எழுகதிரும் சினிமாவும்

எழுகதிர் வாங்க

எழுகதிர் மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ

எழுகதிர் தொகுப்பை படித்தேன். அண்மையில் வெளிவந்த முக்கியமான தொகுப்பு அது. இந்தக்கதைகளைப் பற்றி இப்படிச் சொல்வேன். வணிகக்கேளிக்கை எழுத்து உருவாக்கும் டெம்ப்ளேட்களை இலக்கியம் கையில் எடுக்கும்போது நிகழும் அற்புதம். உலகமெங்கும் நவீனத்துவம் காலியான பிறகு இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆப் த ரோஸ் தான் முதல் தொடக்கம் என நினைக்கிறேன். துப்பறியும் கதை, பேய்க்கதை என எல்லா டெம்ப்ளேட்டுகளிலும் அற்புதமான கிளாஸிக்குகள் எழுதப்படுகிறன.

எழுகதிர்கதையே சிறந்த உதாரணம். ஒரு அபாரமான திருட்டின் கதை. மிகமிக நுட்பமாக எழுதப்பட்டது. ஆனால் அதிலுள்ள அடிப்படையான மர்மம் என்பது அந்த கிழக்குநோக்கிய ஈர்ப்பு. அது ஏன்? அதை விளங்கிக்கொள்ளவே முடியாது. மகத்தான ஒரு கதை. திகைக்கவைக்கும் சாத்தியம் கொண்டது. ஒரு மிகச்சிறப்பான சினிமாவாக எடுக்க முடியும். அதற்கு ஏதாவது முயற்சிகள் நடைபெற்றனவா?

அன்புடன்

ஃபெலிக்ஸ் ஜான்

*

அன்புள்ள ஃபெலிக்ஸ்

புனைவுக்களியாட்டு கதைகளின்மேல் எல்லாருக்குமே ஆர்வமுள்ளது. ஆனால் இங்கே சினிமாக்கதைகளுக்கு இருக்கும் டெம்ப்ளேட்கள் அவற்றை அணுக தடையாக உள்ளன.

எழுகதிர் கதையை ஓடிடி சினிமாவாக ஆக்க ஒருவர் முன்வந்தார். ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் ஓடிடி அமைப்பின் தலைவருடன் பேசினேன். அவர் ‘கதைநாயகன் – வில்லன் – பிரச்சினை – சாகசம் – தீர்வு’ என்ற பாணியிலேயே அணுகினார். கதையில் அவர் இவற்றையெல்லாம் தேடி, இவற்றை புகுத்தும்படிச் சொன்னார். முயற்சி கைவிடப்பட்டது.

அவரை குறைசொல்ல முடியாது. நம் சினிமாப் பார்வையாளர்களில் கணிசமானவர்கள் அத்தகையவர்கள். சினிமா தெரியாத நம் விமர்சகர்களும், இலக்கியமும் தெரியாத இலக்கியவாதிகளும் அப்படியே அவர்களை வைத்திருக்கிறார்கள். (பொன்னியின் செல்வனிலேயே வில்லன் தெளிவாக இல்லை என விமர்சனம் வந்ததை கண்டிருப்பீர்கள்)

ஆகவே எனக்கும் அழுத்திப்பேசும் துணிவு இல்லை. சினிமா என்பது வணிகம். முதலீடு பிழைக்கட்டும் என்பதே என் கொள்கை.

ஜெ

முந்தைய கட்டுரையார் சார் வாசிக்கிறாங்க இப்பல்லாம்?
அடுத்த கட்டுரைஏற்பும் நிறைவும், கடிதம்