அ.வெண்ணிலா சிறுகதை  வாசிப்பனுபவம்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

பெண் உடலை காம உலகின் வாசல் என்றே ஆண் நினைக்கிறான்.  கதவைத் திறக்கும் முன் அவ்வுடலே காம உலகின் தீராத வெம்மையில் தகித்து நிற்கும் கணங்களே அவளை எல்லைகள் தாண்டிச் செல்லத் தூண்டும் காரணியாகிறது. பெதும்பை பருவத்தின் குதூகலம், அறியத் துடிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகிறது. மங்கைப் பருவம் அனுபவிப்பதிலும் மடந்தைப் பருவம் தன்னுடல் மாற்றத்தின் நிகழ்வுகளை எதிர் நோக்குவதிலும் அதன் வலிகளை ஏற்றுக் கொள்வதிலும் கழிகிறது.

 கணவனின் ஆர்வத்திற்கு விடை அளிப்பவளாய் மட்டுமே இருப்பதால் தன்னுடலின் வேட்கைகளை தணிக்க முடியவில்லையே என ஏங்குகிறாள். மங்கை முடிந்து மடந்தையில் கால் வைக்கும் பெண்ணுடல் எதிர் கொள்ளும் தீவிரமானதும் நிதானமாக உயருவதுமான காம நதியின் பெருக்கை பதின்வயதின் ஆர்வத்துடனும் முதுவயதின் பொறுமையுடனும் நுண்மையாக விசாரணை செய்கிறது கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய இந்திரநீலம் சிறுகதை.

ஒரு வட்டத்திற்குள் நின்று காம நதிப் பிரவாகத்தின் நீள அகல ஆழங்களை அளந்து பார்த்துவிடத் துடிக்கிறாள் பாமா. இளமையின் வசீகரமும் வனப்பும் குறைந்து வரும் வயதில் தீராமல் உயர்ந்து நிற்கும் காமச் செடியின் பூக்களைப் பறித்து சூடிடவும் அதன் நறுமணத்தின் போதையில் மிதக்கவும் தன் கணவன் கண்ணனை எதிர் நோக்குகிறாள்.

காமம் பெண் உடலுக்கு எதிராக நிற்கிறது. இளமையில் தொட்டதும் பற்றி எரிந்து கரைந்து காணாமல் போகும் மெழுகாகவும் மெனோபாஸ் காலத்தில் நின்று புகையும் ஈர விறகாகவும் அவள் உடல் காமத்தின் துருவங்களைக் காட்டுகிறது.

அவள் தேவை என்னவென்று உடலியக்கத்தில் ஒருபோதும் காதல் கணவன் கேட்டதில்லை. தனக்கு என்ன தேவை என்பதை கேட்டுப் பெறும் பின்புலத்திலும் அவள் வளரவில்லை. கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குத் தரப்படும் என்பது கடவுளிடம் சாத்தியமாகலாம். ஆனால் கணவனிடம் அதன் விளைவுகள் வேறாகி விடுமோ என்ற அச்சமே நுரை பொங்கி வழியும் தன் காமத்தின் கதவுகளை குறைந்தபட்சம் ஒரு முத்தம் என்ற  அளவிலேயே மூடிக் கொள்ள வேண்டும் என பாமாவை நினைக்க வைக்கிறது. அன்றாடத்தின் சலிப்பினூடே அவளின் காம நதியின் பெருக்கை உணராமல்  கணவன் சொட்டு சொட்டாக வழிய விடுகிறான். பெருவெள்ளம் என சுழித்தோட வேண்டிய காமம் கண்ணனின் வழக்கமான அவசர இயக்கத்தில் சூம்பிப் போய் சிற்றோடையின் வடிகால் எனக் குறுகி முடிகிறது.

இந்திர நீலம் சிறுகதையாடல் வழி அ.வெண்ணிலா எழுப்பும் கேள்விகள் ஏராளம். உடல் கோரும் மென் காமத்தின் கிளர்ச்சிகளை அக்கறையோடு விசாரணை செய்யும் ஏராளமான கேள்விகள். மெனோபாஸ் காலகட்டத்தில் பெண் உடல் வழியே தோன்றிப் படரும் காமத்தினை உளவியல் விசாரணைகளால் எதிர் கொள்கிறார்.

இயல்பாய் தாவிச் செல்லும் மனம் கொண்ட நவீன பெண் அல்ல பாமா. மரபில் காலூன்றி நவீனத்தில் எழும்பி பறக்க நினைப்பவள். பறந்து சென்றுவிட நினைக்கும் பட்டத்தின் உயிர் நுனி, கரம் பிடித்தவனின் விரல்களில் சிக்கி இருப்பதை இயல்பாக எடுத்துக் கொண்டு தன் சிறகை மடக்கி வைக்கும் ஐம்பதை நெருங்கிய பெண்.

கண்ணன், பாமா, காமம், இந்திரநீலம் என ஒரு காவியச் சாயலுடன் பெண் உடல் உணர்த்தும் காமத்தை கவித்துவமாய் மொழியும் அருமையான சிறுகதை.

அன்புடன்

க. ரகுநாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைஒன்றும் செய்யாமலிருப்பதன் கலை
அடுத்த கட்டுரைவிஜயா வேலாயுதம், கடிதம்