கேட்பவனும் சொல்பவனும்- கடிதம்

மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு.

உங்களது “லட்சியவாதிக்கு கிடைப்பது என்ன ” என்ற காணொளி கண்டேன். 45000 பேர் சொச்சம் மட்டுமே கண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் திரைக்கதை எழுதும் திரைபடத்தின் முன்னோட்டத்தை 10 லட்சம் பேர் பார்ப்பார்கள். நல்ல வேளை, எல்லோருக்கும் புரிந்து விட்டதோ என்று பயந்து விட்டேன்.

பரிணாம வளர்ச்சியில் சிலர் முன்னோடிகளாக இருப்பார்கள். நீங்கள், இளையராஜா அவர்கள். (வேறு யாரும் இணையாக தோன்றவில்லை). நிச்சயம் முகஸ்துதியாகத்தான் இருக்கும் இந்த பார்வை. ஆனால் என்னுடைய சிலாகிப்பை, உணர்வை, புரிதலை வெளியே கண்ணாடி போல காட்டும் ஒருவரை, மனதிற்குள் புலம்புவதை, ஒன்றிணைக்க முடியாமல் தவிப்பதை, ஒருவர் மிகச்சரியாக வார்த்தைகளால் வெளிக்கொணரும் பொழுது புகழ்ச்சி மொழி தவிர்க்க முடியாதது.

உண்மையில் ஏறக்குறைய நீங்கள் கூறிய அனைத்து நிலைகளிலும் என்னை ஒப்பீடு செய்து பார்த்தேன், முதலில். மிகப்பெரிய ஆன்ம சந்தோசம் என்னவென்றால், உங்களுக்கு அருகில், மிக நெருக்கமாக வந்திருப்பதாக உணர்தேன். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் செருப்பை கழற்றி அடிப்பது போலவே இருக்கும். உங்களுக்குள்ளே (self-content) ஆக இல்லையென்றால் என்று பேசி, ஒரு குன்றுதல், அதை மறைப்பதற்காக செயற்கையான நிமிர்தல் என்ற செய்தி பல மனிதர்களை பல முகங்களை சட்டென கண் முன்னே காண்பித்தது. (ஒவ்வொரு முறையும் முதலில் என்னை பொருத்தி பார்த்துக்கொண்டே பின்னர் மற்றவர்களை தொடர்பு படுத்துவேன், ஏனென்றால் நமது பார்வையில் நாம் படுயோக்கியன்) idealist ஆக இருக்கிறேன், இருக்க விரும்புகிறேன், எங்கும் குன்றாத தோள்களை உடையவனாக இருக்க முயல்கிறேன், ஆனால் என் மனைவி குழந்தை உட்பட அதை விரும்புவதில்லை.

நீங்கள் பேசும்பொழுது கைதட்டல்கள் உங்களை சிதறடிப்பதே இல்லை, உங்கள் கவனம் பேச்சு, பேச்சு மட்டுமே. எந்த இழி சொல்லுக்கும், புகழ்ச்சிக்கும், அமளிக்கும், இடையூறுக்கும் இடமே இல்லை. அந்த நிலையை நோக்கியே என் பயணம். வெகு சீக்கிரம் உணர்ச்சிவசப்படும் எனக்கு நீங்கள் ஒரு மூலப்படிமம்.

என் மனைவி, பெண்குழந்தை முன் நிமிர்த்து நிற்கும் எனக்கு உங்களது வார்த்தை மிகப்பெரிய திருப்தி. இந்த காணொளியை பலமுகங்களுக்கு மேலனுப்ப நினைத்தேன், எந்த இடத்திலும் தன்னை பொருத்தி பார்க்க முடியாமல், என்ன பதில் சொல்லுவது என்றும் தெரியாமல், தன்னை திருத்திகொள்ள முடியாமல் அருமை என்று பதில் குறும் செய்தி அனுப்புவர்.

நிச்சயம். ஒரு நேர்மையானவர் ஈட்டிக்கொள்வது நிறைவு தான். 55 வயதில் நமது வாழ்வின் எல்லை என்னவென்று அனைவருக்கும் தெரிந்து விடும் என்பது எவ்வளவு நிதர்சனம். நிச்சயம் இவர்களில் ஒருவன் நானில்லை. அந்த தெளிவு எனக்கு கிடைக்க இந்த காணொளி மிகச்சிறந்த பதிவு. என்ன சார் வார்த்தை. ஆன்மீக கீழ்மை. எப்படி உணர்வுகளோடு பொருத்தி சொல்ல முடிகிறது? இந்த வார்த்தையை உணரும் பொழுது மற்றவர்களுக்காக நான் கூச்சம் அடைகிறேன. தன்னை நியாயப்படுத்துதல் எவ்வளவு கீழ்மையானது என்ற புரிதல் எனக்கு திருப்தியாக இருந்தது. இனி தெரிந்தும் செய்ய மாட்டேன்.

நம்ப மாட்டீர்கள், பேஸ்புக்கில் இருந்து இதை உணர்ந்து, ஆனால் புலப்படாமல் பத்து வருடங்களுக்கு முன்பே வெளிச்சென்று விட்டேன்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நோய்க்கூறு நையாண்டி, கேலி என்பது முற்றிலும் உண்மை. கருத்துக்களை உள் வாங்கும் தன்மையை இழந்து கொண்டே இருப்பார்கள் என்பதும் மிகச்சரியான உண்மை மற்றும் புரிதல். இந்தக்கோமாளிகளை பத்து நிமிடங்கள் அல்ல, பல நூற்றாண்டுகளாக ஆட விட்ட காரணம்தான் இன்று இந்த நிலைமை.

நீங்கள் நிச்சயமாக டால்ஸ்டாயை விட சிறிய குமிழி அல்ல. நிச்சயமாக மிகப்பெரிய சுழல். ஒரு முறை கோவையிலும், திருப்பூரிலும் உங்களை சந்தித்துள்ளேன். வெகு சுலபமாக எங்கள் எண்ண ஓட்டத்தின் ரகசியத்தை புரிந்து கொண்டு வெகு இயல்பாக சிரிக்கும் உங்களிடம் கவனமாக இருப்பது நன்று.

தெளிவுடன் .

திருப்பூரில் இருந்து

விஜி.

***

அன்புள்ள விஜி,

ஓர் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தை விமர்சனத்துடன் மட்டுமே அணுக முடியும். மனசாட்சியை நோக்கி அவன் பேசுவதெல்லாமே ஒருவகை ‘கண்டித்தல்’தான். நானல்ல, என் முன்னோடிகள் அனைவருமே அவ்வாறுதான் பேசியிருக்கிறார்கள்.

அது இருவகை எதிர்வினைகளை உருவாக்கும். மிகப்பெரும்பாலானவர்கள் கசப்பும் கோபமும் அடைவார்கள். ஏனென்றால் அவர்களின் ஆணவம் சீண்டப்படும். பொதுமக்கள் பொதுவாக அவர்களின் ஆணவத்தைக் குளிரவைக்கும் பேச்சாளர்களையே விரும்புவார்கள். அவர்களை கண்டிப்பவர்களை வெறுப்பார்கள்.

அத்துடன் பொதுமக்கள் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றை மீண்டும் கேட்கத்தான் விரும்புவார்கள். புதிய விஷயங்களை அஞ்சுவார்கள், எதிர்ப்பார்கள்.

ஆகவேதான் நான் மாபெரும் பொதுப்பேச்சுக்களைப் பேசுவதில்லை. என் உரை மிகச்சிறுபான்மையினருக்காக. அவர்கள் என் உரையால் சீண்டப்பட்டு நிலைகுலைந்தாலும் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளவும் கூடும். உங்கள் கடிதம் அத்தகையது. நன்றி.

ஜெ

முந்தைய கட்டுரைமாயை
அடுத்த கட்டுரைசியமந்தகம்- கடிதங்கள்