நாம் என்னவகை மக்கள்?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது.சமீபத்தில் நான் படித்த தங்களின் “யூத்து” கட்டுரையைப் பற்றி எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தங்களின் சிறந்த படைப்பாக நான் கருதும் காடு நாவலில் இயற்கையின் அழகியலை நீங்கள் வர்ணிக்கும் போதும்,யானை டாக்டரில் தற்கால இளைஞர்களை நீங்கள் சாடும் போதும்,இன்னும் பிற நாவல்களிலும் “யூத்து” கட்டுரையில் வரும் விஷயங்களை நீங்கள் முன்னிலைப்படுத்துவதை கவனித்திருக்கிறேன்.

நீங்கள் சொன்ன பருந்துப் பாறை இளைஞர் கூட்டத்தைப் போன்ற ஜென்மங்களை எல்லா ஊரிலும் நம் கைகளுக்கு அருகிலேயே காண முடியும்,அவர்களுக்கு இயற்கையெல்லாம் குரங்கு கையில் பூ மாலை போலத்தான்,வைத்து முகர்ந்து பார்க்கத் தெரியாது பிரித்து,பிய்த்து தான் எறிவார்கள்.சென்ற வருடம் மனைவியுடன் “மலைகளின் ராணி” ஊட்டிக்கு சென்றேன்….ஊரின் பெயரை மாற்றி “குப்பை மலைகளின் ராணி” என்று வைக்கலாம் போல் அப்படி இருக்கிறது.ஊரின் எல்லை தொடங்குவதற்கு முன்பிருந்தே வழி எங்கும் குப்பை, பிளாஸ்டிக்,பாட்டில் குவியல்கள் தான்….மனிதனாக இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஜென்மங்கள் செய்கையாகவே அது தெரிந்தது.

எங்காவது சுற்றுலா தலங்களுக்குச் சென்றால் நமது ஆட்கள் தவறாமல் ஆற்றுபவை,

*துண்டை விரித்து எடுத்து வந்த கட்டுச் சோற்றைப் பிரித்து ஒரு கட்டு கட்டுவார்கள்

*மாங்காய் பத்தை,மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் என்று நொறுக்குத் தீனியாக (நாளைக்கு சாகப்போகிறவர்கள் போல்) தின்று தீர்ப்பார்கள்.

*ஜோடியாக செல்பவர்கள்-அறைக்குள் நடக்கவேண்டிவைகள் சிலவற்றை வெளியிலேயே செய்யத்தொடங்குவார்கள்.(காதலா இருக்காங்களாம்!) ,மனதிற்குப் பிடித்தவர்களோடு சூழ்நிலையை அனுபவிப்பதில்லை,அங்கே போயும் இவர்கள் புதரையே தேடுவார்கள். ரசிக்கவோ,யோசிக்கவோ அங்கே அவர்கள் செல்வதே இல்லை,பெட் ரூமிற்கு சென்றவுடன் உடையைக் கழற்றும் அவசரந்தான்.

இது நம் தரம் தாழ்ந்த சினிமா கற்றுக்கொடுப்பது தான் ,ஏனென்றால் நம் சினிமாக்காரர்கள்தான் செக்ஸையும் காதலையும் போட்டு குழப்பி வைத்திருக்கின்றார்களே! அவர்கள் பாஷையில் இடுப்பில் கை போடுவது,மார்பைக் குலுக்குவது,முகர்வது,நக்குவது தான் காதல்.

