விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை

எழுத்தாளர் சாரு நிவேதிதா நவீனத் தமிழிலக்கியத்தின் தனிக்குரலாக நாற்பதாண்டுகளாக ஒலித்து வருபவர். நவீனத் தமிழிலக்கியத்தின் பல்வேறு மரபுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்துச் சென்றவர் என அவர் அறியப்படுகிறார். தன்னை ஒரு கலகக்காரராக முன்வைக்கும் சாரு நிவேதிதா எல்லாவகையான அற,ஒழுக்க கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக தன் எழுத்தை உருவாக்குகிறார். புனைவாக தன்னையும் தன் வாழ்க்கையையும் முன்வைக்கிறார். மரபான கதைசொல்லும் முறையை தவிர்த்து வாசகனுடனான உரையாடலாகவோ, நேரடியான வாழ்க்கைக்குறிப்பாகவோ தன் கதைகளை எழுதுகிறார்.

எல்லாவகையான முறைமைகளையும் மீறிச்செல்லும் எழுத்துமுறை என்னும் பொருளில் சாரு நிவேதிதாவின் இலக்கிய அணுகுமுறை பிறழ்வெழுத்து என விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வகை எழுத்தை உருவாக்கியவர்களில் இந்தியாவில் அவரே முன்னோடியானவர். கட்டற்ற கூறுமுறை கொண்டதும், சிதறுண்ட வடிவம் கொண்டதுமான எழுத்துக்கள் வழியாக தமிழின் பின்நவீனத்துவ அலையை தொடங்கிவைத்தவராகவும் அவர் மதிப்பிடப்படுகிறார். சாரு நிவேதிதாவுக்கு இவ்விருதை அளிப்பதில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பெருமைகொள்கிறது.

(விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை)

முந்தைய கட்டுரைமமங் தாய்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதனிவழிப் பயணி