நமது அறிவியலும் நமது புனைகதையும்

விசும்பு – அறிவியல்புனைகதைகள் வாங்க

விசும்பு மின்னூல் வாங்க 

 

இந்தக் கதைகளை நான் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே எழுதினேன் என்று சொல்லமுடியாது. கதைகள் வழக்கம்போல சம்பந்தமில்லாத ஏதோ தொடக்கப்புள்ளியில் இருந்து முளைத்து கிளைவிட்டு எழுந்தவைதான். ஆனால் இவற்றை எழுதும்போது பல காலமாகவே என் மனத்தில் இருந்த ஓர் எண்ணம் துணையாக அமைந்தது.

அதாவது அறிவியல் என்று நாம் இன்று சொல்லிக் கொண்டிருப்பது ஐரோப்பிய அறிவியலை மட்டுமே. கிரேக்க ஞானமரபில் வேர்கொண்டு, ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் பேருருவம் கொண்ட அறிவியல் அது. உலகமெங்கும் உள்ள அறிவியல் ஞானங்களை முழுக்க அது தன்னுடைய தர்க்கக் கட்டுமானத்துக்குள் கொண்டுவந்து இன்று உலகின் ஒட்டுமொத்த அறிதல்முறையாக மாறிவிட்டிருக்கிறது.

ஆனால் இது அல்லாத அறிவியல்கள் உலகில் இருந்திருக்கின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தனித்தன்மை கொண்ட அறிவியல்கள் இருந்தன. அவை ஐரோப்பிய அறிவியல்களைப் போல நவீனகாலத்துக்காகப் புதுப்பிறவி கொள்ளவில்லை. இன்றைய தேவைகளைச் சந்திக்குமளவுக்கு வளர்ச்சியும் அடையவில்லை. ஆனால் அவற்றின் மூலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்திய அறிவியலைப் பொருத்தவரை மருத்துவம், யோகம் ஆகிய இரு தளங்களில் அது மேலை அறிவியலைத் தாண்டிய பல நுண்ணிய தளங்களைத் தொட்டிருக்கிறது.

சமீபமாக உளவியலாளர் சி.ஜி.யுங்கின் எழுத்துக்களை விரிவாக வாசிக்கும்போது அது மேலும் உறுதிப்படுகிறது. யுங் இந்த உண்மையை உணர்ந்திருந்தார். மேலை உளவியல் என்பது இந்திய யோகமுறையுடன் ஒப்பிடும்போது குழந்தை நிலையிலேயே இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தன் எழுத்துக்களில் மேலை அறிவியலின் தர்க்கத்தைக்கொண்டு அதைப் புரிந்துகொள்ள யுங் மிகத்தீவிரமாக முயற்சி செய்கிறார்.

அறிவியல் புனைவு குறித்தும் எனக்கான ஒரு புரிதல் உள்ளது. அறிவியல் புனைகதைகள் என்பவை ஒரு வழக்கமான திகில்கதை அல்லது துப்பறியும் கதையில் சில அறிவியல் கூறுகளைக் கலந்துகொள்வன என்ற அளவிலேயே தமிழில் நம்மால் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அறிவியல் என்றால் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் அல்லது வியப்பூட்டும் ஊகங்கள் என்றும் நாம் எண்ணுகிறோம். ஆகவே நம் அறிவியல் கதைகள் எந்திரன்கள், வான்வெளிப் பயணம், வேற்றுக்கோள் உயிர்கள் ஆகியவை சார்ந்தே உள்ளன. இவையல்லாமல் அறிவியல் கதைகளை நம்மால் கற்பனை செய்ய இயலவில்லை.

என் நோக்கில் அறிவியல் கதை என்பது இருதளங்களில் செயல்படக்கூடியது. ஒன்று அறிவியலின் கேள்விகளுக்கு இலக்கியத்தின் வழிமுறையான கற்பனையைக் கொண்டு பதில் சொல்ல முயல்வது. இது ஒரு மேலோட்டமான தளம். இரண்டு, வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளுக்கு அறிவியலின் படிமங்களைப் பயன்படுத்திப் பதில் தேட முயல்வது.

