தெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி

இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை.

மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது.
அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில்.
இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது.

முருகபூபதி

இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.

பதுளையில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்குச்செல்லும் பஸ்வண்டிகளையும் அங்கதச்சுவையுடன்தான் சித்திரிக்கிறார். பஸ்வண்டிகளை மாநகரசபை மின்விளக்குகளுக்கு ஒப்பிடுகிறார். அந்த விளக்குகள் இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல் அணைந்துவிடும். இவ்வளவு விடயங்களும் சிறுகதையின் முதற் பக்கத்திலேயே வந்துவிடுகின்றன. வசனங்கள் சின்னச்சின்ன சொற்களினால் இணைகின்றன. அதனால் நீண்ட வாக்கியங்கள் இல்லை.

கதையின் மூன்றாவது வரி: கை நிறைந்த பைகளும் பை நிறைந்த சாமான்களுமாய்… என கவித்துவமாக தொடங்குகிறது. பண்டிகைக்காலத்தில் பஸ் நிலையம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஓவியம்போலவே சித்திரிக்கின்றார்.

இலங்கையில் நீங்கள் சிங்களப்பிரதேசங்களில் கவிக்கொலகாரயாவை பார்த்திருப்பீர்கள். பஸ் நிலையங்களில் பிரசுரங்களை வைத்துக்கொண்டு இராகத்துடன் பாடிப்பாடி விற்பார்கள்.
அவற்றில் ஒரு உண்மைச்சம்பவம் பாட்டாக புனையப்பட்டிருக்கும். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோகிலாம்பாள் கொலைச்சம்பவமும் இவ்வாறு பாடலாக புனையப்பட்டு பஸ்நிலையங்களில் பாடப்பட்டதாக புஷ்பராணி தமது அகாலம் நூலில் பதிவுசெய்துள்ளார்.
இலங்கையில் தம்புள்ள தொகுதி முன்னாள் எம்.பி. டி.பி. தென்னக்கோன் சமூக சேவைகள் அமைச்சராகவும் கலாசார அமைச்சராகவும் இருந்தவர். ஒரு தேர்தலில் தோல்வியுற்றபின்னர் அவரும் பஸ்நிலையங்களில் கவிக்கொல விற்று பாடிக்கொண்டிருந்தார்.

தெளிவத்தையின் கதையிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது. ஒரு தெருப்பாடகன், பீடா வெற்றிலை விற்பவர், பேனை கண்ணாடி விற்பவர், பொம்பாய் நைஸ் மற்றும் டொபி விற்பவர்கள் இவர்களின் கூக்குரலுக்கு மத்தியில் ஐயா தர்மஞ் சாமி என்ற பிச்சைக்காரனின் குரலும் கேட்கிறது. எப்படி சன்னமாக… கிணற்றுள்ளிருந்து கேட்பது போல். என எழுதுகிறார். கதைசொல்லிக்கு சிகரட் தேவைப்படுகிறது. ஆனால் அவர் கேட்ட சிகரட் நடைவியாபாரியிடம் இல்லை.

தருமஞ்சாமி – மீண்டும் சன்னமான குரல்.காட்சியில் ஒரு கமிரா கோணம். பஸ்ஸில் நிற்கும் ஒருவர் ‘ அட ராமா பிச்சையா கேட்கிறாய் இந்தச்சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப்பலமாகக் கத்தேன்” என்கிறார். அவரிடம் கருணை இருப்பதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால் சொன்னவரின் கை மட்டும் சட்டைப்பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்துவிடுவோம் என்ற எண்ணமாக இருக்கும் எனச்சொல்கிறார் கதைசொல்லி. 12 வரிகளுக்குள் ஒரு திரைப்படக்காட்சியே வந்துவிடுகிறது. அனுபவித்துப்படித்துப்பாருங்கள்.

சிறந்த சிறுகதை எழுத்தாளர்களினால் திரைக்கதை எழுத முடியும் எனச்சொல்வார்கள். தெளிவத்தை ஜோசப் அவர்கள் புதியகாற்று என்ற ஈழத்து திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். காமினி பொன்சேக்கா என்ற சிங்கள திரையுலக கலைஞரும் ஒரு தமிழ்ப்படம் எடுக்க முயற்சித்து தெளிவத்தையுடன் கதை தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார்.

அந்த பஸ்ஸில் எத்தனையோ பாத்திரங்கள், ஆனால் அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். கதைசொல்லி அவனது தோற்றத்தை வர்ணிக்கிறார்.சிகரட்டுக்கு வைத்திருந்த ஒரு ரூபாவில் சிகரட் வாங்கியிருந்தால் அது எவருக்கும் பிரயோசனமில்லாமல் புகைந்துபோயிருக்கும். தொலையட்டும் பாவம் என்று அதனை அந்தப்பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறார்.

இதனைப்பார்த்த ஏனைய பயணிகள் இப்பொழுது பிச்சைக்காரனை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு ரூபாய் பிச்சை இட்ட கதைசொல்லியை விமர்சிக்கிறார்கள். பஸ் கிளம்பிவிட்டது. ( இந்த வார்த்தையையும் கவனியுங்கள். கிளம்பிவிட்டது என்ற மொழிவழக்கு மலையகத்திலிருக்கிறது. எம்மில் பெரும்பாலானோர் புறப்பட்டுவிட்டது என்போம், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளிக்கிடும்பொழுது இறங்கிவிட்டோம் எனச்சொல்வார்கள். பல சொல் ஒரு பொருள் – கிளம்பியாச்சு- புறப்பட்டாயிற்று – வெளிக்கிட்டோம் – இறங்கிட்டோம்….இன்னும் இருக்கலாம்)
கதையில் மீண்டும் மற்றுமொரு கமிராக்கோணம்: இன்று தீபாவளி என்று அந்தக்காட்சி தொடங்குகிறது.
எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்:

கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக்கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன. எனக்கு மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் காட்சியொன்று உடனே நினைவுக்கு வந்தது. ஸ்ரீராமின் ஒளிப்பதிவுடன் இந்த இரண்டு வரிகளை நினைத்துப்பார்த்தேன்.விடியுமுன்னர் குளித்துவிடவேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது என தெளிவத்தை எழுதுகிறார். மலையகத்தின் பனிக்குளிரை சில வாக்கியங்களிலேயே சித்திரித்துவிடுகிறார்.

ஒரு கதையின் காட்சியை பாத்திரங்கள் பேசும் உரையாடல்களின் மூலமாகவும் சித்திரிக்க முடியும். சம்பவக்கோர்வையினூடாகவும் சொல்ல முடியும். நீட்டி முழக்காத செப்பனிட்ட இறுக்கமான சொற்களிலும் படிமமாக காண்பிக்கமுடியும். தெளிவத்தையின் படிமக்கலை அவரது கைவந்த கலை.

தீபாவளி வந்தால் சின்னஞ்சிறுசுகளுக்கு மட்டுமல்ல லயத்தில் அலையும் நாய்களுக்கும் கொண்டாட்டம்தான் என்கிறார். அங்கே மனிதர்களையும் நாய்களையும் மட்டும் காட்சிப்படுத்தாமல் கடவுளையும் அழைத்துவிடுகிறார். கடவுள் இருக்கிறாரா? என நாத்திகம் பேசிய மறுகணமே இருக்கிறார். உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தானே வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக்கும் என்று வேதாந்தம் சொல்லப்படுகிறது.

கதைசொல்லி தீபாவளிக்கு முதல் நாள் பஸ் நிலைய காட்சியையும் தீபாவளியன்று தோட்ட லயத்துக்காட்சிகளையும் மனதில் அசைபோடுகிறார். மறுநாள் மீண்டும் பஸ்நிலையம் வருகிறார்.
தீபாவளிக்கு முதல் நாள் கண்ட பிச்சைக்காரனைத்தேடுகிறார். அவனைக்காணவில்லை. பஸ் நிலைய ஹோட்டல் முதலாளி ஏற்கனவே நண்பர். பேசுவதற்கு பிடித்துக்கொள்கிறார். அவரும் முதல் நாள் ஒரு ரூபா கொடுத்து வடை கேட்ட அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். அங்கே தேநீர் தயாரிப்பவனும் கடுமையான வார்த்தைகளினால் அந்தப்பிச்சைக்காரனை திட்டுகிறான்.
பிச்சைக்காரனுக்கு எப்படி ஒரு ரூபா கிடைத்திருக்கும் என்பது ஹோட்டல் முதலாளியினதும் தேநீர் தயாரிக்கும் சர்வரினதும் சந்தேகம்.

ஆனால் அதனை தீபாவளிக்கு முதல் நாள் அந்த ஒரு ரூபாவை பிச்சையிட்ட கதைசொல்லி-உளுத்துப்போயிருக்கும் ஓட்டைக்குடிலுக்கு ஓடு போடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்ற உணர்வுடன் நடக்கிறார்.பிச்சைக்காரனுக்கும் முதலாளிக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன என்ற சுயவிசாரணையிலும் சுயவிமர்சனத்திலும் கதைசொல்லி ஈடுபடுகிறார்.

இதுபோன்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களில் பலருக்கு நேர்ந்திருக்கும். நண்பர் பேராசிரியர் நுஃமான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது ஒரு சம்பவத்தை சொன்னார்.

கல்முனையில் ஒரு இலக்கியக்கூட்டத்திற்காக லவுட்ஸ்பீக்கர் செட்டை வாடகைக்கு விடும் ஒரு தமிழரின் கடைக்குச்சென்றுள்ளார். அவருடன் வந்தவர் கவிஞர் சடாட்சரன். நுஃமானைப்பார்த்தால் தமிழர் என்ற தோற்றம் லவுட்ஸ்பீக்கர் கடைக்காரருக்கு.

நுஃமான் லவுட்ஸ்பீக்கர் மைக் முதலானவற்றை வாடகைக்கு கேட்கிறார்.உடனே தமிழரான அந்தக்கடைக்காரர்
சேர் நீங்க கேட்கிறதால தாரன். ஆனா இந்த காக்காமாருக்கு கொடுக்கமாட்டேன். என்றாராம்.எனக்கும் இப்படி ஒரு அனுபவம் கொழும்பு பஸ்ஸில் நடந்தது.ஒரு தமிழ் இளைஞர் நெற்றியில் திருநீறு பூச்சுடன் வந்தார். அவரும் நானும் நின்றுகொண்டு வந்தோம். ஒரு சிங்களவர் தான் இறங்கும் இடம் வந்ததும் என்னை அருகே அழைத்து தானிருந்துவந்த ஆசனத்தை எனக்குத்தந்துவிட்டு சொன்னார்… மாத்தையா மம பறதெமழுட சீட் தென்னி நே. ஒயா வாடிவெண்ட…” ( தமிழ் அர்த்தம்: ஐயா… நான் பறத்தமிழர்களுக்கு ஆசனம் கொடுக்கமாட்டேன். நீங்கள் அமருங்கள்.)

நல்லவேளை அந்தச்சிங்களம் புரியாமல் அந்த திருநீற்றுப்பூச்சு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அந்த இடத்தில் என்ன செய்வது என்ன பேசுவது எனத்தெரியாமல் நான் மனதுக்குள் திணறிக்கொண்டிருந்தேன்.
தெளிவத்தையின் பார்வையில் மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் காலமும் சூழலும் சந்தர்ப்பங்களும்தான் அவர்களை கெட்டவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. எத்தனை கோணம்? எத்தனை பார்வை? இந்த வாழ்க்கையில்தான் எத்தனை முடிச்சுகள்? இதனைத்தான் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச்சொல்கிறோமோ?

( பிற்குறிப்பு: மெல்பனில் அண்மையில் நடைபெற்ற சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வுக்காக எழுதப்பட்டது]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா- பாலா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள்