தெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)


(07.09.2011 புதன்கிழமை நடைபெறவிருக்கும் கொடகே சாகித்திய விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் கௌரவ விருது பெறும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஐம்பது வருட இலக்கியப் பணி – ஒரு பார்வை)

இந்தியா தொழிலாளர்களை அடிமைகளாக தென் ஆபிரிக்கா, டான்சானியா, உகண்டா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த காலம். காலனித்துவ ஆட்சிகாலம் இலங்கையிலும் நிலவிய அந்த காலகட்டத்தில் 1824 ஆம் ஆண்டு கண்டிய பிரதேசத்தில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் கூலித் தொழிலாளர்கள், பயிற் செய்கை காலத்திற்கு மட்டும் தங்கியிருந்து தொழில் புரிவதும் பின் இந்தியாவுக்கு திரும்பி செல்வதுமாக இருந்திருந்தனர். 1839க்கு பிற்பட்ட காலத்தில் தேயிலை பயிர் செய்கையினால் நிரந்தர தொழிலாளர்கள் இலங்கைக்கு தேவைப்பட்டனர். அப்பொழுது பெரிய கங்காணிகளால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் குழுமம்; மலை பிரதேசங்களில் குடியேற்றப்பட்டு பெருந்தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் இன்றுவரை தங்களை பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபடுத்தியும் வருகிறார்கள். இலங்கையில் இவ்வாறானதொரு இரு நூற்றாண்டு வரலாற்றை கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள் என அழைக்கப்படுகின்ற இம் மக்கள் பல போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொண்டு “மலையகம்” என்ற தனித்துவ அடையாளத்துடன் தேசியம் என்று பேசுமளவுக்கு வளர்ச்சி கட்டத்தினை எய்தியிருக்கிறார்கள்.

இன்று மலையகம் என்ற தனிக்குழுமம் “தேசியம்” என்ற கொள்ளைகளுடனான உரிமைக்கோரலை முன்னெடுக்கிறது என்றால் வெறுமனே மலையக வரலாற்றில் தடம் பதித்த அரசியல் தலைமைகளினால் மட்டுமல்ல. இவ்வாறானதொரு அணிவகுப்புக்கு அடிநாதமாக எழுத்தாளர்களும் இருந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை.

இலக்கியம் என்பது காலத்தை காட்டும் கண்ணாடியாக அமைய வேண்டும் என்பார்கள். குறித்த காலச்சூழலை, அச்சுழல்சார் வாழ்வியல் அம்சங்களை புதிய தலைமுறையினருக்கு எடுத்துகாட்டுகின்ற இலக்கியம் என்கிற காண்ணாடியினை ஆக்குபவர்களாகவும் அல்லது கண்ணாடியாகவும் பிரதிபலிப்பவர்களாக எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் இருந்தும் வருகிறார்கள். அதற்கு ஈழத்து இலக்கியமும் அதில் ஒரு வகுதியாக இருக்கின்ற மலையக இலக்கியமும் விதிவிலக்காக அமைந்துவிடவில்லை.

மலையகத்தை சார்ந்த எழுத்தாளர்கள் மலையக வாழ்க்கைச் சூழலில் நிகழும் அவலங்களை மறைத்து வைத்திருக்கும் மூடுதிரையினை கிழித்தெறிந்துவிட்டு பிரச்சினைகளை வெளிக்கொணரவில்லையென்றால் இன்று இவ்வாறானதொரு தனித்துவ அடையாளம் என்பது மலையக சமூகத்தினைப் பொறுத்தவரை கேள்விக்குறியானதாகவே அமைந்திருக்கும்.

மலையகத்தில் சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களாகவும் (கோ.நடேசையர், சி.விவேலுப்பிள்;ளை இர.சிவலிங்கம் போன்றவர்கள்) இருந்து கொண்டு தங்களது விழிப்புணர்வு பிரசாரங்களையும், கொள்கைகளையும் தொழிலாளர்களின் துன்பியல் வாழ்வினையும் வெளிக் கொணர்ந்தனர். சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளினூடாக பங்களிப்பு செலுத்தாது எழுத்துத்துறையில் மாத்திரம் மலையக பிரச்சினைகளை வெளியுலகுக்கு முன்வைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். அதில் என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றோரை குறிப்பிடலாம். இன்று இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்வதும் அறிந்ததே.

ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் எனும்போது அதனை வளர்த்தெடுத்தவர்களாக எத்தனையோ பேர் எம்மத்தியில் இருந்தாலும் தற்பொழுது “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றியும் அவரது எழுத்து பணி பற்றியும் சற்று உற்று நோக்குவது அவசியமாகிறது.

புனைகதை (சிறுகதை, நாவல்) என்னும்போது ‘நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தினாற் தோன்றிய மத்திய தர வர்க்கத்தின் இலக்கிய குரலே புனைகதை’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலில் விளக்கியுள்ளார்.

புனைகதையின் சிறுகதை வளர்ச்சி கட்டத்தினை 1850 தொடக்கம் 1925 முதற்கட்டமாகவும்;, 1926 – 1945 வரை இரண்டாம் கட்டமாகவும், 1945 தொடக்கம் 1960 வரை மூன்றாவது கட்டமாகவும் 1960க்குப் பின் நான்காம் கட்டமாகவும் வகுக்கலாம். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் – பெ.கோ.சுந்தரராஜன், சோ.சிவபாதசுந்தரம்) இதனடிப்படையில் பார்க்கும்பொழுது ஈழத்தில் நான்காம் கட்ட பிரிவினருக்குள் உருவாகிய புனைக்கதை எழுத்தாளர்களுள், மலையக இலக்கியம் பற்றிய அலகினை புரட்டும்போது தவிர்க்க முடியாத பக்கமாய் இருப்பவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்.

சில நேரங்களில் தற்போது வகுத்துள்ள ஈழத்து இலக்கிய சிறுகதை, நாவல் வரலாற்றில் மலையக புனைக்கதை எழுத்தாளர்கள் அங்கமாக கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம் வடக்கு, கிழக்கு இலக்கியத்தினை மாத்திரம் ஈழத்து இலக்கியமாக சிலர் கருதியமையே. இந்த கூற்றினை பிற்காலத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை போன்றவர்களும் ஏற்றுக் கொண்டு ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியத்தினையும் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதும்; இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடியதே.

மலையக எழுத்தளார்களானவர்கள் மூன்று வகைப்படுவர். மலையகத்தில் தோட்ட தொழிலாளியின் பிள்ளையாக பிறந்து வாழ்வோடு வாழ்வாக மலையக வாழ்வியலை உணர்ந்து எழுதுபவர்கள் ஒரு வகையினர்.

மலையகம் என்ற எண்ணக்கருவை கேட்டறிந்து விளங்கி துன்ப துயரங்களை தெரிந்து (ஆய்வு செய்து) அதன்மூலம் மலையகம் பற்றிய இலக்கியம் படைக்கும் பிறபிராந்திய எழுத்தாளர் இன்னொரு வகையினர். இவர்களால் மலையகம் பற்றிய இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் அதில் எந்த அளவிற்கு மலையக மக்களின் வாழ்வு உயிரோட்டம் பெறுகிறது என்பது ஆராயப்பட வேண்டியவையே. ஆனாலும் மலையக இலக்கியம் எனும் ஆய்வில் மலையகம் பற்றிய பிறபிராந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வும் அவசியமாகிறது.

மற்றொரு வகையினர் அதிகார வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் (உயர் தொழில் புரிபவர்கள்) மலையக சூழலில் வாழ நிர்பந்திக்கும்போது அவர்களோடு வாழ்ந்த அனுபவங்களின் உணர்வுகளில் எழுத முனைபவர்கள். இவர்களது இலக்கிய படைப்பானது மேலதிகாரிகளின் சார்பாக, நிர்வாகம் சார்பாக அவர்களை மேலுயர்த்தி காட்ட துணியும் இலக்கியமாக அமையலாம்.

ஆனால் ஆசிரியர் (தந்தையார்) குடும்பத்தின் வழி வந்த ஒருவர் மலையக மக்களின்பால் நின்று அவர்களின் துன்ப துயரங்களை பற்றி எழுதுவதென்பது சற்றுக் கடினமானதாகவே இருக்கும். அதேநேரத்தில் எதிர்ப்புகளும் அதிகமாகவே மேற்கிளம்பும். இதனை எதையுமே பொருட்படுத்தாது விதிவிலக்காக எழுத்துப் பணியை மேற்கொண்டவரே தெளிவத்தை ஜோசப் அவர்கள். அந்தவகையில்; மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப்பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக்கூடும்.

இவ்வாறானதொரு தீவிர எழுத்துப்பணிக்கு இவர் மலையகத்தில் வாழ்ந்த விதமும் மூலக்காரணமாக அமைந்திருக்கலாம். 1920 களில் மலையகக் கல்வி பற்றி சர்ச்சைகள் வெகுவாக மேற்கிளம்பத் தொடங்கின. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்ததன் காரணமாக தோட்ட நிர்வாகிகள் பாடசாலைகளை அமைத்து அதனை அரசுக்கு அறிவிக்க வேண்டுமென மேலும் வலியுறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்கும் ஆசிரியக்குழுக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்)

அக்குழுக்களில் ஒருவராக வந்தவரே ஜோசப் அவர்களின் தந்தை சந்தனசாமிபிள்ளை அவர்கள். அவர் ஆசிரியர் (வாத்தியார்) தொழிலினை மேற்கொண்டிருந்தாலும் அவர் வசிப்பதற்கு தோட்ட தொழிலாளர்கள் வாழும் லயத்தில் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் அனுபவிக்கும் அதே லய வாழ்க்கை, பெற்றோருடன் சேர்த்து எட்டு பேர் அந்த இரண்டு அறைகளில்; வாழ்ந்த அனுபவம் இவரை இவ்வாறான எழுத்து பணிக்கு தூண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனை அவரும் தனது நேர்காணல்களில் சொல்லியிருக்கின்றார்.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடும்பச்சூழலானது, பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப் அவர்கள். ஞானப்பிரகாசம் (மூத்தவர்), சந்தனசாமி, சேவியர், பாக்கியசாமி (பரிபூரணன் – எழுத்தாளர்) ஆகிய நான்கு சகோதரர்களும், அருமைசெல்வி (வடகரை – கும்பகோணம்) என்ற சகோதரியும் இவரது உடன் பிறப்புகளாவர். 28.08.1968 இல் கொழும்பு கிரேண்பாஸ் என்ற இடத்தில் வாழ்ந்த மரியசூசை லெக்ரான் என்பவருக்கும் திரேசம்மாள் என்பவருக்கும் பிறந்த பிலோமினா ரூபௌh என்பவரை வாழ்க்கைத் துiணாய் இணைத்துக் கொண்டு திரேசா (திரேசா – புஷ்பராஜ்), தோமஸ் ரமேஸ் (தோமஸ் ரமேஸ் – ஹிமாலி), திமொதி ரவீந்திரன் (திமொதி ரவீந்திரன் – அரூஸியா), தெக்ளா சியாமளா (தெக்ளா சியாமளா – டேவிட்) ஆகியோருக்கு பொறுப்புள்ள தந்தையாகவும், ஆர்த்தி, ரந்தீரா, ரொஸாரா, அம்றா, சித்ரா, அதீப், சில்வியா ஆகியோருக்கு அன்பு தாத்தாவாகவும் இருந்து வருக்கின்றார்.

தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில்; கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்குமுன் ஸ்டார் கொன்பெக்ஸனரி எனும் பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார்.

பேசும்படம் என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ்.ஜோசப் – ஊவா கட்டவளை, ஆலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப்பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தையில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப்பணிக்கு இழுத்துச் சென்றது.

1960 ஆம் ஆண்டில் தமிழ்வாணனின் கல்கண்டு என்ற இதழுக்கு “பால்காரப் பையன்” என்ற கதை எழுதியனுப்பியிருந்தார். இதுவே இவரது இலக்கிய வரலாற்றில் முதல் சிறுகதையாகும். அனால் அது கடைசிவரையும் பிரசுரிக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து ஜி.உமாபதி அவர்கள் நடாத்திய உமா என்ற மாத இதழுக்கு, அவ்விதழின்; அட்டைப்படத்துக்கான கதையினை எழுதியிருந்தார். பாதையில் கிடந்த வாழைப்பழத்தோலில் வழுக்கி விழும் வாலிபனையும் அதைப் பார்த்துக் குறும்பாகச் சிரிக்கும் இரண்டு இளம் பெண்களையும் சுட்டி நிற்கும் அந்த கதையின் பெயர் “வாழைப்பழத் தோல்” இதுவே பிரசுரமான அவரது முதல் கதை. இதற்கு பிறகு ‘மாயை’ ‘அழகு’ ஆகிய கதைகளை மோகன் அவர்கள் நடத்திய கதம்பம் என்ற இதழ் பிரசுரித்திருந்தது.

ஜோசப் அவர்கள் தெளிவத்தை தோட்டத்து ஆசிரியர் (வாத்தியார்) அதோடு பகுதி நேர எழுதுவினைஞராக (தோட்டத்து காரியாலய கிளாக்கர்) தொழில் புரிய ஆரம்பித்த காலத்தில் வீரகேசரியில் பிரசுமான தோட்ட மஞ்சரி எனும் பகுதிக்கு ‘பெயரோ பெயர்’ என்ற கட்டுரையினை எழுதியிருந்தார். பாடசாலை வரவு இடாப்பில் மாணவர்களின் பெயர்களை கொச்சைப்படுத்தும், சீரழிக்கும் முறைகேடான சம்பவங்களுக்கு எதிரான கட்டுரையது. தோட்ட மஞ்சரியில் பிரசுரமானது தெளிவத்தை ஜோசப் என்ற பெயருடன். அன்றிலிருந்து தெளிவத்தை ஜோசப் ஆனார்.

50களின் கடைசியில் தொடங்கியிருந்தாலும் 1963 களிலேயே இலக்கியத்துறையில் தடம் பதித்து பலராலும் அறியப்பட்டவரானார். 1963 ஆம் ஆண்டில் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியில் இவரது சிறுகதையான ‘பாட்டி சொன்ன கதை’ முதலிடத்தை பெற்றுக் கொண்டது. பாட்டி சொன்ன கதை பழங்கதை என்று புறந்தள்ளிவிடமுடியாது. இன்றைய சூழலிலும் இந்த பாட்டியின் கதை பலருக்கு அவசியமாகத்தான் இருக்கிறது. அதேபோல 1963 இல் மலைமுரசு நடத்திய சிறுகதை போட்டியில் ‘நாமிருக்கும்நாடே’ என்ற சிறுகதையும் முதலிடம் பெற்றது. 1964 இல் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியிலும் இவரது ‘பழம் விழுந்தது’ என்ற சிறுகதை முதலிடத்தை பெற்றுக் கொண்டதும் இன்னும் பிரபலமடைய தொடங்கினார். இதன் பின்னர் இலக்கிய உலகில் இவர் பெயர் பரவ தொடங்கியது. அந்தவகையில் பார்க்கின்றபோது தெளிவத்தை ஜோசப் என்பவரை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை வீரகேசரியையே சாரும். இதன் பின் 1965 இல் வீரகேசரி சிறுகதை போட்டியை நடத்த திட்டமிட்டதுமே இம்முறையும் “தெளிவத்தை ஜோசப் எழுதுகிறாரா என்ற கேள்விகள் கூட எழுந்தது. அதனால் என்னை நடுவர் குழுவில் அப்போது அதற்கு பொறுப்பாக இருந்த வீரகேசரியின் துணையாசிரியர் திரு.கார்மேகம் அவர்கள் இணைத்து விட்டார்” என்று அவரது தினகரன் நேர்காணல் ஒன்றிலும் தெரிவித்திருந்தார். அவ்வாறானதொரு இடத்தினை தக்க வைத்துக் கொண்டார். வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயலாளராகவும் இருந்த திரு. எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் தெளிவத்தை ஜோசப் அவர்களை மட்டுமல்லாது மலையகத்தில் எழுத்தார்வம் மிக்க பலரையும் இது போல ஊக்குவித்திருக்கிறார், இலக்கிய உலகிற்கு அறிய செய்திருக்கிறார் என்பதும் மறக்கப்படக்கூடாது.

வீரகேசரி நடாத்திய மூன்றாம் நான்காம் மலையக சிறுகதை போட்டிகளில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சகோதரரான பாக்கியசாமி என்கிற பரிபூரணன் இருபோட்டிகளிலும் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. வீரகேசரி நடத்திய நான்கு சிறுகதை போட்டிகளிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற சிறுகதைகளை தொகுத்து கதைக்கனிகள் என்ற நூலினை கார்மேகம் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்.

இவரது சிறுகதையான படிப்….பூ என்ற கதையினையும் 1962 இல் வீரகேசரியே பிரசுரித்திருந்தது. 2009 வரை எழுதிய (கடந்த 2 வருடங்களாக இவரால் சிறுகதை எழுதப்பட வில்லை) அவரது 66 சிறுகதைகளில் 16 சிறுகதைகளை பிரசுரித்து அவரது இலக்கிய வாழ்வுக்கு வீரகேசரி பெரிதும் உறுதுiணாக அமைந்திருக்கிறது. வீரகேசரி மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களும் இதேபோல தங்களது பங்களிப்பினை வழங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

தினகரன், தினக்குரல், செய்தி, சிந்தாமணி, ஜோதி, ஆகிய பத்திரிகைகளும், கலைமகள் மலைப்பொறி, மலைமுரசு, தேனருவி, மல்லிகை, கதம்பம், ஓலை, அஞ்சலி, தமிழமுது, மாணிக்கம், சௌமியம், மூன்றாவது மனிதன், முகில் போன்ற சஞ்சிகைகளும் இவரது சிறுகதைகளை பிரசுரித்த பெருமை பெறும் அதேவேளை சிறந்த பங்களிப்பினையும் நல்கியுள்ளது.

66 சிறுகதைகள் எழுப்பட்டிருந்தாலும் இதுவரையில் 11 சிறுகதையடங்கிய நாமிருக்கும் நாடே என்ற ஒரேயொரு சிறுகதை தொகுப்பு மாத்திரமே வெளிவந்துள்ளது. நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை தொகுப்பு வைகறை வெளியீட்டினால் 1979 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை முன்நின்று வெளிக்கொண்டு வந்ததில் மு.நித்தியானந்தன் அவர்களின் பங்கு அளப்பறியது. இந்த சிறுகதை தொகுப்பு 1979 ஆண்டில் அரச சாகித்திய விருது பெற்றிருந்தது. மலையகத்தில் முதன்முதலாக அரச சாகித்திய விருது பெற்றவர் தெளிவத்தை ஜோசப் என்பதும் சொல்லப்படவேண்டியதே. இந்த சந்தர்ப்பத்திலும் இவ்விருதினை நீங்கள் நிராகரிக்க வேண்டும் என தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இலக்கிய உலகில் அடுக்கடுக்காக எத்தனையோ படைப்புகளை வெளியிட்டும் தங்களது இலக்கிய இருப்பினை தக்கவைத்து கொள்வதற்கு சிரமப்படுபவர்கள் மத்தியில் ஒரேயொரு சிறுகதை தொகுப்பினை மாத்திரம் வெளியிட்ட இவருக்கு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என பேசப்படுகிறது, கௌரவம் அளிக்கப்படுகிறது என்றால் நாமிருக்கும் நாடே என்ற நூல் வாசகரிடையே சென்றடைந்த விதமும் அதனால் ஏற்பட்ட மனக்கிளர்வுமே காரணமாக அமையும். படைப்புக்களின் எண்ணிக்கையில் மாத்திரம் ஒருவரின் ஆளுமை தங்கியிருக்கவில்லை என்பதையும் இவர் மூலம் அறியக் கூடியதாகவே உள்ளது.

இன்று இலக்கிய உலகில் அரை நூற்றாண்டை கடந்திருக்கும் இவர் 1972க்கு பிறகு 1984 வரை ஒரு சதாப்தத்துக்கும் மேலாக எழுதவில்லை என்பதும் அனைவராலும் அறியப்பட வேண்டும். 1960கள் எப்படி இலக்கிய வளச்சியில் முக்கிய வருடமாக கருதப்படுகிறதோ, புனைக்கதைகள் ஜனரஞ்சக, லௌகீக கதைகளில் இருந்து வேறுபட்டு மனிதனின் வாழ்வியல் துயரங்களை சொல்ல தொடங்கியதோ அதேயளவிற்கு எழுத்தாளர்கள் பேனை பிடிப்பதற்கு பயந்த காலமும் அதுவாகவே இருக்கிறது. முற்போக்கு என்ற போர்வையில் முற்போக்கு சாரா எழுத்தாளர்களை கடுமையாக சாடி விமர்சித்து முடக்கியே வைத்திருந்த காலகட்டமது.

இவர் 1963 களில் எழுதத் தொடங்கி 1970களில் கொழும்பிற்கு புலம்பெயர காரணமாகவிருந்ததும் இவரது இலக்கிய படைப்புகளுக்கு வந்த எதிர்ப்புகளும், உயிர் அச்சுறுத்தல்களும், விமர்சனங்களுமே. அவ்வாறானதொரு வலைபிடிக்குள் மாட்டிக் கொள்ளாது தொடர்ச்சியாக எழுதியிருந்தாலும் 1972 க்கு பிற்பட்ட காலம் இவரை எழுத்துத்துறையிலிருந்து சற்றே நிறுத்தித்தான் வைத்திருந்துள்ளது. மீண்டும் 1984இல் எழுத ஆரம்பித்தவர் தடைகள் பல கடந்து சாதனை பல படைத்து இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெருமளவிற்கு தனது எழுத்துப் பணியினை செய்து வருகின்றவர்.

வீரகேசரி பத்திரிகையில் வெளியான இவரது முதல் சிறுகதையான ‘படிப்…பூ’ மலையக மக்களிடம் நிலவிய பாடசாலை கல்வி பற்றிய அலட்சிய போக்கினை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருந்தது.

அதற்கு பிறகு ‘யாழ்ப்பாண விரோதக்காரன்” என்று விமர்சிக்கப்பட்ட ‘சோதனை’ என்ற கதையும் பாடசாலை கல்வி பற்றியதாகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும் இது வருட கடைசியில் மாணவர்களை வகுப்பேற்றுவதற்கு ‘இன்ஸ்பெக்டர்’ வருகிற நாளில் வாத்தியார்கள் போடும் போலி நாடகங்களை அம்பலப்படுத்தியது. அப்பொழுது வாத்தியார்களாக யாழ்ப்பாணத்தவர்கள் இருந்ததால் இவர் யாழ்ப்பாணத்துக்கு எதிராக எழுதுகிறார் என்று கதைகள் கூறப்பட்டுள்ளன. அந்த கதை யாழ்ப்பாண வாத்தியார்களுக்கு எதிராகவே எழுதப்பட்டதல்ல என்பதை சுட்டி காட்டிள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். மூன்றாவது மனிதன் நேர்காணலில் (ஒக்டோபர் – டிசம்பர் 2001) “நான் யாழ்ப்பாணத்தவர்களில் நன்மதிப்பையே கொண்டிருந்தேன். ‘பதுளைக்கு படிக்க வந்த பிறகு எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தவர்களே. திருவாளர்கள் பொன்னம்பலம், சின்னய்யா, முருகேசு, தோமஸ் ஆகியவர்களை என்னால் மறந்துவிட முடியாது. அவர்கள் கற்றுத்தந்த தமிழ்தான் என்னை உயிர்ப்பித்திருக்கிறது” என்று நன்றியுடன் நினைவு கூருகின்றார்.

இவரது சிறுகதைகளில் “அது”, “உயிர்”, “லில்லி” போன்றவை விலங்குகள் பற்றியவை. ‘அது’ ஒரு குரங்கு பற்றிய கதையாகவும், நாய்குட்டி பற்றிய கதையாக உயிரும், லில்லி மாடு ஒன்றின் கதையாகவும் அமைந்திருந்தது. ‘அவனவன் செத்து மடிகிறான் தெளிவத்தை என்ன என்றால் விலங்குகளை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்ற விமர்சனமும் வரத்தான் செய்தது. ஒரு எழுத்தாளனால் மட்டுமே பல் பரிமாணங்களில் இருந்து இலக்கியத்தினை படைப்பாக்கம் செய்யமுடியும். அப்படியான இலக்கியத்தினை படைப்பவனே உயிரோட்டமிக்க எழுத்தாளன் ஆகிறான். சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த இலக்கிய வாசகனால் மட்டுமே பார்க்கின்ற அனைத்தையும் இலக்கியமாக கொள்ளமுடியும். அந்தவகையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த கதைகளினூடாக நிரூபித்திருக்கிறார்.

விலங்குகளை பற்றி எழுதிய இவர் இந்த கதைகளினூடாக மழுங்கிப் போன மனித விழுமியங்களையும் சொல்வதற்கு தவறவில்லை. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த இவரது இலக்கியம் ஒட்டுமொத்தமாக அனைத்து பெரும்பான்மை மக்களையும் ஒருசேர தவறானவர்களாக கூறிவிட முடியாது என்பதையும் ‘உயிர்’ என்ற கதையில் பெரும்பான்மை இனத்தவருக்கும், சிறுபான்மை இனத்தவருக்கும் இடையில் ஏற்பட வேண்டிய, சிலரிடம் இருக்கின்ற ஒருமைப்பாட்டையும் தெளிவாகவே விளக்கியுள்ளார். உயிர் என்ற கதை மட்டுமல்லாது ‘சுவர்’ என்ற சிறுகதையும் இனத்துவ ஒருமைப்பாட்டினை எடுத்துக்கூறுவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு இடிந்துபோன சுவருக்குள் இனத்துவ ஒருமைப்பாட்டை விளக்குவதென்பது அவரது இலக்கிய படைப்பின் உறுதி தன்மைக்கு சான்று பகர்கின்றது.

‘உயிர்ப்பு’ என்ற சிறுகதை ஒருவருக்கு ஏற்படும் பல்வலி பற்றிய கதை. வாசிப்பவர்களை பல்வலிக்குள் இப்படி ஒரு தத்துவமா என்று வியக்க வைக்கிறது. ‘தீட்டு ரொட்டி’ என்ற கதை சாதி என்ற போர்வையில் இளசுகளின் உள்ளங்களை புண்படுத்தும் அவலத்தினை சித்திரிக்கிறது. ‘மண்ணைத்தின்று’ என்ற கதையில் மலையக பெண்கள் வறுமை காரணமாக பசிக் கொடுமையின் காரணமாக விலைப்போகும் அவலம் மிக நாசூக்காக சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவரது ஒவ்வொரு படைப்பாக்கமும் ஒவ்வொரு பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

இவரது சிறுகதை தலைப்புகளே சற்று சிந்திக்கத் தூண்டுவதாகவும், வித்தியாசமானதாகவுமே அமைந்திருக்கிறது. பால்காரப்பையன், மாயை, அழகு, படிப்….பூ, பாட்டி சொன்ன கதை, இது 12 ஆவது, விடுதலை, ஊன்றுகோல், அழகு தெரிந்தது, போலித்திருப்தி, நாமிருக்கும் நாடே, கம்பளித்துண்டு, நா, காட்டுப்பூ, வாழ்வு வந்தால், வஞ்சம் கரைந்தது, சீர்த்திருத்தம், அது, பாவ சங்கீர்த்தனம், தீட்டு ரொட்டி, பழம் விழுந்தது, கூனல், ஊரான் பிள்ளை, புல், புரியவில்லை, மனிதர்கள் நல்லவர்கள், சோதனை, லில்லி, கடைசிவேளை, பீலி மேலே போகிறது, பிராயச்;சித்தம், சிலுவை, மீன்கள், கணக்கு, வரவுக்கொரு பற்று, கத்தியின்றி ரத்தமின்றி, வேறு வழியில்லை, எக்ஸீமா, ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்க போகிறார்கள், போலிகள், மண்ணைத்தின்று, பயணம், ஒரு புதிய உயிர், நினைவுகள், அவரும் நானும், பார்வை, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், பந்து, பொட்டு, உயிர், அம்மா, வேலிகள், செத்துப் போகும் தெய்வங்கள், இன்னுமொரு, பஸ்ஸிலிருந்து, நாடகம், உயிர்ப்பு, நரகம், இங்கேயும் ஒரு இயேசு, சுவர், மழலை, இருப்பியல், இறுமாப்பு, சாம்பல், மந்திரக்கோல், தோல்வி ஆகியவைகளை அவையாகும்.

மலையக நாவலிலக்கியத்தில் இவருடைய வகிபாகத்தினை ஆராயும்போது இற்றைவரை 1967இல் எழுதப்பட்டு நூலுரு பெறாத காதலினால் அல்ல, 1972 இல் எழுதப்பட்டு 1974 இல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை, 1995 இல் எழுதி 2010 இல் வெளிவந்த குடைநிழல் 1996 இல் எழுதி தற்போது மல்லியப்பு சந்தி திலகர் அவர்களின் பாக்யா பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கும் ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்’ ஆகிய நான்கு நாவல்களும், 1966 இல் எழுதி கதம்பம் பிரசுரித்த பாலாயி, 1966 இல் கலைமகளில் வெளியான ‘ஞாயிறு வந்தது’, 1969 இல் தினகரன் பிரசுரித்த மனம் வெளுக்க ஆகிய குறு நாவல்களும் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று குறு நாவல்களும் பாலாயி என்ற நூலுக்குள் அடங்கியிருக்கின்றன.

‘காதலினால் அல்ல’ என்ற நாவல் மலையக தோட்ட புறத்திலிருந்து கொழும்பு போன்ற நகர்புறம் நோக்கி வருகின்ற இளைஞர்கள் கொழும்பின் நாகரீக செயற்பாடுகளுக்குள் சிக்கி சீரழிந்து போவதைக் காட்டுகிறது.

மலையக தோட்டபுறங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பேரினவாத சக்திகளினால் இம்மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட விதத்தினையும், அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடாவடித்தனங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும், ஊழல்களையும், சற்று வழிப்புணர்வுடன், முன்னேற துடிக்கும் இளைஞர் யுவதிகள் மீதான போட்டி, பொறாமை என்பவறை;றையும் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்டுத்துவதாகவே இவரது ‘காலங்கள் சாவதில்லை’ என்ற நாவல் அமைந்திருக்கிறது. சிலரால் செய்யப்படுகிற தியாகங்களினால் தான் மலையக சமூகம் விடிவை நோக்கி செல்கிறது என்ற உண்மையினை கதையின் கதாநாயகன் ஆறுமுகம் மூலமாக பிரதிபலிக்கிறார். இவன் சார் சூழல் வெற்றிக்காக தன் மனைவியின் கற்பு முதற்கொண்டு அனைத்தையும் இழந்து நின்ற ஆறுமுகம் வெற்றி அடைவதாகவே செல்கிறது இந்த காலங்கள் சாவதில்லை என்கிற நாவல்.

‘குடை நிழல்’ என்ற நாவல் தங்களது இருப்பிடங்களை விட்டு கொழும்புக்கு வந்து வாழ்கின்ற மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு வாடகை வீடு தேடுவதில் உள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டது. யுத்த காலத்தில் அப்பாவி தமிழர்களை பெரும்பான்மைவாதிகள் படுத்துகிற பாடுகளையும், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளையும் எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. இது அரசியல் மாற்றம் குறித்து சற்று சிந்திக்க வைக்கிறது. இந்த நாவல் அரசியல் பேசுகிறது என்று ஓரிரு புதின பத்திரிகைகள்; பிரசுரிக்க மறுத்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2010ம் ஆண்டு கொடகே பதிப்பகம் ‘குடைநிழல்’ நாவலை நூலுருவில் தந்திருக்கின்றது.

‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்’ என்ற நாவல் 1983 இனக்கலவரத்தினை கருவாகக் கொண்டது. இந்த நாவலும் சிறுபான்மையினத்துக்கெதிராக திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட, கலவரம் பற்றிய பதிகையாக அமைந்துள்ளது. கொழும்பின் 1983 இனக்கலவரக்கொடுமைகளைப் பதிவு செய்கின்ற முதல் நாவல் இதுவாகும். இந்த நாவல் கதை என்பதைவிட ஒரு நிஜ சம்பவத்தின் பதிவு என்பதே மிக முக்கியமாகும்.

இவரால் எழுப்பட்டிருக்கின்ற குறுநாவல் மூன்றும் மலையக மக்களின் பிரச்சினைகளை மூன்றுவிதமான பிரச்சினைகளை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. வள்ளுவன் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளதைப் போன்று இவர் மக்கள் பிரச்சினையை முப்பெரும் பிரிவுகளாக நாவலாக எழுதியுள்ளார். வள்ளுவர் ஞாயிறு வந்தது முதல் குறு நாவல் வீட்டு சூழல் பிரச்சினையையும், இரண்டாம் அங்கமான பாலாயி தோட்ட சூழல் பிரச்சினையையும், இறுதியாக வரும் மனம் வெளுக்க என்ற நாவல் நாட்டு சூழல் பிரச்சினையும் வெளிக்கொணர்கிறது.

‘ஞாயிறு வந்தது’ என்ற குறு நாவல் 1966 ஆம் ஆண்டில் கி.வா.ஜெகந்நாதன் நடத்திய கலைமகளில் வெளிவந்தது. தினகரன் ஆசிரியராக சிவகுருநாதன் கடமையாற்றிய 1969களில் தினகரன் மனம் வெளுக்க என்ற குறு நாவலை பிரசுரித்திருந்தது. இதுவே தினகரனில் பிரசுரிக்கப்பட்ட இவரது முதல் படைப்பாகும். ஆனால் காலப்போக்கில் ஆரம்பத்தில் தனக்கு வீரகேசரி கொடுத்த அதேயளவு முக்கியத்துவத்தினை பின்னாளில் தினகரன் வழங்கியிருந்ததாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் நன்றி பகர்கிறார்.

அப்பொழுது 1966 ஆம் ஆண்டில் பாலாயி என்ற குறு நாவல் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர்களில் ஒருவரான கே.வி.எஸ்.வாஸ் அவர்களுடைய புதல்வரான மோகன் நடத்திய கதம்பத்தின் தீபாவளி சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப்பட்டது. இவர் எழுதிய மூன்று குறுநாவல்களையும் தொகுத்து நூலாக 1997 ஜுலையில் துரைவி பதிப்பகம் வெளியிட்டது. துரைவி பதிப்பகத்தின் உரிமையாளர் துரை விஸ்வநாதன் அவர்கள் இருந்த காலத்தில் மலையகத்தில் உள்ள பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நூல் வடிவம் பெற்றுக் கொடுத்தவர். தற்பொழுது அவரது மகன் துரைவி.ராஜ் பிரசாத் அவர்களும் அதனை தொடர்கிறார் என்பதும் முக்கியமானது.

துரை விஸ்வநாதன் அவர்கள் இருந்த காலத்தில் அவரது துரைவி பதிப்பகத்துடன் இணைந்து துரைவி – தினகரன் பரிசு சிறுகதைகள், மலையக சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள், போன்ற நூல்களினது தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்துள்ளார். வீரகேசரியின் துணை ஆசிரியர் கார்மேகம் அவர்களுடன் இணைந்து கதைக்கனிகள் என்ற நூலையும் தொகுத்துள்ள அதேவேளை சுந்திர இலங்கையின் 50 சிறுகதைகள் என்ற சிறுகதைகள் தொகுப்பினை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர் என்பதோடு இந்த சிறுகதைத் தொகுப்பில் 50 சிறுகதைகளுள் இவரது ‘பொட்டு’ என்ற கதை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவத்தை ஜோசப் அவர்களது ஆய்வுத்துறை பரப்பு என்பதும் சற்று விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். இவர் மேற்கொண்டிருக்கின்ற மிகப்பிரதானமான மூன்று ஆய்வுகளையும் எடுத்து நோக்குமிடத்து, இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு, மலையக நாவல் வரலாறு (தற்போது செய்துகொண்டிருக்கிறார்) என்பனவாகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு என்பது இலங்கையில் ஆங்கிலேய காலத்தில் பத்திரிகை வாசனை தோற்றம் பெற்றதிலிருந்து இவரது இதழியல் வரலாறும் தோற்றம் பெறுகிறது. உதய தாரகை என்னும் பத்திரிகைக்கு முற்பட்ட காலத்திலிலுள்ள புதினத்தாள்கள் தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரையான பத்திரிகைகள், சிற்றிதழ்கள் வரை அனைத்தினது வரலாற்றையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது. ஆய்வின் காலப்பரப்பு நூறுவருடங்கள் என்பது ஆய்வுத்துறையில் இவரது ஆழத்தன்மைக்கு சான்றாக அமைகிறது. இதழியல் துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு எனும் கட்டுரைத்தொடர் 2001 – 2002 காலப்பகுதியில் தினகரன் வாரமஞ்சரியில் தொடர்கட்டுரையாக வெளிவந்தது. இது நூல் உருவம் பெரும் பட்சத்தில் மிகப்பெரும் சான்றாதாரமாகவும், மாணவர்களுக்கான கைந்நூலாகவும் அமையும்.

மலையக சிறுகதை வரலாறு எனும் நூல் மலையக, மலையகம் பற்றி எழுதிய எழுபத்தாறு எழுத்தாளர்கள் படைப்புக்கள் பற்றிய ஆய்வாகும். இவ்வாய்வு மலையக இலக்கியத்தினை உயிரோட்டமிக்கதாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு ஏனைய இலக்கியங்களோடு மலையக இலக்கியத்தை சீர்தூக்கி பார்க்கச்செய்யும் உன்னத செயற்பாட்டுக்கான அடித்தளமே என்பதிலும் இரண்டு கருத்தில்லை.

சிறுகதை, நாவல், ஆய்வு என்பதோடு மட்டும் நின்றுவிடாது இலக்கியத்தில் மற்றுமொரு அங்கமான திரைக்கதை வசனம், வானொலி நாடகங்களிலும் தனது பங்களிப்பினை செலுத்தியுத்தியுள்ளார். இலங்கையின் புகழ் பெற்ற புதிய காற்று என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் இவரே. ரூபவாஹினியில் ஒளிபரப்பிய பொகவந்தலாவை ராஜபாண்டியன் நடித்த ‘காணிக்கை’ என்ற நாடகத் தொடர் இவரது ‘புரியவில்லை’ என்ற சிறுகதையாகும். அதை படமாக்க விரும்பியபோது அதற்கு திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். இவர் திரைக்கதை வசனம் எழுதிய ‘ஏன் இந்த உறவு’ என்ற திரைப்படம் காமினி பொன்சேக்கா அவர்கள் நடிக்கவிருந்து படபூஜையுடன் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் Pடயவெநசள யுளளழஉயைவழைn எடுக்கவிருந்த திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனம் எழுதித்தர கேட்டபொழுது எந்த காலத்திலும் மலையக மக்களின் சுரண்டலுக்கு துணைப்போகும் மேலாதிக்க வர்க்கத்துக்கு சார்பாக என் இலக்கிய படைப்பை மேற்கொள்ள மாட்டேன் என்ற எண்ணத்தினால் அவர்களின் அழைப்பினை புறக்கணித்தமை மலையகம் மீதான இவரது எண்ணப்பாட்டினை தெளிவு படுத்துவதோடு இவர் மீதான மதிப்பையும் வெகுவாக தூண்டுகிறது.

கவிதை பரப்பிலே இவர் ஆள நின்றிருக்காவிட்டாலும் கவிதைகள் எழுதாமலில்லை. 1965 இல் ஈழக்குமார் தொகுத்து கவிதை நிலையம் வெளியிட்ட ‘குறிஞ்சிப்பூ’ என்ற கவித்தொகுப்பு நூலில் “இன்று நீ சுடுவதேனோ” என்ற கவிதையும், வீரகேசரியில் ‘கருணை இழந்தோம் நாம்’ என்ற கவிதையினையும் ‘ஜோரு’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார். அதற்கு பின் பாலாயி என்ற குறுநாவல் தொகுதியின் சமர்ப்பணத்துக்காக தனது தாய் தந்தையரைப்பற்றிய கவிதையொன்றினை எழுதியிருந்தார். இவை மூன்றுமே இவரது கவிதை படைப்புகளாகும்.

இவர் இதுவரை காலமும் தடம் பதித்திராத புதிய ஆளுமைக்குள்ளும் தன்னை தற்பொழுது உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆரடம சுயத யுnயென அவர்கள் எழுதிய வுறழ டுநயஎநள யனெ ய டிரன என்ற நூலினை மொழிப்பெயர்த்து வெளியிடும் முயற்சியினையும் மேற்கொண்டு வருகிறார் என்பது வரவேற்கத்தக்கதே.

இன்று மலையக சமூகத்தில் மலையகத்துக்கே உரிய சில மொழி நடைகளில் இருந்து விலத்திச் செல்லும் பாங்கும் நிலவுகிறது. ஆனால் இவரது இலக்கிய படைப்பினை ஆழ நோக்கும்போது மலையகத்தை விட்டு மறந்துபோன கலைச்சொற்களும் மொழிநடைகளும் படைப்புகள் எங்கும் இடத்துக்கேற்றாற்போல் கையாளப்பட்டிருப்பதினை காணலாம். இது மலையக இலக்கியத்தின் இருப்பினை மேலும் உறுதி செய்வதாக அமைகிறது.

இவர் பிளோமினா என்ற பெயரில் இலக்கிய கட்டுரைகளும், திரேசா – சியாமளா என்ற பெயரில் தினகரனுக்கான இலக்கிய குறிப்புகளையும், ரவீந்திரன் – ரமேஸ், தினகரனுக்கான வாரம் ஒரு சிறுகதை விருந்து என்ற ஆக்கங்களும், ஜோரு என்ற பெயரில் கவிதைகளும், ஜேயார் என்ற புனைப்பெயரில் தினகரனுக்கான இலக்கிய தகவல்கள் போன்றனவும் எழுதியுள்ளார்.

மலையகத்தின் மூத்த எழுத்தாளராக வலம் வருகிற இவரை பலரும் பல விருதுகளும் பரிசுகளும் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். அந்தவகையில் 1963 ஆண்டு வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியில் பாட்டி சொன்னகதை என்ற சிறுகதைக்காக முதல் பரிசும் அதே ஆண்டில் மலைமுரசு நடாத்திய சிறுகதை போட்டியில் நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை முதலாம் பரிசும் பெற்றது. தொடர்ந்து 1964இல் வீரகேசரி நடத்திய சிறுகதை போட்டியில் பழம் விழுந்தது என்ற சிறுகதை முதலிடத்தை தட்டிச் சென்றது. 1996 இல் பரிசு தேசிய கலை இலக்கிய பேரவை சுபமங்களா ஆகியன இணைந்து நடாத்திய குறு நாவலுக்கான போட்டியில் குடைநிழல் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

சுவர் என்ற சிறுகதை 1998 இல் நீதி, அரசியலமைப்பு விவகார, இன உறவு அலுவல்கள் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு நடாத்திய சிறுகதை போட்டியில் முதலிடத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவர் தமிழ்க் கதைஞர் வட்டம் நடத்திய 2009க்கான சிறுகதை போட்டியில் இறுமாப்பு என்ற சிறுகதை சிறப்பு இடம் பெற்றது.

டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை என்ற சஞ்சிகையில் முகப்பு அட்டையில் ஒவ்வொரு இலக்கியவாதிகளின் படங்களையும் பிரசுரித்து அவர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது இலக்கியவாதிகள் மத்தியில் மிகப்பெரும் கௌரவத்தினையும், நன்மதிப்பையும் பெறுகிறது. அந்தவகையில் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு 1973 ஏப்பில் மல்லிகை இதழிலேயே அந்த கௌரவத்தை அளித்துள்ளது. அதேபோல் ஞானம் சஞ்சிகையும், 23 அங்கம் அடங்கிய நேர்காணலை தொடர்ச்சியாக இரு வருடங்களாக பிரசுரித்ததுடன் பவளவிழா சிறப்பு மலரையும் வெளியிட்டு கௌரவித்திருந்தது. ஞானத்தில் வெளிவந்த நேர்காணல் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியினை ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. ஞானம் பத்திரிகை இதுவரை மூன்றுபேருக்குமட்டுமே பவளவிழா மலரை வெளியிட்டுள்ளது. அவர்களில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை அடுத்ததாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் என்பதும் அறியப்பட வேண்டும்.

1979 நாமிருக்கும் நாடே சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசு அரச சாகித்திய விருதினையும், 1991 இல் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு இலக்கிய செம்மல் விருதினையும், 1995 இல் இலங்கை, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும், 2000 ஆம் ஆண்டில் தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய கௌரவ விருதினை சிலுமின பத்திரிகையும், மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 இல் அரச சாகித்திய விருதினையும், அதே ஆண்டில் இந்நூலுக்காக சம்பந்தன் விருதினையும், 2003 இல் அட்டன் புதிய பண்பாடு அமைப்பு மலையக சிறுகதை வரலாறுக்காக என்.எஸ்.எம்.இராமையா நினைவுப் பரிசினையும், பேராதனை பல்கலைக் கழகம் 2007 இல் இலக்கிய விருதினையும், 2008 இல் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் 2009 இல் மேல் மாகாண கலை,கலாசார அமைச்சு தமிழ் சாகித்திய விருதினையும் 2009 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மத்திய மாகாண சபை தமிழ் சாகித்திய விழாவில் சாதனையாளர் விருதினையும், 2009 இல் அட்டன் ஆன்;மீகக் கலை வட்டம் பாரதி விருதினையும் (மக்கள் எழுத்து வேந்தன்), 2010 இல் பதுளை நிவ்பேர்க் குறிஞ்சிப் பேரவை எழுத்து வேந்தன் என்ற விருதினையும் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். அதேவேளை 2011 இல் கொடகே வெளியீட்;டு நிறுவனம் ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறந்த விமர்சகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்ற இவரிடம் பலரும் முன்னுரைகளை தங்களது நூலுக்காக பெற்றிருக்கின்றர். இதுவரையில் 35 நூல்களுக்கு முன்னுரை வழங்கியுள்ளார். அப்பா, கருகாத பசுமை, வாசாப்பு, கசந்த கோப்பி, அறுவடைக் கனவுகள் போன்ற நாவல் தொகுதிகளுக்கும், கலை ஒளி, பசியா வரம், புதிய பயணம், உழைக்கப்பிறந்தவர்கள், துரைவி, தினகரன், அழியும் கோலங்கள், வெள்ளை மரம், நிலாக்கோலம், தேயிலை தேசம், காவேரி, சொந்த மண், கவசங்களைதல், குதிரைகளும் பறக்கும், பாக்கு பட்டை, மலையக சிறுகதைகள், ஆகிய சிறுகதை தொகுப்புகளுக்கும், பாலாயி என்ற அவரது குறுநாவல் தொகுப்புக்கும், தோட்டத்துக் கதா நாயகர்கள் என்ற நடைச்சித்திர நூலுக்கும், மலையக சிறுகதை வரலாறு என்ற அவருடைய ஆய்வு நூலுக்கும், அப்புறமென்ன என்ற கவிதை தொகுப்பு, என் நினைவுகளும் நிஜங்களும் நாடக அனுபவ நூல் ஒன்றிற்கும், மலைமேகம் என்ற நடைப்பாவிற்கும், நெஞ்சோடு கொஞ்சும் நாட்டுபுறப்பாடல்கள் என்ற நாட்டாறியல் நூலுக்கும் தெளிவத்தை ஜோசப் முன்னுரை எழுதியுள்ளார்

இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல நாடுகளும் இவரை அழைத்து கௌரவம் வழங்கியிருப்பது மலையக இலக்கியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அமைந்திருக்கிறது.

பல எழுத்தாளர்களும் தங்களது நூல் வெளியிட்டுக்கு தலைவராகவும், கருத்துரை, சிறப்புரையாற்றுமாறும் வரவழைத்து கௌரவப்படுத்தியிருப்பதையும் மறந்துவிட முடியாது. 1960களில் இருந்து இன்றுவரை பலதரப்பட்ட சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்ற மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் இருந்து பலரையும் ஊக்குவிப்பதோடு வழிகாட்டியும் இவர் இருந்து வருகிறார்.

தெளிவத்தை ஜோசப் அவர்கள் இந்தளவிற்கு மேன்மையுற அவரது குடும்பம் பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறது. இலக்கிய சூழலுக்கேற்ற மனைவி, பிள்;ளைகள் என எல்லாமே அவர் மனம்போலவே அமைந்திருக்கிறது.

இவரது படைப்புக்களை உற்றுநோக்கும்போது அவரது வாழ்க்கை சம்பவங்கள் அவர் பழகிய நபர்கள் பற்றி சில சில இடங்களில் கதைகளினூடு தொட்டு காட்டப்படிருக்கின்றது. இது இவரது படைப்புகளுக்கு மேலும் வலுவுள்ளதாக அமைகிறது. வளமான எழுத்தாளுமை உள்ள இவரது அனைத்து படைப்புகளுமே நூல் வடிவம் பெற வேண்டும். இதுவரை எழுதப்பட்டதோடு நின்றுவிடாது இனியும் இவரது படைப்புகளும் தொடர வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளே இளைய சமுதாயத்தினை எழுத்துப்பணிக்கு உள்ளீர்க்க வலிகோலும்.

http://malaiyoorkamal.blogspot.in/2011/09/blog-post_3820.html

முந்தைய கட்டுரைஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
அடுத்த கட்டுரைசமணர் கழுவேற்றம்