காடு, கொற்றவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இது முதல் இனி உங்களின் பாதிப்பு என்னைப் புரட்டிப்போடும் எல்லா நேரங்களிலும் கடிதம் எழுத முயலுவேன். தங்களைப் பற்றி வாசிப்பின் மூலமறிந்து தங்கள் எழுத்தின் உன்னத வல்லமையை உணர்ந்த பின்னரே இதை எழுதுகிறேன்.

யாரையும் எளிதில் பாராட்டிவிடும் எளிய மனிதன் அல்ல நான். நான் என்னும் அகந்தையை சற்று அதிகமாகக் கொண்டவன் நான். ஆனால் எல்லாம் “காடு” வாசிப்பிற்கு முன்னால். ஒரு புத்தகம் எவ்வளவு ஆழமாக, உக்கிரமாக, மூர்க்கமாக, காதலாக, பெரும் துயராக என்னுள் இப்படியொரு அதிசயத்தை செய்துகொண்டிருப்பதை என்னால் அணு அணுவாக உணர முடிகிறது. இலக்கிய வாசிப்பிற்கு என்னை முதல் முறையாகப் பழக்கப்படுத்தியதற்குக் கோடி நன்றிகள்.

கடந்த ஒருவாரமாக என் மனதில் ஏற்பட்ட திகைப்புகளை வார்த்தைகளில் சொல்லிப் புரிவது கடினம். அதற்கு என் விரல்களில் ஜெயமோகனின் பேனா இருக்க வேண்டும். காடு புத்தகத்தின் கடைசிப் பக்கங்களைப் புரட்டுகையில் என்னுள் ஏற்பட்ட மாற்றமானது இனி என் வாழ்வில் ஒருபோதும் கிடைக்காது. என் படுக்கையறைக் கதவுகள் அடைத்து நான் கதறி அழுத அத்தனை கண்ணீர் துளிகளுக்கும் நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள். “காடு” என்னுள் பெரும் துயராக ஒட்டிக் கொண்டுள்ளது. இயல்பில் வலுவான நெஞ்சம் படைத்தவன் என வெளிக்காட்டிகொள்ளும் என்னை “காடு” உடைத்தே விட்டது. இலக்கிய வாசிப்பைத் தொடங்கியுள்ளேன். தொடர்ந்து தாங்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முடிந்தால் ஒருமுறை உங்களை சந்திக்க நேரிலே வருகிறேன்.

திருநெல்வேலியிலிருந்து

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

சில தருணங்களில் வாசிக்கப்பட்டு சொல்லப்படும் சொற்கள் எழுத்தாளனுக்கு மிக அண்மையவை ஆகிவிடுகின்றன . அத்தகைய ஒரு கடிதம் இது.

காடு ஒரு கனவு. இளமைக்கனவு. இளமை என்பது உயிரின் உச்சகட்டம் நிகழும் காலகட்டம். ஆகவே அது உயிரின் கனவு. பூத்தகாடு என்பது எப்போதும் என் மனதில் அதற்கான தருணம்

ஆனால் நான் அவநம்பிக்கைகள் கொண்டவன். அந்த ஆழத்தில் இருந்து இலட்சியவாதத்தின் கனவால் மீண்டு வருபவன். இன்னும் ஆழமான ஒரு தேடலின் ஏக்கம் கொண்டவன்.

விஷ்ணுபுரத்தில், பின்தொடரும் நிழலின் குரலில், கொற்றவையில் அந்த நான்களை நீங்கள் அறிமுகம்செய்துகொள்ளக்கூடும்

சந்திப்போம்

ஜெ

ஜெயமோகன் அவர்களுக்கு,

இப்போதுதான் கொற்றவையை முடித்துவிட்டு எழுதுகிறேன்.

தமிழில் நான் பத்தாண்டுக்காலமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் விஷ்ணுபுரம் , காடு உள்ளிட்ட நாவல்களை வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தீவிரமாக உடலிலே அறிந்ததில்லை. என் கைவிரல்கள் எல்லாம் விரைத்து செத்துவிடுவேனோ என்ற பயம் வந்தது. எந்த இடம் என்று நீங்களே ஊகிக்க முடியும். நல்லம்மை சன்னதம் கொண்டு வரும் இடம்

நன்றி ஜெயமோகன்

எம்.சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்,

நன்றி. அதை உணரமுடிகிறது

ஜெ

முந்தைய கட்டுரைதீராக்குழந்தை
அடுத்த கட்டுரைவன்முறையும் அகிம்சையும்