முடிவின்மையின் விளிம்பில்

உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவாகரத்தாகித் தனியாக வாழ்கிறார். அமெரிக்காவில் ஃபுளோரிடாவில். ஊர் பெயர் வேண்டாமே என்றார். நல்ல முதலீடு இருப்பதனால் தன் பண்ணை வீட்டில் மீன்பிடித்தும், பன்றி வளர்த்தும், கவிதை எழுதியும், மின்னரட்டை அடித்தும் வாழ்கிறார். கவிதைகள் தொகுக்கப்படவில்லை. ஆனால் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது ஃபிரெடி ஒரு நாவலை எழுதி முடித்திருந்தார்.

ஃபிரெடிக்கு முழுத்திருப்தி வராத அந்நாவலின் பிரதி, ஃபிரெடியின் சொற்களில், மனநோயாளியான மனைவிபோல அவரைத் தொந்தரவு செய்தது. மேற்கே ஒரு நுாலைப் பிரசுரிப்பதென்பது எளியவிஷயமல்ல. பிரசுரத்திற்காக உழைப்பதற்கான மனநிலையும் ஃபிரெடிக்கு இல்லை. நாவலை இணையத்தில் பிரசுரித்தாலென்ன என்று என்னிடம் கேட்டார். நல்ல விஷயம் தான் என நான் ஊக்கினேன். பரவலாக கவனிப்பு பெற்றதென்றால் பிறகு அச்சிலும் வரக்கூடுமே.

தமிழில் நான் இரு பெரும் நாவல்களை எழுதியிருக்கிறேன் என்பது ஃபிரெடியை வியப்பிலாழ்த்தியது. ஆனால் வாழ்க்கைச் செலவுக்கு குமாஸ்தா வேலை செய்கிறேன் என்பதைக் கேட்டு அவர் குழம்பிப்போனார். என் பெரிய நாவலான விஷ்ணுபுரம் பெளராணிக சாயல் கொண்டது என்றபோது உற்சாகம் கொண்டார். அவரது நாவலும் ஒருவகைப் புராணப் பின்ணனி கொண்டது தான். நாவலை அனுப்பவா, படித்துக் கருத்து சொல்ல முடியுமா என்று ஃபிரெடி கேட்டார். படித்துவிட்டு அந்நாவல் முழுமை பெற்றிருக்கிறதா என்று நான் கூறவேண்டும் என்றார். நாவலை ஒரு போதும் முடிக்க முடியாது எங்காவது நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்றேன். இது அதல்ல, அந்நாவலின் எழுதப்படாத ஒரு நுனி எனக்குள் எஞ்சுகிறது என்றுபடுகிறது என்றார் ஃபிரெடி.

ஃபிரெடியின் நாவல் என்னுடைய கணிப்பொறியில் நிரம்பியதும் எனக்கு ஒருவிதமான சுமை அனுபவமாகியது. என் கணிப்பொறி எதைச் செய்யும் முன்பும் அந்நாவலைச் சென்று தொட்டு ஒரு நொடி தயங்கியது. மேலும் தள்ளிப்போட முடியாதபடியானதும் நான் நாவலைப் படிக்கத் தொடங்கினேன்

கதை புராதன ரோமாபுரியைப் பற்றியது. கதாநாயகி கிளாரின்டா பெர்க்ஸன் புராதன மதங்களைப் பற்றிய தன் முனைவர்பட்ட ஆய்வுக்காக ரோம் நகருக்குச் செல்கிறாள். அங்கு அவள் ஒரு பழம்பொருள் விற்பனையாளனிடமிருந்து பசுக்கன்றின் தோலில் எழுதப்பட்ட ஒரு புராதன நூலை வாங்குகிறாள். மறைந்து போன ஒரு ‘அபெ ‘யில் காவலனாக இருந்த ஒரு கிழவரால் தன் பேத்திக்குப் பரிசாக அளிக்கப்பட்டு, அப்பேத்தியின் இறுதிக்கால வறுமையில் விற்பனைக்கு வந்த நூல் அது. அது உண்மையில் ஒரு நூல் அல்ல. கடிதங்களின் தொகுப்பு. பழங்கால ரோமில் கடவுளுக்குக் கடிதங்கள் எழுதும் ஒரு மதச்சடங்கு இருந்தது. அக்கடிதங்களைப் பலவகையான ரகசிய அடையாளங்கள் பொறித்து பூமியில் புதைத்துவிடும் பழக்கம் இருந்தது. அப்படிப் புதைக்கப்பட்ட கடிதத்தொகை அது. பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு அது எவ்வண்ணமோ தோண்டியெடுக்கப்பட்டது. அரிய கலைப்பொருளாகவும் ரகசியங்கள் நிரம்பிய நூலாகவும் கருதப்பட்டு அபெயில் பாதுகாக்கப்பட்டது. அபெ சிதிலமானபோது பெரும்பாலான பொருட்கள் மெல்ல மெல்ல மறைந்தன. சில பொருட்கள் அழிந்தன. இது மட்டும் காவல்காரக் கிழவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் யாரோ இந்தப் புத்தகத்திற்கு ஒரு சிறு முன் குறிப்பு எழுதியிருந்தார்கள். உயர்ந்த தரம் கொண்ட மொராக்கோ தோலில் அட்டை போட்டு அழகிய புத்தகமாகவும் மாற்றியிருந்தார்கள். அக்குறிப்பில் அந்நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருந்தன.

ரோம் நிறுவப்பட்டு ஏறத்தாழ 300 வருடம் கழித்து நடந்த சம்பவம் அது. அன்றைய ரோம் பட்ரீஷியர்கள் என்ற வம்சத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்களே ரோமில் முதலில் குடியேறியவர்கள் என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரோமின் இயல்பான சுதந்திரக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் மேலும் முன்னூறு வருடம் சென்ற பிறகு பட்ரீஷியன் என்ற பெயர் வம்ச அடையாளத்தை இழந்து எல்லா சுதந்திரக் குடிமகன்களையும் குறிப்பதாக மாறியது. பட்ரீஷியன் வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான ஃபேபியன் குலத்தைச் சேர்ந்த ‘அதீனா ‘ என்ற பெண்ணால்தான் அந்த பிரார்த்தனைக் கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.

கிளாரின்டா அந்த புராதன இலத்தீன் மொழிக் கடிதங்களைக் கடுமையாக உழைத்து வாசித்துப் பார்க்கிறாள். அவள் எண்ணியது போல அது ஒரு வம்ச வரலாறோ, மதநூலோ அல்ல. அது ஒரு பாலியல் நூல். அதீனா அவளுடைய பிரியத்திற்குரிய கடவுளான ரெக்ஸின் அருளைக்கோரி, தன்னுடைய அந்தரங்க காம இச்சைகளை விரிவாக வெளிப்படுத்தி எழுதியவை அக்கடிதங்கள்.

அன்று ரோமின் எந்தக் குலமும் தன் விருப்பப்படி போரில் இறங்க அனுமதி இருந்தது. செனட்டின் அனுமதி பெறவேண்டும் என்று மட்டும் ஒரு வற்புறுத்தப்படாத வழக்கம் இருந்தது. தோற்கடிக்கப்பட்டவர்களைக் கொள்ளையடித்துப் பெறும் செல்வம் முழுக்க வென்ற இனத்திற்குச் சொந்தம். ஒரு சிறு வரியை செனட்டிற்குக் கட்டிவிடவேண்டும் அவ்வளவுதான். ஆனால் ரோமின் குலங்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக்கூடாது. ஆயுதம் ஏந்த உரிமை இல்லாதவர்களான பிளீபியன்களை பட்ரீஷியர்கள் தாக்கக்கூடாது என்றும் விதி இருந்தாலும் அது மூடிய கண்களால்தான் பார்க்கப்பட்டது. ரோமின் குலங்களின் முக்கியமான தொழிலே பக்கத்தில் உள்ள வேறு நகரங்களையும் கிராமக்கூட்டங்களையும் தாக்கிச் சூறையாடுவதுதான். குறிப்பாக ஃபேபியன் குலம் மிகுந்த வீரியமுள்ள வீரர்கள் அடங்கியது. மிகக் கறாரான கட்டுப்பாடு கொண்டது. ஆகவே அவர்கள் தொடர்ந்து கொள்ளையடிப்பவர்களாக இருந்தார்கள்.

