அன்புள்ள ஜெ
தற்கல்வியும் தத்துவமும் ஓர் அருமையான கட்டுரை. பொதுவாக ஆன்மிக -தத்துவ நூல்களை தொடர்ச்சியாக வாசித்து தாங்கள் தத்துவ உச்சம் நோக்கிச் செல்வதாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். அவர்களே அந்த வாசிப்பின் எல்லையை புரிந்துகொண்டலஒழிய அவர்களால் வெளிவர முடியாது. நானும் அப்படித்தான் இருந்தேன். ஏனென்றால் அதை வாசிக்கும்போது அந்த ஆசிரியர் நம்மை, நம் நுண்ணுணர்வை அங்கீகரித்துவிட்டார் என்னும் பிரமை நமக்கு ஏற்படுகிறது. சரியான தத்துவக் கல்வியை அடைந்து, பிடரியில் நாலு அடிவிழுந்து, நம் ஆணவம் கலைந்த பிறகே நமக்கு உண்மை புரிகிறது. ஆனால் கலைந்தவர்களுக்கும் கலையும் நிலையில் உள்ளவர்களுக்கும் உதவியான கட்டுரை அது.
ராமச்சந்திரன்
*
அன்புள்ள ஜெ
நலமா?
தற்கல்வியும் தத்துவமும் நல்ல கட்டுரை. அதில் சத்சங்கம் – தத்துவக் கல்வி இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு சொல்லப்பட்டுள்ளதாகவே புரிந்துகொள்கிறேன். சத்சங்கம் நல்ல கருத்துக்களை அளிக்கிறது. மனநிறைவை அளிக்கிறது. ஆனால் அது தத்துவஞானம் அல்ல. தத்துவத்தை முறையாகவே கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுக்கொள்ளவேண்டுமா, தேவை உண்டா என்பது அவரவர் முடிவுசெய்யவேண்டியது.
ஆனந்த் ராஜ்