ஏ.கே.லோகிததாஸ்:நீண்ட உரையாடல்-1

ஜெயமோகன்: திரைப்படத்தை உங்கள் ஊடகமாகக் கொள்ள என்ன காரணம்? எப்படி அந்த ஆர்வம் ஏற்பட்டது?

 

லோகித்தாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன் முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச் சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.

 

ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழிமுறையைக் கண்டடைகிறது. இசை, விளையாட்டு, படிப்பு இப்படி நான் கண்டடைந்தது எழுத்தை. மிகச் சிறிய வயதிலேயே என் துக்கங்களையும் கண்ணீரையும் எழுதும் போது எனக்கு ஒரு அபூர்வமான வலிமை உருவாவதைக் கண்டுகொண்டேன். எழுதும் போது அந்த துக்கங்களை நான் வெல்வதுபோல. . . அவை என்னைத் தொடமுடியாது விலகுவது போல. . .

ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் துயரம் மிக்கது என்று தெரியும்.

 

லோகித்தாஸ்: ஆமாம். . . சிறு வயதிலேயே தந்தை எங்களை விட்டுப் போனார். பசித்து அனாதையாக வளர்ந்தேன். உறவினர் வீடுகள் தோறும் மாறிமாறி தங்கி வாழ்ந்தேன். அப்போது எனக்கு எழுத்து பெரும் துணையாக இருந்தது. அடிப்படையில் நான் இலக்கியவாதி. இலக்கியம்தான் என் ஊடகம். என் இலக்கியத்திற்கு ஊடகமாக சினிமா உள்ளது.

 

அதே சமயம் எனக்கு வெறும் எழுத்தும் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. நான் எழுதுபவற்றையெல்லாம் இயல்பாகவே மனதுக்குள் நடித்துக்கொண்டிருந்தேன். மெல்ல நான் நடிப்பதற்குரியவகையில் எழுத ஆரம்பித்தேன். அவை நாடக வடிவுக்குப் பொருத்தமாக ஆயின. என் பதினெட்டு வயதில் முதல் நாடகத்தை எழுதினேன். இருபத்திரெண்டு வயதுக்குள் கேரளம் முழுக்க கவனிக்கப்பட்ட நாடக ஆசிரியரானேன். முதல் நாடகம் ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்நு’ . அதன் பின்னர் திரைக்கதை எழுத வாய்ப்பு வந்தது.

 

1985இல் என் முதல் படம் ‘தனியாவர்த்தனம்’ வெளிவந்தது. சிபிமலையில் இயக்குநர். அது நாடகமாக என் மனதுக்குள் உருக்கொண்ட கரு. நான் நாடகத்தை ஒரு அடிப்படைக் கலையாகக் கருதுகிறேன். இலக்கியத்தை விடவும் ஏன் மொழியைவிடவும் புராதனமான கலை நடிப்பு. . . எல்லா உயிர்களும் நடிக்கின்றன. நடிப்பு மிக மிக அடிப்படையான ஒரு விஷயம். . .

ஜெயமோகன்: ஆமாம். ‘காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி’ படத்தில் புஷ்மேன் வகை மனிதர்கள் கூட  தங்கள் வேட்டை அனுபவங்களை நடித்துக் காண்பிக்கும் காட்சி இருந்தது. அவர்கள் மொழி இன்றும் மொழியாக ஆகாத வெறும் ஒலிதான். . .

 

லோகித்தாஸ்: எல்லாரும் நடிகர்கள்தான். வாயால் பேசுவதுபோல் நாம் ஒவ்வொரு கணமும் உடலாலும் பேசிக்கொண்டே இருக்கிறோம். நம் மனத்தில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். வளர வளர உடல் பற்றிய பிரக்ஞை அதிகமாகிறது. அந்த சுய உணர்வு நடிப்புக்குத் தடையாக ஆகிறது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்திசாலிகளைவிட சற்று மந்தமானவர்களை நடிக்க வைப்பது எளிது. இளம் வயதில் நடிப்பார்வம் அனைவரிடமும் இயல்பாக இருக்கிறது. குறிப்பாக பதின்பருவத்தினர் மிக தீவிரமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்

ஜெயமோகன்: நாடகத்துக்கும் இலக்கியத்திற்குமான உறவு என்ன?

