மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்

அன்புள்ள ஜெ,

அய்யனார் விஸ்வநாத் ,கூகிள் பஸ்ஸில் இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று அறிய விரும்புகிறேன்

மஞ்சூர் ராசா

முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனித விரோதக் கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப் பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற் சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப் பட்டு விட்டன. கிராமங்களில் நில உடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர் பூச்சுடன் அப்படியே பேணப் பட்டமையால் தலித்துக்கள் கூட்டம், கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கி விட்டார்கள்/

மேற்கண்ட வரிகளை ஜெயமோகனின் கல்கத்தா நகரத்தைப் பற்றிய பதிவில் படித்த போது நிஜமாகவே இரத்தம் கொதித்தது. மிகச் சிரமப் பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு இரண்டு நாள் கழித்து இதை எழுதுகிறேன்.
என் வாசிப்பின் மீது எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை நான் வாசித்த எழுத்தாளர்களிலேயே மிக வன்மமும், வக்கிரமும் கொண்ட எழுத்து ஜெயமோகனுடையதுதான். தான் நம்பும் ஒன்றிற்காக மற்ற எல்லாவற்றையும் தரை மட்டமாக்கி, வேரோடு பிடுங்கி எறிவதில் ஜெயமோகன் விற்பன்னர்.

தலித்துகள் நகரத்திற்குள் வந்ததால் நகரம் சேரியானதாம். என்ன மாதிரியான சாதி வெறி இது. வார்த்தைகள் தடித்து விடுமோ என பயந்து கொண்டேதான் எழுத வேண்டியிருக்கிறது. இந்தத் தீட்டு மனப்பான்மையைக் கூட விட்டொழிக்க முடியாத ஒரு நபரை எந்தக் கெட்ட வார்த்தையால் திட்டுவது எனக் குழம்பிப் போய் இருக்கிறேன்.

கல்கத்தாவில் என்ன மன்னராட்சியா நடந்தது? மக்கள் விரோத ஆட்சியென்றால் அதை மக்களே களைந்திருப்பார்களே. முப்பது ஆண்டுகளாக ஒரே ஆட்சி நடைபெறுவது சாதாரணமான விஷயமில்லையே. அதை சாதித்துக் காட்டியவர்கள் எப்படி மனித விரோத கும்பலாவர்? என்னய்யா எழுதுறீங்க உங்களுக்கு ஒரு சித்தாந்தத்தைப் புடிக்கலனா அத புடிச்சவன்லாம் மனுச விரோதியா?

ஜெயமோகன் இந்தியாவின் எந்தப் பெருநகரத்திற்கும் போனதில்லையா என்ன? புனிதர்களாலே ஆளப்பட்டு வரும் மும்பை பக்கம் ஒரு நடை போய் வந்தாலாவது இந்தியா வறுமை மிக்க, பிச்சைக்காரர்களாலும், சாலையோர மனிதர்களாலும் நிறைந்திருக்கக் கூடிய நாடு என்பது அவரின் தூய மனதிற்குத் தெரிந்திருக்கலாம். அல்லது அவரின் நெருங்கிய நண்பரான நாஞ்சில் நாடனிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

பயணங்கள் மூலம் புதிய பார்வையை அடைய முடியும் என்பார்கள். ஜெ எவ்வளவு தூரம் பயணித்தாலும்,எழுதியே எண்ணற்ற காடுகளை அழித்தாலும் அவரால் தன் வக்கிரங்களிலிருந்து வெளிவர முடியாது என்பதுதான் உண்மை. இப்படி ஒரு வக்கிரத்தைக் கொட்டுவதற்குக் கல்கத்தா போக வேண்டியதில்லை. வழக்கமான அவரது குருகுல பஜனையே போதுமானது.

===============================

அன்புள்ள மஞ்சூர் ராசா,

இந்த அய்யனார் என்பவர் யாரெனக் கேள்விப்பட்டதில்லை. ஓர் இடதுசாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விழையும் ஒருவராக இருக்கலாம், அல்லது இடதுசாரிக் கட்சித்தொண்டர் எவராவது இப்பெயரில் எழுதலாம். இம்மாதிரி அடிப்படை வாசிப்போ, புரிதலோ இல்லாமல் உள்நோக்குடன் நடத்தப்படும் வெட்டி விவாதங்கள் பிரசுரமாவதும், கவனம் பெறுவதும் இணையம் அளிக்கும் தீய விளைவுகளில் முக்கியமானது. பெரும்பாலும் நேர விரயம். ஆகவேதான் நான் இந்த ’பஸ்’ போன்ற விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.

இந்த விஷயத்தில் எனக்கே சில சொல்ல இருக்கிறதென்பதனால் என் விளக்கத்தைச் சொல்கிறேன். அது பெரும்பாலும் வங்க அரசியல் சார்ந்த விளக்கம்தான். ஆனால் இக்குரலுடன் பெரிய விவாதங்களுக்கெல்லாம் நான் தயாராக இல்லை.

*

முதல் விஷயம் இந்தக் குற்றச்சாட்டில் உள்ள தொனி. ’தான் நம்பும் ஒன்றிற்காக மற்ற எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி, வேரோடு பிடுங்கி எறிவது’ என்னவென்று இந்தக் குறிப்பே காட்டுகிறது. இதில் மேற்கோளிடப்பட்டிருக்கும் என் வரிகளே தெளிவாக உள்ளன. பொதுவாக இந்த மாதிரி வெட்டித் தர்க்கங்களைப் பார்த்துப் பார்த்துத் தெள்ளத் தெளிவாக எழுதப் பழகி விட்டிருக்கிறேன். சம்பந்தமில்லாமல் வெட்டி எடுத்து வசை பாடும் கும்பலுக்குக்கூட வாகான வரிகள் எளிதில் பிடிபடுவதில்லை.

