ஆபிதீன் தமிழின் முக்கியமான அங்கதக்கதைகள் சிலவற்றை எழுதியவர். துபாயில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. நிகழ்ச்சி பற்றியும் அந்த நாள் பற்றியும் எழுதியிருக்கிறார். அதன்பின் வெளியே நிகழ்ந்த ஒரு சிறிய அவமதிப்பைப்பற்றியும்.
பெயர்கூடச் சொல்லாமல் வந்து தழுவிக்கொண்ட ஆபிதீனைச் சந்தித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. சிரிக்கும் கண்கள். எல்லா சொற்களிலும் நையாண்டி. அவருக்கு வந்த மனவருத்தம் வருத்தமளித்தது
பொதுவாக அன்னியவெறுப்பு என்பது ஓர் உலகளாவிய விஷயம். அடிப்படைப்பழங்குடிமனநிலை அது. அதைவெல்வதற்கு வலுவான பண்பாட்டுப்பயிற்சி தேவையாகிறது.
சென்னை ஸ்பென்சர் பிளாசா அருகே பைக்கில் சென்ற இருவர் ஒரு கறுப்பின மாணவியைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் செல்வதை நான் ஒருமுறை கண்டிருக்கிறேன். வெள்ளைத்தோலுள்ள ஒருவர் கன்யாகுமரியிலோ அருகிலோ தனியாக மாட்டினால் அடிமுதல் அவமதிப்பு வரை எல்லாமே நடக்கும்.
சமீபகாலமாக கல்குவாரிக்கு வேலைசெய்ய வந்த பிகாரிகளைக் குமரிமாவட்டத்தில் எவர் வேண்டுமானாலும் என்னவேண்டுமென்றாலும் செய்யலாமென்று ஆகியிருக்கிறது.
இன்று தமிழகத்தின் அன்னியரை வெறுக்கும் , அவமதிக்கும் பேச்சுகளைப் பேசுவது முற்போக்கானது என்றே ஆகிவிட்டிருக்கிறது.
இதைவிட அவமதிப்புகளைக் காசை அள்ளி வீசாத அன்னியர் கேரளத்தில் சந்திக்க நேரிடும். அன்னியர்களுக்குக் கேரளமும் தமிழகமும் மிக அபாயகரமான இடங்கள்.
இதைப்போன்ற நிகழ்ச்சிகள் நம்மை நாமே கூர்ந்து பார்ப்பதற்கான தருணங்கள் என்றே நினைக்கிறேன்