குருகு பதிமூன்றாவது இதழ் வெளிவந்துள்ளது. மிழா இசைக் கலைஞரும் சாக்கியார் கூத்து கலைஞருமான கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணியை அழகியமணவாளன் எடுத்த நேர்காணலின் முதல்பாகம் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. ஈஸ்வரன் உண்ணி தனது ஆசிரியரின் வழியில் மிழாவிசையை நெறிப்படுத்தி அதன் புதிய சாத்தியங்களின் வழியே மிழாவை தொடர் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தவர். மிழாவை தனித்து இயங்கவும் செய்துள்ளார். கேரளத்தின் பழங்கலையான கூடியாட்டம் குறித்த முக்கியமான உரையாடலாகவும் இந்த நேர்காணல் அமைந்துள்ளது. அதை மேலும் அர்த்தப்படுத்திக்கொள்ள கூடியாட்டம் குறித்த சகபீடியாவின் நிர்வாக இயக்குனர் சுதா கோபாலகிருஷ்ணனின் அறிமுகக் கட்டுரையின் மொழிபெயர்ப்பும் உடன் வெளியாகிறது.
பௌத்தத்தின் மீட்டுருவாக்கத்தில் பங்காற்றிய ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் புகழ்பெற்ற நூல் ‘பௌத்த வினாவல்’ தொடராக இந்த இதழில் வரத்துவங்குகின்றது. சமீர் ஒகாசாவின் அறிவியல் தொடர் தனி அறிவியல் துறைகளிலுள்ள சிக்கல்கள் வரிசையில் உயிரியல் சார்ந்த சிக்கல்களை ஆராய்கின்றது.
வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் இணைந்து சமாஜ பதிப்புகளைப் பதிப்பித்தவரும். சிற்றிலக்கிய வகைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆராய்ந்த மு. சண்முகம் பிள்ளையின் சங்கத்தமிழ் பாடல்களில் உள்ள வேதநெறி குறித்த கட்டுரை வந்துள்ளது. எப்போதும்போல இந்த இதழும் வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்.
நன்றி
http://www.kurugu.in
பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். https://twitter.com/KuruguTeam
அன்புடன்
குருகு