செயலும் ஒழுங்கும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் செயலும் , ஒழுங்கும் பதிவை படித்தேன்.
இந்த முறை வந்த வாஷிங்டன் பொழுது எங்கள் இல்லத்தில் இருக்கையில், உங்கள் தினசரி செயலை காணும் வாய்ப்பு கிடைத்தது.
சொல்லாக கட்டுரையில் வாசித்ததை காட்சியாக கண்ணுக்கு முன்னால் கண்டோம். காட்சியாக காணுகையில் இன்னமும் பிரமாண்டமாக இருந்தது.
இரவு எத்தனை மணி ஆனாலும் நீங்கள் தமிழ் விக்கிக்கு பங்களிக்காமல் உறங்க செல்லவில்லை, காலையில் எழுந்தாலும் தமிழ் விக்கிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பிற வேலைகளில் செல்வதில்லை. கொஞ்சம் கூட உற்சாகம் குறையாமல் இருந்தீர்கள். படைப்பூக்கத்தின் செயல் வேகம் என்பதை கண்ணால் கண்டோம்.
பல நண்பர் சந்திப்புகள், ஒவ்வொன்றிலும் 100 கேள்விகள், சுற்றுப்பயண வேலைகள், தமிழ் விக்கி விழா என வேகமும், பரபரப்பும் கொண்ட பலவற்றுக்கும் நடுவே நிதானமாக நீங்கள் ஆயிரம் கரங்களோடு அதை ஓவ்வொன்றாக எடுத்து மாலையாக கோர்த்தது போல நேர்த்தியாக கையாண்டது போல இருந்தீர்கள். அது நீங்கள் சொல்லும் செயலும், ஒழுங்கும் தருவன என நினைக்கின்றேன்.
அன்புடன்
நிர்மல்
***
அன்புள்ள நிர்மல்
நலம் தானே?
நானும் நலமே.
நான் செயல் பற்றி யோசிக்கும்போது ஒன்று தோன்றியது. செயலாற்றுவதில் முழுமையாக நம்மைக் குவிக்கமுடியும் என்றால் அது ஒரு யோகம். ஒரு கொண்டாட்டம். மனம் அதை நாடும். எந்த நள்ளிரவிலும் நாம் அதை செய்யமுடியும். மனம் குவியாமல் செய்யும் செயல் நம்மை சிதறடிக்கிறது. நாம் உள்ளே பலதிசைகளில் இழுக்கப்படுகிறோம். அது பெரிய வதை. ஆற்றல் வீணாவதனால் களைப்பூட்டக்கூடியதும்கூட. கூர்ந்து, ஒருமுகப்பட்டு செயலாற்ற அறியாதவர்கள் செயலை அஞ்சி தவிர்க்க முயல்கிறார்கள் என்று தோன்றியது
ஜெ