நான் சொன்னது என்ன? வங்காளத்தில் இன்னும் கிராமங்களில் இடதுசாரிப் பூச்சுடன் நிலப் பிரபுத்துவம் பேணப்படுகிறது. ஆகவே அங்கே நில அடிமைகளாக இருந்த தலித்துக்கள் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இருக்கும் ஒரே நகருக்குப் பிழைப்புத் தேடி வந்து குழுமுகிறார்கள். கல்கத்தாவிலும் வாழ வழியில்லாமல் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்திருந்த சேரிகளையே கல்கத்தாவிலும் உருவாக்கிக் கொண்டு அதில் வாழ்கிறார்கள். அக்கட்டுரை முழுக்க அந்த மக்களின் அன்றாட அவலத்தின் சித்திரம் உள்ளது. அதன் நீட்சியாக இந்த வரி அம் மக்களின் அவலம் கண்டு, அதற்கான காரணம் உணர்ந்து, அதன் குமுறலாக வெளிப்பட்டிருக்கிறது.

தலித் மக்கள், பொருளியல் வளர்ச்சியாலும், புது வாய்ப்புக்களுக்காகவும் கல்கத்தா வந்து தங்கி வாழ, அப்படி அவர்கள் தங்கியதனால் கல்கத்தா தீட்டுப் பட்டுவிட்டதாக நான் சொல்வதாக இந்த வரி திரிக்கப் பட்டுப் பொருள் கொள்ளப் படுகிறது. அதற்கான முகாந்தரம் அக்கட்டுரைகளிலோ, வேறு கட்டுரைகளிலோ காண முடியாது.  சேரி என்ற சொல்லுக்குத் தலித் குடியிருப்பு என்றல்ல பொருள். ஆங்கிலத்தில் ஸ்லம் என்று சொல்லின் தமிழ் அது.

தெளிவாகவே கட்டுரையில் என் எண்ணம் சொல்லப் பட்டுள்ளது. இருந்தாலும் இந்தத் திரிபு ஏன் செய்யப் படுகிறது?

இது நம் சூழலில் உள்ள ஓர் உத்தி. ஒரு விஷயத்தைத் தர்க்கபூர்வமாக எதிர் கொள்ள முடியவில்லை என்றால் ஒர் அதீத அற நிலைப்பாட்டை பாவனை செய்வது. அந்த நிலைப்பாட்டில் நின்று கொண்டு எதிர்த்தரப்பின் ஒரு வரியைப் பிடுங்கி  உச்சகட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பை நடிப்பது, மனிதாபிமானம் கசிவது, அறச்சீற்றமாக எரிவது. அந்த சந்தடியில் தன்னுடைய சுய நலங்களை, அற்பத் தனங்களை, இரட்டை வேடங்களைத் திறமையாக மறைத்துக் கொள்வது. அதுதான் இது.

அதிலும் இந்த மாதிரி மாற்றுக் கருத்தைப் பீராய்ந்து அதில் தலித் விரோதத்தைக் ’கண்டுபிடித்து’  தர்மத்தின் தலைமகனாகக் கொந்தளிப்பது தமிழக நடுநிலைச் சாதிகளைச் சேர்ந்த சாதி வெறியர்கள் பல காலமாகச் செய்து வரும் ஒரு கேவலமான உத்தியே அன்றி வேறல்ல. அந்த பருப்பு,சென்ற சில வருடங்களாக வேகாமலாகி விட்டிருக்கிறது.  இந்த மனிதாபிமானக் கொந்தளிப்புகளுக்குப் பின்னால் உள்ளது வெறுப்புக்குரிய சாதி வெறியும், அதிகார நோக்கும் மட்டுமே என அவர்களுக்கு இன்று தெரியும்.

ஒரு போதும் ஒரு தலித், என் வரிகளை இப்படிப் பொருள் கொள்ள மாட்டார். இன்று வரை தமிழக தலித் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் நட்புக்கும், மதிப்புக்கும் உரியவனாகவே, அந்தரங்க நண்பனாக இருந்து கொண்டிருக்கிறேன் என்பதே அதற்குச் சான்று. ஏனென்றால் நான் என்ன சொல்கிறேனோ அதுவே நான். அது முற்போக்கோ, பிற்போக்கோ ஒருபோதும் பாவனை இருக்காது.  தலித் நண்பர்களைப் பொறுத்தவரை அவர்கள் அருவருப்பதே இந்த வகையான போலிக் கரிசனங்களுக்குள் இருக்கும் அரசியல் சதிகளைத்தான் என்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்த இணையத் தளத்திலேயே மேற்கு வங்க இடதுசாரி ஆட்சி எப்படி தலித் ஒடுக்குமுறை அரசாக இருந்தது என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதை விரிவாகச் சொன்ன முதல் தமிழ் எழுத்தாளனும் நானே. சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான தலித்துக்கள் படுகொலை செய்யப் பட்ட, இந்திய வரலாற்றின் மிகப் பெரிய தலித் படுகொலையான, மரிச்சபி நிகழ்வு பற்றி அரை நூற்றாண்டுக் காலத்தில் முதலில் தமிழில் எழுதியவனே நான் தான் என நினைக்கிறேன். அதைப் பற்றி ஒரு சொல் விளக்கம் சொல்ல இவர்களால் முடியவில்லை, இன்றுவரை.

அப்படிச் சொல்ல ஏதுமில்லாத போது இவர்கள் செய்யும் உத்திதான் இது. அதைச் சுட்டிக் காட்டுபவனை தலித் விரோதி என்று கை நீட்டுவது. அதற்காக வரிகளைப் பிடுங்கி விளக்கம் கொடுப்பது. அதைத்தான் அரை நூற்றாண்டாக மீண்டும், மீண்டும் செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கில் தலித்துக்கள் தங்கள் சொந்த கட்சிக் குண்டர்களால் கொல்லப் பட்ட நிகழ்வுகளைக் கேட்கையில் கொதிக்காமல், குளிர்ந்து வாய் மூடிக் கிடந்த ரத்தம், பல லட்சம் தலித்துக்கள் நகரத் தெருக்களையே சேரிகளாகக் கொண்டு நரக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செய்த ஆட்சியைக் கண்டு கொதிக்காமல் அதை நியாயப்படுத்த நுரைத்துக் கொந்தளிக்கும் அந்த ரத்தம் , அந்த அநீதியைச் சுட்டிக் காட்டுபவனின் ஒரு வரியை மனம் போலப் பொருள் கொண்டு,கொதியோகொதி என்று கொதிக்கிறது.

மரிச்சபி பற்றிய நிகழ்வுகளை ஒருவருடம் முன்னால் விரிவாக இந்தத் தளத்தில் எழுதியிருந்த போது இணைய உலகில் கொஞ்சமாவது அசைவு இருக்கும் என  எதிர் பார்த்தேன். ஆழமான மௌனம் தான் காணக் கிடைத்தது. அவ்வளவு பெரிய தலித் படுகொலை நடந்திருப்பதும் அது முழுமையாக மறைக்கப் பட்டிருப்பதும் எவருக்குமே ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஆனால் இப்போது இந்தத்திரிபைக் கையில் எடுத்துக் கொண்டு கொந்தளிக்கிறார்கள்.

நம்முடைய  நடுநிலை ஆதிக்க சாதிகளின் மனநிலையே அதுதான். அவர்களுக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த தலித்துக்களும் கொல்லப் பட்டாலும் எந்த மனசாட்சிப் பிரச்சினையும் இருக்காது. அமைதி காக்க முடியும். ஆனால் அவர்களின் ஆதிக்கத்துக்கும், தந்திரங்களுக்கும் எதிராக ஒருவர் பேசமுயன்றால் அவரை தலித் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொந்தளிப்பார்கள். இவர்கள் பேசும் தலித்திய ஆதரவு என்பது இந்தக் கீழ்த்தர அரசியல் தந்திரம் மட்டுமே.

உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது, இந்த ஆசாமிகளுக்கெல்லாம் மனசாட்சியோ, வெட்கமோ கிடையாதா? தங்கள் சாதிக் கூட்டத்துடன் தனியே இருக்கும் போதாவது இதைப் பற்றிக் கொஞ்சம் குற்றவுணர்ச்சியுடன் பேசிக் கொள்ள மாட்டார்களா?

*

இந்தப் பதிவில் அவர் சொல்லும் இரு கருத்துக்கள். ஒன்று, கல்கத்தாவிலும் பிற இந்திய நகரம்போல வறுமை இருக்கிறது அவ்வளவுதான். இரண்டு, மக்களாதரவால் மேற்கு வங்கத்தில் இது வரை இடதுசாரிகளின் ஆட்சி நீடித்தது. இந்த இரு பொய்களை நிலை நாட்டவே முதலில் சொல்லப் பட்ட போலியான உணர்ச்சிக் கொந்தளிப்பு நடிக்கப் படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்

கொஞ்சம் வாசிப்பவராக இருந்தால் கல்கத்தாவின் குடிசைப் பகுதிக்கும், தெருவாழ்க்கைக்கும், வறுமைக்கும் சீரழிவுக்கும் வேறெந்த இந்திய நகரத்திலும் இணை கிடையாதெனத் தெரிந்து கொண்டிருப்பார். டி என் சேஷன் முதல் இந்திய தேர்தல் கமிஷனர்களே மேற்கு வங்கத்தில் இன்று வரை  வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதன் மூலமே தேர்தல்கள் வெல்லப் பட்டிருக்கின்றன என்பதை மீண்டும், மீண்டும் பதிவு செய்திருப்பதை வாசித்திருப்பார்.

இது அப்பாவித்தனமெல்லாம் இல்லை. மோசடி. அந்த மோசடிக்குத் தீவிரம் கூட்ட ஒரு கலை நிகழ்ச்சி. உணர்ச்சி நாடகம்.

*

மேற்கு வங்கச் சூழலைப் பற்றி நான் சொன்ன அந்த வரிகளுக்குப் பின்னால் இதுகாறும் நான் பேசி வந்த விஷயங்கள் உள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்காகவே நான் மேலே பேசுகிறேன். இந்தத் தருணத்தில் அவற்றை மீண்டும் தொகுத்துச் சொல்லலாமென நினைக்கிறேன்.

இந்திய மாநிலங்களில் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு மேற்கு வங்கத்திற்கு உண்டு. அங்கே பிராமணர்களின் சதவீதம் பிற மாநிலங்களை விட  அதிகம். ஆகவே அவர்கள் ஒரு அதிகார சக்தி.  பொதுவாகத் தென்னிந்திய பிராமணர்களுக்கும், வட இந்திய பிராமணர்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. இங்கே பிராமணர்கள் குத்தகை வாங்கும் நில உடைமையாளர்களே ஒழிய நிலக் கிழார்கள் அல்ல. ஆனால் வடக்கே பூமிகார் பிராமணர்கள் நிலக்கிழார்கள். அதாவது வேளாளர் பண்பாடுள்ள பிராமணர்கள்.

மேற்கு வங்கத்தில் விளை நிலம் கணிசமான அளவுக்கு பிராமண நிலக் கிழார்களிடம் இருக்கிறது. அடுத்த படியாகக் காயஸ்தர்களிடம். மேற்குவங்கத்தில் இரு ஆதிக்கச் சாதிகள் இவர்களே. வங்காள பிராமணர்கள் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு செலுத்தினர். ஆனால் அவர்களின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி காந்தியிடம் முரண்பட்டு விலகிச் சென்ற போது அவர்களும் காங்கிரஸிடம் அன்னியமாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாகவே நீடித்தனர். பிரிட்டிஷாருக்காக ஒரிஸாவையும், அஸ்ஸாமையும், பீகாரையும் ஆண்டவர்கள் அவர்கள்தான். வங்காள பிராமணர்கள் மேல் அந்தக் கசப்பு இன்னும் அஸ்ஸாமிலும், பீகாரிலும், ஒரிஸாவிலும் உள்ளதைக் காணலாம்.

ஆகவே வங்க காங்கிரஸ்  பெரும்பாலும்  காயஸ்தர்களின் கட்சியாக இருந்தது. ஆனால் ஒருபோதும் வலுவான நிலையில் இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலக் கட்சிகளைத் திரட்டி மத்திய அரசின் பலத்தில் ஒரு அரசு அங்கே அமைந்தது. காயஸ்தரான விதான் சந்திர ராய் 62 வரை முதல்வராக இருந்தார். இக்காலகட்டத்தில் மெல்ல, மெல்ல வங்க பிராமணர்கள் இடதுசாரிகளாக ஆனார்கள். காயஸ்தர்களுக்கு எதிரான சமூகத் துருவப் படல் தான் அது. இடதுசாரிக் கட்சிகளில்  இன்று வரை இருக்கும் பிராமண ஆதிக்கம் அவ்வாறு உருவானது.