 

லோகித்தாஸ்:  நடிக்கப்படும் இலக்கியமே நாடகம். ஏதோ ஒரு காலத்தில் நடிப்பும் இலக்கியமும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

ஜெயமோகன்: மீரா கதிரவன் மொழி பெயர்த்த ‘பெருவழியம்பலம்’ (பி.பத்மராஜன்) திரைக்கதைக்கான முன்னுரையில் பாலுமகேந்திரா ஒரு விஷயம் கூறுகிறார்: திரைக்கதை என்பது ஓர் இலக்கிய வடிவம் அல்ல, அது வாசிப்புக்கு உரியதல்ல.  இயக்குநருக்கான குறிப்புகள் மட்டும்தான் என்று. . .

 

லோகித்தாஸ்: அது ஒரு கோணம். நான் வாதாட விரும்பவில்லை. நான் கூறுவது என் கோணத்தை, என் வாசிப்பு மூலமும் படைப்பனுபவம் மூலமும் கிடைத்த அறிதலை. திரைக்கதை கண்டிப்பாக ஓர் இலக்கிய வடிவமே. வளர்ந்து வரும் இலக்கிய வடிவம் அது. திரைக்கதை இலக்கியமல்ல என்றால் நாடகமும் இலக்கியமில்லை அல்லவா? ஷேக்ஸ்பியர் படிப்பதற்காக எழுதவில்லை, நடிப்பதற்காகத்தானே எழுதினார். இசைப்பாடல்கள் (கீர்த்தனை) பாடப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அவையும் இலக்கியங்கள்தானே? இலக்கியம்தான் அடிப்படை.

 

ஜெயமோகன்: எனக்கு மிகப் பிடித்தமான இயக்குநர் இங்மர் பர்க்மான். அவரது ‘Sevanth Seal’   (ஏழாவது முத்திரை) திரைக்கதை மொழி சார்ந்தது அல்ல; காட்சிப் படிமங்களால் ஆனது. ஆனால் அதைப் படிக்கும்போது இலக்கியமாகவே அனுபவமாகிறது. நம் கற்பனையில் உண்மையில் அந்தப் படிமத்தையும்விட மகத்தான சினிமா ஒன்று விரிகிறது.

 

லோகித்தாஸ்: மனதால் நடித்து அகக்கண்ணால் கண்டு விரிவடையச் செய்ய முடிகிறது என்பதாலேயே நாடகம் மிகச்சிறந்த கலையாக ஆகிறது. நம் கண்முன் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கையை நாம் நேரடியாகப் பாக்கிறோம். திரைக்கதையும் அப்படித்தான்.

 

ஜெயமோகன்: ஆனால் திரைக்கதை சினிமா ஊடகத்தின் தேவைக்கு உட்பட்டே இயங்க முடியும். அந்த எல்லைகள் அதற்குத் தடைதானே?

 

லோகித்தாஸ்: சரி, நாடகத்திற்கு அதன் வெளி (Space) பெரிய எல்லைதானே? அது ஒரு சதுரத்திற்குள் நடந்தாக வேண்டுமே? ஆனால் மிகப் பெரிய நாடகாசிரியர்கள் அந்த இயல்பையே அந்த வடிவத்தின் பலமாக மாற்றிக்கொண்டார்கள். ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் வாழ்வின் அனைத்து முரண்பாடுகளும் வந்துமோதித் துடிக்கும்படிச் செய்தார்கள். ‘நாடகாந்தம் கவித்துவம்’ என்ற சொல்லாட்சி உருவானதே.

 

அதே போன்றதே  திரைக்கதை. திரைக்கதை அனைத்தையும் காட்டியாக வேண்டும். அது யோசிக்க முடியாது. அது தியானிக்க முடியாது. அது ‘காட்ட’ வேண்டும். அதுவே அதன் பலம். வாழ்க்கையின் முரண்களை, புதிர்களை, துக்கங்களை, சந்தோஷங்களை மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். திரைக்கதை எப்படி இலக்கியமாக ஆகிறது தெரியுமா? நாம் வாசிக்கும்போது நமது கற்பனையில்தான் அனைத்தும் நிகழ்கின்றன என்பதனால்தான்.

 

ஜெயமோகன்: இங்கே வரும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இதுதான். மலையாளத்தில் ஆரம்ப காலம் முதல் எழுத்தாளர்கள்தான் திரைக்கதை எழுதினார்கள். . . ஆரம்பகாலப் படமான ‘நீலக்குயில்’-க்கு உறூப் எழுதினார். தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே.பொற்றெகாட், பாறப்புறத்து மத்தாயி, செ.சுரேந்திரன் என்று மலையாள சினிமாவின் இயல்பை முதல்தரப் படைப்பாளிகள்தான் தீர்மானித்ததார்கள்.

 

லோகித்தாஸ்: கவனியுங்கள், இவர்கள் சினிமாவை மொழியை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. அதை ஒரு காட்சிக்கலையாக வளர்த்தெடுத்தார்கள். தோப்பில் பாசி, எஸ்.எல்.புரம் சதானந்தன், எம்டி.வாசுதேவன் நாயர், பி.பத்மராஜன் என்று இன்று வரை அந்த வரிசை நீள்கிறது. பத்மராஜனும் எம்.டி.யும் இலக்கியவாதிகளாக புகழ்பெற்ற பிறகு திரைக்கதை எழுத வந்தார்கள். மிக மிக காட்சித்தன்மை கொண்ட திரைக்கதைகள் அவர்கள் எழுதியவை. இலக்கியப் படைப்புகளாகவும் இன்றுஅவை அங்கீகாரம் பெற்றுள்ளன. இதேபோல இந்நூற்றாண்டு இலக்கியத்தை சினிமா போன்ற காட்சிக் கலைகளும் பெரிதும் பாதித்துள்ளன.

 

ஜெயமோகன்: ஒரு கதைக்கான தொடக்கம் எப்படி வருகிறது?

 

லோகித்தாஸ்: எப்படிஒரு சிறுகதைக்கு, ஒரு நாவலுக்கு, ஒரு ஓவியத்திற்கு தொடக்கம் வருகிறதோ அப்படி. ஒருபோதும் ஒரு கலைப் படைப்பு யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மனதில் ஒரு மின்னல் போல ஒரு தூண்டல் ஏற்படுகிறது. அவ்வளவுதான் சொல்லமுடியும்.

 

என்னுடைய அனுபவம் இப்படி. அது மழை கறுத்து இருண்டு மூடி நிற்பதைப்போல. இதோ பெய்யும் என்று தோன்றும். சில சமயம் பெய்யாமலேயே போகும். எப்போது, ஏன் பெய்கிறது என்று கூறவே முடியாது. ஒரு கணத்தில் சட்டென்று ஆரம்பித்து விடுகிறது. முதலில் துளிகள். பிறகு பெருமழை.

ஜெயமோகன்: திரைக்கதையின் தொடக்கம் எப்போதும் ஒரு கதாபாத்திரம்தான் என்று கூறப்படுவது உண்டு.

 

லோகித்தாஸ்: கண்டிப்பாக, அது முக்கியம்தான். ஒரு நாடகம் அல்லது திரைக்கதை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. யாருடைய வாழ்க்கை என்ற கேள்வி உடனே முளைத்துவிடுகிறது. ஆகவே கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அதே சமயம் ஒரு முரண்பாட்டு முனை, ஒரு அடிப்படையான கேள்விகூட திரைக்கதையின் தொடக்கமாக இருக்க முடியும்.  ‘தனியாவர்த்தனம்’, ‘கிரீடம்’ போன்ற திரைக்கதைகளில் மையக் கதாபாத்திரம்தான் தொடக்கம்.  ‘பாதேயம்’, ‘எழுதாப்புரங்கள்’  போன்றவற்றுக்கு மைய முரண்தான் தொடக்கம்.

 

ஜெயமோகன்: எப்போதாவதுஒரு கருத்து அல்லது ஒரு அவதானிப்பு அப்படி தொடக்கமாக அமைந்ததுண்டா?

 

 

லோகித்தாஸ்: அபூர்வமாக அப்படி அமையலாம். என்னுடைய திரைக்கதைகளில் ‘ஜாதகம்’ அப்படிப்பட்டது. சோதிட நம்பிக்கை பற்றிய ஒரு விமரிசனம் அது. இன்னொரு விஷயம் உண்டு. ஒரு திரைக்கதை ஏதேனும் வடிவில் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதன் விதை நம் மனதுக்குள் விழுந்துவிடுகிறது. அங்கே அது முளைத்து தன் இருப்பைத் தெரிவிக்கிறது. படைப்புக்கான தவிப்பு அல்லது நிம்மதியின்மைஅங்கேயே தொடங்கிவிடுகிறது. உண்மையான தொடக்கம் அதுதான்.

 

உதாரணமாக, நான் இயக்கிய முதல் படமான ‘பூதக்கண்ணாடி’, சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதைப் பற்றிய செய்தி ஒன்று என் மனதுக்குள் எப்போதோ புகுந்தது. நாட்கணக்கில் அது என்னைத் தொந்தரவு செய்தது. குறிப்பாக ஒரு ·போட்டோ. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு சிறுமியின் புத்தகப் பையின் படம் அது. புத்தகங்கள் சிதறி, சோற்று டப்பா திறந்து சிந்தி. . . அந்த அவஸ்தை என்னில் எச்சம் கொண்டபோது நான் கண்டுகொண்டேன், அச்சம்பவத்தை நான் ஒரு தந்தையின் கண்ணால்தான் பார்க்கிறேன் என்று!

 

அந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக வித்யாதரன் உருவாகி வந்தான். அவனுக்கு சமகால வாழ்க்கையைப் பற்றி பதற்றமும் பயமும் அதிகம். ஆனால் அவன் ஒன்றும் சொல்வதில்லை. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த கோழை அவன். ஆகவே அவன் மனம் சிதைகிறது. பிறக்கிறது. அவனுடைய பார்வைகள் வழியாக அந்தப் பிரச்சினையை நான் ஆராய்ந்தேன்.

 

ஜெயமோகன்: நான் ஒரு நாவல் எழுதினால் முழு வேகத்துடன் அதை எழுதிவிடுவேன். பிறகுதான் அதை என் எடிட்டர்களுடன் விவாதிப்பேன். ஆனால் இங்கே திரைக்கதைகள் கரு நிலையிலேயே விவாதிக்கப்படுகின்றன. படிப்படியாக உருவாக்கப்படுகின்றன.

 

லோகித்தாஸ்: என்னுடைய திரைக்கதைகள் நீங்கள் நாவல் எழுதுவதுபோலவே உருவாக்கப்படுகின்றன. நான் எப்போதும் விவாதிப்பதைத் தவிர்ப்பவன். எழுதிய பிறகு இயக்குநரிடம், நடிகர்களிடம் விவாதிப்பேன். கதைக்கருவை விவாதித்து உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது. அது செயற்கையான கஆதையைத்தான் உருவாக்கும்.

 

ஜெயமோகன்: எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?

 

லோகித்தாஸ்: ஒரு முறை முயன்று பார்த்தேன்.  ‘விசாரணை’ என்ற என் திரைக்கதை ஓர் இடத்தில் முட்டி முனனகராமல் நின்றுவிட்டது. ஒரு விஷயம் தெரிந்தது. கதை விவாதத்தில் அதுதான் முக்கியமான சிக்கல். நாம் ஒரு கருவைச் சொலும்போது அது கேட்பவர்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றது. அதன் பிறகு விவாதம் என்பது கண்ணைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவது போலத்தான். அந்தக் கருவை நான் முழுமையாக உணர்வுரீதியாகவும் கதையளவிலும் விரிவுபடுத்தி முன்வைத்தால்தான் என் தரப்பு அவர்களிடம் போய்ச்சேரமுடியும். திரைக்கதையின் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி மட்டுமே நாம் பிறரிடம் விவாதிக்க முடியும்.

 

ஜெயமோகன்: ஆனால் இங்கே தமிழில் இன்னும் விவாதம் மூலமே உருவாகிறது.

 

லோகித்தாஸ்: இங்கே சினிமா பல்வேறு கேளிக்கைகளை ஒரு விஷயத்திற்குள் இணைக்க முயல்வதாகவே உள்ளது. திரைக்கதை அவையனைத்தையும் இணைக்கும் ஓர் அமைப்பு. அதைப் படிப்படியாக விவாதித்து உருவாக்கலாம். அதற்கு சில வழிமுறைகள் உருவாகியும் உள்ளன. கதையின் ஆன்மாவை அப்படி விவாதித்து உருவாக்கிவிட முடியாது. இதில் எனக்கு சந்தேகமே இல்லை. விவாதிக்கிறார்கள் என்று வைப்போம். ஆனால் அவை ஒரே உணர்ச்சியால், ஒரு பார்வையால் இணைக்கப்பட்டிருக்காது. திரைக்கதையில் ஒருமை இருக்காது.

 

ஜெயமோகன்: பூதக்கண்ணாடி பற்றி சொன்னீர்கள். அந்தப் படத்தில் அந்தப் படிமம் மிகவும் புகழ்பெற்றது. வாட்ச் ரிப்பேர் பார்க்கும் வித்யாதரன் ஒரு கண்ணில் பூதக்கண்ணாடி அணிந்திருக்கிறான். மறு கண் சாதாரணம். இரு பார்வையும் அவனிடம் உள்ளது. படிமங்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள். . .

 

லோகித்தாஸ்: நான் பொதுவான படிமங்களைத் தனித்து நிற்கும்படி பயன்படுத்துபவனல்ல. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைக்கதையில், காட்சியமைப்பில் வெளியே இருந்து ‘செலுத்தப்படும்’ படிமங்கள் படைப்பை பலவீனமாக்குகின்றன. பூதக்கண்ணாடி எடுக்க கதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நான் ஒரு முறை ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குள் மழைக்கு ஒதுங்கினேன். அங்கே வாட்ச் ரிப்பேர் செய்பவர் வேலை செய்தபடியே என்னிடம் பேசினார். சட்டென்று அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. சகஜ வாழ்வைப் பார்க்கும் ஒரு கண். அதிநுண்ணிய உலகைப் பார்க்கும் இன்னொரு கண். அதுதான் வித்யாதரனின் இயல்பு என்று பட்டது.

 

அதேசமயம் அந்தப் படிமத்தை நான் திணிக்கவில்லை. வாட்ச் ரிப்பேர் செய்வது வித்யாதரனின் தொழில், அவ்வளவுதான். நீங்கள் மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களை அளிக்காவிட்டால் அது ஒரு தகவல் மட்டுமே. பூதக்கண்ணாடி படத்தில் வித்யாதரன் சாலையில் போகும்போது வழிமறிக்கும் அந்தப் பாம்பு குறியீடாக பெரிதும் விவாதிக்கப்பட்டது. அது வேண்டுமென்றால் காமத்தின் குறியீடு என கொள்ளலாம். வித்யாதரனின் ஒடுக்கப்பட்ட காமத்தை அது குறிக்கிறது எனலாம்.  ஆனால்அப்படி பொருள் தராதவர்களைப் பொறுத்தமட்டில் அது சாதாரணமான பாம்பு. அவனுடைய பயங்கொள்ளித் தனத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு சினிமாவில் எல்லாமே குறியீடுதான். ஆகவே குறியீடாக தனியாக ஏதும் இருக்கக்கூடாது.

ஜெயமோகன்: ஏன்?

 

லோகித்தாஸ்: ஏனெனில் காட்சிக் கலை என்பது நேரடியாக மனதைப் பாதிக்கும்  ஊடகம். சிந்தனையை பாதித்து அதன் வழியாக மனதை பாதிப்பதல்ல அது. மனதைக் கவர்ந்து அதன் வழியாகச் சிந்தனையைப் பாதிப்பது. எந்த காட்சிக்கலையானாலும் அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நம்மை அதில் ஆழ்ந்து போக வைக்கிறது. ஆகவேதான் காட்சிக்கலை என்பது எல்லா காலத்திலும் எளிய மக்களின் ஊடகமாக இருந்து வந்துள்ளது. அது தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கு உரியதல்ல. அறிஞர்களுக்கும் பயிற்சி உடையவர்களுக்கும் உரியதல்ல. காட்சிக்கலையில்  அம்மாதிரி செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அனுபவத்தில் ஒருமை

சிதறும். அதில் ரசிகன் ஈடுபட முடியாமலாகும்.

 

நான் யாருக்காக்க் கதை சொல்கிறேன்? சாயங்காலம் வேலை முடிந்து கைகால்களை சேறு போகக் கழுவி மண்வெட்டியைச் சாத்திவிட்டு வந்து அமரும் விவசாயிக்காக. அவனுடைய அறிவுத்திறன் குறைவு என்றோ அவனுடைய ரசனை பழுதுபட்டது என்றோ நான் நம்பவில்லை. அவனுடைய அற உணர்வு நம் அனைவருடைய அற உணர்வை விடவும் எவ்வளவோ மடங்கு மேலானது. அவனை நம்பி நான் கதை சொல்கிறேன். நான் இன்று வரை தரக்குறைவான எதையும் எழுதியதில்லை. என் படங்கள் அடைந்து வரும் தொடர்வெற்றி அவன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் உறுதிப்படுத்துகிறது.

ஜெயமோகன்: கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கும் வணிகப் படங்கள்தான் நல்ல படங்களா?

 

லோகித்தாஸ்: இல்லை. நான் என் மதிப்பீடுகளில் ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘வினோதம் + வித்யாப்பியாசம்’  (கேளிக்கை, கற்பித்தல்) நம்மை ஈர்த்து தன்னில் ஈடுபட வைக்கவேண்டிய வலிமை கலைக்கு இருந்தாக வேண்டும். இது முதல் தேவை அடுத்தபடியாக அதற்கு கற்பிக்கும் பண்பு இருக்க வேண்டும். மூளைக்குக் கற்பித்தலைச் சொல்லவில்லை, ஆத்மாவுக்குக் கற்பித்தலைப் பற்றி சொல்கிறேன்.

 

நல்ல கலையின் நோக்கமே மனதைப் பண்படுத்துவதுதான். நம்மை ஈர்த்து ஆழமான அனுபவத்தை அளித்து நம்மை மேம்படுத்துவது எதுவோ அதுவே சிறந்த கலை. கலையனுபவம் உருவாவதில்லை. அறிவு சார்ந்த அனுபவம் மட்டுமே உருவாகிறது. அம்மாதிரி பரிசோதனை முயற்சிகளை நான் குறைகூற மாட்டேன். அதெல்லாம் தேவைதான். பரிசோதனைகள்தான் பல புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன. ஆனால் கலை ரசிக்கப்படும் விதம் எப்போதும் ஒன்றுதான்.

ஜெயமோகன்: அது என்ன?

 

லோகித்தாஸ்: இந்த நிமிடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்குகளில் எத்தனை லட்சம் மக்கள் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் ஒன்றாகி, ஒரே மனதாக அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயம் அது. ஒரு நல்ல சினிமா அவனை மன உச்சங்களுக்கு கொண்டு செல்கிறது. அங்கே அவன் நீதியை, அழகை மட்டுமே நாடுகிறான்.

 

திரையரங்கில் ரசிகனின் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது. பெருந்தன்மையால் விரிந்திருக்கிறது. உயர்ந்த விஷயங்களுடன் அவன் சட்டென்று இணைந்து கொள்கிறான்.  நல்லவர்களுடன் தன்னை அடையாளம் காண்கிறான். சிறிய அநீதியைக்கூட அவன் அங்கே ஏற்பதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் அந்தப் படம் ஓடாது.

 

கவனியுங்கள், அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் எல்லாரும் யோக்கியமானவர்கள் அல்ல. அவர்களுள் மோசடிக்காரர்கள், குற்றவாளிகள், கோழைகள் இருக்கலாம். அங்கே அந்த இருளில் அவர்களின் மனங்கள் உருகி, ஒன்றாகி, உச்சம் நோக்கி நகர்கின்றன. அது பெரிய தியானம். சினிமாவை இகழும் அறிவுஜீவிகள் நம் சமூக மனத்திற்கு சினிமா அளிக்கும் இந்தப் பெரும் பங்களிப்பைப் பற்றி அறிவதில்லை.

 

ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியை, கருணையை, அன்பைப் பற்றித்தானே பேச முடியும்?

 

லோகித்தாஸ்: அதைப்பற்றித் மட்டும்தான் பேசவேண்டும். பல நூற்றாண்டுகளாக அதைப் பற்றித்தான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப் பற்றித்தான் பேசும். ஏனென்றால் நீதியும் கருணையும் அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும் குரோதமும் போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும்.

 

ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து, மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்துவிட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம், கருணை, அன்பு என்று கூறிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

 

இலக்கியமும் நாடகக் கலையும் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம். அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணி நேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றன. நம்பிக்கையூட்டுகன்றன

 

இப்படிப் பார்க்கும்போது நல்ல சினிமாவுக்கும் மோசமான சினிமாவுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகிறது. நல்ல சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்கு தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனதில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது. அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான்.

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேவாரம்