’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்

நாளைக்குத் தீபாவளி

பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது.

கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.

“இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார்.

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.

அது, தானே வந்து தானே போய் விடுகிறது! பதுளையில் இருந்து சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு நடக்கும் பஸ் சேவை மாநாகரசபை விளக்குகள் போன்றவை. இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல அணைந்து விடும்.

ஆகவே அகப்பட்ட பஸ்ஸில் ஏறிக்கொள்ள மக்கள் முந்துவதும் முண்டியடிப்பதும் நியாயம் தான்! எனக்கும் ஒரு இடம் கிடைத்து விட்டது.

“குரங்கு மலைத்தோட்டத்திலே
போட்ட போடுங்க….. கணக்கன்
குடல் சரியக் குப்புற விழுந்த
பாட்டக் கேளுங்க……”

எங்கோ ஒரு தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வெட்டுப்பட்ட சங்கதியை பாட்டாக எழுதி அதையே சிறு புத்தகமாகவும் அடித்தது, சில அடிகளைப் பாடிக்காட்டி விலை கூறி விற்கின்றார் ஒருவர்.

இடுப்பளவில் தொங்கும் வெற்றிலைத் தட்டில் ஒரு சில்லறைக் கடையே இருக்கிறது. வெற்றிலைக்கடையை கழுத்தில் மாட்டி வைக்கும் அந்தக் கையகலக் கறுப்புப் பட்டியில் கலர்கலராய் வேலைப்பாடுகள் செய்து வைத்துள்ளார். இடையிடையே தொங்கும் ரஸகுண்டுகளுடன் சர்க்கஸ் பபூன் மாதிரி தலையிலே குஞ்சம் வைத்த தொப்பி. கால்களுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நீள் கால் சட்டை. கணுங்கால்களில் நாட்டியக்காரி போல் மணிச்சலங்கை.

தாளத்துடன் ஒலிக்கும் நாலைந்து வரிகளைக் கத்திப் பாடிக் கொண்டு கால் சலங்கை ஒலி எழுப்ப குதிக்காலைத் தரையில் உதைத்து ஊன்றி பஸ்ஸைச் சற்றி வரும் காட்சி ஜோடித்த ஒரு சின்னத்தேர் போலிருக்கும்.

பாடிப்பாடி தொண்டை கட்டிக் கொண்ட நேரங்களில் வெற்றிலையைக் கையில் எடுத்து காம்புடன் நரம்பை உரித்து வீசிவிட்டு வட்டமாய் இருக்கும் தட்டிலிருக்கும் சிகரெட் டினக்களிலிருந்து கலர் கலராய் ஏதேதோ விஷயங்களைக் கிள்ளி பொட்டுப் பொட்டாய் வெற்றிலையில் வைத்து மடித்து இன்னொரு டின்னிலிருந்து ஒரு கிராம்பை எடுத்து மடிப்பில் குத்தித் தூக்கிக் காட்டி “ஹாய் ஜில்” என்பார்.

ஒரு மலிவான மணம் மூக்கில் ஏற பொட்டுப் பொட்டாய் அவர் கிள்ளி வைக்கும் விதமும், மடித்தெடுத்துக் கிராம்பைக் குத்தும் வித்தையும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு “ஜில்” வாங்கி மெல்லாமல் விடமாட்டார்கள்.

“ஜில்” காரர் பதுளைப் பக்கங்களில் வெகு பிரச்சித்தம்.

ஜில் காரர் போடும் பாட்டுச்சத்தம் போதாது என்றோ என்னவோ “கண்டி ராஜன்” கதையை சிங்களத்தில் பாட்டாகப் பாடிக்கொண்டு புத்தகம் விற்கிறான் இன்னொருவன்.

தமிழ்ப்பாட்டு எஞ்சின் பக்கம் கேட்டால் சிங்களப்பாட்டு பின் பக்கம் கேட்கும்.

“எஸ் கண்ணாடி மெசப் பீய, பவுண்டின் பேனா….”

பொட்டணிக்காரனின் காட்டுக்கத்தல்.

“பொம்பாய் நைஸ்….”

“அஞ்சு சதம் டொபி…. அஞ்சு சதம் டொபி…..”

பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் அத்தனை பேரினதும் கூச்சல், பேரம் பேசுவோரின் வினயம்,பயணிகளின் சளசளப்பு ஆகிய இத்தனைக்கும் மத்தியில் “தர்மஞ் சாமி” என்ற குரலும் சன்னமாய்க் கேட்கிறது. கிணற்றுள் இருந்து கேட்பது போல்!

இந்தாப்பா ஒரு பக்கட் சிகரெட் குடு” என்றவாறு ஒரு ரூபாயை நீட்டினேன்.

நான் கேட்ட சிகரட் இல்லாததால் கையை அபிநயத்துடன் ஆட்டிக் காட்டிவிட்டு பஸ்ஸின் மறுபக்கம் மறைந்து விட்டான் நடைக் கடைக்காரன்.

எழுந்து நின்று கால் சட்டைப்பைக்குள் காசைப் போட வசதியோ நினைப்போ இல்லாததால் ரூபாய் வில்லையைக் கையிலேயே வைத்துக் கொண்டேன்.

“தருமஞ் சாமி”

பஸ்ஸின் மறுபக்கத்தில் அதே மெல்லிய குரல்.

“அட ராமா பிச்சையா கேட்கின்றாய்! இந்தச் சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப் பலமாகக் கத்தேன்.”

பஸ்ஸுக்குள் ஒருவர் கருணையாய்ப் பேசினார்.

மற்றவர்களுக்குக் கேட்காவிட்டாலும் அவனுடைய பரிதாபக்குரல் அவருக்குக் கேட்டிருக்கிறது. ஆனால் கை மட்டும் சட்டைப்பை பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்து விடுவோம் என்ற எண்ணமாக இருக்கும்.

பிச்சைக்காரனுடைய கண்கள் ஆர்வத்துடன் அவரைப் பார்க்கின்றன.

அவரை என்பதை விட அவருடைய கையை என்பதே சரி.

பலமாகக் கத்தினால் சிலவேளை போடுவாரோ எண்ணியவன் பலமாகக் கத்த முயன்றான்.

வாய் பெரிதாகத் திறப்பட்டது. கழுத்து நரம்புகள் ஒரு வினாடி விண்ணென்று நின்று தளர்ந்தன. ஆனால் சத்தம் பெரிதாக வரவில்லை.

கத்துவதற்கும் தெம்பு வேண்டாமா?

“சிலுக்…. சிலுக்…..” கையிலிருந்த தகரக்குவளையைக் குலுக்கினான்.

அவனைவிட அது பலமாகச் சத்தமிட்டது.

“ஐயோ பாவம்….. சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ!” பஸ்ஸுக்குள் இன்னொருவர்.

“என்ன யார் பாவம்கறீங்க…..?

“இவனுகளுக்குப் போய் பாவம் பார்க்கலாமா? தகரச்சுண்டு போடுற சத்தத்திலேயே தெரியலயா அதில் எவ்வளவு கெடக்குதுன்னு…… பத்துரூபாய்க்குக் கொறையாது சார்….! எடுக்கிறது மட்டுந்தான் பிச்சை. அந்திக்குப்பாத்தா கள்ளுக்கடையே இவனுக கூட்டமாய்த்தானிருக்கும்…..”

“நீங்க சொல்றது வாஸ்தவங்க…. நேத்து முந்தா நாள் பேப்பர்ல பாத்தீங்களா…. காருல அடிபட்டுக் கெடந்த ஒரு பிச்சக்காரனைத் தூக்கி வேன்ல ஏத்தையில சட்டைக்கு உள்ளே கத்தை கத்தையா வைத்திருந்தானாம்…. பத்தாயிரத்துக்கு மேலே…..”

“ஞாயந்தானங்களே….. ஏன் வைத்திருக்க மாட்டானுக…..! இன்கம்டேக்ஸ் தொல்லையில்லாத வருமானமாயிற்றே.”

நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு ஏதேதோ பேசினார்கள். பிச்சைக்காரனை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

அவர்களுடைய பேச்சு எழுப்பிவிட்ட ஆர்வத்தில் அவனுடைய தகரக்குவளையும் அவனையும் பார்க்க வேண்டும் என்னும் ஆசை எழுந்தது.

இந்தப் பக்கமும் வருவான்தானே என்று எண்ணிக் கொண்டிருக்கையில்…..

“ஐயா புண்ணியவான்களே” என்றபடி தகரக் குவளையைக் குலுக்கினான்.

சத்தம் சற்றுக் கனமாகவே இருந்ததால் அவர்கள் பேசிக் கொண்டதிலும் நியாயம் இருக்கலாம் என்ற ஆர்வத்துடிப்பில் அவனைக் கூடப் பார்க்காமல் குனிந்து குவளையைப் பார்த்தேன்.

பகீரென்றது!

சத்தம் வரவேண்டுமே என்பதற்காக ஆறேழு கூழாங்கற்களைப் போட்டு வைத்திருந்தான் குவளைக்குள்.

அவனுக்குத்தான் சத்தம் போட முடியவில்லை. அதாவது சத்தம் போட வேண்டாமா!

ஐயோ பாவம் என்ற உணர்வுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவனுடைய கையிலிருந்த தடிக்கும் அவனுக்கும் வித்தியாசமே இல்லை. கால்சட்டை ஆயிரங்கந்தல். சட்டை அவனுடைய உடலை மறைப்பதற்குப் பதிலாக அந்த எழும்புக்கூட்டை ஒளித்தும் மறைத்தும் கோரமாக்கிக் காட்டியது.

கயிறு கயிராய்த் தொங்கிய கால்களில் முடிச்சு முடிச்சாய் முட்டி நின்ற எழும்புகள். கன்னத்திலும் கழுத்திலும் மேடு கட்டி நின்ற எலும்புக்கடியில் கறுமையாகப் படந்த நிழல் அவனைப் பிரேதமாக்கிக் காட்டியது.

“உஸஸ்”

பிச்சைக்காரன் மிகவும் ஆயாசமாகப் பெருமூச்சு விடுகின்றான்.

இப்போதோ இன்னும் சற்று நேரத்திலோ என்றிருக்கும் அவனைப் பார்க்க எனக்கு மனதை என்னவோ செய்தது.

கையில் இருந்த ஒரு ரூபாயை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.

சிகரட் இருந்திருந்தால் இந்நேரம் பாதி புகைந்து போயிருக்கும்.

தொலையட்டும் பாவம் என்று எண்ணியபடி ரூபாவை அவனிடம் நீட்டினேன்.

“மாத்த இல்லீங்க சாமி…..”

“சரி சரி வச்சுக்கோ” என்றேன்.

மெலிந்து நசுங்கிப்போன முகம் காட்டிய நன்றி! கண்களில் மலர்ந்த ஒரு ஜீவன்! மற்ற மற்றவர்களிடமும் ஏதோ முனகுவது தெரிகிறது.

காது செவிடு படும்படி கத்தினாலும் இந்த உலகம் கவனிக்காதே, இவன் என்ன இப்படி….

உங்க மாதிரி நாலு பேர் போட்டா நாலு ரூபா சார். பத்து பேர் போட்டா என்ன ஆச்சு…..”

எனக்கு மிக அருகில் நின்றவர் பொருளாதாரம் கதைத்தார்.

“இந்தப் பயலுகளுக்கெல்லாம் இரக்கம் காட்டக் கூடாது சார்…. வட்டிக்குக் கொடுக்கிறானுகள்…..”

முன்னவனுக்கு ஒத்துப் பாடினார் இன்னொருவர். தானம் ஒன்றும் கொடுக்காத காரணத்தால்.

“நாலுபேர் போட்டால் தானே நாலு ரூபாயாகும். இந்தப் பெரிய கூட்டத்தினுள் அவனுக்கு மனமிரங்கி ஒரு ஐந்து சதம் யார் போட்டார்கள்” என்று எண்ணி அமைதியானேன்.

பஸ் கிளம்பி விட்டது.

இன்று தீபாவளி.

கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக் கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன.

விடியுமுன் குளித்து விட வேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக் கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது.

லயத்தின் ஒவ்வொரு காம்பிராவுக்கு முன்னும் ஒவ்வொருவர் அல்லது இரண்டு பேர் குளித்துக் கொண்டிருக்கின்றனர்.

குளிருக்குப் பயந்தவர்கள் அல்லது வாளி வாளியாகத் தண்ணீரைச் சூடாக்கிக் கொள்ளப் போதுமான அளவிற்கு விறகு வைத்திருக்க வசதியுள்ளோர் தவிர்ந்த மற்றவர்கள் வெடவெட வென்று நடுங்கிக் கொண்டு வேக வேகமாகத் தண்ணீரை மொண்டு ஊற்றிக் கொள்ளுகின்றனர்.

சுட்டு வைத்த பலகாரம், வாங்கி வைத்த பட்டாசுக்கட்டு ஆகியவைகளை நாளைக்கு நாளைக்கு என்று நேற்று வரை எதிர்பார்த்த சிறுசுகளுக்கு தூக்கமா வரும்.

தட்டித்தட்டி எழுப்பினாலும் சுருண்டு சுருண்டு படுப்பவர்கள் இன்று வெளிச்சம் வரும் முன்பே எழுந்து விட்டனர்.

ஆளொன்றும், கொள்ளிக்கட்டை ஒன்றும் பட்டாசுக்கட்டு ஒன்றுமாக வெளியே வந்து “லைசன்” கல்லில் அமர்கின்றனர்.

பெற்றவர்கள் குளித்து முடித்து பிள்ளைகளை ஏசிப்பேசி இழுத்துக் குளிப்பாட்டி முடிப்பதற்குள் நன்றாக விடிந்து விடுகிறது.

புதுப்புது சட்டைகள், அழகழகான பூப்போட்ட கவுன்கள் பாவாடைகள், தலை அலங்காரங்கள் இத்தியாதிகளுடன் சின்னஞ்சிறுசுகள் பட்டுப் பூச்சிகளாய்த் திரிகின்றனர்.

ஒரு கடி கடித்துவிட்டு பணியாரங்கள் வீசப்படுகின்றன. லயத்து நாய்கள் பாடு வேட்டைதான்.

இந்த நாய்களுக்குள்ள மகிழ்ச்சியாவது இந்த தீபாவளி தினத்தன்று அந்த அநாதைச் சிறுவனுக்குக் கிடைக்குமா? வடையும் பாயாசமும் வேண்டாம்! வயிறார ஒருவேளை சாப்பாடாவது கிடைக்குமா?

அடக்கடவுளே!

கடவுளா? அப்படியும் ஒருவர் இருக்கின்றாரா? இருந்தால் இப்படி எலும்பும் தோலுமாக பேசக்கூட சக்தியில்லாமல் ஒரு அநாதை இருப்பானா?

ஆமாம் கடவுள் இருக்கின்றார்தான்! உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தான் வேண்டும் என்பது அவர் சித்தம். மனிதனுக்குப் புரியாத புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர் கடவுள்.

அநாதையாக, பிச்சைக்காரனாகத் தான் அவன் இருக்க வேண்டும் என்பது கடவுள் சித்தமானால் நான் செய்தது தப்பா? ஒரு ரூபாயைத் தருமமாக அவனுக்குப் போட்டிருக்கக் கூடாதோ!

என்னைப்போலவே மனமிரங்கி எல்லாரும் அவனுக்குத் தருமம் செய்திருந்தால்…..!

அவன் பாடு எதேஷ்டம்தான். வருவாய்க்குத் தருந்த செலவில்லாததால் கையிருப்புக் கூடும். இருப்புக்கூடினால்……

குடியும் கூடா நட்பும் பெண்கள் சேர்க்கையுமாக……

ஐயோ! அம்மாதிரி பாபச் செயல்களில் அவன் ஈடுபடாதிருக்கத்தான் கடவுள் அவனை அப்படி அலையவிட்டாரோ!

மனதை அடக்கி ஆளும் சக்திக்கேற்பத் தான் மனிதனுக்கு அந்தஸ்தைக் கொடுக்கின்றாரோ…..!

ஆட்டுக்கும் வாலை….. என்பதெல்லாம் இது தானே?

அவர்கள் பேசிக் கொண்டதுபோல் வட்டிக்குக் கொடுக்கும் அளவுக்கு அவனிடம் பணம் இருக்குமோ!

சேச்சே என்ன பைத்தியக்காரத்தனம்! அவன் ஏன் குவளையில் கல்லைப் போட்டுக் குலுக்க வேண்டும்.

அவனுடைய எக்கிய வயிறும் எலும்புக்கூட்டுத் தோற்றமும் அப்படித் தோன்றவில்லையே!

அவனிடம் அளவுக்கதிகமாக ஒன்றும் இருக்கக்கூடாது என்பதுவும், பிச்சைக்காரனாக அநாதையாகத் தான் இருக்க வேண்டும் என்பதுவும் ஆண்டவன் சித்தம் என்று கூறுவது ஓட்டைக்குடில் இருந்தால் தான் ஓட்டு வீட்டுக்குப் பெருமை என்பதைத் தவிர வேறில்லை.

உளுத்துப்போன மரங்களுடன் நிற்கும் குடிலுக்கு ஓடு வேய்வதால் பயன்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல் என் மனம் குழம்பி அலை மோதுகிறது.

நேற்று தீபாவளி!

மக்களிடையே பண்டிகை மவுசு இறங்குகிறது.

“இனி எப்போ?” என்னும் கொக்கியை முகத்தில் ஏந்திக்கொண்டு ஏங்கி நிற்கும் அம்மாவிடம் கூறிக்கொண்டு நானும் பயணம் வைத்து விட்டேன். பஸ்ஸை விட்டிறங்கியதும் பஸ் ஸ்டான்டை ஒரு நோட்டம் விட்டேன்.

பிச்சைக்காரச் சிறுவனைக் காணவில்லை.

“என்ன தீபாவளி விசிட்டா?”

பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் முதலாளி பிடித்துக் கொண்டார்.

உத்தியோகம் என்று ஊர் மாறிப் போய்விட்டாலும் பாடசாலை நாட்களிலிருந்தே முதலாளியைத் தெரியும். அந்தப் பழக்கம் தான்.

அவரைப் பார்த்துச் சிரித்தபடியே உள்ளே நுழைந்தேன்.

“பையா ஒரு நாக்காலி கொண்டா” என்று அவர் பக்கத்திலேயே என்னை அமரச் செய்து வரவேற்கின்றார்.

இந்த அன்பிற்காவது நான் அவருக்கு ஒரு வியாபாரம் கொடுக்க வேண்டும்.

ஒரு பழம் தின்று தேனீர் குடித்துவிட்டு ஒரு ரூபாவை மேசை மேல் வைத்தேன்.

முதலாளியின் வீட்டில் போய் தேனீர் அருந்தினால் பணம் கொடுத்து விட வேண்டும். அவன் பிழைப்பு அது!

என்னுடைய ஒரு ரூபாவைப் பார்த்ததும் முதலாளி சொன்னார் “யாராவது பிச்சைக்காரன் நிக்கிறானான்னு பாருங்க” என்றார்.

எனக்கு முகத்திலடித்தது போல் இருந்தது! நட்பு முறையில் தேநீர் அருந்திவிட்டு பணம் கொடுப்பதனால்தான் அப்படிச் சொல்கின்றாரோ என்று திகைத்தேன்.

என்ன அப்படிப் பாக்குறீங்க…..உங்களுக்கு விஷயம் தெரியாது இல்லியா…..” என்றார்.

அதே நேரம் ஆளுயரத்துக்குத் தூக்கி தேனீர் ஆற்றிக் கொண்டிருந்த தேனீர் அடிப்பவர் ஆற்றுவதை நிறுத்தாமலே “உதைக்கணும் சார் இந்தப் பிச்சைக்காரப் பயல்களை. நல்லாவே பாசாங்கு பண்ணக் கத்துக்கிட்டானுகள்” என்றார்.

நான் மேலும் விழிக்கவே முதலாளி தொடர்ந்தார்.

“வந்து பாருங்க சார் முந்தாநாத்து சாயந்தரம் இந்நேரம் இருக்கும் நம்ம மாடி வீட்டார் இருக்காருல்ல அவரு சிற்றுண்டி பண்ணிட்டு வந்து பில்லோட ஒரு ரூபாவை மேசை மேலே போட்டாரு. அப்பப் பார்த்து ஒரு பிச்சைக்காரப் பய சாமீன்னான்….. பொறுடான்னு அவனை அதட்டிப்புட்டு இவரை செட்டில் பண்ணிடலாம்னு பில்லை கையில் எடுத்தேன். அப்பப் பார்த்து டெலிபோன் அடிச்சுது. பொறுங்க கொஞ்சமுன்னு மாடி வீட்டாரை நிப்பாட்டிவிட்டு டெலிபோனை ஆன்சர் பண்ணினேன். டெலிபோனை முடிச்சிட்டு மேசையைப் பாத்தா பில் மட்டுந்தான் கெடக்கு ரூபாவைக் காணலே. பிச்சைக்காரப்பய என்னடான்னா நாலு வடை குடுங்க சாமீன்னு ரூபாவை நீட்டிக் கிட்டிருக்கான்… எப்படி இருக்கு வெளையாட்டு. அவனுக்கு என்ன துணிச்சல் இருக்கணும் பாருங்க…..”

“ஐயோ பாவம்” என்று நான் முனங்குவதையும் கவனியாமல் முதலாளி தொடர்ந்தார்.

ஏதுடா காசுன்னேன்….. பஸ்ஸில ஒரு புண்ணியவான் போட்டாருங்கன்னான்….. விட்டேன் ஒரு அறை…….

அவர் என்னை அறைந்ததுபோல் இருந்தது. “நீங்களே சொல்லுங்க சார் இந்த காலத்துல எவனாவது ஒரு ரூபாவை பிச்சைக்காரனுக்குக் கொடுப்பானா…..?”

முதலாளி என்னிடமே கேட்கின்றார்! நான் பேயறைந்தவன் போல் நின்றேன்.

போடா திருட்டு நாயேன்னு தள்ளி விட்டேன். பொத்தென்னு விழுந்துட்டான். மனுச சபலம் விடுமா! மெதுவா எந்திரிச்சு கன்னா பின்னான்னு கெஞ்சிக்கிட்டு நின்னான். போறானே இல்லை….. அதுக்குள்ளாற அதோ அந்த சர்வர் பையன் வந்து “போடா அயோக்கிய றாஸ்கல்னு” கழுத்தைப் பிடித்துக் கொண்டு போய் வெளியே தள்ளி விட்டான்…..”

முதலாளி கூறிக்கொண்டே இருந்தார். நான் எழுந்து கனவில் நடப்பவன் போல் நடந்துவிட்டேன்.

உளுத்துப் போயிருக்கும் ஓட்டைக் குடிலுக்கு ஓடு போடப் போய் குடிலையே உடைத்துவிட்ட குற்றத்துக்காக மனம் என்னை வதைத்தது.

பிச்சைக்காரன் நல்லவன்!

முதலாளியும் நல்லவர்தான்!

ஆனால் பொல்லாதது எது? இருவருக்கும் முன்னிருக்கும் அந்த அடையா?

1961

மல்லிகை

முந்தைய கட்டுரைமுன்னோடிகளின் முன்பில்…
அடுத்த கட்டுரைஇரு நிகழ்ச்சிகள்….