அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தாங்கள் U.G. Krishnamurti-யின் தத்துவங்களைப் படித்திருக்கிறீர்களா? அவை குறித்து தங்களுடைய அபிப்ராயத்தை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
நன்றி.
ராதாகிருஷ்ணன். ரா
சென்னை
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
படித்திருக்கிறேன். என் நண்பர் மு.கி.சந்தானம் அவர்கள் யூஜி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருக்கமான உறவுள்ளவர்.
என்னை ஜெ.கிருஷ்ணமூர்த்தியே பெரிதாகக் கவரவில்லை. யூஜியிடம் அந்தக் கவித்துவமும் இல்லை. மொழியின் தர்க்கவிளையாட்டு மட்டும்தான்
யூஜி தத்துவத்தை முன்வைக்கவில்லை, அவர் முன்வைப்பது தத்துவ மறுப்பு. தத்துவம் தெவிட்டிப்போனவர்களுக்கு ஒர் இடைவேளையாக அவர் உதவுவார். எந்த முதன்மைத்தேவை மானுடத்தில் தத்துவத்தை உருவாக்கியதோ அது இருக்கும்வரை தத்துவமும் இருக்கும்.
அகநிகழ்வு என்பது ஒரு காற்று. அதில் மொழியெனும் உளியால் சிற்பம் செதுக்கிக் காட்டமுயல்கிறார். அவர் நிகழ்த்துகிற கணத்துக்கு மேல் அது நிலைப்பதில்லை
நானும் காற்றைச்சிற்பமாக்குகிறேன். கனவால். அது நிற்கும்
ஜெ