ரோமின் தெற்கில் இருந்த இன்னொரு பாகன் நகரமான ‘வெயி ‘யைக் கொள்ளையடிக்கும் பொருட்டு 306 ஃபேபியன் குலவீரர்கள் சென்றனர். குலத்திலிருந்த அத்தனை ஆண்களும் சென்றார்கள்; காரணம் போரில் பங்கு பெறாதவர்களுக்குக் கொள்ளையில் பங்கு கிடையாது. ஆனால் இவர்கள் கிளம்பி வரும் விஷயம் ஏற்கனவே நகரின் தலைவனை எட்டிவிட்டிருந்தது. நேரடிப் போரில் ஃபேபியன்களை வெல்வது சாத்தியமேயில்லை. எனவே வெயி ஒரு தந்திரத்தை மேற்கொண்டது. வெயியின் பெரிய கோட்டை உருண்டைக் கற்களைக் களிமண்ணால் இணைத்துக் கட்டப்பட்டது. அதன் அடிப்பகுதியைத் தோண்டி உடைத்து வைத்தார்கள். ஃபேபியன்கள் கோட்டை வாசலை மோதி உடைக்க முயன்றபோது கோட்டையை உள்ளிருந்து உந்தி இடித்து அவர்கள்மீது போட்டார்கள். ஒரு ஃபேபியன் கூட உயிர்தப்பவில்லை.

அன்று உரிமைகள் கடமைகள் அனைத்துமே குலப்பிறப்பின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டன. எனவே குலங்களுக்கு இடையே இரத்த உறவு என்பது அனைத்து வகையிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஃபேபியன் குலத்தில் எஞ்சியது இரண்டு கால்களும் சூம்பிப்போன டைட்டஸ் என்ற பதினாறுவயதுப் பையன் மட்டுமே. அன்றைய நடைமுறைப்படி ஃபேபியன் குலப் பெண்கள் முழுக்க தற்கொலை செய்து கொள்ளவேண்டும். ஆனால் குலத்தின் மூத்தவளான ஒரு பெண்மணி அதைத் தடுத்தாள். ஃபேபியன் குலத்தின் கடவுள்களை வேறு குலங்கள் எதுவுமே வணங்குவதில்லை. ஃபேபியன் குலம் மொத்தமாக அழியுமென்றால் அவற்றை வழிபடவும், அவற்றின் கோபங்களை பலிதந்து சாந்தி செய்யவும், யாருமே இருக்கமாட்டார்கள் என்றாள் அவள்.

ஒரு இறுதி வழி கண்டடையப்பட்டது. எஞ்சிய ஒரே ஆண்மகனான டைட்டஸின் விந்துவிலிருந்து ஃபேபியன் குலத்தை மீண்டும் முளைத்தெழ வைப்பதுதான் அது. முதலில் சிலர் கடுமையாக எதிர்த்தாலும் எவருமே மரணமடையத் தயாராக இல்லாததனால் அவ்வழியை அனைவரும் ஏற்க வேண்டியிருந்தது. அதிகமாக எதிர்த்தவர்கள் இளவயதுப் பெண்கள். காரணம் அவர்களில் பலர் உறவுமுறைப்படி டைட்டஸின் சகோதரிகள். அதனால் டைட்டசுக்குத் தாய் உறவுமுறை உடைய முதிர்ந்த பெண்களுக்கு அதிக மனத்தொந்தரவு இருக்கவில்லை.

ஃபேபியன் குலத்தில் இருந்த நானூற்று எண்பது பெண்களில் அதீனாவும் ஒருத்தி. அவளுடைய கடிதங்கள் டைட்டஸில் இருந்து ஃபேபியன் குலம் பிறந்து உருவான காலகட்டத்தை சித்தரிப்பவை. ஃபிரெடியின் கற்பனை முழுச் சுதந்திரம் பெறுவது இங்குதான். அதீனாவின் கடிதங்களை கிளாரின்டா வாசிக்கிறாள். இரு காலகட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களின் அக ஆழத்திற்குப் பயணம் செய்ய இந்தச் சந்தப்பத்தை ஃபிரெடி பயன்படுத்திக் கொள்கிறார்.

