கதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி

அன்புள்ள ஜெ.,

கதைகளின் பார்வைகளுக்காக நீங்கள் வைத்த குட்டுக்கு நன்றி.. நானெல்லாம் கடிதங்கள் , எதிர்வினைகள் மூலமாகத்தான் கதைகளை உள் வாங்கி கொள்கிறேன்.. எப்போதும் போல சண்முகம் அவர்களின் கடிதம் மூலமே பீத்தோவனின் ஆவி உள் வாங்கி விரிக்க முடிந்தது.

வேஷம், வாசலில் நின்ற உருவம் போன்ற கதைகளை உள்வாங்க காத்து கொண்டு இருக்கிறேன்..

பொதுவாக இந்த முறை தளத்தில் வந்த கடிதங்கள் குறைவு என்பதே என் மனப்பதிவு.
குழுமத்தில் இருந்துதான் கதைகள் பதிவேற்றப்படுகின்றன என இரண்டு நாள்கள் முன்தான் தெரிந்தது..( குழுமத்தில் ஒரு வருடமாக இருந்தாலும் , அது ஏனோ தயக்கமாக இருக்கிறது ..மாமன் மச்சான் என இருக்கும் ஒரு உறவுக்கூட்டத்தில் புதியதாக ஒருவன் போய் உக்காரும் போது எப்படி உணர்வானோ அப்படி :-) )
அங்கும் சென்று பார்த்தால் , வேஷம், வாசலில் நின்ற உருவம் போன்ற கதைகளுக்கு எதுவும் சொல்லவில்லை..

இந்த நிலையில் நீங்களோ. குழுமத்திற்கு வெளியில் உள்ள நண்பர்கள் எழுதும் கடிதமே என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கதைகள் குறித்து உங்களுக்கு எழுதிய கடிதம் போக, தளத்தில் சுரேந்தர் அவர்களின் முகவரி தரப்பட்டு இருந்ததால் அவருக்கும் கடிதம் எழுதினேன்..
கதைகளை எனக்கு தொகுத்து புரிந்துகொள்ள உங்களுக்கு எழுதிய கடிதங்கள் போக தினமும் எழுதி டிராப்டில் சேமித்த மனப்பதிவுகள்..தினமும் மெயில் அனுப்பி உங்களை தொந்தரவு பண்ண தயக்கமும் கூட.

அன்புடன்,
பிரதீப்.
======================================

உறவு :
எதன் மீது இரு உயிர்களுக்கு இடையிலான உறவு உருவாகிறது என நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது..உயிர்களுக்கு இடையில் மட்டுமா உறவு? உயிரற்றதன் மீது கூட ஆழமான பிணைப்பு..இது எதன் மீது கட்டப்படுகிறது என்பதை விளக்க எவ்வளவு கோட்பாடுகள் இலக்கியம் முதல் மனோவியல் வரை..எங்கோ ஜெ., h2 மற்றும் o இணைந்தால் நீர் ..நீர் இருப்பதால் மட்டுமே அந்த விதியும் இருக்கிறது என்றார்..என்ன ஆழமான தரிசனம்..அந்த வரிகள் பலநாள் என்னை உலுக்கிக்கொண்டு இருந்தது.
உறவுகள் இல்லை என்றால் ..உயிரின் வாழ்வின் சாரமோ பொருளோ என்ன..ஓவ்வோன்றுடன் கொள்ளும் உறவே சுயமாக உருவாகிறதா என்ன? சுயத்தை உருவகிக்கும் போதே அதன் உறவுக்காக இன்னுமொரு மாபெரும் சுயமும் வேண்டும் தானே? இது இருப்பதால்தானே அதுவும் இருக்கிறது?
உறவு கதை..தீராத சலனங்களை ஏற்படுத்துகிறது..
முருகன் பாத்திரம் எதாவது ஆண்மைக்குறைவு உடையவரா? சீறுநீர் கழித்து வெகுநேரம் கழித்து எழுந்திருப்பார் என்கிறார் தனா..விரைவீக்கம்? மேலும் முருகன், ஒரு தடவை பஸ் கவிழ்ந்ததில் இருந்து அதில் போகவில்லை..பயமும் கூட..யானை பார்த்தும் பயம்..ஆ பொம்பள சுகமும் ஒன்னும் இல்லை என்ற வரி வேறு..
முருகனின் இந்த வகையான மனக்குழப்பம் தான் இந்த உறவின் அடித்தளமா?
அநேகமாக சந்தானம் இவரின்இட்டு நிரப்பும் மறுபதியாக இருக்க வேண்டும்..அதைத்தான் அவன் முடிவில் தரிசனமாக பெற்று தன்னை முழுமைஆக்குகிறானோ? தனசேகர் மட்டுமே அறிவார் :-)

