விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

மாலை வணக்கம்

இன்று நான் விஷ்ணுபுரம் நாவல் ஒரு பிரதி வாங்கினேன். இந்த மெகா நாவலைப் படிப்பதற்கு உங்கள் ஆலோசனையை நாடுகிறேன் . நான் எவ்வகையான முன் தீர்மானங்களும்  அல்லது கருத்துக்களும்  கொண்டிருக்கவில்லை, என் சொந்த ரசனை என்பது சிறுகதைகள் கட்டுரைகள் படிப்பதிலேயே உள்ளது என்றாலும்.

நன்றி!

எஸ்
மும்பை

அன்புள்ள ….

விஷ்ணுபுரத்தை படிக்கத் தொடங்குவது எப்படி என்ற கேள்வி வித்தியாசமாக இருந்தாலும் அதற்கான அவசியம் உள்ளது என உணர்கிறேன். பல தருணங்களில் அதைப்பற்றி பேச நேர்ந்திருக்கிறது. இன்று காலை ஈரோட்டிலிருந்து இதேபோல பாபு என்ற நண்பர் கேட்டிருந்தார்.

விஷ்ணுபுரம் சற்று கவனமாக வாசிகக் வேண்டிய நாவல். அதன் ஒரு பகுதியில் உள்ள சிறு தகவல் கூட பெரிதாக பின்னர் வளரக்கூடும் என்பதனால் வாசிக்கும் எல்லா விஷயங்களையும் தொடர்ச்சியாக நினைவில் வைத்தபடி வாசிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக முதல்பகுதியில் அவ்வப்போது பெயர் சுட்டப்படும் அஜிதன் என்ற ஒரு ஐதீகமனிதர் அடுத்த பகுதியில் பெரிய கதாபாத்திரமாக வருகிறார். இப்படி யானைகள் குதிரைகள் அனைத்துமே பிற்பாடு விரிந்து வரக்கூடும். இதுவே முதலில் சொல்லப்பட வேண்டியது.

விஷ்ணுபுரத்தில் பலவகையான தத்துவஞான விவாதங்கள் வருகின்றன. பலவற்றுக்கு தூய தமிழ் சொற்கள் கொடுக்கபப்ட்டுள்ளன. பல சொற்கள் நானே உருவாக்கியவை. ஆனால் கூர்ந்து படித்தால் அதிகம் விலகி அல்லாமல் அவற்றின் மூல சம்ஸ்கிருதச் சொல்லும் அளிக்கபப்ட்டிருக்கும். அது எங்காவது சற்று விளக்கபப்ட்டும் இருக்கும். ஆனால் கதையோட்டத்தின் பகுதியாகவே இருக்கும். ஆகவே முதலில் தெரியாத சொல்லை பார்த்தால் குழம்ப வேண்டியதில்லை, போகப்போக அது தெளிவடையும்.

விஷ்ணுபுரம் நாவலின் அமைப்பில் ஒரு முன்பின் மாற்றம் உள்ளது. அதன் முதல் பகுதி ‘ஸ்ரீபாதம்’ த்தை விட அடுத்தபகுதியான ‘உந்தி’ முன்னால் உள்ளது. அதாவது கதை பின்னால்செல்கிறது. அதன் பின்னர் மூன்றாம் பகுதியான ‘மணிமுடி’ ஸ்ரீபாதத்தை விட காலத்தால் பிந்தையது. அதாவது 1,2,3 நாவலின் பகுதிகள் இல்லை. 2,1,3 வரிசையில் உள்ளன.

இதற்கான காரணம் நாவலை படிக்கும்போது புரியும். ஸ்ரீபாதம் பகுதியில் தொன்மங்களாக வருபவர்கள் அடுத்து உந்தி பகுதியில் உண்மையான மனிதர்களாக ஆகிறார்கள். உண்மையான மனிதர்களாக அதில் வருபவர்கள் மணிமுடி பகுதியில் தொன்மங்களாக மாறிவிடுகிறார்கள். நாவல் தொன்மங்களுக்கும் வாழ்க்கைக்குமான உறவைப்பற்றி பேச விரும்புகிறது.