கிளாரின்டா மிகமிகத் தனிமையான பெண். காரணம் அவள் அழகில்லாதவள். திக்குவாய் வேறு. எவரிடமும் பேசிப் பழகி அறியாதவளாக, புத்தகப் புழுவாக வளர்ந்தாள். இளமையில் பகற்கனவு காண்பவளாகவும், தனக்குத்தானே வாழ்பவளாகவும் ஆனாள். அவள் வரலாற்றாய்வைத் தேர்ந்தெடுத்ததே கூட அவளுக்கு இடமில்லாத சமகால வாழ்விடமிருந்து தப்பி இறந்த காலத்தில் புதைந்து கொள்வதற்காகவே. அதீனாவின் கடிதங்கள் கிளாரின்டாவின் மனதை ஊடுருவி அவளைக் கொந்தளிக்க வைக்கின்றன. அக்கடிதங்களை அவள் மனப்பிறழ்வு கொண்டவளைப் போல மீண்டும் மீண்டும் வாசிக்கிறாள். அக்கடிதங்களின் வழியாக விரிந்து வந்த உலகத்திற்குள் மானசீகமாக கிளாரின்டாவும் நுழைந்து விட்டிருந்தாள். ஃபிரெடி இப்பகுதியை அபாரமான உரைநடையில் மிகுந்த தீவிரத்துடன் எழுதியிருந்தார். காதல், தாம்பத்தியம், உறவுகள் முதலிய எல்லா அணிகளும் உடைகளும் கழன்று விழ காமம் முழுநிர்வாணத்துடன் வெளிப்படும் தருணம் அது. பெண்கள் எல்லாக் கட்டுப்பாடுகளையும் உதறுகிறார்கள் ‘நானூற்று எண்பது கொதிக்கும் கருப்பைகள் …. ‘ என்று அதீனா குறிப்பிடுகிறாள். பசி கொண்ட மிருகக் கூட்டங்கள் நடுவே ஒரே ஒரு சிறு இரை. அதைப் பார்க்கும்போது பசி பேருருவம் கொண்டு வளர்கிறது. எரிய எரியப் பெருகும் காட்டுத்தீயாகிறது.

தளர்வே இல்லாத விதிமுறைகளை உருவாக்கி அவற்றைக் கடுமையாக அமல்படுத்தும் பொறுப்பைக் குலத்தின் மூத்த பெண்கள் எடுத்துக் கொண்டார்கள். முதலில் டைட்டஸ் சிறையிலடைக்கப்பட்டான். உயர்ந்தரக உணவுகளும் அவசியமான உடற்பயிற்சியும் அளித்து அவனை ஆரோக்கியமாகப் பேண ஒரு குழு அமைக்கப்பட்டது. முறைவைத்து பெண்கள் அவனுடன் அந்தச் சிறையறையில் இரவை கழித்தார்கள். ஒரு பெண்ணுக்கு ஒன்றரை வருடத்தில் ஒருமுறை ஒரே ஒரு இரவு மட்டுமே கிடைத்தது. இதற்காகவே பெண்கள் பகற்கனவு காண்பவர்களானார்கள். தங்களுக்குள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். டைட்டஸின் உடல் அவர்கள் மனதைத் தாபம் கொண்ட பேய் என பீடித்தது. அவன் வாழ்ந்த சிறைச் சுவர்களில் ஓட்டை போட்டு அவனையும் அவனுடைய போகத்தையும் வேடிக்கை பார்த்தார்கள். பெண்களின் காமவேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அந்தச் செயல் அனுமதிக்கப்பட்டது. பிறகு அறைக்குப் பதிலாக திறந்த உள்முற்றம் அதற்கான இடமாயிற்று. முற்றத்தைச் சுற்றிக் குலத்தின் பெண்கள் அனைவரும் கூடி நின்று பார்ப்பது அனுமதிக்கப்பட்டது. பின்பு அது ஓர் உரிமையாயிற்று. மெல்ல அது ஒரு சடங்குவடிவை அடைந்தது. இறுதியில் உடலுறவு ஒரு நிகழ்கலையின் தளத்தை அடைந்தது. அதற்குரிய அசைவுகளும், அதற்கு மட்டுமான இசையும், அதற்கு வசதியான நேரமும் வகுக்கப்பட்டன. குலத்தின் அனைத்துப் பெண்களும் எல்லா நாட்களிலும் அந்தக் கலையைப் பயின்றார்கள். அது மிகப்புனிதமானதும், இறையருளை அளிப்பதுமான ஒரு அனுஷ்டானம் என்ற நம்பிக்கை பிறந்து வேரூன்றியது. அப்புனிதநிகழ்வைக் காண ஃபேபியன் குலத்தின் கடவுள்கள் சூட்சும வடிவில் வருவதாக பூசாரிகளாக மூத்த பெண்கள் கூறினார்கள். அச்சடங்கையும் கடவுள்களையும் தொடர்புபடுத்திப் புராணக் கதைகள் பல உருவாயின. அக்கடவுள்களையும் அச்சடங்கையும் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. அவை அச்சடங்கின் ஒரு பகுதியாக அதற்குரிய இசைக்குழுவினரால் பாடப்பட்டன.

