ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அசுரவித்து என்னும் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம். அதன் மையக்கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் ‘அசுரவித்து’ என அழைக்கப்பட்டவர். அந்த பெரிய குடும்பம் செல்வத்தையும் அதிகாரத்தையும் இழந்து அழிந்துகொண்டிருந்தது. அதற்கான காரணங்கள் பல. நிலவுடைமைச்சமூகம் இல்லாமலாகிக்கொண்டிருந்தது முதல் குடும்பத்தின் தலைவர்களின் ஊதாரித்தனமும் நீதிமன்ற வழக்குகளும் என. ஆனால் எல்லாமே கோவிந்தன்குட்டி பிறந்தமையால் என்று குடும்பத்தினர் முடிவுகட்டுகின்றனர். குடும்பத்தை அழிப்பவன் என்னும் பொருளில் அசுரவித்து என்னும் வசைப்பெயர் அமைகிறது.
ஷத்ரிய குடிகளில் ஓர் அசுரனின் குருதித்தொடர்பு உருவானால் அதில் பிறக்கும் குழந்தை அக்குடியை அழிக்கும் என்பது ஒரு வைதிக நம்பிக்கை. கிருஷ்ணனின் குடியில் அசுரனின் ரத்தத்தால் பிறந்த சாம்பன் அக்குடி அழியக் காரணமானான் என்பது புராணத்துக்கான வைதீக விளக்கம். கோவிந்தகுட்டியின் வாழ்க்கையே அந்த பெயருக்கு எதிரான அவனுடைய எதிர்வினைதான். அது வீம்புக்காக தன்னை ஒரு பொறுக்கியாக ஆக்கிக்கொள்வதில் முடிகிறது. ஒரு கட்டத்தில் கோவிந்தன் குட்டி இஸ்லாமியராக மதம் மாறுவதில் நாவல் முடிகிறது.
அந்த மதமாற்றம் சரியா என்பதுதான் அம்மாவும் தோழிகளும் விவாதித்தது. பங்கஜவல்லி அத்தை சொன்னாள். “நம்ம வீட்டுக்குள்ள முளைச்ச அசுரவித்தை நாம பிடுங்கி பக்கத்து தோட்டத்திலே போடுறது மாதிரில்லாடீ அது?” என் அம்மா சொன்னார். “நமக்கு அசுரவித்து அவங்களுக்கு அமிர்தவித்தாக இருக்கலாமே? தோட்டத்திலே நாவல்மரம் நின்னா பிடுங்கி வீசுவோம். ஆற்றங்கரையிலே நிக்குற அந்த நாவல்மரம் ஆயிரம் லெட்சம் பக்ஷிகளுக்கு அமிர்தமாக்குமே?” ஆற்றங்கரையில் நின்றிருக்கும் அந்த மாபெரும் நாவல்மரத்தைப் பார்க்கையில் எல்லாம் நான் சொல்லிக்கொள்வேன். அமிர்த மரம்.
1992ல் எனக்கு ஜகன்மித்யை என்னும் கதைக்காக கதா சம்மான் என்னும் தேசியவிருது கிடைத்தது. அதே விருது மலையாளத்துக்காக எம்.டிக்கு அவருடைய கொச்சு கொச்சு பூகம்பங்கள் என்னும் கதைக்காக கிடைத்தது. இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா அவ்விருதை வழங்கினார். அதைப்பெறுவதற்காக டெல்லி ராஷ்டிரபதிபவன் சென்றிருந்தபோதுதான் நான் எம்.டியை நேரில் சந்தித்தேன். அன்று அம்மாவைப்பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது என் அம்மா உயிருடன் இல்லை.
கோவிந்தன்குட்டியின் வெவ்வேறு வடிவங்கள் என எம்.டியின் கதைமாந்தரைச் சொல்லமுடியும். மேலோட்டமான விமர்சகர்கள் அவருடைய கதைகள் பழைய நிலவுடைமைச்சமூகத்தின் அழிவின் சித்திரங்கள் என்பார்கள். அது எளிய வரையறை. அவருடைய கதைமாந்தர் அந்தக் காலகட்டத்தின் அடிப்படையான பிரச்சினைகள் இரண்டை எதிர்கொண்டவர்கள். ஒன்று, நிலவுடைமைச் சமூகம் அழிந்து இன்னொன்று உருவாகும் காலகட்டத்தில் தங்களை வரையறை செய்துகொள்ளுதல். இரண்டு, தங்கள் தந்தையரிடமிருந்து எதை பெற்றுக்கொள்வது என முடிவுசெய்தல். அவருடைய கதைமாந்தர்கள் பலர் அந்தப் போராட்டத்தில் உடைந்தழிந்தவர்கள். அந்த வீழ்ச்சியின் கசப்பு நிறைந்து தனித்து வாழ்ந்தவர்கள்.
எம்.டி.வாசுதேவன் நாயரின் தீவிரவாசகியாக இருந்தவர் என் அம்மா. என் அம்மாவும் எம்.டியின் ஒரு கதைமாந்தரைப்போலத்தான் அடையாளமின்மையின் கசப்பும், புறக்கணிப்பின் தனிமையுமாக வாழ்ந்தார். அக்கசப்பின் உச்சியில் அம்மா தற்கொலை செய்துகொண்டார். கோவிந்தன் குட்டி தப்பிச்சென்றது போன்ற ஒரு வழியை அம்மா கண்டடையவில்லை. அவர் பெண் என்பதனால் அவருக்கிருந்த வெளியேறும் வழி சாவு மட்டுமே. அம்மா அளவுக்கு எவர் எம்.டியை ஆழ்ந்து அறிந்திருக்கமுடியும்? என்றேனும் தன் மகன் எம்.டியை நேரில் சந்திப்பான் என எண்ணியிருந்திருப்பாரா? எம்.டியிடம் சொல்ல அவருக்கு ஏதேனும் இருந்ததா?
அன்று எம்.டி ஒரு தமிழ் எழுத்தாளராக என்னிடம் மிக மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்தார். இரண்டாம்நாள் என் தாய்மொழி மலையாளம் என்று தெரிந்ததும் இயல்பாக ‘டா’ போட்டு அவருடைய பையை எடுத்து காரில் வைக்கச் சொன்னார். எனக்கு கிடைத்த மாபெரும் ஏற்பாக அதை நான் கொண்டேன். “என் கதைகளை படித்திருக்கிறாயா?” என்று எம்.டி. கேட்டார். “அச்சிடப்பட்ட எல்லா வரிகளையும் படித்திருக்கிறேன்” என்று நான் சொன்னேன்.
கேரளமாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் வட்டத்தில் ஆனக்கல் பஞ்சாயத்திற்குள் வரும் கூடல்லூர் என்னும் சிற்றூரில் ஜூலை 15, 1933-ல் புன்னயூர்க்குளம் டி.நாராயணன் நாயருக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு அம்மாளு அம்மாவுக்கும் பிறந்த மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் மலையாள எழுத்தாளர்களின் முதன்மையான மூன்று நட்சத்திரங்களில் ஒருவர்.வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை இருவருக்கும் பின் மலையாளத்தில் மிக அதிகமாக வாசிக்கப்பட்டவர் அவரே. 1953-ல் தன் இருபதாம் வயதில் எழுதிய ‘ரக்தம் புரண்ட மண்தரிகள்’ (குருதி படிந்த மண்துகள்கள்) என்னும் முதல் சிறுகதை தொடங்கிய இலக்கியப் பயணம் எழுபதாண்டுகள் நீடித்தது.
1958ல் வெளிவந்த நாலுகெட்டு என்னும் நாவல் மலையாளத்தின் பெரும்படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிக்கொண்டே இருந்தார். எம்.டியின் நடை அகவய உரையாடல் போன்ற இயல்பான கவித்துவம் கொண்டது. தன் கதைமாந்தர்களின் அக ஓட்டத்தை நீண்ட தன்னுரையாடலாக எழுதிச்செல்வது அவருடைய பாணி. அவருடைய சொல்தேர்வு எளிமையானது, உரையாடல்கள் வள்ளுவநாடு எனப்படும் பகுதியின் வட்டாரவழக்கு கொண்டவை. ஆனால் மொத்தமாக ஒரு கற்பனாவாத அழகு அவருடைய கூறுமுறையில் உருவாகிக்கொண்டே இருக்கும். அது மூன்று தலைமுறைக்காலமாக மலையாள இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய ஒன்று.