நீங்கள் சொன்னது போல் பணத்திற்கான கல்வி மட்டுமே நமக்குத் தெரிந்தது,அதையே ஊட்டி வளர்க்கப்பட்டோம்.நிறைய மார்க் வாங்கவும்,வெளிநாடுகளில் வேலை செய்து பணத்தில் கொழிக்கவும்,வீடு,கார்,கிரீன் கார்டு தான் பிரதானம்,பெருமை என்று நாம் நமது பெற்றோர்களால் mesmerize செய்ய பட்டிருக்கிறோம்.ரசனை சார்ந்த அறிவு,வாழ்வில் ஆங்காங்கே தோன்றவேண்டிய அழகுணர்ச்சி,யோசித்தல் போன்றவை துளியும் இல்லாத ஒரு வகை தட்டையான வாழ்கை முறையே இங்கு நிலவுகின்றது.உண்மையில் யாரும் நம்மையெல்லாம் வளர்க்கவே இல்லை,தொழுவத்து மாடு போல் சாணி போட்ட இடத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.(தங்களின் “சோற்றுக்கல்வி” என்ற சொல்லாடலை ரசித்தேன்).குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை,சினிமாவை,வெளி உலகத்தை அறிமுகப்படுத்த நாம் யாரும் முயல்வதில்லை.இன்று வீடுகளில்,டிவியில் பெரியவர்கள் பார்க்கும் குப்பைகளை குழந்தைகளும் சேர்ந்து பார்த்து வலிப்பு வந்ததைப் போல் ஆடுகிறார்கள்,அதைப் பெற்றோர்கள் கை தட்டி ஊக்குவிக்கும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் மண்ணில் இறங்கி,தெருக்களில் எந்த குழந்தையும் விளையாடுவதையே பார்க்க முடிவதில்லை.

எதாவது ஒரு வகையில் தற்கால “யூத்துகளை” விட நாம் கொஞ்சம் வேறு பட்டு இருந்தால்?
உதாரணத்திற்கு-கொஞ்சம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டு நான் படும் அவதி இருக்கிறதே!
வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் cabஇல் ஏதாவது புத்தகத்தை மேய்ந்து கொண்டே செல்வது என் வழக்கம்.
அப்படி ஒரு நாள்….என்னுடன் வரும் தமிழ் அன்பர் ஒருவர்,நான் அப்போது படித்துக்கொண்டிருந்த தி.ஜா வின் “மோகமுள்” நாவலின் தலைப்பை எழுத்துக்கூட்டிப் படித்து விட்டு “என்னங்க, பெயரே ஒரு மாதிரி இருக்கு……சீன் புக்கா?” என்றார் சைடாக சிரித்துகொண்டே.

சிலர் புத்தகத்தை வாங்கி ஏதோ அரபு மொழி படிப்பதைப் போல் இரண்டு வரி தடுமாறி விட்டு “மொக்கையா இருக்குங்க!” என்று கொடுத்து விடுவார்கள்(கோபல்ல கிராமம்!),வீட்டுப் பெரியவர்கள் “கல்கி மாதிரி எழுதுறவங்க யாராவது இப்போ இருக்கிறாங்களாடா?” என்று எகிறுவார்கள்.ஒரு கூட்டம் ராஜேஷ் குமார்,விமலா ரமணனை மட்டுமே எழுத்தாளராக எண்ணிக்கொண்டிருக்கிறது.இன்னொரு பணக்காரக் கூட்டம் ஹாரி பாட்டர் புத்தகங்களை வாங்க சிட்டி சென்டரில் நின்று கொண்டிருக்கிறது.

தரமான புத்தகங்கள் படிப்பதால் ஒரு மொழியின் வேரைத் தொட முடியும்,கலாச்சாரத்தின் அடிப்படையை, அரசியலை, ஆன்மீகத்தை,வரலாற்றை…அதிமுக்கியமாக மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.புத்தகங்கள் படிப்பது கஞ்சா, ஓப்பியத்தை விட போதையான சமாச்சாரம்,படிப்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.