நாவலின் நடை உருவகங்களால் ஆனது. அனைத்தையும் திரைபப்டம்போல காட்சியாக்க முனைவது. ஆகவே அது வர்ணனைகளை அளித்தபடியே செல்கிறது. கதை வேகத்தை நாடாமல் அந்தக் காட்சிகளே நாவலில் முக்கியமானவை என்ற உணர்வுடன் வாசிக்கவேண்டியது தேவை. உதாரணமாக நாவலில் ஒரு தெருச்சித்தரிப்பில் யானை ஒன்ரு ஒரு வண்டியை இழுக்கும் சித்திரம் உள்ளது. வெறும் சித்திரம் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட பலநூறு சித்திரங்கள் இணைந்தே விஷ்ணுபுரம் உண்மையான நகரமாக நம் மனதில் பதியும்.

விஷ்ணுபுரத்தில் அறிவார்ந்த விவாதங்கள் விரிவாக நடக்கும் இடங்கள் உள்ளன. அவற்றை தவிக்கக் கூடாது. நாம் வாசிக்கும் நவீனத்துவ நாவல்களின் இயல்பு கதையை மட்டுமே சொல்லிச் செல்வது. விஷ்ணுபுரம் ஒரு கிளாசிக் நாவல். அத்தகைய நாவல்களில் அறிவார்ந்த விவாதமும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும். வாழ்ககையை உணர்வுபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் அணுகும்போதே செவ்வியல் கலை உருவாக முடியும்

இவ்வளவு விஷயங்களை மட்டும் கருத்தில்கொண்டு படித்தால் போதும். எந்த நாவலும் தன்னை விரித்துக்கொள்ள சற்று நேரம் எடுக்கும். ஒரு ஐம்பது பக்கம் வரை ஆனபிறகு விஷ்ணுபுரம் தன்னை உங்களிடம் நிறுவிக் கொள்ளும் என்றே நினைக்கிறேன். என் நாவல்களில் விஷ்ணுபுரம் அளவுக்கு வாசகர்களைக் கவர்ந்த எதுவும் இல்லை. அதைப்பற்றி ஒரு வாசகர் கடிதமாவது வராத நாளும் இல்லை.

விஷ்ணுபுரம் நாவலில் உள்ள தகவல்கள் அதிகமானவை என்று ஒரு தரப்பு உண்டு. நாவல் என்பதே தகவல்களின் கலை. தகவல்கள் மூலம் அது தனக்கென ஒரு முழுமையான தனி உலகை உருவாக்குகிறது. அதில் பலலயிரம் தகவல்களும் தகவல் போன்ற கற்பனைகளும் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளன. என்னாலேயே சொல்லிவிடமுடியாது.

அதேபோல அதில் உள்ள வரலாறு உண்மையான வரலாற்றின் சாயலுடன் உள்ளது. ஆனால் அது புனைவுக்காக மாற்றியமைக்கபட்டுள்ளது. விரிவான தத்துவ விவாதங்கள் உள்ளன. அவை தத்துவம் என்றே தோன்றும். ஆனால் அவை தத்துவத்துக்குரிய மொழியில் இல்லை. இலக்கியத்துக்கான படிம மொழியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அந்த மாற்றம் கவனத்திற்குரியது. அதுவே நாவலாக்கத்தின் முக்கிய இயல்பு

பலவருடம் முன்பு நான் எழுதிய ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளேன்

அன்புடன்

ஜெயமோகன்

அன்புள்ள ..  அவர்களுக்கு ,

தங்கள் கடிதம் கிடைத்தது .

விஷ்ணுபுரம் ஒரு வரலாற்று நாவல் அல்ல . அது ஒரு மிகை கற்பனை ஆக்கம். [·பாண்டஸி ] அதில் மறு ஆக்கம்செய்யப்பட்ட வரலாறும் தத்துவமுமே உள்ளது .அதாவது அதன் மூலப்பொருட்களாகவே வரலாறும் தத்துவமும் உள்ளன. 

சரித்திரபூர்வமாக பார்த்தால் விஷ்ணுபுரம் போன்ற ஒரு பெரும் ஆலயம் மூன்றாம் நூற்றாண்டில் இருக்க முடியாது. அதை அமைப்பதற்கான உபரி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தால் மட்டுமே சேர்க்கப்பட முடியும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போல பிற்கால பாண்டியர்களுக்கே அவ்வலிமை இருந்தது. ஆக விஷ்ணுபுரத்தில் வரலாறல்ல வரலாற்று ரீதியான ஒரு சாத்தியம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது . சிலப்பதிகாரத்திலேயே ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய குறிப்பு இருப்பதனால் , பல்வேறு கோட்டங்கள் கொண்ட கோவில்கள் பற்றிய குறிப்புகள் இருப்பதனால் விஷ்ணுபுரத்துக்கு சாத்தியம் உள்ளது, அவ்வளவுதான்.

நாவலாசிரியன் தன் வரலாற்றுக் கற்பனையை நட்டு வளர்க்க ஒரு வரலாற்றுப் பின்புலத்தை மட்டுமே வரலாற்றில் இருந்து பெறமுடியும். கறாரான வரலாற்று தகவல்களுக்காக தேடுவது அவன் வேலை அல்ல. அப்படித்தேடினால் அவனது இலக்கியவேலை நடக்கவும் நடக்காது .நான் விஷ்ணுபுரத்தின் சூழலை வரலாறு சார்ந்து உருவாக்கியுள்ளேன்,சிக்கலான இடங்களை தவிர்த்தும் நகர்ந்திருக்கிறேன் .

அப்படியானால் வரலாற்று ரீதியாக இது எந்த அளவுக்கு முக்கியமானது ? வரலாற்றின் இயங்குமுறை , அதன் உள்ளோட்டங்கள் ,அதில் தனிமனிதர்களின  ஆசாபாசங்கள் பின்னி பிணைந்துள்ள விதம் , வரலாற்றை இயக்கும் கருத்தியல் மோதல்கள் ஆகியவற்றை பற்றிய என் உள்ளுணர்வு சார்ந்த புரிதல்கள் அதில் உள்ளன.

நீலகேசி என் நாவலுக்கு முக்கியமான முன்னுதாரணமாக இருந்தது உண்மையே .ஆனால் நீலகேசியில் விவாதங்கள் தரமற்று உள்ளன, இல்லையா? வடமொழி விவாத நூல்கள் சில முன்னுதாரணமாயுள்ளன.ஆனால் விவாதப் பொருள் இன்றைய சிந்தனை சார்ந்த அடிப்படைகேள்விகள் சார்ந்தே உள்ளது.பண்டைய சிந்தனைகள் அப்படி மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. அதை நூலை படித்தபிறகு விவாதிக்கலாம் .

அதாவது எல்லா இலக்கியபடைப்புகளியும்போலவே விஷ்ணுபுரமும் சமகால சிக்கல்களையே பேசுகிறது .அதைபேச ஒரு தளமாக்வே கடந்தகாலம் உள்ளது .800 வருட வரலாற்றை முன்பின்னாக அடுக்கி காட்டும் வசதிக்காக

நாத்திக [லோகாயத அல்லது ஜடவாத ] நூல்கள் பல உள்ளன. பெரும்பாலான நூல்களில் மூல வரி ஜடவாதமாக /லோகாயதமாக இருக்க உரைகள் மூலம் ஆன்மவாதம் நோக்கி இழுத்திருப்பதைக் காணலாம் .சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் எல்லாமே அப்படி பார்த்தால் ஜடவாதங்கள் என்பது என் எண்ணம். அதை தனி நூலாக எழுதியுள்ளேன். பார்க்க, இது ஞான மரபில் ஆறுதரிசனங்கள் , தமிழினி பிரசுரம்
 


ஜெயமோகன்
 
 

முந்தைய கட்டுரைவீரான் குட்டி கவிதைகள்
அடுத்த கட்டுரைமணல் -ஒரு கடிதம்