முப்பட்டைக் கண்ணாடியினூடாக-4

( 6 )

இரா.முருகன் அவருடைய அந்த உலகியல் தன்மையை எழுதிச் செல்லும்போக்கில் இரண்டு பேசுபொருட்கள் கூர்மை கொள்கின்றன. ஒன்று பாலியல் இன்னொன்று சமையல் அல்லது சாப்பாடு. முருகனின் பாலியல் சித்தரிப்புகள் தமிழில் இதுவரைக்கும் முன்வைக்கப்பட்ட பாலியல் சித்தரிப்புகள் அனைத்திலிருந்தும் தீவிரமான வேறுபாடொன்றைக் கொண்டிருக்கின்றன. பாலியலின் களிப்பு, உணர்ச்சிகரம், அழகியல் மூன்றுமே அவர் புனைவுலகில் இல்லை. இதற்குமுன் பாலியலை எழுதியவர்கள் அதை பெரும்பாலும் உணர்ச்சித்தீவிரத்துடனே எழுதியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் தி.ஜானகிராமன். அல்லது களிப்பும் துய்ப்புமென அதைச் சித்தரித்திருக்கிறார்கள், முன்னோடியான உதாரணமாகச் சொல்லத்தக்கவர் தஞ்சை பிரகாஷ். பாலியலை வெறும் புற உலக அனுபவமாக மட்டுமே பார்க்கும் முருகனின் புனைவுலகம் அவருடைய இயல்பான கேலியும் அங்கதமும் கலந்துகொள்ளவே ஒருவகையான அபத்த நாடகமாகவே அதை மாற்றுகிறது.  உலகியலில் அன்றாடத்தில் இருந்துகொண்டே  இருக்கும் சலிப்புக்கு மாற்றாக மனிதர்கள் செய்துகொள்ளும் விந்தையான ஒரு செயல்பாடாக, ஒருவகை கோணலாக மட்டுமே முருகனின் பாலியல் சித்தரிப்புகள் உள்ளன.

முன்பொருமுறை ஒரு பேட்டியில் அமெரிக்க இயக்குநர் ஃப்ரான்ஸிஸ் போர்டு கப்போலா ஒரு பாலியல் சித்தரிப்பை அதிலுள்ள பெண்ணை நீக்கிவிட்டு அல்லது ஆணை நீக்கிவிட்டு மட்டுமே சித்தரித்தால் அது வெடித்துச் சிரிக்கத்தக்க கோமாளித்தனமாக தோன்ற ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருந்தார். அதோடு இணைவது அமெரிக்க திரை இயக்குநரும் எழுத்தாளருமான  வூடி ஆலன் சொன்னது. ‘பாலியல் உறவென்பது நான் சிரிக்காமல் ஈடுபடும் ஒரே கேளிக்கை’. .

இரா.முருகன் எழுதும் பாலியல் சித்தரிப்புகள் எதுவும் எவ்வகையிலும் பாலியல் தூண்டலை அளிப்பதில்லை. அவை அவையில் ஒருவர் ஏப்பமோ குசுவோ வெளியிடுவது போன்ற ஒரு ஒவ்வாமையையும் சிரிப்பையும் மட்டுமே உருவாக்குகின்றன.  அவர் படைப்புலகம் முழுக்க நிறைந்திருக்கும் பாலியல் பெரும்பாலும் தமிழ் பொதுச்சொல்லாட்சியில் வக்கிரம் என்று சொல்லத்தக்கது. இயலபான அல்லது கவித்துவமான பாலியல் தருணம் ஒன்றையாவது இத்தனை பக்கங்களில் அவர் எழுதியிருக்கிறாரா என்று தொடர்ந்து புரட்டிப்பார்த்தேன். முருகனில் ஈடுபட்டு வாசிக்கும் நண்பர் ஒருவரிடம் அதைக்கேட்கவும் செய்தேன். அப்படியெதுவும் இல்லை என்பதே கிடைத்த பதிலாக இருந்தது.