மேல் நாடுகளிலிருந்து அவர்களைப் போல் பர்கர்,பீசா சாப்பிட,உடை அணிய,நைட் கிளப்களில் தண்ணியடித்து விட்டு அரைகுறை ஆட்டம் போடும் வழக்கத்தை மட்டுமே நம் இளைஞர்கள் கற்றுக்கொண்டது,இதை செய்வதினால் மட்டும் அவர்கள் தங்கள் தரத்தில், கலாசாரத்தில் உயர்ந்து விட்டதாக,மூடத்தனமான! இந்திய சமூகத்திலிருந்து வேறுபடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தியன் தான் ஆனால் ஒரு இந்தியனைப் போல் எனது வாழ்கை முறை இல்லை,அது தேவையுமில்லை என்று சொல்லவே பெருமைப்படுகின்றார்கள்.இந்த விஷயத்தில் வட இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. இதை செய்வதால் தப்பொன்றும் இல்லை ,ஆனால் அவர்களிடம் கற்றுக்கொள்ள உருப்படியாக எவ்வளவோ இருக்கிறது.உதாரணமாக, ஐரோப்பியர்களைப் போல் காலந்தவறாமை, தெரியாததைத் தெரியாது என ஒத்துக்கொள்ளும் பண்பு,சலிப்பின்மை,சளைக்காமை……இதெல்லாம் நாம் அவர்களிடம் கவனித்ததே இல்லை.
தமிழ் நாட்டில், நமது பெரும்பாலான இளைஞர்களின் ரசனையை இரண்டு வகைகளில் தொகுக்கலாம்
ஒன்று X நடிகரின் ரசிகன் அல்லது Y நடிகரின் ரசிகன்.

——-
இதெல்லாம் நம் சமுதாயம் மீதான நிலைப்பாடு மட்டுமே ,இதில் யாரையும் எதுவும் செய்வது சாத்தியமாக தோன்றவில்லை.

இதெல்லாம் நமது மக்களிடம் வேரூன்றி இறுகி விட்டது.வேண்டுமென்றால் இப்போது குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் அந்த கூட்டத்திடம் சிலவற்றைப் புரியவைத்து,சிலவற்றை மருந்தை போல் திணித்து ….வளரவிடலாம்,பார்ப்போம்.

அன்புடன்

இப்ராஹிம்
பெங்களூர்.
http://www.ibbuonline.com/2012/08/blog-post.html

அன்புள்ள இப்ராஹீம்

உங்கள் கருத்துக்களை முழுமையாகவே ஏற்கிறேன். ஒவ்வொருமுறை வெளியே செல்லும்போதும் நம்முடைய பிரச்சினைதான் என்ன என்ற ஆற்றாமைதான் மனதில் எழுகிறது.

சமீபத்தில் ஒரு பொதுச்சேவை தளத்தில் இயங்கும் ஒரு நண்பர் சொன்னார், தமிழகத்தில் மிகப்பெரும்பாலான கிராமங்களில் குப்பைகள் அள்ளப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்று. பிரமிப்பாக இருந்தது. ஆனால் யோசித்தபோது தெரிந்தது, அது உண்மை.

நம்முடைய கிராமங்களில் பாரம்பரியமாக குப்பை நீக்கம் செய்யும் அமைப்போ முறைமையோ இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனென்றால் அன்று மட்காத குப்பை அனேகமாக இல்லை. குப்பை வேளாண் உரமாக இருந்தது.

எழுபதுகளுக்குப்பின் காகித, பிளாஸ்டிக் குப்பைகள் வர ஆரம்பித்தன. எல்லா பொருட்களும் ‘பேக்கிங்’ கில் கிடைக்க ஆரம்பித்தன. அப்படித் திரளும் பெருங்குப்பையை ஒரு கிராமத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல, அவற்றை உரியமுறையில் கையாள நம்மிடமும் எந்த அமைப்பும் வழிமுறையும் இல்லை.

நமக்கு பஞ்சாயத்து அமைப்புகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் எந்தப் பஞ்சாயத்திலும் குப்பை அள்ளி முறையாகப் பிரிக்கப்பட்டு மறைவுசெய்யப்படுவதில்லை. அவற்றை சாலையில் இருந்து ஒதுக்கிப்போடுவதையே நாம் சாதாரணமாகச் செய்துகொண்டிருக்கிறோம். எந்தக் கிராமத்தில் இருந்தாவது குப்பை நீக்கம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆகவே நம் கிராமங்கள் எல்லாமே இன்று மாபெரும் குப்பைமேடுகள். ஆனால் எவருக்கும் எந்தப் புகாரும் இல்லை. மக்கள் கண்களில் அவை படுவதே இல்லை. ஊரை இந்த லட்சணத்தில் வைத்திருக்கும் மக்கள் காடுகளை என்ன செய்யமாட்டார்கள்?

ஜெ

 

முந்தைய கட்டுரைஆற்றுமணல் பாயிலே..
அடுத்த கட்டுரைவால்மீகி