யாவரும் கேளிர் :
கணியன் முதல் சிவா வரை இன்னமும் பல ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ஒரு கதைதான் ..இடம் , பெயர்களை மாற்றி மொழியின் நுண்மை கொண்டு வீச்சைத் தரும் கதைக்களம்தான் ..நிறைய எழுதிய பின் இவர் இதை எழுதி இருந்தால் , ஜெ.,யின் நூறு நாற்காலி யின் இணை தாக்கத்தை தரக்கூடும்.. எளிதாக கடந்து செல்லகூடிய கதை தான்..

காகிதக்கப்பல்..
ஜெ., யின் வெறும் முள் கதைக்குப்பின் அதி உக்கிர உணர்ச்சி தரக்கூடிய கதை . ஏக்கம் ஆசை நம்பிக்கை நிராசை வெறுமை என்ற சரடில் மிக அழகாக கோத்து இருக்கிறார் சுரேன். காகிதக்கப்பல் உருவகம் கிளாஸ்..(கப்பல் என்றே நினைத்து அப்பாவை நச்சரித்து கப்பல் செய்து தெரு வாசல்படியில் ஓடும் மழை நீரில் விட., சிறிது தூரத்தில் அது நனைந்து அமிழ, அழுது கொண்டே அப்பாவிடம் ஓடி , அவர் அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லி குடை” வைத்த கப்பல் செய்து இப்போது நனைந்து மூழ்காது போய் விளையாடு என்று சொல்ல.., வெளியில் வந்து பார்த்தால் மழை நின்று தெருவில் நீர் ஓடாமல் இருக்க, மீண்டும் அழ,. சரி என்று வாய் அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி , அதில் கப்பல் விட அப்பா சொல்லவதும், அந்த கப்பல் தூங்கி எழும் வரை மூழ்காமல் மிதப்பதும் நினைவை நிரப்புகிறது)..
என்ன சொல்லிவிட முடியும் கதையின் பின் உள்ள சுரேனின் மனதிற்கு …வலிக்கிறது உன் வலி பார்த்து எனக்கும் என்பதை விட.

தொலைதல்:
சுவாரசியமான கதை..தொலைந்த ஆடே இயேசுவின் தோளில் என்பார்களே..அதே போல்..என்ன கவனிப்பு திரும்பி வந்ததும்..எனக்கு தெரிந்து ஓடிப்போன என் நண்பனும் , மாமாவும் திரும்பி திரும்பி ஓடி போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. திரும்பிவர சாப்பாடும், பணமும் தான் காரணமாக இருக்கும் போல..மீண்டும் மீண்டும் ஓடும்போது எல்லாம் வீட்டில் இருந்தோ நகையோ பணமோ சேர்ந்துதான் போகிறது..
அவர்கள் திரும்பி வந்ததும்., உறவுகள் எல்லாம் கூடி மிக எச்சரிக்கையாகப்பேசிக்கொண்டு இருக்கும் போது லக்ஷ்மி அக்கா போல் யாரவது ஒருவர் ஞாபகப்படுத்தி அந்த சூழ்நிலையை இறுக்கமாக ஆக்கி விடுவார் :-) திரும்பியவர்கள் தங்களை சற்று inflatable ஆக காமித்துக் கொள்ள செய்யும் சேட்டை இருக்கிறதே ..மிக அருமையாக எழுதி இருக்கிறார் ஹரன் ஜீவன்களுக்கு பிடிக்காத. ஒரே டிஷ் ..அதையும் சப்த கன்னியரை பார்த்த பின் ஒருவன் செய்த உப்புமா அன்னைக்கு நைட்டு அவன் பண்ண உப்புமா, அது உப்புமா இல்லை, அதை என்னன்னு சொல்றது? சொல்றதுக்கே வார்த்தை இல்லை…பெரும்பான்மையான ஜீவன்களுக்கு பிடிக்காத ஒரே டிஷ் ..அதையும் சப்த கன்னியரை பார்த்த பின் ஒருவன் செய்த …:-)

எல்லா அம்மாவைப்போல அவ்வா..ஓடிப்போன என் புள்ள இம்பாலா காரில் வருவான் என கனவு காண்பவள்..பொண்ணு தோடு பறிகுடுத்த எரிச்சலில் நக்கலாக லக்ஷ்மி சொல்லும் slang பெத்த வயிறு இல்லையா :-)
வாயுக்கோளாறு:
இந்த வரிசை கதைகளில் இதன் இடம் என்ன?
ஜாதகம் , குடும்பப்பின்னணயில் வாயுவைப்பார்த்து பயந்து மிக மிக ஜாக்கிரதையாக இருக்கும் ஒருவன் செத்துப்போகிறான்..அதன் காரணம் வாகன ஏர் பிரேக்..இடையில் இட்டு நிரப்ப காரணங்கள்., அவதானிப்புகள் , நுண் தகவல்கள்..ஆனால் ஏன் இந்தக்கதை ?
யாரவது எழுதும் கடிதம் மூலம் புரியுதா என பார்க்க வேண்டும்.

பீத்தோவனின் ஆவி :
எளிமையாகப்புரிந்த கதை ..சண்முகம் அவர்களின் கடிதம் படித்த பின்புதான் முழுவதும் உள் வாங்க முடிந்தது
அந்த வகையில் இதை ஒரு உச்ச கதை என்றே சொல்ல வேண்டும் . மிகப் பெரும்பாலும் ஏதோ ஒரு தருணத்தில் வாழ்வில் சக்தி இழந்து, சரியாகத்தான் போகிறோமோ என சலிப்பு ஏற்பட்டு ,தேங்க நேரும்போது யாரோ ஒருவர் சம்மட்டி கொண்டு அடித்தோ , மயில் இறகோ கொண்டோ தடவி ,முன் நகர்வதற்கு தர்க்க நியாயங்களோ ,அகத்தூண்டுதலோ தர வேண்டி இருக்கிறது..அவர்களை நாம் அறிந்தோ அறியாமலோ வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை ..அந்த வகையிலும் இந்த கதை முக்கியமானது ஆகிறது ..அக் கதையின் இறுதிப்பகுதி சிவா பேசுபவை..மீண்டும் மீண்டும் அகத்தூண்டலை உருவாக்கும் சொல்லாடல்கள்..இன்னும் பார்க்கப்போனால் கிழக்கின் தரிசனத்தின் ஒரு துளியாகவே அங்கு அவன் நின்று உரை ஆடுகிறான்..உடைந்த ஆங்கிலம் பேசக்கூடிய, பேசலாமா எழுந்து போகலாமா என தயங்கும் ஒரு கிழக்கின் மனம் கொள்ளும் விஸ்வரூபம் அந்த வரிகள். மேதமை என நம்பபடுவதன் முன்னே அறியா சிறுவனின் மழலையா? ஒளவையிடம் சுட்ட பழம் கேட்டது ஏனோ நினைவு வருகிறது.

வாசலில் நின்ற உருவம் :
விஷ்ணுபுரத்தில் வரும் அந்த கருப்பு நாய் போல மரணம் ..அந்த பல்பு பிலமென்ட் உருவகம் ஆரம்பத்திலே உணர்த்திவிடுகிறது..அந்த நினைவு உடனே கதையைத் தொடர வேண்டி இருக்கிறது..நிறைய குறிப்பு உருவங்களும் சித்தரிப்புகள் நிறைந்த கதை ..இன்னும் பல முறை படிக்க வேண்டும் .

வாசுதேவன் :
சில ஆண்டுகளுக்கு முன் சுனில் எழுதிய ஒரு corporate guru வை பார்க்கப்போன கதைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை..ஹார்லிக்ஸ் குடித்த வீட்டுக்கு துரோகம் செய்ய கூடாது போன்ற வரிகள் கதை மிக எளிமைப்படுத்தி நீர்த்துப்போக செய்கிறதோ என தோன்றுகிறது..ஏதோ ஒன்று கதையில் ஒட்ட விடாமல் செய்கிறது. கதை literal ஆக முடிக்கப்பட்டு இருந்தாலும் கூட முடியாமல் தொக்கி நிற்பதாகவே தோன்றுகிறது. பார்த்துப்பா  அவனுக்கு சூடு ஒத்துக்காது போன்ற வரிகள் வலிந்து உருவாக்கப்பட்ட தோற்றத்தை அளிக்கின்றன.

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]
அடுத்த கட்டுரைவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்