ஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்

ஐந்து நெருப்பு வாங்க

அன்புள்ள ஜெ

வெந்து தணிந்தது காடு எடுக்கப்பட்ட கதை அடங்கிய ஐந்துநெருப்பு தொகுப்பை வாசித்தேன். அற்புதமான கதைகள் கொண்ட தொகுப்பு அது. பலபேருக்கு அந்தக்கதையும், அந்தத் தொகுதியும் தெரியவில்லை. அந்த தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே முக்கியமானவை. குற்றம் என்பதன் மன அடுக்குகளைப் பற்றிச் சொல்பவை. நுணுக்கமான கதைகள். அதிரடிக்கும் காட்சிகள் ஏழாவது போன்ற சிலகதைகளில் இருந்தாலும் அக்கதைகளை கூர்ந்து வாசிக்கவைக்கும் பல சொல்லப்படாத விஷயங்கள் அக்கதைகளிலுள்ளன.

உதாரணமாக சுக்ரர் என்ற கதை. சுக்ரர் என்னும் கதையிலுள்ள அந்த வயதான போலீஸ்காரரின் மனநிலையைப் பற்றி நான் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தேன். தன் மொத்த வாழ்க்கையையும் ஒருவர் குற்றவாளிகளை நினைவில் வைத்திருப்பதற்காகச் செலவிடுகிறார். அவர் அசுரகுலத்துக்கு குரு என சரியாகவே கதையில் சொல்லப்பட்டுள்ளது. அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனால் மானசீகமாக ஒரு குற்றவாளியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் ரிஷிதான். ஆனால் அசுரர் உலகிலேயே வாழ்கிறார். அருமையான கதை. திகைப்பூட்டும் கதையும்கூட

ராகவேந்திரன்

***

அருமையான ஜெயமோகன்,

ஐந்துநெருப்பு தொகுப்பை வாங்கி வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். இந்தக் கொரோனாக்காலக் கதைகளை பலரும் இணையத்திலே வாசித்துவிட்டனர். ஆகவே நூல்களை குறைவாகவே வாசிப்பார்கள் என நினைக்கிறேன். நானும் அப்படி வாசித்தவனே. ஆனல் அந்த வாசிப்பு ரேண்டமாக வாசித்தது. அன்றைக்கு கதைகள் மழைபோலக்கொட்டிக்கொண்டிருந்தன. இன்றைக்கு நிதானமாக ஒவ்வொரு கதையாக வாசிக்கவேண்டியிருக்கிறது. அதற்காக அந்தக்கதைகளை அச்சில் வாசிக்க விரும்பினேன். இப்போதுதான் இந்தக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது. ஏறத்தாழ ஒரே தீம் கொண்ட கதைகள் ஒரே நூலாக உள்ளன. அந்த ஒரே தீம் ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு வகையான நாவல் அனுபவம்போல ஆக்கிவிடுகிறது. ஏழாவது கதையையும் ஐந்து நெருப்பு கதையையும் சுக்ரர் கதையையும் பக்கம் பக்கமாக வைத்து வாசித்தால் குற்றம் என்பது என்ன என்ற மாபெரும் கேள்வி வந்து நம் முன் நிற்கிறது.

ரா. முகில்ராஜன்

முந்தைய கட்டுரைஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ‍ நாவல் வெளியீட்டு விழா
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம் விழா, கடிதம்