உரை, கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நான் உங்கள் உரைகளை விரும்பிக் கேட்பவன். எனக்கு வாசிப்பதை விட உரைகள் இன்றைக்கு நெருக்கமாக உள்ளன. ஏனென்றால் வாசிப்பதற்குரிய இடமும் சூழலும் இல்லாதபோதுகூட நம்மால் உரைகளைக் கேட்கமுடியும். நீங்கள் உரையாற்றுவது அவ்வளவு முக்கியமல்ல என்ற என்ணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். ஆனால் எங்களைப்போன்றவர்களுக்கு உரைகளும் மிகவும் தேவை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்

செல்வராஜ் மோகன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் திருப்பூர் கட்டண உரைக்கு ஆவலாக வந்தேன். உங்களை சிங்கப்பூரில், ஊட்டியில், ஈரோட்டில், கோவையில் தொலைவிலிருந்து சந்தித்திருக்கிறேன். என் சொந்த ஊரில் சந்திப்பது கொஞ்சம் ஸ்பேசல்தான். திருப்பூர் உரையில் நீங்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஓரிரு வரிகள் மட்டுமே குறிப்பெடுத்தேன். நிற்பது நிற்கட்டுமென விட்டுவிட்டேன். நேற்று இரவு மாடியில் நடந்து கொண்டிருக்கும் போது, மென்பொருளில் கருவிக்கும்(tool) பொருளுக்கும்(product) என்ன வேறுபாடென யோசித்துக் கொண்டிருந்தேன். கருவி ஒரு தனிப்பட்ட வேலையை மட்டும் செய்யும் பொருள். பொருள் என்பது வளரக்கூடிய ஒன்று. பல புது விசயங்கள் பொருள்மேல் ஏற்றி அதைப் புதுப்பொருளாக மேறு கேற்றலாம். இந்த வித்தியாசத்தை கத்தி,நெகவெட்டி,ஏசி,ஏசி ரிமோட்டையெல்லாம் உதாரணமாகக் கொண்டு மேடை மேல் என்னுடன் பணிபுரிபவர்களுக்கு விளக்குவது போல் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சிந்தனைப் போக்கு அப்படியே கிரியேட்டிவிட்டி பக்கம் சென்றது. அப்பத்தான் வீட்டுக்கு பின்புறமிருக்கும் மரத்தை புதிதாகப் பார்த்தேன். திருப்பூர் உரையின் சாரம் கனிமரம் மனதில் எழுந்தது. கையை விரித்து நீங்கள் கனிமரம் டைனமிக் என்று சொல்வதாய் நினைத்துக் கொண்டேன். கிரியேட்டிவ் மனம் கனிமரம் போல். என்றும் வளரக் கூடியது. அழிவில்லாதது. தன்னை அழித்து அதன் விதையால் வேறொன்றை உருவாக்கும். அதுவும் பழைய கனிமரம்தான் இருந்தும் புதிய கனிமரம். பின் சிந்தனை அப்படியே மேடையில் நிற்கும் நான் தனியன் அல்ல. என் பின்னால் தந்தையும், அவர் பின்னால் தாத்தனும்,அவர் பின்னால் பாட்டனும், அவர் பின்னால் முப்பாட்டனும் அப்படியே தொடர்ந்து பின்னால் போய்க் கொண்டேயிருந்தால் பிரபஞ்சம் உருவாகிய கணம் வரும். பிரபஞ்சமாகிய அதை உணரமுடியும். அதுவே பிரம்மம். அதன் பாதையே அத்வைதம் எனச் சொல்லி முடித்தேன்.

கனிமரம் என்னுள் பிரம்மம் வரை வளர்ந்துள்ளது.

அன்புடன்

மோகன் நடராஜ்

***

முந்தைய கட்டுரைகல்குதிரை, மதார் கவிதைகள்
அடுத்த கட்டுரைஅப்பம் வடை தயிர்சாதம்