இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாகத் தன்னைத் தானாகவே வளர்த்துக் கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜகுரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாக வைத்துக்கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லாரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும் போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.

“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும். நாடக மேடையின் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்.” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜகுரு செய்த ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக் கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின. என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கிவிட்டன. வெறும் கல்லூரிப்பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை. தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டிப் பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள். ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழின் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை!

தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப் போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஸ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.

இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காது கொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது. ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர். மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்குப் பாடங்களை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன். வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டில் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாகக் கவனிப்பதில்லை என்பதால் பேராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர். இந்தியப் பல்கலைக் கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாள்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.

இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார். ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது. என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

துறவிக் கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது. என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளைத் தொடர்ந்து பொழிந்தபடி இருந்தார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்ல நினைத்திருந்தேன். அந்த நாட்களில் பல்கலைகழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக் கொண்டிருந்தேன். பெரியமேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கி விடுவேன். அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டு கொண்டே இருந்தார். என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்ட வண்ணம் இருந்தது. அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.

ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது. என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. கேள்வித் தாளை ஒருமுறை பார்த்தேன். எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன. ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது. மூளையில் எதுவும் தோன்றவில்லை. மேசை மீது கிடந்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்துத் தூங்கத் தொடங்கிவிட்டேன்.

மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார். எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவர் என்னைப் புரிந்து கொண்டார். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார். ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன் நான்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இரு ஜோடி துணிமணிகளை மட்டும் வைத்துக் கொண்டு நான் வைத்துக் கொண்டிருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன். என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும் கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். நேர்முகத்தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு. சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார். அவருடன் வேறு வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

நேர்முகத்தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர் வெளியே வந்து என்னை வாழ்த்தினார். நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லாருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்று சொன்னார். யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார் அவர். அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டன. இதனால் ஹானர்ஸ் இளங்கலைப் பிரிவில் பல்கலைக்கழக விருது எனக்குத் தரப்பட்டது. இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலைப்பட்டப் படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்து கொள்ள முடியும்.

என் எதிர்காலத்திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார். எந்த நோக்கத்துக்காகத் தத்துவத்தைப் பாடமாக எடுத்துப் படித்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன். அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே அவர் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார். கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார். “கடவுள் எல்லாருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார். சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லாரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும். எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு. இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே. பிளேட்டோ, சங்கரர், கான்ட், ஹெகல் என எந்தத் தத்துவவாதிகளின் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.

“ஒரு தத்துவஞானியின் கையில் தருக்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும். ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் குறிப்பாக இந்திய பக்திப் பாடல்களின் உருக்கத்தால் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக்கொள்ளக் கூடாது” என்றும் எச்சரித்தார். இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்றும் எனக்கு முழுக்க முழுக்கத் தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்றும் சொன்னார்.

என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார். அவர்காலில் விழுந்து வணங்கினேன். ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார். அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.

கன்னியாகுமரிக்குச் சென்று மூன்று நாட்களில் திரும்பி வரும்படி டாக்டர். மெஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார். இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன். திரும்பி வரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன். என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே என்னிடம் இருந்தன. கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடும் இருந்தது.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை நோக்கித் தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது. அப்பயணத்தின் போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன. எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. என் பயணத்தில் நான் தங்கிய சில இடங்கள் கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிபுரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்தா தீர்த்தபாதர் அவர்களின் வாழும் ஆசிரமம் ஆகியவை ஆகும்.

செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன். அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது. மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது. அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன். பல கோயில்களுக்குச் சென்றேன். அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றைச் சேகரித்தேன். அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் சுவடியில் தீட்டிக் கொண்டேன்.

முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது. வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன். சிறிய கோயிலாக இருந்தாலும் சரி, பெரியகோயிலாக இருந்தாலும்சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன். வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன். மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை. ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்று உபசரித்தார்கள். இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை ஆகும். அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுள்களின் சக்தி தொடர்பான நம்பிக்கை அவர்களுக்கும் இருந்தது.

அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது. அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புதுமனிதனை நான் சந்தித்தேன். ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உச்சரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள். அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுத்துண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.

[குரு நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்புகளில் இருந்து. மலையாளத் தலைப்பு இறங்ஙிப்போக்கு. ஆங்கிலம் வழி தமிழாக்கம் பாவண்ணன்]


நித்ய சைதன்ய ய்தி பழைய படங்கள்Jul 16, 2012

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jul 16, 2012

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68