ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை

சிக்னலில் காத்திருக்கும்போது “அம்மா தாயே பிச்சைப் போடு, அய்யா, மவராசா பிச்சைப்போடு ” என்று நம்மிடம் ஓடிவரும்

குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில் எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன.. அருகில் யாராவது இருந்து அவர் நம்மைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில சமயங்களில் தராளமாக போட்டுத்தொலைக்கிறொம்.

ஆனால் நாம் எல்லோருமே கோவில்/சர்ச்/மசூதி என்று அவரவர் வழிபாட்டு தளங்களுக்குப் போய் வரும்போது “அம்மா தாயே,

அய்யா.. என்று நம்மைத் துரத்தும் குரலை ஒதுக்கிவிட்டு நடக்கமுடியாமல் பிச்சைப் போடுகிறோம்.

இப்போது வழிபாட்டு தளங்களுடன் சேர்ந்து மருத்துவமனை வாசல்களிலும் இந்தக் குரல் ஒலிக்கிறது. நம் உணர்வு . நம் செயல் இரண்டையும் காலமும் இடமும் தீர்மானிக்கின்றன. கோவில் வாசலில் பிச்சைப்போட்டு அந்தத் தர்மக்காரியத்தின் மூலம்

மனிதன் தன் பாவங்களைத் தீர்த்துக் கொள்வதும், புண்ணியம் தேடுவதும் சாத்தியம் என்ற நம்பிக்கை நம் எல்லோரிடமும் வர்க்க வேற்பாடின்றி நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

கோவிலுக்குப் போகும்போது இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக மாற்றி வைத்துக் கொண்டு பிச்சைக்காரர்களுக்குப் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளும் பரமாத்மாக்களாகவே நாம் வலம் வருகிறொம்.
நம்மை அவர்கள் பாதிப்பது இல்லை. அப்படி அவர்களின் தோற்றம் பாதித்தாலும் ஒரு சில மணித்துளிகள் தான் அந்தப் பாதிப்பு.
‘கந்தனுக்கு அரோகரா..

முருகனுக்கு அரோகரா..”
“கல்லும் முள்ளும்

காலுக்கு மெத்தை..

சாமியே அய்யப்பா

அய்யப்போ சாமியே

சாமியே சரணம் அய்யப்பா”
இத்தியாதி அந்தந்த வழிபாட்டுத்தளங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் மட்டுமே மாறிய வாய்ப்பாட்டில் அசல் காட்சிகள் மறந்துவிடுகிறது.

நம் ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி நடக்கும் பயணத்தில் நாம் சந்திக்கும் இந்த உயிர்கள் வெறும் நிழல் காட்சிகளாகி மங்கிப்போய்விடுகின்றன.

அந்த நிழல்களின் உலகத்தில் அன்பு,காதல், உடலுறவு, பசி, காமம், சித்தனைப் போல அனைத்தையும் துச்சமாக நினைக்கும் மனநிலை..

இப்படி எண்ணற்ற மனிதர்களை நாம் ஜெயமோகனில் ஏழாம் உலகத்தில் சந்திக்கிறோம்.
கோவிலுக்குள் இருக்கும் பழநி முருகனைத் தினமும் அலங்கரித்து பூசைகள் செய்யும் போத்திக்கு முருகன் என்றால் கோனாரு மகன் முருகந்தான்.
‘இங்கே பாருடே பண்டாரம், இது ஆறடி கல்லு, பத்து நானூறு வரிசமாட்டு பலரும் கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடுதானுக. நமக்கு இது தொளிலு. உனக்கு முத்தம்மை, எனக்கு இது. அது சதை, இது கல்லு, அது அளியும், இது இன்னும் ஆயிரம் வருசம் இருக்கும்’ என்பார். (பக்203)
முத்தம்மையின் சதை அழிந்துவிடும். ஆனால் முத்தம்மையின் வாரிசுகளால் நிரம்பி இருக்கும் கோவில் வாசல்கள் பக்தர்களுக்கு எளிதில் புண்ணியம் சேர்க்கும். பண்டாரங்களுக்கு முத்தம்மையின் கருப்பை மகாலட்சுமியின் ஐசுவரியத்தை அள்ளிக்கொடுக்கும் தாமரைக்குளம். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக அலைபவர்களிடம் முத்தம்மையின் குரலும் அந்தக் குரலில் இருந்த தார்மீகம், பண்பாடு, கற்பு, உறவு.. இப்படி இந்த மனிதர்கள் தங்கள் பெருமையின் அளவுகோலாக காட்டும் அனைத்தும் உடைத்து எறியப்படுகிறது.
பன்றிகள் முட்டி மோதி உறுமும் மலம் குவிந்த இடத்தில் முத்தம்மையைப் போடுகிறார்கள். பெருமாள் கூனனுக்கு சராயப்புட்டியை திறந்து ஊட்டி அவன் உடலை வருடி புணர்ச்சிக்குத் தயார் படுத்துகிறான். முத்தம்மை தீடிரென்று “ஒடயோரே ஒத்த வெரலு.. ஒடயோரே ஒத்த வெரலு, இவன் வேண்டாம் ஒடயோரே, இவன் மட்டும் வேண்டாம் ஒடயோரே” என்று வீரீட்டாள்.

ஆனால் கூனன் அவளை முழுவதுமாக ஆக்ரமித்துவிட…
முத்தம்மையின் பனிக்குடம் நிலமடந்தையின் பனிக்குடத்தை உடைக்கிறது. அவள் வாரிசுகள் ஒவ்வொருவராய் சபரிமலை

படிக்கட்டுகள் என்று அவளே சொல்வது போல நம் கால்களை மிதிக்கிறார்கள்..