தமிழில் உணவின் சுவை இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கிறது. லா.ச.ராமிருதத்தின் படைப்புகளில் சுவை என்பது ஒரு நுண்ணிய பகுதியாக வந்துகொண்டே இருக்கிறது. கி.ராஜநாராயணில்  சுவைச் சித்தரிப்பு உண்டு. தமிழில் அதன் உச்சம் என்பது நாஞ்சில் நாடன். உணவு ஒரு களியாட்டாக, இந்தப் பொருள்வயப் பிரபஞ்சத்துடனான ஓர் உறவாக ,மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் குறியீடாக, இன்னும் எவ்வளவோ வகையில் தமிழ்புனைவுலகில் வந்திருக்கிறது. முருகனின் புனைவுகளில் உணவு என்பது முற்றிலும் உலகியல் தன்மை கொண்டது. உலகியலுக்கு அப்பால் அதில் ஏற்றப்படும் எந்தக்கூறும் அற்றது. அது தின்பது மட்டுமே, சுவைப்பது மட்டுமே, நாக்கு மட்டுமே, அதற்கப்பால் ஏதுமில்லை. அந்த உலகியல் தன்மை எவ்வகையிலேனும் பிறிதொன்றாக ஆகிவிடக்கூடாதென்ற எச்சரிக்கை ஆசிரியருக்கு இருப்பது போன்றே தோன்றுவது. உணவுடன் ஒவ்வொருமுறையும் செரிமானத்தையும் மலங்கழிப்பதையும் கீழ்வாயு வெளியாவதையும் அவர் இணைத்துக்கொள்ளும் விதம் கவனிக்கத்தது.

முருகன், அவருடைய முன்னோர் சமையற்காரர்கள் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். பேட்டியில் ஆசிரியர் கூறும் வரிகளை பலவகையிலும் புனைவுகளை விளக்குவதற்கு பயன்படுத்துவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த ஒரு வரி எனக்குத் தோன்றுவதுண்டு. உணவின் மேல் தேர்ச்சியும் விலக்கமும் ஒருங்கே சமையற்காரர்களிடம் இருக்கும். விருந்துகளை சுவைத்துண்ணும் சமையற்காரர்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் உணவின் மீது ஒரு விலக்கம், கூடவே தொழில் ரீதியான ஈடுபாடு இரண்டும் அவர்களிடம் திகழ்கிறது.  முருகனின் இந்த கதைகளில் உள்ளது சமையற்காரரின் பார்வை என்று தோன்றுகிறது. ஜடப்பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருட்களை இணைத்து உருவாக்கும் ஒரு புதிய சாத்தியம் மட்டும் தான் அந்த சுவை. அதில் கேளிக்கையோ அதற்கப்பால்  அனுபவ விரிவோ எதுவுமில்லை. அது பொருள் மட்டும்தான். அதில் உள்ளம் இல்லை. உள்ளம் கடந்த ஏதுமில்லை

முருகன் சித்தரித்துச்செல்லும் காமமும் உணவும் எவ்வகையிலேனும் ஒன்றையொன்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றனவா. தமிழில் உணவுச்சுவை காமத்துடனும் காமச்சுவை உணவுடனும் இணைந்துகொள்வதென்பது பல புனைவுலகங்களில் காணக்கிடைப்பது, குறிப்பாக லா.சா.ராமிருதத்தில்.

தமிழில் இசையைப்பற்றிய எல்லா உரையாடல்களிலும் உணவு கலந்து கொள்வதென்பது ஒரு மரபாகவே இசை விமர்சனத்திலும் உண்டு உணவைப் பிறிதொன்றுடன் இணைத்து அதை பெரிதுபடுத்திக்கொள்வதென்பது மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று ஒரு சுவையை இசையுடனோ இலக்கியத்துடனோ இணைத்து அதை நாக்கிலிருந்து சித்தத்திற்கு விரித்துக்கொள்ளவேண்டிய தேவை மனிதனுக்கு உண்டு. ஆனால் முருகனுடைய கதைகளில் எதிலும் பாலியல் உணவுடனோ உணவு பாலியலுடனோ இணைக்கப்படவில்லை. அவை இரண்டும் இரண்டு உலகியல் புலன்வழி அனுபவங்களாக மட்டுமே நிலைகொள்கின்றன. அவற்றுக்கு உலகியலுக்கு அப்பால் எந்த விரிவாக்கமும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற ஆசிரியனின் அவரே அறியாத எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணமா என்று யோசிக்கத்தோன்றுகிறது.