டைட்டஸ் மிகச் சீக்கிரத்திலேயே மனநிலை பிறழ்ந்து வெறுமொரு காமமிருகமாக மாறிவிட்டிருந்தான். அவனால் பெண்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. நாளடைவில் அவனுடைய பேச்சுத்திறனும் கேட்கும் திறனும் இல்லாமலாயின. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அந்தச் சடங்கின் அசைவுகளை அவன் உடல் மிகுந்த நளினத்துடன் கச்சிதமாக நிகழ்த்தியது.

அடுத்த தலைமுறையின் இளைஞர்கள் வயதுக்கு வரும் வரை இந்த ஆசாரம் இப்படியே நீடித்தது. குலத்திற்கு வெளியே இதுபற்றிய தகவல் எதுவும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. டைட்டஸ் தன் நாற்பதாவது வயதில் மரணமடைந்தார். அப்போது வளர்ந்துவந்த புதிய தலைமுறை இச்சடங்கை வெறுத்தது. ஆகவே சடங்கு மெதுவாக மாற்றமடைந்தது. அனைவரும் பங்கு பெறுவதற்குப் பதிலாகத் தேர்வு செய்யப்பட்ட சிலர் மட்டும் பங்குபெறும் ரகசியச் சடங்காக இது மாறியது. பிறகு இச்சடங்கை நிகழ்த்த மூன்று குடும்பங்கள் நியமிக்கப்பட்டன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக இதைச் செய்ய வேண்டுமென வகுக்கப்பட்டது. இச்சடங்கும் வசந்த காலத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நிகழ்த்தப்படுவதாக ஆயிற்று. அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஃபேபியன் குலத்தின் பொதுவான காமஉபகரணங்களாக மாறினார்கள். அவர்களுக்குச் சாதாரணமாக குலஇழிவு கற்பிக்கப்பட்டாலும் வசந்தகாலத்தில் இச்சடங்குகள் நிகழும் நாட்களில் மட்டும் அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதிக் குலத்தைச் சேர்ந்த அனைவரும் வணங்கினார்கள். பிறகு சடங்கில் உடலுறவுக்குப் பதில் குறியீட்டு ரீதியான அசைவு மட்டும் எஞ்சியது.

மேலும் சில தலைமுறை கடந்ததும் இச்சடங்கு முற்றிலும் மறைந்தது. அதற்குள் டைட்டஸ் கடவுளாக மாறிவிட்டிருந்தார். வாழ்நாள் முழுக்க நிர்வாணமாக இருந்த டைட்டஸ் சிலையிலும் அவ்வாறே காணப்பட்டார். விளக்கமுடியாத சோகம் நிரம்பிய கண்களுடன் அச்சிலை தலை குனிந்து நின்றது. திருமணச் சடங்குகளில் டைட்டசுக்கு சாந்தியளிக்கும் பொருட்டு பலி தரும் வழக்கம் உருவாயிற்று. பழைய சடங்கின் பாடல்கள் அப்போது பாடப்பட்டன. பலவிதமாக உருவாறி வளர்ச்சியடைந்து விட்டிருந்த அச்சடங்கின் இசை வசந்தகாலம் மற்றும் காதலின் இசையாக அத்தருணங்களில் வாசிக்கப்பட்டது. திருமண விருந்தின் நடனங்களில் பல அசைவுகள் அச்சடங்கின் அசைவுகளில் இருந்து உருவானவையாக இருந்தன.

ஃபிரெடியின் நாவலில் அதீனா ஃபேபியன் குலத்தின் கட்டற்ற காம விளையாட்டுக்களை மிக நுட்பமாகவும் மிக அப்பட்டமாகவும் சொல்கிறாள். எல்லாவிதமான எல்லை மீறல்களும் அவற்றில் உள்ளன. நேரடியான காமம் சாத்தியமில்லாமல் போகும்போது கற்பனை சிறகு விரிக்கிறது. மேலும் மேலும் உக்கிரமான நிகழ்வுகளை மானசீகமாக அடைகிறது. மனிதனின் காமம் மூளையில் இருக்கிறது என்று இத்தனை தீவிரமாகச் சொல்லும் பிறிதொரு இலக்கிய ஆக்கத்தை நான் படிக்க நேர்ந்ததில்லை.

நாவலின் இன்னொரு தளம் கிளாரின்டாவின் மாற்றம். அவள் முதலில் அந்நூலால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் தன் மனநிலை பிறழ்வைப் புரிந்து கொண்டு அதைக் கண்டு பயப்படுகிறாள். அதைத் தவிர்க்க முயல்கிறாள். ஆனால் மேலும் மேலும் தாகத்துடன் அதில் வந்து விழத்தான் முடிகிறது. அவள் மேலும் மேலும் உள்வயமானாவளாகி, பகற்கனவு காண்பவளாகி, நனவிற்கே மீள முடியாதவளாகிறாள். அவளுடைய காமம் சிதிலமடைகிறது. அவளால் ஆண்களை நெருங்கவே முடியவில்லை. ஓரினப் புணர்ச்சி குறித்த எண்ணங்கள் அவளைக் கிளர்ச்சியடைய வைத்தாலும் அவளால் பிற பெண்களின் தொடுகையைத் தாங்க முடியவில்லை. இறுதியில் அவளால் செய்ய முடிவதெல்லாம் புராதன உடையணிந்த ஏராளமான பெண்கள் பங்கு பெறும் கூட்டுப்புணர்ச்சி நிகழ்வுகளைக் கற்பனை செய்தபடி சுய இன்பம் அடைவது மட்டுமே. நாவல் இங்கே முடிந்தது.

‘எல்லை மீறுதல் என்பது இலக்கியத்தின் ஓர் அவசியத்தேவை. சரித்திர உண்மைகளின், சிந்தனை முறைகளின், ஒழுக்க நெறிகளின் எல்லைகள். இன்னும் சொல்லப்போனால் நாம் அறிந்த அனைத்தையும் இலக்கியம் தாண்டிச் சென்றாக வேண்டும். ஆகவே உங்கள் நாவலின் அத்துமீறல் என்னைக் கவர்ந்தது. இது ஒரு குறிப்பிட்ட வகையான பகற்கனவு மட்டுமே ‘ என்று நான் பிரெடிக்கு எழுதினேன்.

‘ஃபேபியன் குலம் ஒரு இளைஞனில் இருந்து மீண்டும் முளைத்தது ஓர் சரித்திரத் தகவல். எங்கல்ஸின் ‘குடும்பம் தனிச் சொத்து சமூகம் ‘ என்ற நூலில் கூட இதைப்பற்றிய குறிப்பு உள்ளது ‘ என்று ஃபிரெடி எழுதினார்.

‘சரித்திரத்தில் உண்மை என ஏதுமில்லை. தகவல் என்று கூட ஏதுமில்லை. தெரிவு என்பது மட்டுமே அங்கு இயங்குகிறது ‘ என்று நான் பதில் போட்டேன்.

‘என் நாவல் முடிவடையவில்லை என்று படுகிறது. நீங்கள் எப்படி இதை முடிப்பீர்கள் ? ‘ என்று ஃபிரெடி கேட்டார்.

‘நான் அந்த அபெயைப் பற்றி மேலும் விரிவாக சொல்வேன். கிறித்தவத் துறவியர் தனிமையில் வாழும் மடாலயத்தில் இப்படிப்பட்ட ஒரு நூல் ஏன், எப்படி அத்தனைகாலம் பாதுகாக்கப்பட்டது ? கிறிஸ்துவுக்காக ஆண்மையற்றவர்களாக மாறியவர்கள் அவர்கள். அவர்களில் யாராவது இதை எழுதியிருக்கலாம். அதற்கான வாய்ப்பை நான் நாவலில் தக்கவைத்துக் கொள்வேன். இந்நூலை அவர்கள் அபெயின் இருண்ட அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்நூலில் கொந்தளிப்பது அவர்கள் உடலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட காமமே ‘ என்று நான் எழுதினேன்.