எப்படி புனைகதையானது வரலாற்றில் இருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு வரலாற்றுக்கதைகளை உருவாக்குகிறதோ அப்படி அறிவியல்புனைவு அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு முன்செல்லவேண்டும்.. காலம், மரணம், பிறப்பு மற்றும் இறப்பின் பொருள், இருத்தலின் நோக்கம், மானுட உறவுகளின் சிக்கல்கள், மானுட உணர்ச்சிகள் என எவற்றையெல்லாம் வழக்கமாக இலக்கியம் ஆராய்கிறதோ அவற்றையே அறிவியல் புனைகதைகளும் அறிவியலின் படிமங்களைக்கொண்டு ஆராய்கின்றன.

இவ்விரு வகைகளில் எழுதப்படும் அறிவியல் புனைகதைகளுக்கே இலக்கிய மதிப்பு இருக்க முடியும்.மற்றவை வெறும் வேடிக்கைகள் மட்டுமே. அப்படிப்பட்ட இலக்கியத்தரமான அறிவியல் புனைகதைகள் அறிவியலும் மானுட ஆழ்மனமும் சந்திக்கும் புள்ளியில் இருந்து உருவாகின்றன. நம்முடைய ஆழ்மனமானது நம் மரபில் இருந்து வந்துள்ள நம் அறிவியலுடனேயே அதிகமும் உரையாடுகிறது. அதில் இருந்தே அது வலுவான படிமங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நாம் எழுதும் அறிவியல் புனைகதைகள் நம்முடைய சொந்த அறிவியலை இன்னமும் நுணுகிக் கையாளக்கூடியவையாக இருக்கவேண்டும். எப்படி நம் இலக்கியம் நம் பண்பாட்டில் இருந்து உருவாகின்றதோ அப்படி நம் அறிவியல் புனைகதைகளும் நம் பண்பாட்டில் இருந்து உருவாக வேண்டும்.

அந்த நம்பிக்கையுடன் நான் 2002 ல் இந்தக் கதைகளை திண்ணை இணைய இதழில் எழுதினேன். பின்னர் பி.கே.சிவக்குமார் முன்னுரையுடன் எனி இண்டியன் பதிப்பக வெளியீடாக இவை 2006ல் நூல்வடிவம் கொண்டன.

இவை இந்திய அறிவியல்கதைகள். தமிழ் அறிவியல் கதைகள். இந்திய, தமிழ் எழுத்தாளனால் மட்டுமே எழுதப்படத்தக்கவை. இவை ஒரு முன்னுதாரண முயற்சிகள். இன்னமும் வீரியம் கொண்ட கதைகள் இந்தத் தளத்தில் மேலும் தமிழில் உருவாகி வரவேண்டும். இவ்வகை அறிவியல் புனைகதைகள் மேலைநாட்டு அறிவியலைஒட்டி அங்குள்ள அறிவியல் புனைகதைகளைச் சார்ந்து எழுதப்படும் கதைகளைவிட தமிழ் மனத்தை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை.

இந்த நம்பிக்கை கடந்த வருடங்களில் இந்நூல் மூலம் மிக மிக உறுதிப்பட்டது. இத்தொகுப்பில் உள்ள “உற்று நோக்கும் பறவை”, “ஐந்தாவது மருந்து” போன்ற கதைகளைப் பற்றி இன்றுவரை தொடர்ச்சியான விவாதங்கள் பல தளங்களில் நடந்த படியே உள்ளன. தமிழில் வேறெந்த அறிவியல் புனைகதைகளையும் பற்றி இத்தனை கவனம் குவிக்கப்பட்டதில்லை. இவ்வளவு நீண்ட தொடர் விவாதம் நிகழ்ந்ததில்லை. காரணம், இவை பேசும் கேள்விகள் ஏற்கெனவே தமிழ் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருப்பவை என்பதும் அக்கேள்விகளை மிகத் தீவிரமாகவே இக்கதைகள் எதிர்கொள்கின்றன என்பதும்தான். அறிவியல் புனைகதை என்பது மன மகிழ்வூட்டும் ஒரு வேடிக்கைப் புனைவுதான் என்ற தளத்தில் இருந்து இக்கதைகள் மூலம் தமிழிலக்கியம் முன்னகர்ந்திருக்கிறது.

ஜெயமோகன்

(விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள விசும்பு அறிவியல்புனைகதைகள் நூலுக்கான முன்னுரை)

விசும்பு அறிவியல்புனைகதைகள் – பி.கே.சிவக்குமார்

முந்தைய கட்டுரைஊத்துக்காடு
அடுத்த கட்டுரைஎன்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கு விருது