( 7 )

முருகன் உலகியலை சித்தரிக்கையில் உணவும் பாலியலும் இரண்டு வகை விடுதலைகளாக திகழ்கின்றன. அவ்விடுதலைக்கு அடியில் மாறாத பெரும் விரிவாக நின்றிருப்பது சலிப்புதான். முருகனின் கதைகளில் வரலாற்றின் மிகக்கொந்தளிப்பான காலகட்டத்திலேயே நிலக்கிழார்கள் தங்கள் ஆசைநாயகிகள் குளிப்பதைப் பார்ப்பதற்காக கிளம்பிச் செல்கிறார்கள். அரசி குளிப்பதை அமைச்சர் எட்டிப்பார்க்கிறார். சோற்றைப்பற்றியே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள். திரும்பத் திரும்ப சலிப்பு எனும் அன்றாடச் சித்திரத்தை சலிப்பையே விளையாட்டென்றும் அங்கதமென்றும் ஆக்கிக்கொண்ட ஒரு மொழியில் இரா.முருகன் சொல்லி செல்கிறார்.

ஒருவகையில் அன்றாடச்சலிப்பை எழுதுவதே இலக்கியத்தின் மிகப்பெரிய அறைகூவலென்று எனக்குத் தோன்றியதுண்டு. ஏனெனில் இலக்கியம் என்பதே அன்றாடச் சலிப்புக்கு எதிரான ஒரு செயல்பாடுதான். மழைக்காலத்தில் செய்வதற்கொன்றுமில்லாமல் குகைகளில் கூடிய மனிதர்கள் சொல்லித் தொடங்கியதுதான் கதை எனும் வடிவமாக இருக்கக்கூடும். எல்லாக்கதைகளுமே சலிப்புக்கு எதிரான சமர்கள் தான். அந்நிலையில் கதைக்குள்ளேயே சலிப்பு சொல்லப்படுவதென்பது ஒரு முரண்பாடு. சலிப்பு என்பதை அதன் வண்ண வேறுபாடுகளை நுணுக்கமாக விரிப்பதனூடாக இலக்கியத்துக்குள் கொண்டு வந்தவர் என்று டால்ஸ்டாயைச் சொல்லலாம். குறிப்பாக போரும் அமைதியும் சலிப்பின் நுண்ணிய சித்திரங்களின் விரிவு கொண்டது என்று கூறலாம்.

சலிப்பை சலிப்பெனவே எழுதுவதென்பது ஒரு வகையில் இலக்கியத்துக்கு உகக்காத ஒன்று. சலிப்பை சுவாரசியப்படுத்துவது என்பது தான் இலக்கியத்தின் அறைகூவல். ஏனெனில் இலக்கியம் என்பது சுவாரசியத்தை உருவாக்க வேண்டிய ஒன்றுதான் முருகன் அச்சலிப்பில் ஒவ்வொருவரும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை நுணுக்கமாகவும் வேடிக்கையாகச் சொல்வதனூடாக சலிப்பின் சித்திரத்தை சொல்கிறார். சலித்துப்போய் அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு சொறிந்துகொள்கிறது, தனக்குத்தானே பேன் பார்த்துக்கொள்கிறது, இளித்துக்கொள்கிறது, கண்களைச் சிமிட்டிக்கொள்கிறது. அதனூடாக அதனூடாக அது நம்மை சிரிக்க வைக்கலாம். தன் சலிப்பையும் உணர்த்திவிடுகிறது. முருகனின் புனைவுலகத்தினூடாக பெருகிச்செல்லும் அன்றாடத்தின் சலிப்பு வரலாறெங்கும் அச்சலிப்பே நிறைந்திருக்கும் சித்திரத்தை நமக்களிக்கிறது.

இந்திய நிலத்தில் பெரும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்த காலகட்டத்தினூடாக முருகனின் புனைவுலகம் செல்கிறது. பாண்டிச்சேரி நிலத்தை தக்கவைத்துக்கொள்ள பிரிட்டிஷாருடன் தொடர் பூசலில் இருந்த ஒரு காலகட்டத்தினூடாக செல்கிறது ராமோஜியம். மிளகு இந்தியாவின் காலனி நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிக்கலான காலகட்டத்தின் சித்தரிப்பு. ஆனால் இக்காலகட்டத்தைப்பற்றி எழுதிய நாவல்களில் கூட போர்கள் ராஜதந்திர சூழ்ச்சிகள் எழுச்சிகள் வீழ்ச்சிகளுக்கு மாற்றாக அன்றைய சலிப்பூட்டும் அன்றாடமே கேலி கலந்த மொழியியல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. முருகனின் தலைசிறந்த படைப்பு என்று சொல்லத்தக்க மிளகு நாவலில் கூட மிளகு ராணியின் சலிப்பூட்டும் அன்றாட நாள் தொடங்குவதனூடாகவே நாவல் விரியத்தொடங்குகிறது.

முருகன் சொல்லும் இந்த அன்றாடம் ஏன் அத்தனை சலிப்புடனிருக்கிறது எனில் அன்றாடத்தின் சலிப்பை  வெல்லும்பொருட்டு மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையும் முன்னரே அவர் வெட்டிவிட்டிருக்கிறார் என்பதனால் தான். நேற்றைய வரலாறு குறித்த பெருமிதங்களும், அப்பெருமிதங்களின் வெளிப்பாடான தொன்மங்களும் மனிதன் தன் நிகழ்காலத்தின் சலிப்பிலிருந்து வெல்லும்பொருட்டு உருவாக்கிக்கொண்டவை. எதிர்காலம் பற்றிய கனவுகளும் லட்சியங்களும் அதற்கான நடைமுறைத்திட்டங்களும் அவ்வாறே அன்றாட சலிப்பின்மீதான மனிதனின் எதிர்வினைகள் தான். வரலாற்றுவாதங்களும் கொள்கைகளும் அனைத்தும் அதன் பொருட்டே.

சலிப்பை வெல்ல மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையுமே முற்றிலும் தன் புனைவுலகிலிருந்து விலக்கிக்கொண்ட பின்னால் அச்சலிப்பை மட்டுமே எழுத முடிகிறது அவ்வாறு எழுதுகையில் அது எப்படி இந்த சுவாரசியத்தை அடைகிறது எனில் இவற்றை எல்லாம் விலக்கியதனால் உருவாகும் அர்த்தமின்மை சட்டென்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்த்தும் மெல்லிய கோமாளித்தனத்தினால் தான். லட்சியத்தின் இன்மை உருவாக்கும் அபத்தமே முருகனின் மொத்த படைப்புலகையுமே இயல்பான அங்கதம் கொண்டதாக்குகிறது.

அர்த்தமின்மைக்காக முருகன் முயல்வதில்லை. அதனூடாக ஓர் அங்கதத்தை உருவாக்க வேண்டிய தேவையும் அவருக்கில்லை. அர்த்தமென சொல்லப்பட்ட அனைத்தையுமே எழுதுவதற்கு முன்பே வெளியே நிறுத்திவிட்டு அன்றாடத்தை மட்டுமே எழுதத்தொடங்கும்போதே அவையெல்லாம் நிகழ்ந்துவிடுகிறது. இப்பொழுது இங்கிருந்து நான் கிளம்பிச்சென்று பார்வதிபுரம் சந்திப்பில் நின்றுகொண்டு அங்கு நிகழ்வன ஒவ்வொன்றையும் அவற்றுக்கு எந்த உள்தொடர்ச்சியையும் பொருளையும் அளிக்காமல் அப்படியே பதிவு செய்தேன் எனில் வாய்விட்டு சிரிக்க தக்க ஒரு பெருஞ்சித்திரமே எனக்கு அமையும். திரும்ப திரும்ப தரையில் துப்பிக்கொண்டே இருக்கிறார் ஒருவர். கையில் அரைடம்ளர் டீயுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறார் ஒருவர். எங்கோ எதையோ பார்த்துத் தலையசைக்கிறார் ஒருவர். ஒருவர் திரும்பத் திரும்ப ஒரு கைப்பையை குடைகிறார். ஒன்றுக்கும் ஒரு பொருளும் இல்லை. எல்லாமே கோமாளித்தனங்கள்

பொருளிலிருந்து விடுதலை என்பது ஒருவகையில் sanity என்னும் பித்தின்மையிலிருந்து விடுதலைதான் அது insane எனும் பைத்தியப்பெருவெளியொன்றை உருவாக்குகிறது. அவ்வாறு தன்னியல்பாக விரித்து விரித்து நினைவுகளிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தன் குடும்பச்சூழலிருந்தும் புனைந்து பெருக்கிக்கொண்ட ஒரு பரப்பென்று முருகனின் கதைகளைச் சொல்ல முடியும். அவ்வகையில் முருகனின் கதையுலகுடன் அணுக்கமான கதைசொல்லி என எவரும் தமிழில் இல்லை. ஆனால் மலையாளத்தில் இருவரைச் சொல்லலாம். ஒருவர் வி.கே.என். இன்னொருவர் என்.எஸ். மாதவன். (என்.எஸ்.மாதவனின் ‘லண்டன் பத்தேரியிலே லுத்தீனியகள்’ என்னும் நாவலை முருகன் பீரங்கிப்பாடல்கள் என்ற பேரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்)

வி.கே.என் மலையாளத்தின் முதன்மையான அங்கத எழுத்தாளர் என அறியப்பட்டிருக்கிறார். முருகனுக்கு அவரை அணுக்கமாக ஆக்கும் கூறுகள் மூன்று. ஒன்று, வரலாற்றை பகடிக்களமாக ஆக்கிக்கொள்ளும் பார்வை. இரண்டு, பல்வேறு மொழிநடைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கதைசொல்லித் தன்மை. மூன்று, முழுமையான உலகியல்தன்மை. வி.கே.என் உலகிலும் காமமும் உணவுமே மையப்பேசுபொருட்கள். அவற்றின் மேல் எந்தவகையான ’அழகியலும்’ செயல்படுவதில்லை. எந்த மெல்லுணர்ச்சிகளுமில்லை. அவை முழுமையான அன்றாடத்தன்மையுடன், பொருள்வயத்தன்மையுடன் வெளிப்பட்டு அதன்விளைவான பகடியை சென்றடைகின்றன.

வி.கே.என் போலவே இரா முருகனும் தொல்வரலாற்றையும் சமகால வரலாற்றையும் மறு ஆக்கம் செய்திருக்கிறார். இருவருமே வரலாற்றை துண்டுகளாக சிதறடித்து ஓர் அபத்தப்பரப்பை கட்டமைக்கிறார்கள். இரா.முருகனின் புனைவுலகுக்கு மிக அணுக்கமான இருபடைப்புகள் வி.கே.என் எழுதிய பிதாமகன் என்னும் பகடி நாவலும் என்.எஸ்.மாதவனின் பீரங்கிப்பாடல்களும்.

 

( 8 )

ஒரு புனைவுக்கலைஞராக முருகனைப் பற்றி தனித்தனிப் படைப்புகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதை ஒட்டி தொகுக்கப்பட்டன. அவரை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் ஒரு கட்டுரை தேவை என்பதனால் இந்த அவதானிப்புகளை முன்வைக்கிறேன். இவை முடிவுகளல்ல, மேற்கொண்டு ஒட்டியும் வெட்டியும் நிகழவேண்டிய விவாதங்களுக்கான முன்வரைவுகளே.

முருகனின் படைப்புலகம் ஒட்டுமொத்தமாக அளிக்கும் இலக்கியக்கொடை என்ன? முதன்மையாக அவர் உருவாக்கும் வரலாற்றின் சிதைவுச்சித்திரம்தான். வரலாறு அதற்குள் செயல்படும் எளிய அன்றாடத்தால், தற்செயல்களின் தர்க்கமின்மையால் அபத்தமாக ஆவதை அவர் சித்தரிக்கிறார். வரலாற்றில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றின் பெருஞ்சித்திரத்தால் அபத்தமாக ஆகிறது, எளிய மனிதர்களால் வரலாறும் அபத்தத்தை அடைகிறது. முருகன் நெருக்கடிநிலை பற்றி அப்பாவிக் குமாஸ்தாக்களினூடாகச் சித்தரிக்கும் இடம், அல்லது பாண்டிச்சேரியின் வரலாற்றை சில்லறை ஐயன்கள் வழியாக விவரிக்கும் பாணி அதற்குச் சிறந்த உதாரணம்.