‘கிளாரின்டா இந்நூலைப் படித்து அடையும் மாறுதலைப்பற்றித்தான் நான் கேட்டேன் ‘. ஃபிரெடி எழுதினார் ‘ஏனெனில் என் நாவலின் மையமே அதுதான் ‘ ‘கிளாரின்டாவுக்குத் தன் மனம் சிதறுவது நன்றாகத் தெரிகிறது. ஆனால் அந்நூலை  அவளால் ஒரு நாள் கூடப் புறக்கணிக்க முடியவில்லை. கடைசிப் பக்கத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. மிகப் பிற்காலத்தில் யாரோ எழுதிய எச்சரிக்கை வாசகம் அது ‘பிரியமுள்ள சகோதரா, தயவு செய்து இந்நூலைப் படிக்காதே. இது பைத்தியத்தை உருவாக்கும் மாயநூல். இதில் ஒரு பக்கத்தை வாசித்தவர் முழு நூலையும் படிக்காமலிருக்கமாட்டார். முழுநூலையும் படித்தவர் மீண்டும் சமநிலைக்குத் திரும்பிவர முடியாது. தலைமுறை தலைமுறையாகப் பைத்தியங்களை உருவாக்கி வரும் கொடூரமான நூல் இது ‘ அதற்குக் கீழே இன்னொரு வரி,வேறு ஒரு கையெழுத்தில் ‘இந்த எச்சரிக்கை வாசகம் முதற்பக்கத்தில் இருந்தது. இதைப் பிய்த்துக் கடைசிப் பக்கத்தில் ஒட்டியது நான் தான். என் பெயர் லுாசிஃபர் ‘ – இந்த வரியில் என் நாவலை முடிப்பேன். இதுதான் உரிய முடிவு. ஆனால் இதை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. நான் பூமியின் மறுபக்கத்தில் வாழ்பவன் ‘ என்று நான் பதில் போட்டேன்.

‘நன்றாகவே இருக்கிறது. நான் பைபிளை இதற்குள் கொண்டு வரக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். சரி,இந்த நூலை ஆண்தான் எழுதியிருக்கமுடியும் என்று எப்படிக் கூறுகிறீர்கள் ? ‘ என்று ஃபிரெடி கேட்டார்.

‘இது ஆணின் பகற்கனவின் எல்லைமீறல்தான். எல்லைகளை மீறிப் போகும் போது அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நாம் தயாராவதில்லை. காரணம் குற்றவுணர்வு அந்த உத்வேகத்தின் ருசியை இல்லாமலாக்கிவிடும். ஆகவே ஒரு ‘தவிர்க்க முடியாத ‘ சூழலை ஆண் மனம் கற்பனை செய்கிறது. அந்த எல்லை வரை தன்னைத் துரத்தும் பயங்கரப் பெண்களை அவன் உருவாக்கிக் கொள்கிறான். எல்லா ஆண்களுக்கும் அவர்கள் கனவுகளில் ரத்தம் குடிக்கும் மோகினிகளும், தாகமே அடங்காத பிடாரிகளும் உண்டு யோசித்துப்பாருங்கள், இந்த நாவலே கூட நாம் பரிமாறிக்கொள்ளும் பகற்கனவு மட்டும்தானே ? ‘

ஃபிரெடியின் பதில் ஒருவாரம் கழித்து வந்தது. அதுவே இறுதி மின்னஞ்சல். பிறகு எவ்விதமான தொடர்பும் இல்லை. என் மின்னஞ்சல்களுக்கு பதிலும் இல்லை. இந்நாவல் பிரசுரமானதாகவும் நான் கேள்விப்படவில்லை. ஃபிரெடி எழுதியிருந்தார், ‘அன்புள்ள ஜெ.எம், நான் ஒரு ஆண் என்று எதைவைத்து முடிவு செய்தாய் ? ‘

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2003 திண்ணை இணைய இதழ்

முந்தைய கட்டுரைஇலட்சியவாதம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா