அண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி

வணக்கம்.

தொந்தரவுக்கு மன்னிக்கவும். அண்ணா ஹசாரேயின் போராட்டத்தைப் பற்றி சில சொல்லவேண்டிஇருக்கிறது.

தற்போதைய அரசியல் வாதிகள் அனைவரும் தங்கள் கைக் காசைச் செலவழித்துத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வருவது எப்படியாவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலா?அல்லவே. எப்படியாவது ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டும் என்பதே. அப்படிப் பட்டவர்களிடம் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவரும் படி கூறினால் எப்படி முடியும். காந்தியப்போராட்டமே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது தானே. ஆனால் ஹசாரே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதாகத் தெரியவில்லையே. ஒரே அடியில் எதிரியின் கோட்டையையே அல்லவா தகர்க்க முனைகிறார்.

மேலும் ஹசாரேயுடன் உள்ளவர்கள் அனைவருமே வருமான வரியை சரியாக செலுத்தியவர்கள்தானா?அரசியல்வாதிகள் இந்தக் கேள்வியை ஹசாரேயிடமும் அவர்கள் ஆதரவாளர்களிடமும் கேட்டால் ஹசாரே என்ன பதில் கூறுவார்? கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் நாற்பது சதவிகிதம் வரியாகக் கட்டச் சொன்னால் யார்தான் கட்டுவார்கள்?. சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதியுங்கள் அதில் பத்து சதவிகிதம் வரியாகக் கட்டினால் போதும் என்று இருந்தால் இங்கே கருப்புப் பணம் தான் இருக்க முடியுமா?முதலில் தங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து விட்டு,களைவதற்கான போராட்டங்களை நடத்திவிட்டு அதாவது அரசாங்கத்திடம் வருமான வரியைக் குறைக்கச் சொல்லிப் போராடி வெற்றி பெற்று விட்டு ஹசாரே அடுத்த கட்டத்திற்குப் போகலாமே!ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் எத்தனை பேர் குறைந்த பட்சம் சாலை விதிகளையாவது ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். எனது நண்பர் 2 ஜி ஊழலைப்பற்றியும் அதை செய்தவர்களைப் பற்றியும் மணிக்கணக்காக என்னிடம் பேசிவிட்டு ஊழல் செய்தவர்களைத் திட்டிவிட்டு எந்தக் கூச்சமும் இல்லாமல் சாலையின் அடுத்த பக்கம் போவதற்கு இடது புறம் சென்று U டர்ன் எடுப்பதற்குப் பதிலாக ராங் ரூட்டிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.குறைந்த பட்சம் சாலை விதிகளையே மதிக்கத்தெரியாதவர்கள் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் இருவருக்கும் ஏதாவது நோய் உள்ளதா? என்று பரிசோதித்து விட்டுத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் இப்பொழுது எவ்வளவு முக்கியம் என்பது தாங்கள் அறியாததா? இதைப் போன்ற மிக அவசரமான சட்டங்களை வேண்டி ஹசாரே போராடுவதுதானே இப்போது முக்கியம்?இதிலெல்லாம் வெற்றி பெற்றுப் படிப்படியாகத்தானே மேலே செல்லவேண்டும். ஹசாரே இப்பொழுது கையிலெடுத்திருப்பது கடைசியாகச் செய்ய வேண்டிய போராட்டம் என்பது எனது கருத்து. ஹசாரேவுக்கு இலக்கியப் பரிச்சயம் இருந்திருந்தால் அவ்வாறு செய்ய முற்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம். இதில் தங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன்.

பணிவன்புடன்

கண்ணன்
திருச்சி

அன்புள்ள கண்ணன்,

நல்ல கடிதம். இதே கடிதத்தை ஏன் இன்னும் விரிக்கக்கூடாது? இப்போது ரேஷன் கார்டுகளில் பெயர்களை நிறையப்பேருக்குத் தப்பாக அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து ஏன் அண்ணா ஹசாரே உண்ணாவிரதமிருக்கக்கூடாது? பான்பராக் போட்டுக்கொண்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள்.அதை எதிர்த்து அல்லவா அண்ணா ஹசாரே முதலில் போராடியிருக்கவேண்டும்?

உங்களுக்கே இதெல்லாம் சங்கடமாகத் தெரியவில்லையா? உண்மையிலேயே மனமறிந்துதான் இதையெல்லாம் பேசுகிறீர்களா? இத்தகைய அபத்தமான குரல்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் அதிகம் ஒலிக்கின்றன்றன?