ஒருங்கிணைந்த வரலாற்றின் பெருங்கதையாடலின் மாபெரும் எடை தூக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம் நாம். பறக்கமுடியாதபடி வரலாற்றின் அடியில் சிக்கிக்கொண்டவர்கள். வரலாற்றின்மீதான மிகையுணர்வு என்பது நமக்கு ஒரு வகையான நரம்புச்சிக்கலாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதிலிருந்து விடுதலை என முருகன் முன்வைக்கும் இந்த வரலாற்றுச் சித்திரத்தைச் சொல்லலாம். வரலாற்றை எடையற்றதாக ஆக்கிவிடுகிறது இந்தப்புனைவுலகம்.

இரண்டாவதாக, முருகன் முன்வைக்கும் நுணுக்கமான பகடிகள் சுவையான வாசிப்பனுபவமாக ஆகின்றன என்பதைச் சொல்லவேண்டும். பின்நவீனத்துவப் புனைவு என்றால் ஒருவகையான புதிர்விளையாட்டு என்னும் சோர்வூட்டும் நிலையை கடந்து எல்லாப் பக்கங்களையும் சிரித்தபடி, புன்னகைத்தபடி வாசிக்கச் செய்வது இரா.முருகனின் புனைவுலகம். பகடிகளுக்குரிய தனித்தன்மை, எதிர்மறைத்தன்மை என்றும் சொல்லலாம், அவை தொடர்ச்சியற்று உதிரிவேடிக்கைகளாக நின்றுவிடுபவை என்பது. வி.கே.என்னும் இன்று தனிவேடிக்கைத்துணுக்குகளாகவே நினைவுகூரப்படுகிறார். இரா.முருகனும் அந்த விதியிலிருந்து தப்பமுடியாது.

பகடியின் இன்னொரு எதிர்மறை அம்சம், எது பகடி செய்யப்படுகிறதோ அதை வாசகன் முன்னர் அறிந்திருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. பகடியில் பயன்படுத்தப்படும் நுணுக்கமான வரலாற்றுச்செய்திகள், நூல்குறிப்புகள், மொழிக்குறிப்புகள் வாசகனின் நினைவில் கிளரவேண்டும். கேரளவாசகர்களிடம் அரசியல் சார்ந்த வாசிப்பும் நினைவும் மிகுதி என்பதனால் வி.கே.என் மற்றும் என்.எஸ்.மாதவனின் நுண்குறிப்புகள் அத்தளத்தில் வாசகநினைவைச் சீண்டி பகடியை உருவாக்குவதில் வெற்றிபெறுகின்றன. ஆனால் வி.கே.என் உருவாக்கும் மரபுக்கலைகள், மரபான விவசாயம் சார்ந்த பகடிகள் அடுத்த தலைமுறையிடம் வேலைசெய்யவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இரா.முருகனின் படைப்புகளின் மிகப்பெரிய பலவீனமே அவர் எதிர்கொள்ளும் தமிழ் வாசகர்கள்தான். அவர்களில் வரலாறு, அரசியல், இதழியல் மற்றும் உயர்தொழிற்ச்சூழல் என முருகன் தொட்டுச்செல்லும் ஊடுபிரதித்தன்மையை சற்றேனும் அறிந்தவர்கள் மிகமிக அரிது. தமிழ் எழுத்தாளர்களிலேயே வரலாறு, பண்பாடு சார்ந்த வாசிப்பறிவுடையோர் மிகக்குறைவானவர்கள். பெரும்பாலானவர்கள் சொந்தவாழ்க்கை சார்ந்து மட்டுமே தகவலறிவு கொண்டவர்கள். அதற்கு அப்பால் எதையும் அறிவதற்கான ஆர்வமும் அற்றவர்கள். ஆகவேதான் பாலியல், எளிய சமகாலச் செய்திகள் சார்ந்து மட்டுமே இங்கே படைப்புகள் உருவாகின்றன. இச்சூழலில் முருகன் உருவாக்கும் பகடிகள் பெரும்பாலும் சென்றடைவதில்லை. முருகனின் பகடிகளில் பலவும் நுணுக்கமான சாதிய, வட்டார பண்பாட்டுக் குறிப்புகள் கொண்டவையும்கூட.

முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் இறுதியானது அவர் உருவாக்கும் கலவை நடை. அவர் கதைசொல்லியாக திகழும் நடை நினைவுகளும் குறிப்புகளுமாக பகடியுடன் தாவிச்செல்வது. ஊடே பல்வேறு மொழிநடைகளை அவர் திறம்பட நகல்செய்து கலந்துவிடுகிறார். பத்தொன்பதாம்நூற்றாண்டின் கடிதங்களின் மொழிநடை, பழைய ஆவணங்களின் நடை, பத்தொன்பதாம்நூற்றாண்டு இதழ்களிலுள்ள செய்திநடை, அக்காலநூல்களின் நடை ஆகியவை ஒரு கலைடாஸ்கோப் தன்மையுடன் அவர் புனைவுலகில் புரண்டுபுரண்டு வண்ண வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

பின்நவீனத்துவ எழுத்தில் கலவைமொழி என்பது ஒரு முக்கியமான அம்சமாக உலகமெங்கும் உள்ளது. சீரான, நேர்த்தியாகச் செம்மைசெய்யப்பட்ட ஒற்றையோட்ட மொழிநடையை நவீனத்துவம் தன் அடையாளமாக முன்வைத்தது. அது ஆசிரியரின் உணர்ச்சிநிலை, சிந்தனை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. நவீனத்துவகால விமர்சனங்கள் அனைத்திலுமே நேர்த்தியான மொழிக்கான பாராட்டு இருப்பதைக் காணலாம். கலவை மொழி அல்லது சிதறுமொழி என்பது அதற்கு மாற்றாக பின்நவீனத்துவம் உருவாக்கிக்கொண்ட ஒன்று. நேர்த்தியான ஒற்றை மொழி வாசகன் மேல் ஆசிரியனின் செல்வாக்கை செலுத்துகிறது என்று எண்ணிய பின்நவீனத்துவர் நடை என்பது வாசகனும் ஆசிரியனும் கொள்ளும் விளையாட்டாகவோ உரையாடலாகவோ இருக்கவேண்டும் என எண்ணினர்.ஆகவே உரைநடையை அவ்வாறு பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்கினர்.

ஆனால் பின்நவீனத்துவ புனைவு வடிவங்களை எளிமையாக நகல்செய்தவர்கள் பலர் அப்புனைவுகளுக்குள், எந்த நோக்கமும் இல்லாமல் செயற்கையாக சிக்கலான சொற்றொடர்கள் அல்லது சிதைவுண்ட சொற்றொடர்கள் வழியாக  கலவைமொழியையோ சிதைவுமொழியையோ உருவாக்க முயன்றிருப்பதைக் காணலாம். அவை எந்தவகையான புனைவுத்திறனும் இல்லாத மொழிக்குதறல்களே. மாறாக முருகன் உருவாக்கும் கலவை மொழி வாசகனின் நினைவுமுனைகளை வெவ்வேறு வகைகளில் தொட்டுச் சீண்டி ஓர் இனிய விளையாட்டுக்கு அழைக்கிறது.

அந்த கலவைமொழியின் வசீகரம் முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் முக்கியமானது. ஆனால், அந்த மொழிகளை ஏற்கனவே அறிந்து, அவற்றை முருகன் ‘எடுத்துவிளையாடும்’ விதத்தை புரிந்துகொள்பவர்களாலேயே அவை ரசிக்கப்படக்கூடும். எஞ்சியோருக்கு அவை வெறும் மொழிவிளையாட்டாகவோ, அல்லது அன்னியமானதோ புரிந்துகொள்ள முடியாததோ ஆன மொழிப்பரப்பாகவோ தோன்றக்கூடும்.

முருகனின் புனைவுலகம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி போல நாம் வாழும் ஒற்றைப்படையான யதார்த்தத்தை சிதறடித்து வண்ணப்பட்டைகளாக விரித்துக்காட்டுகிறது. அந்த புனைவாடலே முதன்மையாக அவரை தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக நிலைநிறுத்துகிறது.

முந்தைய கட்டுரைநா. எத்திராஜ்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழாவில் ஒரு நாடக முயற்சி