‘எனக்க பிள்ளைய பதினெட்டாக்கும், பதினெட்டு , சப்ரிமலை படிபோல பதினெட்டு.’ கண்ணில்ல, கையிலயும் காலிலயும் ஒரோ விரலு மட்டும்தான், கூனுமுண்டு, மாறிலயும் வயித்தலயும் அடிச்சுட்டுல்லா கரைஞ்சேன்… அக்கா , கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தைக் கை வெரலு..”
முத்தம்மையின் குரல் “ஒடயாரே இவன் வேண்டாம்” கதறல் மலைகளில் மோதி பிறவிகள் தோறும் எதிரொலிக்கிறது.

அறுபடை வீடுகளிலும் இருக்கும் கார்த்திகைப் பெண்களைக் கதற கதற அந்த முருகனே புணர்ந்ததை.. அன்னை குமரியைப் புணர்ந்த மகன் குமரனைத் தாங்க முடியாமல் மலைகள் சரிகிறது.

..

“ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்.. எனக்க பிள்ளைய தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்..”

முத்தம்மைகளின் குரல் … புண்ணியம் சேர்க்கும் ஒவ்வொரு படிக்கட்டிலும் நம்மைத் துரத்துகிறது. கோவில் கர்ப்பஹிரகத்து தீபாரதனையில் ஏழாம் உலகத்தின் ஒற்றை விரல்.. திருவாசகத்தையும் தேவாரத்தையும் ஊமையாக்கி ‘அம்மா தாயே பிச்சைப் போடு..” பண்டாரத்தின் உருப்படிகள் கூட்டம் கூட்டமாய் நம்மைத் துரத்துகிறார்கள்.
*
எழாம் உலகத்தை வாசித்துவிட்டு அந்தப் படைப்பின் ஊடாக தந்தை பெரியாரின் ஆவி கைத்தடியுடன் உலாவுவதாக என் இலக்கிய நண்பரிடம் சொன்னேன். தொலைபேசியில் சில மணித்துளிகள் நிலவிய அவர் மவுனம் அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போடுவதாக என்னிடம் கேட்டது போல ஒரு பிரமை. என் கருத்தை வலியுறுத்த பின்வருமாறு சொல்லிவைத்தேன்.
ஆவி, மறுபிறப்பு, ஆன்மா, பரமாத்மா, சொர்க்கம், நரகம்.. இத்தியாதி கருத்துருவாக்கங்களை தன் வாழ்வின் கடைசி மணித்துளி வரை எதிர்த்தவர் தந்தை பெரியார். திராவிடம், திராவிய இயக்கம், திராவிட இயக்க எழுத்துகள் என்றால் அலர்ஜி என்று ஒதுக்கி வைப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஏழாம் உலகத்தை வாசித்தவுடன் தந்தை பெரியாரை விட அதிகமாக மத நிறுவனத்தின் மீதான எதிர்ப்புணர்வு கூர்மையடைந்தது. இன்னும் சொல்லப்போனால் பக்கம் பக்கமாக தந்தை பெரியாரின் எழுத்துகளை வாசித்தவள், அறிந்தவள் என்ற முறையில் அவை அனைத்திலும் ஏற்படாத ஒரு ஆழமான பாதிப்பை ஏழாம் உலகத்தைத் தரிசிக்கும் போது என்னுள் ஏற்படுத்தியவர் ஜெயமோகன். (!)

**
ஏழாம் உலகம் என்னை ரொம்பவே பாதித்திருக்கிறது!

மதம், ஆன்மீகம், மத நிறுவனமயமாகும் போது ஏற்படும் வணிகத்தனம் என்று பல்வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கிறது. யதார்த்தம் என்றால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களையும் அவருடைய பாத்திரப்படைப்புகளையும் வாசகர்கள் நினைப்பது இயல்பு. ஜெயகாந்தன் காட்டிய யதார்த்தம் என்பது வானத்தில் வட்டமிடும் ஒரு கழுகின் பார்வை என்ற எண்ணத்தை ஏழாம் உலகின் கதைமாந்தர்களைக் காணும் போது உணர்கிறோம்.
ஆமாம்.. இந்தியாவில் மட்டும் வழிபாட்டு தளங்களில் பிச்சைக்காரர்களின் ஏழாம் உலகம். இந்தக் காட்சிகளை நான் ஜெர்மன், பாரீஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் காணவில்லை. ஜெர்மனில் மட்டும் ஓரிடத்தில் மெயின்ரோட்டில் ஒரு வயதானவர் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார். சிலர் அவருக்கு “யூரொ”வைப் போட்டார்கள். ம்ம்.. டீசண்டான பிச்சை எடுத்தல்தான். எனினும் அவருடைய உடை, அலங்காரம்எதிலும் நம்ம ஊரூ ஏழாம் உலகத்தின் எந்தச் சாயலும் இல்லை.

என்ன காரணம்?
கவிதை:
உண்ணாமல்

உறங்காமல்

விரதங்கள் காத்தேன்.

கேட்டது கிடைக்க

உன் பாதங்கள் தேடி

ஓடி வந்தேன்.
கருவறையின் புழுக்கத்தில்

பக்தர்களில் பக்தி வியர்வையில்

என் குரல் அமுங்கிவிட்டது.

‘தரிசனம் முடிந்தது’ என்று

தள்ளிவிட்டார்கள்.
என் காலடியில்

‘தாயே கருணைக்காட்டு’

உன் பிச்சையின் குரல்.

நான் நீயானேன்.

நீ மீண்டும்

சிலையானாய்.
( என் ஹேராம் கவிதை நூலில் 2000ல் நான் எழுதிய கவிதை)

காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா

ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்

நன்றி

www.thinnai.com

முந்தைய கட்டுரைஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி
அடுத்த கட்டுரைகொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் – அரவிந்தன் நீலகண்டன்