நான் தினமும் மெல்லோட்டம் (Jogging) பயிற்சி செய்து வருவபன் . ஒரு கட்டத்தில் அது முழு உடலையும் மேம்படுத்துவதில்லை என்று உணர்ந்து, யோகா கற்க முடிவு செய்தேன்.சௌந்தர் அண்ணாவின் ” யோகம் இன்று ” காணொளிகளை கண்டிருந்தாலும், அவரிடம் முறைப்படி கற்க, யோகமுகாம் வகுப்புக்கு பதிவு செய்தேன். மூன்று நாட்களில் அவரிடம் கற்றது, குருகுல அனுபவம், வாக்தேவியின் அருள்முகம் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் கூட வரும் ஜெ.
நம் உடல் எவ்வாறு சமநிலையை இழந்து, நம்மிடம் உணர்த்தி கொண்டே இருக்கிறது, அதை கண்டு கொள்வது எப்படி என்பதில் ஆரம்பித்து, யோகமரபு, அதன் வரலாறு, தற்போதைய அமைப்புகள், யோகத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் உள்ள உறவு, தற்போது ஆங்கில மருத்துவத்திற்கும் யோகதிற்கும் உள்ள உரையாடல் என பல்வேறு தளங்களை சுட்டி காட்டினார். மருத்துவர் மகாதேவன், குரு சிவானந்தா, குரு கிருஷ்ணமச்சர்யா ஆகிய ஆளுமைகளை அறிமுகம் செய்தார். முதியவர்கள் மற்றும் எடை உள்ளவர்களையும் கவனத்தில் கொண்டு பயிற்சி வடிவமைத்து, ஒவ்வொரு பயிற்சிக்கும் முன்னும், பின்னும் அப்பயிற்சி உடலின் எந்த பாகத்தை, எந்த தசையை வலுப்படுத்துகிறது என்பதை உணர செய்தார். நம் உடலில் மறைந்திருந்த வழிகளை நாமே வெளிகொணர்ந்து உணர்வது நல்ல அனுபவம் ஜெ.
(நம் உடலும் உள்ளமும் இனிய வலிகளை மறக்க விரும்புவதில்லை போலும். பயிற்சிக்கு இணையாக மகிழ்வளித்தது நண்பர்களுடன் விவாதம், மணி அண்ணாவுடன் பகிர்வு, நூலகத்தில் உள்ள அரிய புத்தங்களுடன் வாசிப்பு, அருண்மொழி அக்காவின் “இசை” பற்றிய சிறிய சொற்பொழிவு. (யானையும், அக்காவும் ஒன்று தான். உருவத்திற்கும் அதன் குழந்தைத்தன்மைக்கும் சம்பந்தமில்லை.)
அனைவருக்கும், அனைத்திற்கும் காரணமான உங்களுக்கும் நன்றி ஜெ .
மாணவன்,
மருதுபாண்டியன்.த