பங்க்ளா காங்கிரஸ் பார்ட்டி போன்ற மாநிலக் கட்சிகள் வழியாகவும், பிராமண நிலப்பிரபுக்கள் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்தனர். அறுபதுகளுக்குப் பின் அரசியல் சமநிலை குலைய ஆரம்பித்தது. கூட்டணி ஆட்சிச் சதுரங்கம் ஆரம்பித்தது.  ஒருவருடம் கூட நீளாத கூட்டணி ஆட்சிகள். கட்சித் தாவல்கள். ஆளுநர் ஆட்சிகள். ஒரு கட்டத்தில் வங்க அரசியல் இந்திய அரசியல் சூழலில் ஒரு பெரிய கேலிக் கூத்தாக ஆகியது.

இந்நிலையில் இரு முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் அரசியலைப்  பாதித்தன. ஒன்று, நக்சலைட் எழுச்சி. அறுபத்தேழில் சந்தால் போராட்டமாக வெடித்த அந்தக் கலகம் மெல்ல நகர்ப்புற இளைஞர்களின் கிளர்ச்சியாக ஆகியது. அவர்கள் பெரும்பாலும் முன்னாள் இடதுசாரிக் கட்சியினர். அவர்கள் சொன்ன முக்கியமான குற்றச் சாட்டே இடதுசாரிக் கட்சிகள் பிராமண நிலச்சுவான்தார்களால் கைப்பற்றப் பட்டு விட்டன, அந்நிலக்கிழார்கள் தலித்துக்களை மோசமாக அடக்கிச் சுரண்டுகிறார்கள் என்பதுதான்.

இத்தருணத்தில் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தது. இந்தியாவுக்கு வங்க தேச அகதிகள் பெருகி வந்தனர். அவர்களைக்  காங்கிரஸ் ஊக்குவித்தது. பாகிஸ்தானை உடைக்க முடிவெடுத்திருந்த இந்திரா காந்தி, அவர்களை முன்னிறுத்தி ஒரு போரை ஆரம்பித்துக் கிழக்கு வங்கத்தைத் தனி நாடாக்கினார். இந்தத் தருணத்தைப்  பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் மாநிலத்தில் ஆளுநர் அரசை கொண்டு வந்தது. சித்தார்த்த சங்கர் ரே ஆளுநரானார்.

ரே 1972ல் தேர்தலில் வென்று முதல்வரானார். அந்த வெற்றிக்கான காரணங்களில் பாகிஸ்தான் போருக்குப் பின் இந்திரா காந்திக்கு இருந்த பிம்பம் ஒரு காரணம். ஆனால் அதற்கு இணையான இன்னொரு காரணம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் அனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒன்றுண்டு. வந்து கொண்டே இருந்த வங்க அகதிகளுக்கு இடமளித்து சட்டபூர்வமற்ற முறையில் குடியுரிமை அளித்து அவர்களை வாக்கு வங்கியாக ஆக்கிக் கொண்டது காங்கிரஸ். அந்த உத்தி இன்று வரை அஸ்ஸாமில் காங்கிரஸுக்குக் கைகொடுக்கிறது.

ரே, நக்சலைட் புரட்சியைக் கொடுமையான முறையில் ஒடுக்கினார். இந்திய அரசு,இந்தியக் குடிமக்களை அதிகளவில் கொன்றது அப்போதுதான். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களை ரேயின் அரசு கொலை செய்தது. 1975ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்படவே ரே ஒரு முக்கியமான காரணம் எனப்படுகிறது.

பலரும் அறியாத ஒன்றுண்டு. இந்தக் கொலைகளில் இடதுசாரிகள் ரேவுக்குத் துணை நின்றனர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, ரேயுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது அப்போது. நக்சலைட்டுகள் பெரும்பாலும் முன்னாள் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர்கள் என்பதனால்  அவர்களை, இவர்கள் அடையாளம் காட்டமுடிந்தது. வேட்டை வண்டிகளில் ஒரு உள்ளூர் தோழர் எப்போதும் இருப்பார் என்பதை எத்தனையோ நினைவுக் குறிப்புகளில் இன்று வாசிக்கலாம்.

ரே,இடதுசாரிகளைப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் இடதுசாரிகள்,ரேயைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நக்சலைட்டுகள் அவர்களின் முதல் எதிரிகளாக அன்றும், இன்றும் கருதுவது இடதுசாரிகளையே. ஆகவே இடதுசாரிகள் தங்கள் எதிரிகளான  ரேயுடன் ஒத்துழைத்து நக்சலைட்டுகளை அழித்தனர். பலநூறு நூல்கள் வழியாக இன்று இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்கொரு சமூகத் தளம் உண்டு. இடதுசாரிகளான பிராமண நிலச் சுவான்தாரர்கள் தலித் உழைப்பை நம்பியே வேளாண்மை செய்து வந்தனர். தலித்துகளுக்கான கூலி, நில உரிமைக் குரல்கள் எழுந்து வந்ததை அவர்கள் ஒடுக்கினர்.  அவ்வாறு ஒடுக்கப் பட்ட தலித்துக்களின் குரலாகவே நக்சலைட்டுகள் எழுந்து வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்றும் அவர்களே தலித்துக்களின் குரல். அக்குரலை அழிக்க ரேயும் இடதுசாரிகளும் கைகோர்த்தனர்.

இந்திய அரசியலில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடி நிலையின் போது இந்திரா காந்தியுடன் கைகோர்த்து நின்று, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் அதிகாரத்திலும் பங்கெடுத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, நெருக்கடி நிலை முடியும் நிலையில் சட்டென்று எதிர்த் தரப்பாக ஆகிப் பழியில் இருந்து தப்பியதுதான். ரே நடத்திய படுகொலைகளால் வங்கத்தில் காங்கிரஸ் அழிந்தது. இடதுசாரிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெருங்கூட்டணியை அமைத்தன. 1977 தேர்தலில் ஜோதிபாசு முதல்வரானார். அன்றுமுதல் இவ்வருடம் வரை அங்கே நிகழ்ந்தது இடதுசாரிக் கூட்டணி ஆட்சிதான்.