எம்.டி.வாசுதேவன் நாயர் 1965ல் அவருடைய முறப்பெண்ணு என்னும் சிறுகதைக்கு திரைக்கதை வடிவத்தை எழுதிக்கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார். மலையாள திரையுலகின் முதன்மையான திரைக்கதையாசிரியர் அவரே. அவருடைய மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவை. மூன்று தலைமுறை நடிகர்கள் அவற்றின் வழியாக உருவாகி வந்திருக்கிறார்கள். மலையாள இடைநிலை திரைப்படமே எம்.டியால் உருவாக்கப்பட்டதுதான். அவரே இயக்கிய நிர்மால்யம் மலையாளத்தின் முதன்மையான கலைப்படங்களில் ஒன்று.
தன் சொந்தப்பணத்தாலும் நண்பர்கள் கொடையாலும் எம்.டி. உருவாக்கிய துஞ்சன் பறம்பு என்னும் பண்பாட்டு அமைப்பு மலையாள மொழியின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவைப் போற்றும் பேரியக்கமாக இன்று உள்ளது. முப்பதாண்டுக்காலம் மலையாள இதழான மாத்ருபூமியின் ஆசிரியராக இருந்த எம்.டி கண்டடைந்து வளர்த்த படைப்பாளிகளே அடுத்த மூன்று தலைமுறைக்காலம் மலையாள இலக்கியத்தை முன்னெடுத்தனர்.
ஒவ்வொரு வரியும் சுவாரசியமாக எழுதியவர் எம்.டி. ஈடுபட்ட எல்லா துறைகளிலும் வெற்றியை மட்டுமே அடைந்தவர். தன் காலகட்டத்தில் இணைசொல்ல இன்னொருவர் இல்லாதபடி செல்வாக்கைச் செலுத்தியவர். எவர் முன்னாலும் தலைவணங்கியவர் அல்ல. எந்த அதிகாரபீடமும் தன் முன் வணங்கவேண்டும் என எதிர்பார்த்த அபாரமான ‘ஆணவம்’ கொண்ட படைப்பாளி. அவ்வண்ணமே கேரளம் அவர் முன் பணிந்தும் இருந்தது. எம்.டியின் தொண்ணூறாவது பிறந்தநாளை கேரளமே அரசுவிழாவாகக் கொண்டாடியது. அந்த விழாவில் முதல்வர் செய்யும் ஆடம்பரச்செலவுகளை அவர் முன்னிலையிலேயே கண்டித்துப்பேசினார். அதுதான் மலையாள எழுத்தாளனின் நிமிர்வு.
எம்.டியைப் பற்றி நான் தமிழிலும் மலையாளத்திலும் நிறையவே எழுதியிருக்கிறேன். 2023ல் அவருடைய 90 ஆவது பிறந்தநாள் துஞ்சன் பறம்பில் கொண்டாடப்பட்டபோது நான் ஒரு பேச்சாளன். அன்று எம்.டி அவரை நான் முதலில் சந்தித்ததைப் பற்றி நினைவுகூர்ந்தார். அறையில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் கோவிந்தன்குட்டி பேச்சில் வந்தார். “என்னுடைய ஒரு தாய்மாமாதான் அவர்” என்று எம்.டி சொன்னார். “நல்ல மனிதர். அவரை வெறுத்தவர்களை அவர் வெறுத்தார். ஆனால் தான் கொண்ட அவ்வெறுப்பே தன்னுடைய விலங்கு என கண்டுகொண்டு அதை துறந்ததும் விடுதலையானார்”.
நான் என் அம்மாவைப்பற்றி அவரிடம் அப்போதும் சொன்னேன். எம்.டி பேசாமல் அமர்ந்திருந்தார். எம்.டி மிகப்பெரும்பாலான தருணங்களில் பேசாமல் அமர்ந்திருப்பார். அவருடைய மௌனம் புகழ்பெற்றது. அப்போது தோன்றியது, அம்மாவுக்கும் எம்.டியிடம் சொல்ல ஒன்றுமிருந்திருக்காது, அந்த மௌனம்தவிர. அது அத்தலைமுறையின் மௌனம். எம்.டி.அந்த மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி.
தினமணி நாளிதழ்