அன்புள்ள ஜெ
வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி அமைந்துள்ளது. இந்தவகையான கதைகள்தான் பல்வேறு உத்திகள் கொண்ட புதியகதைகளை போல அல்லாமல் காலம்கடந்து நிற்கின்றன என நினைக்கிறேன்.
ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் இசக்கி என்றகதையும் அந்த மனநிலை நோக்கிச் செல்லமுயலும் கதையாகத் தோன்றியது. பொதுவாகவே வல்லினம் இதழின் எல்லா படைப்புக்களுமே சிறப்பாக இருந்தன. சிகண்டி பற்றி இளம்பூரணன் கட்டுரை ரம்யாவின் மெக்தலீன் எல்லாமே சிறப்பான கதைகளாக தெரிந்தன.
அருண் ராஜ்குமார்