வரலாற்றைப் பாருங்கள். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது எனக் காணலாம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது வடமாநில மத்தியவர்க்கம் போராடித்தான். தென்னகத்தில் சுதந்திரப்போராட்டம் பெயரளவுக்கே நடந்தது. காந்தி மீண்டும் மீண்டும் இங்கே வந்து போராடியும்கூட இங்குள்ள நடுத்தரவர்க்கம் அஞ்சி, சோம்பியே கிடந்தது. இந்திராவின் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்டமும் சரி, அவசரநிலைக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டமும் சரி முழுக்கவே வடஇந்திய நடுத்தரவர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. தென்னக அறிவுஜீவிகள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவான நியாயங்களைப் புனைந்துகொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் எந்த ஒரு அரசியல்போராட்டமும் தென்னகத்தில் முனைகொள்ளவில்லை என்பதே உண்மை.நமது நடுத்தரவர்க்கம் கோழைத்தனத்தால், சுயநலத்தால் கட்டுண்டது. அதற்கான நியாயங்களைப் புனைய தன்னுடைய முழுச் சிந்தனையையும் கற்பனையையும் பயன்படுத்தக்கூடியது. அதற்காக விதண்டாவாதம் செய்துகொண்டு நிறைவுகொள்வது.

காந்தியப்போராட்ட காலத்திலும் இதெல்லாம்தான் இங்கே பேசப்பட்டன . அன்றும் விதண்டாவாதத்தின் இரு முகங்கள் இவையாகவே இருந்தன. ஒன்று, போராட்டத்தின் இலக்கைக் குறைகூறி அதைவிட முக்கியமான போராட்டங்கள் உள்ளன, அவற்றுக்காகப் போராடியிருக்கலாமே என்று பேசுவது. இரண்டு, போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதியை ஐயப்படுவது.

அன்னியத்துணி புறக்கணிப்பின்போது அன்னிய ரயில்வேயைப் புறக்கணிக்கவேண்டியதுதானே என்ற கேள்வி பக்கம்பக்கமாகக் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியா அன்று பிரிட்டிஷாருக்கு இந்திய மக்கள் அளித்த ஆதரவால்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. பிரிடிஷாரை நீதிமன்றம் ரயில் எல்லாம் கொண்டுவந்த நல்லவர்களாக அன்றைய எளிய மக்கள் நினைத்தனர். ஆனால் மறைமுகப் பொருளாதாரச்சுரண்டல் மூலம் இந்தியாவின் பல்லாயிரம் வருடத்தைய பொருளியல் அடித்தளமே ஆட்டம்கண்டுவிட்டிருந்தது . அந்த உண்மையை மக்களுக்குக் கொண்டுசெல்லவே அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்டம் என்பது காந்தியால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகளுக்கு அது புரியவில்லை, அல்லது புரிந்துகொள்ள அவர்களின் சுயநலமும் கோழைத்தனமும் அனுமதிக்கவில்லை.

அன்னியத்துணி புறக்கணிப்பை விட உடனடியாகச்செய்யப்படவேண்டியவை என ஒரு ஐம்பது நூறு போராட்டங்கள் ஒதுங்கிநின்றவர்களால் சொல்லப்பட்டன. அவற்றில் முக்கியமானது வங்கத்திலும் பீகாரிலும் எழுந்த பெரும் பஞ்சங்கள். அந்தப் பஞ்சங்களின்போதும்கூட பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. உடனடியாகக் காந்தி அங்கே போய் அந்த மக்களுக்காகப் போராடவேண்டும், துறைமுகம் சென்று ஏற்றுமதியாகும் தானியங்களை மறிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டபோது சில காந்திய ஆதரவாளர்களுக்கும் சஞ்சலம் வந்திருக்கிறது.

ஆனால் காந்தி தெளிவாகவே இருந்தார். அவரது போராட்டம் மக்களுக்கு உண்மையைக் கற்பிக்கும் நோக்கம் கொண்டது. அப்பட்டமான ஓர் நடைமுறை உண்மையைத் தொகுத்துச் சொல்லும்போது மட்டுமே மக்களுக்கு அது சென்று சேர்கிறதென அவர் அறிந்திருந்தார். இந்தியாவில் அன்றுவரை எந்தக் காங்கிரஸ் போராட்டமும் மக்கள் பங்கேற்புடன் நிகழ்ந்ததில்லை. காரணம் மக்களுக்கு பிரிட்டிஷார் மேல்தான் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அன்னியத்துணி புறக்கணிப்பும், அதன் வழியாக அப்பட்டமாகத் தெரியவந்த பிரிட்டிஷ் சுரண்டலும் அழித்தபின்னர்தான் இந்திய சுதந்திரப்போரில் பெருவாரியான மக்கள் பங்கேற்பு நிகழ ஆரம்பித்தது. காங்கிரஸ், படித்தபண்டிதர் கைகளில் இருந்து விலகி மக்களிடம் வந்து சேர்ந்தது.

காந்தியப்போராட்டங்களின்போது அன்றும் போராடுபவர்கள் மேல் ஐயம் உருவாக்கப்படுவது ஓர் உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டது. எப்போதுமே அரசியல் போராட்டத்துக்கு முதலில் வருபவர்கள் படித்த உயர்குடிகளே. நேருவும் பட்டேலும் சுபாஷும் எல்லாருமே படித்த உயர்தட்டினரே. அவர்களை சுட்டிக்காட்டி காந்தியப்போராட்டம் ஒரு போலி உயர்குடிக்கலகம் என்று அன்றும் சொல்லப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கான எளியமக்களைத் தெருவில் போராட வைத்தது அவ்வியக்கமே. உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் நேரடியாக ஈடுபட்ட போராட்டங்களில் ஒன்று இந்திய சுதந்திரப்போர்.

உங்களைப்போன்ற கேள்விகேட்டு நிற்பவர்களுக்குச் சொல்லவேண்டியது ஒரே பதில்தான், அண்ணா அவருக்கு முக்கியமெனப் படுவதற்காகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார். நீங்கள் முக்கியமென நினைப்பதற்காக நீங்கள் ஏன் போராடக்கூடாது? அப்படி எல்லா முக்கியமான விஷயங்களுக்காகவும் இங்கே போராட்டங்கள் நடக்கட்டுமே, யார் வேண்டாமென்றார்கள்? நடக்கும் போராட்டத்தை மட்டம்தட்ட நடக்காத போராட்டங்களைப் பற்றிப் பேசும் அற்பத்தனத்தை என்று விட்டொழிப்போம்?

அண்ணா ஹசாரேயின் போராட்டம் அவர் ஏதோ திடீரென ஆரம்பித்த ஒன்றல்ல. அவர் முப்பதாண்டுக்காலமாகப் பொது வாழ்க்கையில் இருக்கிறார். கிராம நிர்மாணத்திட்டங்களைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறார். அந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிரியாக இருப்பது ஊழலே என உணர்ந்து நடைமுறையில் சந்திக்க நேர்ந்த ஊழலுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். அவரது நேர்மையும் அவரது உறுதியும் அவர் இதுவரை சாதித்துக்காட்டியதும் சேர்ந்துதான் அவரை மக்கள் நாயகனாக ஆக்கின.

இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்வது இன்று இந்தியாவின் ரத்தத்தை விஷமாக்கும் ஊழலைப்பற்றி. அந்த வேகமே அவருக்குப்பின்னால் இந்த பெரும் திரளைக் கூடச்செய்திருக்கிறது. எந்த ஒரு மக்கள் போராட்டமும் வெளியே இருந்து கொண்டுவரப்படுவதல்ல. அந்த மக்களின் உள்ளார்ந்த எதிர்ப்பாக அது ஏற்கனவே திரள ஆரம்பித்திருக்கும். அதற்கு ஒருவடிவமும் திசையும் கொடுப்பதே மக்கள்நாயகர்களின் பணி.

ஆகவேதான் ஆங்கிலம்பேசி, கோட்பாடுகளை விவாதித்து, இரவுபகலாகத் தொலைக்காட்சியில் தோன்றிக்கொண்டிருக்கும் ஆசாமிகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்கள் தேடுவது அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தலைவர்களை. அவர்களுடன் பேசும் தலைவர்களை. தர்க்கத்தால் பேசுபவர்களை அல்ல, இதயத்தால் பேசுபவர்களை.

அண்ணா ஹசாரேவைப்பற்றி ‘ஆய்வு’கள் நடத்திக்கொண்டிருக்கும் நம் அறிவுஜீவிகளிடம் நம் மக்கள் ’டேய் நீ யாரு?’ என்று கேட்பது அவர்கள் காதுகளில் விழுவதில்லை. உண்மையான காந்தியவாதி தியாகத்தால் உருவாகி வருகிறார். தியாகம் மூலம் அவரது சொற்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. வெட்டிவிவாதங்கள் மூலம் எவரும் அவரை விமர்சிக்கும் தகுதியைப்பெறுவதில்லை.

இத்தனை நீண்ட கடிதத்தை எழுதும் நீங்கள் குறைந்தது நான் இக்கேள்விகள் அனைத்துக்கும் ஏற்கனவே பதில் சொல்லியிருப்பதை அந்த நேரத்தில் பாதியைச் செலவிட்டு வாசித்திருக்கலாமே?

ஜெ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரையதார்த்தம் என்பது
அடுத்த கட்டுரைகோவை