உதிர்தல்

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் முழுக்கோடு ஒய்.எம்ஸி.ஏயின் மலரில் ஒரு கவிதையை வாசித்தேன். அதை யாரோ மொழியாக்கம் செய்திருந்தார்கள். சரியாகத் தமிழ் தெரியாத ஏதோ ஒரு அமெரிக்கக் கன்யாஸ்திரீ. அந்த மொழியாக்கம் மிகச் சுமாரானது. இருந்தாலும் அந்தக் கவிதை என்னை உணர்ச்சிவசப்படச்செய்தது. நெடுநாள் அந்தக் கவிதையை நான் நினைவில் வைத்திருந்தேன். அந்தக் கவிஞரின் பெயரையும்

மீண்டும் தற்செயலாக ஒரு தொகுப்பில் அந்தக் கவிதையைக் கண்டடைந்தேன். சர்வ சாதாரணமான கவிதை இது. ஆழ்ந்த பொருளோ மறைபிரதியோ ஒன்றும் இதில் இல்லை. ஆனால் சில சமயம் தன் எளிமையாலும் நேரடித்தன்மையாலுமே சில கவிதைகள் நம்மை உலுக்கிவிடுகின்றன. இது அத்தகைய ஒரு கவிதை என்று எனக்குப் படுகிறது. என் குழந்தைகளுக்கு இக்கவிதையை வாசித்துக் காட்டியபோது நான் அடைந்த அதே மனநெகிழ்ச்சியை அவர்களும் அடைவதைக் கண்டேன்.

நீலக்கண் குட்டிப்பயல்

சின்ன நாய்ப்பொம்மை தூசிபடிந்திருக்கிறது

ஆனால் திடமாக காலூன்றி நின்றிருக்கிறது

சின்ன பொம்மைப்படைவீரன் துருவால் சிவந்திருக்கிறான்

அவன் தோளில் துப்பாக்கி நிமிர்ந்திருக்கிறது

அந்த நாய் புதிதாக இருந்த காலமொன்றிருந்தது

படைவீரன் அழகாக இருந்திருக்கிறார்

ஆனால் அது நம் நீலக்கண் குட்டிப்பயல்

அவற்றை முத்தமிட்டு அங்கே வைத்தபோது!

 

நான் வருவது வரை போகவே கூடாது என்ன?”

என்று அவன் சொன்னான் மூச்,சத்தம் போடக்கூடாது!

அதன் பின் தளர்நடையிட்டு  தன் குட்டிப்படுக்கைக்குச் சென்று

அவன் அழகிய பொம்மைகளைக் கனவுகண்டான்

கனவுகாணும்போது ஒரு தேவதையின் பாடல்

நம் நீலக்கண் பயலை எழுப்பியது

அது எத்தனையோ காலம் முன்பு

வருடங்கள் பல சென்றுவிட்டன

ஆனால் பொம்மை நண்பர்கள் விசுவாசமானவர்கள்

 

நீலக்கண்குட்டிப்பயலின் கட்டளைக்குப் பணிந்து அவர்கள்

அதே இடத்தில் நின்றிருக்கிறார்கள்

அவனுடைய குட்டிக்கைகளின் தொடுகை வந்து எழுப்புவதற்காக

அவன் குட்டி முகத்தின் புன்னகைக்காக

வருடங்களாகக் காத்திருக்கையில்

அந்த குட்டி நாற்காலியின் தூசுப்படலத்திலிருந்தபடி

அவர்கள் எண்ணிக்கொண்டார்கள்

அவர்களை முத்தமிட்டு அங்கே நிற்கவைத்துச் சென்ற

நீலக்கண் குட்டிப்பயலுக்கு என்ன ஆயிற்று என்று

***

 

குழந்தைக்கவிதைகள் மற்றும் நகைச்சுவைக் கவிதைகளுக்காக நினைவுகூரப்படும் யூஜின் ·பீல்ட் அமெரிக்காவில் மிஸௌரியில் 1850ல் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்து உறவினரால் வளர்க்கப்பட்டார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். வில்லியம்ஸ் கல்லூரியில் சேர்ந்த யூஜின் ·பீல்ட் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து கல்லூரிக்குச் செல்லமுடியாமல் ஆனார். பின்னர் க்னாக்ஸ் கல்லூரியிலும் மிஸௌரி பல்கலையிலும் படித்தார்.சட்டத்தொழிலில் ஈடுபட எண்ணினாலும் அது பலன் தரவில்லை.

அதன்பின் யூஜின் ·பீல்ட் ஐரோப்ப சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். பின்னர் செயின்ட் ஜோச·ப் கெசெட்டில் இதழாளராக வேலைக்குச் சேர்ந்தார், அவ்வருடமே ஜூலியா காம்ஸ்டாக்கை மணந்தார், எட்டு குழந்தைகள் பிறந்தன. செயின் ஜோச·ப் கெசெட்டி நக்லர ஆசிரியராக பணியாற்றினார். எளிமையான நகைச்சுவைக் கட்டுரைகள், உணர்ச்சிகரமான கவிதைகள், சிறுவர் பாடல்கள் ஆகியவற்றுக்காக யூஜின் ·பீல்ட் புகழ்பெற்றார்.

1883ல் சிகாகோவுக்கு வந்த ·பீல்ட் அங்கே சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் புகழ்பெற்ற பத்தி ஒன்றை எழுதினார். 1879ல் அவரது முதல் கவிதை தொகுதி வெளிவந்தது. கிறிஸ்துமஸ் டிரெஷர்ஸ் என்று அதற்குப் பெயர். அவரது இசைப்பாடல்களே அவருக்கு சமகாலப்புகழ அதிகம் பெற்றுத்தந்தன. 1895; ·பீல்ட் மறைந்தார்.

இந்தக்கவிதை என்ன சொல்கிறது என்று என்னால் வகுத்துச் சொல்ல முடிவதில்லை. குமாரன் ஆசானின் வீழ்ந்த மலர் என்ற கவிதையைப் பற்றி பேசும்போது நித்ய சைதன்ய யதி மலரைப் பொறுத்தவரை உதிர்வதும் அழகாக ஆகிவிடுகிறது என்றார். இங்கே மரணம் அழகாக ஆகிவிட்டது போலிருக்கிறது. என்ன ஒரு மென்மையான உதிர்தல்!

http://www3.amherst.edu/~rjyanco94/literature/eugenefield/poems/poemsofchildhood/littleboyblue.html

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Mar 7, 2009

முந்தைய கட்டுரைஇடிதாங்கி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18