லி நிமிர்ந்த தலையுடன் சுருங்கிய கண்களுடன் நின்றார். “மகாசிற்பியே, இந்தப் பந்தல் இதன் நோக்கத்தை தடையில்லாமல் சென்றடையுமா என்று பார்க்க உங்கள் நூலில் வழியுள்ளதல்லவா?” என்றார் பீமதேவன்.

பெருமூச்சுடன் “அரசே, மூவகைக்காலம் என்பது நாம் நம் அகங்காரத்தால் பிரித்துக்கொள்வது மட்டுமே என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. வாஸ்துபுருஷன் வாழ்வது பிரிவற்ற அகண்ட காலத்தில். அதோ அந்தப் பாறை, இந்தத் தூண் அனைத்துமே முப்பிரிவில்லாத காலத்தில் நின்றுகொண்டிருப்பவை. முழுமுதல்காலத்தில் அனைத்தும் ஒன்றே…” என்றார் வாமதேவர். “அகண்டகாலம் நோக்கித் திறக்கும் கண்கள் கொண்டவர்கள் ஞானியர். அவர்களுக்கு பிரபஞ்சம் என்பது ஒற்றைப்பெருநிகழ்வு மட்டுமே. அதன் அனைத்தும் அனைத்துடனும் இணைந்துள்ளன. அனைத்தும் அனைத்தையும் சுட்டிக்கொண்டிருக்கின்றன.”

“நீங்கள் பிரிவிலா காலத்தைக் காணும் கண்கள் கொண்டவரா?” என்றார் பீமதேவன். “இல்லை. நான் யோகியும் ஞானியும் அல்ல. ஆனால் பிரிவிலா காலத்தில் நின்றுகொண்டிருக்கும் பொருட்களை அறிந்தவன்” என்றார் வாமதேவர். “அப்படியென்றால் சொல்லுங்கள், இந்தப்பந்தலின் நிகழ்வு முழுமைபெறுமா?”

வாமதேவர் “அரசே, உங்கள் மூன்று கன்னியருக்கும் இந்த சுயம்வரப்பந்தலில் மணம் நிகழும்” என்றார். அவர் கண்களைப்பார்த்த பீமதேவர் ஒருகணம் தயங்கினார். “நான் கேட்டது அதுவல்ல. என் மகள்களுக்கு நான் விரும்பும்படி மணம்நிகழுமா?” என்றார் பீமதேவன்.

“இந்த சுயம்வரப்பந்தல் நீங்கள் விரும்பும்படி நிகழும் மணத்துக்கென அமைக்கப்பட்டது அல்ல அரசே” என்றார் வாமதேவர்.

அந்த பதில் கேட்டு எழுந்த முதல் சினத்தைத் தாண்டியதும் பீமதேவன் திடுக்கிட்டார். “அப்படியென்றால்?” என்றார். வாமதேவர் “மன்னிக்கவேண்டும்…” என்றார். பீமதேவன் “…சிற்பியே” என ஆரம்பிக்கவும் அவர் கையை நீட்டி திடமாக “மன்னிக்கவேண்டும்” என்றார்.

பீமதேவன் பெருமூச்சுடன் அமைதியானார். “இன்று சதுர்த்தி….சூதர்கள் அகல்விழி அன்னையின் கதைகளைச் சொல்லிவருகையில் இன்று வந்தது தாட்சாயணியின் கதை” என்றார் சிற்பி. மேலும் ஏதோ சொல்லவந்தபின் சொல்லாமல் திரும்பி பந்தலுக்குள் நுழைந்தார்.

முந்தைய கட்டுரைராணி திலக்
அடுத்த கட்டுரைஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன – ராணி திலக்