நெருக்கடி நிலைக்கு எதிரான கோஷங்கள் ஜோதிபாசுவுக்கு உதவின. ஆனால் மிக முக்கியமான கோஷமாக இருந்தது ‘வங்காளம் அனைத்து வங்காளிகளுக்கும் தாய் நாடு’ என்ற கோஷம். வங்க அகதிகளின் வாக்குகளை அவருக்குச் சாதகமாக திருப்பியது அது. ஆட்சிக்கு வந்தபின் அந்த வாக்கு வங்கியைப் பெருக்குவதை இடதுசாரிகள் திட்டமிட்டுச் செய்தார்கள். எல்லைப்புற நிலம் முழுக்க வங்க அகதிகளுக்கு அளிக்கப் பட்டது. குடியுரிமை உட்பட எல்லாமே சட்ட விரோதமாக அளிக்கப் பட்டன. அது மிக வலுவான ஒரு வாக்கு வங்கியாக ஆகியது.

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி வந்து அந்த நாடு அரசியல் சிக்கலுக்கும், பெரும் வறுமைக்கும் செல்லச் செல்ல அகதிப் பிரவாகம் அதிகரித்தது. இந்த சட்ட விரோதக் குடியேற்றத்தை இருபதாண்டுக் காலம் திட்டமிட்டு செய்தது வங்க அரசு. அது மேற்கு வங்க கிராம அமைப்பில் உருவாக்கிய விளைவு தான் இடதுசாரிச் செல்வாக்கை முப்பதாண்டுக் காலம் நிலை நாட்டியது.

மேற்கு வங்க கிராமப்புற பிராமண நிலச் சுவான்தாரர்கள், வந்து குடியேறிய வங்க தேச அகதிகளைக் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒரு குண்டர் படையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கு வங்கத்தில் சென்ற கால கட்டத்தில் நிலச் சீர்திருத்தம் என்ற பேரில் வழங்கப் பட்ட நிலம் முழுக்கக் குடியேறிகளான வங்க தேசத்தார்களுக்கே கொடுக்கப் பட்டது. தலித்துக்கள் அதே ஒடுக்கு முறைக்குள் நில அடிமைகளாகவே வைக்கப் பட்டார்கள். மொத்த கிராமமே நிலக்கிழார்களின் கட்டுப் பாட்டுக்குள் கால் நூற்றாண்டுக் காலம் இருக்க நேர்ந்தது.

மேற்கு வங்கத்தில் நிலவிய சூழல் பற்றி இப்போது விரிவாகவே எழுதப் பட்டு விட்டது. நில உடைமையாளர்கள், அரசு இயந்திரம், கட்சி ஆகிய மூன்றும் ஒன்றே ஆக மாறிய நிலை. காவல் நிலையங்களே உள்ளூர் மார்க்ஸியத் தலைவரான நிலப்பிரபுவின் கட்டுப் பாட்டில் செயல் பட்டன. மேற்கு வங்கத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் சட்ட விரோத வெடி ஆயுதங்கள் உள்ளன என்பது இந்திய உளவுத் துறை அறிக்கை. மம்தா பானர்ஜியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியே அந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவேன் என்பதே- செய்யவே முடியாதென்று அங்கே இதழாளர்கள் சொல்கிறார்கள்.

எதற்காக இத்தனை ஆயுதங்கள்?  சட்டம் ஒழுங்குப் பராமரிப்பை அரசே அந்தந்த ஊர் நிலக்கிழார்களுக்கு விட்டு விட்டது. அவர்களின் ஆதிக்கத்துக்கு கீழே அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்களைச் சுரண்டவும் ஒடுக்கவும்தான் அந்த ஆயுதங்கள். பீகாரில் கூட அப்படி ஒரு நிலை இருந்ததில்லை.

இந்தச் சூழலில் அங்கே தேர்தல் எப்படி நிகழ்ந்திருக்கும்? கணிசமான மேற்கு வங்க கிராமங்கள் நீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டவை. ஒரு தீவு ஒருவர் கையில் இருக்கிறது. அங்கே வேறு கட்சியே இருக்க முடியாது. காங்கிரஸ் சின்ன நகரங்களில்தான். ஒட்டு மொத்த ஓட்டே குண்டர்களால் மொத்தமாகப் போடப்படும். தொழிற் சங்க அரசியலால் முழுக்க, முழுக்கக் கைப்பற்றப்பட்டுள்ள அரசு இயந்திரமும் அதனுடன் இணைந்து கொள்ளும் போது ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு சுதந்திர தேர்தலை நடத்த முயன்று தோற்ற சேஷன், அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். தேர்தல்களில் எப்போதுமே தலித்துக்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப் பட்டதே இல்லை என நக்சலைட்டுகள் எழுதுகிறார்கள்.

இப்போது என்ன நிகழ்ந்தது? முக்கியமான ஒரு திருப்பம், இடதுசாரிகளின் ஆயுத பலமாக இருந்த குடியேறிகளிடம் வந்த மனநிலை மாற்றம். அவர்களின் இரண்டாவது தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் ’நன்றி உணர்ச்சி’ இல்லை. அவர்களைக்  குடியேற அனுமதித்த இடதுசாரிகளிடம் அவர்களுக்குக் கடப்பாடு ஏதும் இல்லை. அவர்கள் வேரூன்றி விட்டார்கள். ஆகவே அடுத்த கட்ட உரிமைக் குரல் எழுந்தது. இம்முறை அது மதவெறி சார்ந்தது.

இந்தக் குடியேறிகளிடம் வங்க தேசம் வழியாக வந்த ஜிகாதி அமைப்புகள் மத வெறியை ஊட்டின. அவை முழுக்க இன்று உள்நாட்டுத் தீவிரவாதத்தின் விளைநிலங்கள். இயல்பாகவே வங்க தேச பிராமண நிலச்சுவான்தார்கள் இதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் பிரிவினையின் ரத்தத்தை அறிந்தவர்கள். ஆகவே குடியேறிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் வங்கம் முழுக்க மோதல்கள் உருவாயின.

சீனப் பின்புல ஆதரவுடன் வட கிழக்கில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக மாவோயிசம் கொஞ்சம், கொஞ்சமாக வங்கத்தில் செலுத்தப் பட்டது. வங்கத்தில் தலித் பகுதிகளில் எப்போதுமே நக்சலைட் அரசியல் உண்டு. அது மீண்டும் வளர்த்தெடுக்கப் பட்டது.  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் மாவோயிஸ்டுகள் வங்க தேசக் குடியேறிகளின் மதவாத அரசியலுடன் கைகோர்த்துக் கொண்டனர்.

இந்தப் புதிய அரசியல் நகர்வு,திருணமூல் காங்கிரஸை உற்சாகம் கொள்ளச் செய்தது. அது முழுக்க, முழுக்க ஒரு நகர்ப்புற வணிகர் கட்சி.  அது கிராமத்துக்குள் ஊடுருவ இடதுசாரி நிலக் கிழார்கள் அனுமதித்ததே இல்லை. இப்போது இடதுசாரிகளின் கையில் இருந்த  குடியேறிகளின் குண்டர் படைத் தரப்பு மாறுவதைத் திருணமூல் காங்கிரஸார் கண்டார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆக, மார்க்ஸிஸ்ட் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக ஒரு பெருங்கூட்டணி உருவானது.

சிறந்த உதாரணம், நந்தி கிராமம். அங்கே 60 சதவீதம்பேர் குடியேற்ற முஸ்லீம்கள். ஆனால் நில உடைமையாளர்கள் இடதுசாரிகளான பிராமணர்கள். ஓரு ரசாயன ஆலைக்கான நிலம் கையகப் படுத்தப் படுவதற்கு எதிராக எழுந்த பிரச்சினையை ஜமாயத் உலமா இ ஹிண்ட் என்ற [வங்க தேசத்தை மையமாக்கிய] இஸ்லாமிய தீவிரவாத அமைப்பும், மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கிளர்ச்சியாக ஆக்கினார்கள்.’ நந்தி கிராமம் ’விடுவிக்க’ப் பட்டது. அங்கே வாழ்ந்த மார்க்ஸிய நிலப்பிரபுக்கள் கொன்றே ஒழிக்கப் பட்டார்கள். பிறர் அடித்துத் துரத்தப் பட்டார்கள். அதை மார்க்ஸிய அராஜகத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று சித்தரிக்க நம்முடைய ஊடகங்கள் சிரத்தை எடுத்துக் கொண்டன.

இப்போது திருணமூல் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி என்பது மாவோயிஸ்டுகளுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குடியேறிகளுடனும் செய்து கொண்ட சமரசத்தின் விளைவே. இன்று வரை மார்க்ஸிய ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்த குண்டர் படை இப்போது இந்த அம்மாளின் கைக்கு வந்து விட்டிருக்கிறது. எந்த நிர்வாகத் திறனும் இல்லாத, வறட்டுப் பிடிவாதமும் நிலையற்ற புத்தியும்கொண்ட, சந்தர்ப்பவாதியான மம்தா மேற்கு வங்கத்தை மேலும் இருளுக்குக் கொண்டு செல்லவே வாய்ப்பு.

அதேசமயம் மம்தாவின் சரிவை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவர்கள்மேல் மக்கள் மேலும் மேலும் நம்பிக்கையிழக்கவே வாய்ப்பு மிகுதி. மம்தா உருவாக்கியிருக்கும் வங்கதேச குடியேறி இஸ்லாமியர்+ தீவிர இடதுசாரிகள் கூட்டணி வங்கத்தைக் கைப்பற்றலாம். அவர்களுக்கு எதிராக மக்கள் கையறுநிலையில் இருப்பார்கள்.

*

மரிச்சபி, நந்தி கிராமம் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுக் கொண்டு என்ன நிகழ்ந்திருக்கிறது எனப் புரிந்துக் கொள்ளலாம். மரிச்சபி என்பது மேற்கு வங்காளத்தில் சுந்தரவனக் காடுகளில் உள்ள ஒரு ஆற்றிடைக்குறை நிலம். அங்கே தான் இந்திய வரலாற்றின் ஆகப்பெரிய தலித் படுகொலை,இந்திய கம்யூனிஸ்டு[மார்க்ஸிஸ்ட்] கட்சித் தொண்டர்களால் செய்யப் பட்டது.

அந்த வரலாறு இது தான். 1971ல் இந்திய பாகிஸ்தான் போரின் போது ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வங்காள தேசத்தில் இருந்து வந்தார்கள். அவர்களில் கணிசமானவர்கள் தலித்துக்கள். அவர்கள் தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் தங்க நேர்ந்தது,ஒரு சோகமான விதி விளையாட்டு. வங்காளம் தீவிரமான தலித் எழுச்சியை 1920களிலேயே உருவாக்கிக் கொண்ட நிலம். நாம சூத்திரர்கள் என அழைக்கப் பட்ட தலித்துக்கள், வலுவான ஓர் அரசியல் அமைப்பாகத் திரண்டார்கள். அவர்களின் தலைவர்,ஜோகேந்திரநாத் மண்டல்.

இந்திய சுதந்திரப் போரின் அரசியல் சதுரங்கத்தில் ஜோகேந்திரநாத் மண்டல்  ஒரு நிலைப்பாடு எடுத்தார். வங்காளத்தின் நிலப்பிரபுக்கள் பிராமணர்களும், காயஸ்தர்களும்தான். முஸ்லீம்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள். தலித்துக்கள், நில அடிமைகள். ஆகவே நிலப்பிரபுக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டார் ஜோகேந்திரநாத் மண்டல்.   முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். தேசப் பிரிவினையின் போது கிழக்குப் பாகிஸ்தானிலேயே இருந்தார். அங்கே சட்ட அமைச்சராகவும் பணியாற்றினார். அவரை நம்பி நாமசூத்திரர்கள் பெரும்பாலும் கிழக்குப் பாகிஸ்தானிலேயே இருந்தார்கள்.

ஆனால் மெல்ல, மெல்ல நாம சூத்திரர்கள் முஸ்லீம் பெரும்பான்மையின் தாக்குதலுக்கு ஆளானார்கள். கூட்டம் கூட்டமாகக் கொல்லப் பட்டார்கள். அதைப் பலமுறை முறையிட்டும் ஏதும் நடக்காததனால் மனமுடைந்து தன் குமுறலைக் கடிதமாக எழுதி அறிவித்து விட்டு இந்தியா வந்தார் ஜோகேந்திரநாத் மண்டல் . இங்கே அரசியல் அனாதையாகக் குற்றவுணர்ச்சியுடன் வாழ்ந்து மறைந்தார். கைவிடப் பட்ட நாம சூத்திரர்கள்,அங்கே சிறுகச் சிறுக அழிக்கப் பட்டார்கள். பலநூறு கலவரங்கள் மூலம் அச்சுறுத்தப் பட்டுத் தோட்டிகளாக மட்டுமே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

கிழக்கு வங்கத்தில் 1971இல் உருவான   கலவரங்களில் அதிகளவில் கொல்லப் பட்டவர்கள் அவர்களே. அவர்களே அதிகளவில் அகதிகளாக வந்தார்கள். அவர்களை அன்றைய காங்கிரஸ் அரசு,பீகாரில் தண்ட காருண்யப் பகுதியில் குடியேற்றியது. 1973-75ல் தண்டகாருண்யம் பெரும் வறட்சியால் தவித்தது. பிழைப்புக்கு வழியில்லை. 1977ல் ஜோதிபாசு அரசு ஆட்சிக்கு வந்த போது எழுப்பப்பட்ட ‘வங்காளிகள் அனைவருக்கும் வங்களம் சொந்தம்’ என்ற கோரிக்கையால் கவரப் பட்டு அந்த தலித் மக்கள் சுந்தரவனக்காடுகளில் உள்ள சதுப்புகளுக்குக் குடியேறினார்கள். மரிச்சபி அதில் ஒன்று.

இந்த நிலப் பகுதிகள் நாற்பத்தேழு கால கட்டத்தில்  கிழக்கு வங்கத்தில் இருந்து வந்த பெரும்பாலும்  பிராமண நிலக்கிழார்களான அகதிகளால் சொந்தம் கொண்டாடப் பட்டவை. அவர்கள் நிலக்கிழார்களாக இருந்தார்கள். அவர்கள் அந்நிலத்தைத் தங்கள் குண்டர் படையான புதிய  வங்கதேச அகதிகளுக்குக் கொடுக்க விரும்பினார்கள்.  தலித் மக்கள் காங்கிரஸின் வாக்காளர்கள். இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள். ஆகவே அந்த தலித் மக்களை சுந்தரவனக்காடுகளில் இருந்து துரத்தினார்கள் இடதுசாரிகள். மரிச்சபி அதில் முக்கியமான நிகழ்வு

மரிச்சபியில் முப்பதாயிரம் தலித் மக்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப் படுகிறது. அவர்கள் அங்கே வளமான வெற்றிலைத் தோட்டங்களை உருவாக்கியிருந்தார்கள். இடதுசாரிகளின் நெருக்கடிகளை அந்த மக்கள் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நின்றார்கள். நக்சலைட்டுகள் அவர்களுக்குத் தலைமை தாங்கியதாகச் சொல்லப் படுகிறது – ஆதாரம் இல்லை. 1978 ஆகஸ்ட் இருபதாம் தேதி மாலையில் முப்பது நீராவிப்படகுகளில் இடதுசாரி நிலப் பிரபுக்களும், அவர்களின் அடியாட்களும் மரிச்சபிக்குள் நுழைந்தார்கள். துணைக்குப் போலீஸ் படையும் இருந்தது.

ஒரு முழு நாள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்தது.  எட்டாயிரம் குடிசைகள் எரிக்கப் பட்டன. நூற்றுக்கும் மேலான படகுகள் நொறுக்கப் பட்டன. வயல்கள் அழிக்கப் பட்டன. குறைந்தபட்சம் நானூறு பேர் கொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரம் பேர் அனாதைகளாக இடம் பெயர்ந்து காணாமலானார்கள். மரிச்சபி காலி செய்யப்பட்டது. மரிச்சபி நிகழ்வு, ஊடகக் கவனத்திற்கு வராமல் தடுக்கப் பட்டது. ஒருசில செய்திகள் வந்தபோது அவை ஆதாரமற்றவை என மறுக்கப் பட்டன. ஜோதிபாசு,அந்த மக்கள் முழுக்க முழுக்க வங்க தேச ஊடுருவலாளர்கள் என்று விளக்கம் கொடுத்தார். பின்னர் மரிச்சபியின் நிலம் முழுக்கக் கொஞ்சம், கொஞ்சமாக மார்க்ஸியக் கட்சி ஆதரவாளர்களான வங்க தேசக் குடியேறிகளுக்கு வழங்கப் பட்டது.

இவ்வாறு வழங்கப் பட்ட எல்லையோர நிலம், மொத்த மேற்கு வங்காள விளைநிலத்தில் கால்பங்குக்கு மேல் இருக்கும் என சொல்லப் படுகிறது. இந்த சலுகைக்கான நன்றிக் கடனாகவே இஸ்லாமிய குடியேறிகள் மார்க்ஸியர்களை அதிகாரத்தில் வைத்திருந்தார்கள்.

இதற்கு நேர் எதிரான நிகழ்வு நந்தி கிராமம். அங்கே வாழ்பவர்கள் வங்க தேச சட்ட விரோதக் குடியேறிகள். மார்க்ஸியர்களால் அங்கே குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள்  மார்க்ஸியர்களுக்கு எதிராகத் திரும்பி தலித் மக்களைத் தலைமை தாங்கிய மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு மார்க்ஸியர்களை அங்கிருந்து விரட்டி அடித்தார்கள். இந்த இரு நிகழ்வுகளுக்கு இடையேயான பரிணாமமே வங்க அரசியல் என்றால் மிகையல்ல.

*

நான் கல்கத்தா தலித்துக்களைப் பற்றிச் சொன்னது இந்த விரிவான பின்னணியிலேயே.

கல்கத்தாவின் சமகால அவலம் என்பது வழக்கமாக இந்திய நகரங்களின் அவலம் அல்ல. எல்லா இந்திய நகரங்களும் நகர்ப்புறச் சேரிகளால் நிறைந்துள்ளன என்பது உண்மை. காரணம் இந்தியாவில் வேலை வாய்ப்பு, நகரங்களில்தான். ஒரு கிராமத்தில் இரண்டு நாவிதர் இருந்தால் ஒருவர் நகரத்துக்குத்தான் சென்றாக வேண்டும். வேளாண்மையில் வேலை வாய்ப்புகள் குறையக் குறைய மக்கள் நகரங்களுக்குத் தொழில் தேடச் செல்வது இயல்பே. அவர்களில் கணிசமானவர்கள் தலித்தாகவே இருப்பார்கள். காரணம் அவர்களே நிலமற்றவர்கள். சென்னையும் அப்படித்தான்.

மும்பையிலும் சரி, சென்னையிலும் சரி, இந்த நகர்ப்புறச் சேரிகளின் பிரச்சினை – முக்கியமாக – இடம்தான். அதை ஒட்டிய சுகாதாரச் சிக்கல்கள் உண்டு. ஆனால் அதே சமயம் அங்கே கிராமப்புறச் சேரிகளில் உள்ள கொடுமையான வறுமை இருப்பதில்லை. நான் தாராவியில் வாழ்ந்திருக்கிறேன். சென்னை குடிசைப் பகுதியிலும் இருந்திருக்கிறேன். அங்குள்ள சிக்கல்கள் வேறு. கடுமையான வாழ்க்கைச் சூழல் இருந்தாலும் அங்கே நிராதரவான வறுமை இல்லை. மேலும் மிக, மிக அசிங்கமான லக்னோ போன்ற நகரங்களிலேயே தெருவில் வாழ்பவர்களின் சதவீதம் குறைவுதான்.

அதுவல்ல கல்கத்தா. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் தெருவிலேயே வாழ்கிறார்கள்.  எந்த ஒரு தொழிலும் இல்லை.  முழுமையாகவே கைவிடப் பட்ட நிலை.  அன்றாடப் பட்டினி. கல்கத்தா அளவுக்கு வெறும் சுமை தூக்கிகளை, கை ரிக்‌ஷா இழுப்பவர்களை வேறெந்த இந்திய நகரத்திலும் காண முடியாது. மொத்த நகரில் பெரும்பகுதி இடிந்து சரிந்து கைவிடப்பட்ட கட்டிடங்கள். வருடக் கணக்காக அள்ளப் படாத குப்பை மேடுகள். எந்தத் தொழில் வாய்ப்பும் இல்லாத நிலை. மையத் தெருக்களிலேயே திறந்த வெளியில் வாழும் பல லட்சம் மக்கள். ஆகவே தான் மொத்தக் கல்கத்தாவே ஒரு பெரும் சேரியாக உள்ளது என்றேன்.

ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்கிறேன். இன்றும்கூட மக்கள் மும்பைக்குப் பிழைப்புத் தேடிச் செல்கிறார்கள். அங்கே பிழைப்பு இருக்கிறது. ஆனால் கல்கத்தா என்ற பெருநகரில் இருந்து மக்கள் கூலி வேலை தேடி இங்கே  வருகிறார்கள். பல்லாவரம் கற்குவாரிகள் முதல் மார்த்தாண்டம் செங்கற்சூளைகள் வரை தினசரி நூறு ரூபாய்க்கு வேலை செய்பவர்கள் கல்கத்தா நகரில் இருந்து இங்கே வந்த வங்காளிகள். அந்த வேறுபாட்டையே நான் சுட்டிக் காட்டுகிறேன்.

கல்கத்தாவின் இன்றைய அவலத்துக்குக் காரணம் ,எப்படி கிராமப்புறத்தில் இடதுசாரிகள் என்ற பேரில் நிலப்பிரபுத்துவ குண்டர் படையை உருவாக்கி நிலை நாட்டினார்களோ அப்படியே நகரங்களில் தொழிற் சங்க குண்டர் படையை உருவாக்கித் தொழில்களை முழுக்க அவர்களின் ஆதிக்கத்துக்கு விட்டுக் கொடுத்தார்கள் என்பதே. தொழிலும், வணிகமும் நசித்துக் கல்கத்தா அழிந்தபோது இந்தக் கும்பல் மட்டும் கொழுத்துச் செழித்தது.

இந்தச் சீரழிவின் முதல் பலியாடுகள் தலித்துக்கள் என்பதே நான் என் கட்டுரையில் சுட்டிக் காட்டுவது. மாபெரும் மானுட அவலம் எப்படி நிகழ்ந்தது , அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பதே என் வினா. அதற்கான முழு முதல் பொறுப்பும் இடதுசாரிகளுக்கே. இந்தியா முழுக்கக் கடந்த ஐம்பதாண்டுகளில் மெல்ல, மெல்ல நிலப் பிரபுத்துவம் இல்லாமலாயிற்று. அதுவே தலித்துக்களின் விடுதலையை உருவாக்கியது. ஆனால் மேற்கு வங்கம், கிராமங்களை நிலப் பிரபுத்துவத்திலேயே மூழ்கடித்து வைத்திருந்தது. கிராமப்புற சேரிகளில் இருந்து தப்பி நகர்ப்புறச் சேரிகளில் அவர்கள் வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு உருவாயிற்று.

அந்த சுடும் உண்மையைத் தான் அந்தச் சொற்றொடரில் நான் சொல்லியிருக்கிறேன்.  ‘கிராமங்களில் நில உடைமைச் சமூக அமைப்பு இடதுசாரிப் பௌடர் பூச்சுடன் அப்படியே பேணப் பட்டமையால் தலித்துக்கள் கூட்டம், கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கி விட்டார்கள்’ என்று

அந்த அப்பட்டமான உண்மையை எதிர் கொள்ள முடியாமல், அதில் உள்ள ஆதிக்க அரசியலில் பங்கு வகிக்கும் ஒரு தந்திர மனத்தால் இந்தத் திரிபு செய்யப்படுகிறது. கால் நூற்றாண்டுக் காலம் தலித் மக்களின் குருதியைக் குடித்து வாழ்ந்த ஒரு தரப்பு, அந்த ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் பொருட்டு உருவாக்கும் மாய் மாலம் இது.

ஜெ

 

வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.

வடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா

ஜோதிபாசு

நமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன?

உலகத்தொழிலாளர்களே

மாவோயிச வன்முறை

மாவோயிச வன்முறை 3

ஜோதிபாசு

மரிச்சபி

வெறுப்புடன் உரையாடுதல்

சேகுவேராவும் காந்தியும்

மர்க்ஸ் கண்ட இந்தியா

 

முந்தைய கட்டுரைபாபா ராம்தேவ்-கடிதம்
அடுத்த கட்டுரைபுகழேந்தி-சங்கீதா