அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
https://twitter.com/AjithanJey5925
அஜிதனுக்கு,
அல் கிஸா வாசித்தேன். வழக்கம் போல இரண்டு முறை. முதல் முறை படித்தவுடன் மனம் சற்று கொந்தளிப்பாக இருந்தது. கடலூர் சீனு பேசியதை (ஜூம் மீட்டிங்கில்) வாசித்து முடித்தபின் மேலும் உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடிந்தது. இஸ்லாமிய மதத்தின் சாராம்சத்தை அதன்
சகோதரத்துவத்தை இத்தனை சிறிய புத்தகத்தில் கடத்திவிட உங்களால் முடிந்திருக்கிறது…அதற்கு எவ்வளவு பெரிய பயணம் உங்களுக்கு தேவைப்பட்டிருக்கும்?!
உங்கள் படைப்புகள் அனைத்துமே ஒரு மின்னலைப் போல சிலவற்றை காட்டி மறைகின்றன. அந்த காட்சியின் தாக்கத்தில் அதை மீண்டும் கண்டு விட மாட்டோமா…மேலும் தெளிவாக…என்று எண்ணி மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இரண்டாவது முறை மின்னல் மின்னும் போது, அதில் முடிந்த அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற கவனமும் தவிப்பும் இருக்கும்.அது வாசிப்பை மேலும் ஓர் முக்கிய அனுபவமாக ஆக்குகிறது.
குலாமின் பாடலாக பதிந்ததை விட அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் கண் முன் விரிந்த ஒரு நாடகமாக கர்பலா படுகளம் தோன்றியது.
‘அழகான முகத்தை காண்பதும் ஊசியால் உடலெங்கும் குத்திக்கொள்ளும் முறையும் இரண்டுமே சூபி முறையில் ஒன்றுதான் சாச்சா‘ என்று ஹைதர் சொல்வது பின்னால் நிகழும் அவர்களின் காதல் பயணத்தின் சாரமாக வெளிப்படுகிறது. மேலும் பல கூரிய வரிகள் நாவலெங்கும் வருவது சிறப்பாக இருந்தது.
ஹைதர் காணும் கனவில் இருள் நதியில் மூழ்கி அவர்கள் பொன்மேனி கொண்ட குழந்தையை கண்டடைகிறார்கள். அஜ்மீர் தர்காவும் மானுடரின் இருண்ட மனங்களின் நடுவில் ஒளிரும் பேரொளியாக நிற்கிறது. இருளே ஒளியை நோக்கி வேகமாக செலுத்துகிறது.
‘அழகிய பெண்ணுக்கு கழுத்து அட்டிகை போல இறப்பும் இவ்வாழ்விற்கு ஓர் அணிகலன். அதை செருக்குடன் அணிந்துகொள்வோம்‘ என்று இறப்பை ஓர் ஆபரணமாக கூறும் இடம் வரும். அனால் ஹைதர்–சுஹராவிற்கு குழந்தை பிறக்கும், நம்பிக்கையை விதைக்கும் நாவலின் இறுதி அத்தியாயத்தின் தலைப்பும் ‘ஆபரணம்‘!! இது விந்தையாகவும் பொருத்தமாகவும் ஒரு சமயத்தில் தோன்றுகிறது.
வானை நோக்கி கை உயர்த்தினால் கிசாவினுள் இருப்பதாக ஒரு கணமேனும் இனி நாவல் படிக்கும் அனைவரும் உணர முடியும்.
மிக்க நன்றி.
அன்புடன்,
தன்யா.
அன்பின் அஜிதனுக்கு,
நீங்கள் எழுதிய எதையும் உடனுக்குடன் படித்துவிடுவேன். மைத்ரி நாவல் படித்துவிட்டு உங்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறேன். அல் கிஸா நாவல் வெளிவந்ததும் படித்துவிட்டேன்.
தர்காவினுள் செல்லும்போது தண்ணீருக்குள் நடந்து செல்வது போன்ற அழுத்தம் உடலிலும் மூச்சிலும் இரங்கும். பல தர்காக்களில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும். வேறு எவ்விடத்தை விடவும் தர்காவினுள் ஆழ்ந்த தியானம் நிகழும். அல் கிஸா நாவலின் தொடக்கத்தில் முய்னுத்தின் சிஷ்டி தர்கா குறித்த விவரிப்பிலேயே இந்த உணர்வைத் தோற்றுவித்துவிட்டீர்கள். அங்கிருந்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட காதல் கதை, இசை சாதகனின் மீட்சி, மாபெரும் தியாகமும் அவர்களைச் செலுத்திய அறமும் என நாவலைப் பிந்தொடர்வது எளிதாகவே இருந்தது.
இந்நாவலை குமரித்துறைவியுடன் மட்டுமே ஒப்பிடத்தோன்றியது. நபியின் போர்வைக்குள் இருந்தவரின் ரத்தம் சிந்தப்படுகிறது; ஆனால் ஒரு கணம் கூட நம்பிக்கையின்மை தோன்றவில்லை. அந்தப் போர்க்களத்தோடு இந்தக் காதல் தொடர்புறும் புள்ளிகளை எல்லாம் தேடித் தேடித் தொட முயல்கிறேன்.எத்தனை அற்புதமான அடுக்குகள்..
நேரில் சந்திக்கும்போது அல் கிஸாவிலும் உங்கள் ஆட்டோகிராப் வேண்டும். நாவலில் எனக்குத் தெரிந்த ஒரே குறை இறுதியில் இடம்பெறும் “சில சொற்கள்” தான். அதில் நீங்கள் விவரித்திருப்பதை விடவும் நாவல் மிகப்பெரிது.
நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் தத்துவ நூலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வாசகன்..
–பன்னீர் செல்வம்
பி.கு. : சென்னையில் இருக்கும் இரண்டு தர்காக்கள் குறித்து தமிழினியில் அமலன் ஸ்டேன்லி எழுதி இருக்கிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
அஜிதனின் ‘அல் கிஸா’ – வாசு முருகவேல்
தமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா